ஸ்ரீகிருஷ்ணர் ஒரு இடத்தில், "பரமாத்மாவாகிய நான் அனைத்திலும் இருக்கிறேன்" என்று சொல்கிறார்.
அடுத்த ஸ்லோகத்திலேயே இதற்கு முரணாக,
"நான் ருத்ரர்களில் சங்கரனாக இருக்கிறேன்,
சேனை தளபதிகளில் கந்தனாக இருக்கிறேன்,
பாண்டவர்களில் அர்ஜுனனாக இருக்கிறேன்,
வேதத்தில் சாம வேதமாக இருக்கிறேன்,
ரிஷிகளில் ப்ருகு ரிஷியாக இருக்கிறேன்.
மலைகளில் ஹிமாலயமாக இருக்கிறேன்,
மனிதர்களில் அரசனாக இருக்கிறேன்,
அசுரர்களில் ப்ரகலாதனாக இருக்கிறேன்,
விலங்கில் சிங்கமாக இருக்கிறேன்,
பறவைகளில் கருடனாக இருக்கிறேன்"
என்று சொல்லிக்கொண்டே போகிறார்.
'அனைத்திலும் நான் இருக்கிறேன்' என்று சொல்லிவிட்டு,
அதற்கு முரணாக
'மிருகங்களில் சிங்கமாக இருக்கிறேன்' என்று சொல்கிறாரே!
அனைத்திலும் இருக்கிறேன் என்று சொல்லிவிட்டு, மற்ற விலங்கில் பரமாத்மா இல்லை என்பது போல பேசிவிட்டாரே!!
'அனைத்திலும் நான் இருக்கிறேன்' என்று சொல்லி விட்டு, 'மிருகங்களில் குறிப்பாக சிங்கத்திடம் நான் இருக்கிறேன்' என்று ஏன் சொல்கிறார்?
கிருஷ்ண பரமாத்மாவின் மனதில் என்ன ஓடியது?
பரமாத்மாவில் இருந்து தான் அனைத்துமே உற்பத்தியானது. இதுவே சத்தியம்.
இந்த சத்தியத்தை அனுபவத்தில் கொண்டு வந்த மகான்களில் பிரகலாதன் தலைசிறந்தவர்.
ஹிரண்யகசிபு பிரகலாதனை விஷம் கொடுத்தும், சூலத்தால் குத்தியும், மலையில் இருந்து தள்ளியும், கடலில் கல்லை கட்டி தள்ளியும், யானையை விட்டு மிதக்க முயன்றும், எதுவுமே பிரகலாதனை தாக்கவில்லை..
பிரகலாதனை பார்த்து, "எப்படி உன்னை எதுவும் கொல்ல முடியவில்லை.. மலையில் இருந்து உருட்டினால் இயற்கை நியதிப்படி யார் விழுந்தாலும் அடி படுமே! கருநாகத்தின் விஷம் குடித்தால், அதன் குணப்படி சாக வேண்டுமே!"
என்று கேட்டான்.
ஹிரண்யகசிபுவுக்கு
கல் கல்லாக தெரிந்தது.
விஷம் விஷமாக தெரிந்தது.
தான் அரசன் என்று தெரிந்தது.
மந்திரிகள், போர் வீரர்கள் வித்தியாசம் தெரிந்தது.
உலகம் உலகமாக தெரிந்தது.
ஆனால், பிரகலாதனுக்கோ, "ஹிரண்யகசிபுவே நாராயணனாக தெரிந்தான்.
அவன் போர் வீரர்களை ஏவி கொலை செய்ய சொல்ல, அந்த வீரர்களும் நாராயணனாக தெரிந்தனர்.
குத்த வரும் சூலமும், விஷமும், மலையும், தானும் கூட நாராயணனாகவே தெரிந்தனர்.
நரசிம்மாக நாராயணனே வந்த போது, தேவர்களும் 'இது என்ன பயங்கரமான அவதாரம்!' என்று அருகில் செல்லவே பயந்தனர்..
'நரசிம்மாக வந்ததும் நாராயணனே!' என்று பார்த்த பிரகலாதன், துளியும் பயப்படவில்லை.
'பரமாத்மா அனைத்திலும் இருக்கிறார்' என்ற சத்தியத்தை, பிரகலாதன் நிரூபித்தான்.
ஸ்ரீ கிருஷ்ணர், அர்ஜுனனிடம் பிரகலாதனை மனதில் நினைத்து கொண்டு, 'அர்ஜுனா! நான் நிஜத்தில் அனைத்திலும் இருக்கிறேன்.. பிரகலாதன் போன்ற ஞானிகள் நான் அனைத்திலும் இருப்பதை பார்க்கின்றனர்." என்று சொல்கிறார்.
உடனே, அர்ஜுனன், "ஐயோ கிருஷ்ணா!! இது பிரகலாதன் போன்ற ஞானிக்கு வேண்டுமானால் அனுபவத்தில் ஏற்படலாம்..
நீ அனைத்திலும் இருக்கிறாய் என்பது உண்மை என்றாலும், அனுபவம் எங்களுக்கு ஏற்பட வாய்ப்பே இல்லையே!
'எதை பார்த்தாலும், நீ அதில் இருக்கிறாய்' என்று பார்க்கும் பக்குவம் எங்களுக்கு ஏற்படாதே!
நாங்கள் அஞானி.. நாங்கள் பிரகலாதன் போன்ற ஞானியின் அனுபவத்தை அடையவே முடியாதே!!"
என்று நினைத்து சோர்ந்து விடுவானோ! என்று நினைத்து, அவனை பேச விடாமல், அவன் மனதில் எழும் சந்தேகத்தை போக்க, வழி சொல்ல உடனே பேசினார்..
"அர்ஜுனா! நான் அனைத்திலும் இருக்கிறேன் என்ற அனுபவம் மிக உயர்ந்த நிலை..
நீ அந்த அனுபவத்தை அடைய முடியாது என்று நீயாகவே நினைத்துக்கொண்டு முயற்சிக்காமல் இருந்து விடாதே...
ஞானத்தை அடைய முயற்சி உடையவன் நாசமாக மாட்டான்.
பிரகலாதனை போன்ற நிலை உனக்கும் வரும்..
அதன் முதல் படியாக, அனைத்து மிருகத்திலும் நான் இருக்கிறேன் என்று உன்னால் பார்க்க முடியாது போனாலும், அதில் சிங்கத்தை பார்க்கும் போது மட்டுமாவது, 'நரசிம்மா..' என்று நினைக்க ஆரம்பி..
ருத்ரர்களில் மன்யு, சிவன் என்று பல ரூபங்கள் உண்டு.. அனைவரிடத்திலும் நானே இருக்கிறேன் என்ற அனுபவம் ஆரம்ப நிலையில் ஏற்படாது.
ஆனால் ருத்ர ரூபத்தை துறந்து, சாந்த ரூபத்துடன் இருக்கும் சங்கரனை பார்க்கும் போதாவது என்னை நினைத்து கொள்.
காக்கை பறந்தாலும், புறா பறந்தாலும் அனைத்திலும் நானே இருக்கிறேன் என்ற அனுபவம் உனக்கு ஆரம்ப நிலையில் ஏற்படாது..
அதனால், பறவைகளில் கருடன் பறந்து சென்றால், அதில் நான் இருக்கிறேன் என்று பார்.
இப்படி நீ பார்க்க ஆரம்பி.. இந்த முதல் படியே உன்னை கொஞ்சம் கொஞ்சமாக அனைத்திலும் நான் இருப்பதை உணர செய்து விடும்.
ஜீவ காருண்யம் முதலில் உனக்கு தோன்றும்.
மிருகத்தின் மாமிசத்தை தின்று தான் இந்த வயிற்றை வளர்க்க வேண்டுமா? என்று தோன்ற ஆரம்பிக்கும்..
படிப்படியாக உன் ஞான நிலை உயர்வதை நீயே அனுபவிக்கலாம்.
தெய்வம் உன்னிடம் கனவில் பேசுவதும், காட்சி தருவதும், யாரையோ அனுப்பி தக்க சமயத்தில் உன்னை ஆபத்துகளில் இருந்து காத்தும், நல்லவர்கள் நட்பு கிடைக்குமாறு வாழ்க்கை அமைவதையும் நீயே அனுபவிப்பாய்..
ஆதலால், அனைத்திலும் என்னை பார்க்க, முதல் படியாக, ஒரு வஸ்துவையாவது பார்க்கும் போது என்னை நினைத்து கொள்ளும் பழக்கத்தை கொள்.
தானாக ஞானி நிலை ஏற்பட்டு விடும்.."
இந்த மனோ நிலையில், கிருஷ்ண பிரமாதமா, 10வது அத்தியாயத்தில், 'நான் அனைத்திலும் இருக்கிறேன்' என்று சொல்லி, அர்ஜுனன் 'இந்த நிலை எனக்கு வராது' என்று சொல்லிவிடுவானோ என்று நினைத்து, அவனை கேட்பதற்கு முன்பேயே, உடனேயே இப்படி பேச ஆரம்பித்தார்.
अहमात्मा गुडाकेश सर्वभूताशयस्थित: |
अहमादिश्च मध्यं च भूतानामन्त एव च ||
- bhagavad Gita (பகவத் கீதை)
அஹம் ஆத்மா குடாகேச சர்வ பூத ஆஸய-ஸ்தித: |
அஹம் ஆதி: ச மத்யம் ச பூதானாம் அந்த ஏவ ச ||
- chap 10 - 20 vibhuti yoga (பகவத் கீதை)
ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா, அர்ஜுனனை பார்த்து சொல்கிறார்..
"அர்ஜுனா ! நான் எல்லா உயிரினங்களின் இதயத்திலும் அமர்ந்திருக்கிறேன். நான் எல்லா உயிரினங்களின் ஆரம்பம், நடுத்தர மற்றும் முடிவாக இருக்கிறேன்".
Arjuna ! I am residing in everyone's heart. i am residing in all living entities. I am the beginning, middle, and end of all beings.
प्रह्लादश्चास्मि दैत्यानां काल: कलयतामहम् |
मृगाणां च मृगेन्द्रोऽहं वैनतेयश्च पक्षिणाम् ||
ப்ரஹ்லாத ச அஸ்மி தைத்யானாம்
கால: கலாயதாம் அஹம் |
ம்ருகானாம் ச ம்ருக-இந்த்ர அஹம்
வைநதேய : ச பக்ஷிணாம் ||
- chap 10 - 20 vibhuti yoga (பகவத் கீதை)
அர்ஜுனா ! நான் அசுரர்களில் ப்ரகலாதனாக இருக்கிறேன். நான் எல்லா உயிரினங்களின் காலமாக இருக்கிறேன். மிருகங்களில் சிங்கமாக இருக்கிறேன். நான் பறவைகளில் கருடனாக இருக்கிறேன்.
அஞானியும் 'ஞானி ஆக முடியும்' என்று காட்டும் அற்புதமான உபதேசம்.
பகவத் கீதை மனிதனாக பிறந்த அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது...
ராமர் இல்லாத சமயத்தில், சீதையை கடத்தி சென்றான்ராவணன்.
தன்னை ஏற்பதற்காக, சீதைக்கு 1 வருடகால அவகாசம் கொடுத்தான்.
சீதையை ராவணன் ஏன் நெருங்கவில்லை.. அத்தனை நல்லவனா ராவணன்?
ராவணனே இதற்கு காரணம் சொல்கிறான்... தெரிந்து கொள்வோமே....
வால்மீகி ராமாயணம் - யுத்த காண்டம்:
ராமபிரான் வானர படைகளுடன், மகேந்திர மலை, சஹ்ய மலை, மலய மலையை தாண்டி, வேலாவனம் என்ற காட்டை தாண்டி, கடற்கரை அருகில் வந்து விட்டார் (இன்று ராமேஸ்வரம் என்று சொல்கிறோம்).
"கடலை கடந்து இலங்கை வந்து விட்டால் என்ன செய்வது?
ஒரு வானரன் ஹனுமான் வந்தே இலங்கையை கலங்கடித்து விட்டான். கோடிக்கணக்கான வானரர்கள் உள்ளே நுழைந்தால்? இனி என்ன செய்ய வேண்டும்?"
என்று ராவணன் சபை கூட்டி, மந்திரிகளிடம் ஆலோசனை நடத்தினான்.
ராக்ஷஸர்கள் பலர், படைத்தளபதி ப்ரஹஸ்தா, வஜ்ரதம்ஸ்ட்ரா, நிகும்பன் (கும்பகர்ணன் பிள்ளை) ஆகியோர் ராவணனுக்கு ஆதரவாக பேசினார்கள்.
பிறகு விபீஷணன் பேசினார்.
விபீஷணன் மட்டும் "சீதையை தகுந்த மரியாதையுடன் திருப்பி அனுப்பி விடு" என்றார்..
உடனேயே சபையை கலைத்து விட்டு, வெளியே சென்று விட்டான் ராவணன்.
பிறகு ராவணன் அரண்மனைக்கு சென்று மீண்டும் விபீஷணன் சொல்லி பார்த்தார்.
"சீதையை அனுப்ப முடியாது" என்று மீண்டும் நகர்ந்தான்.
அடுத்த நாள், மீண்டும் சபை கூட்டினான் ராவணன்.
ஆறு மாத தூக்கத்துக்கு பின், சபைக்கு வந்து இருந்தான் கும்பகர்ணன்.
கும்பகர்ணன் ராவணன் செய்த இந்த பேடிதனமான காரியத்தை கடுமையாக கண்டித்தான்.. இருந்தாலும் 'ராமரை கொன்று யமலோகம் அனுப்புவேன். கவலைப்படாதே!' என்று சொல்லி அமர்ந்தான்.
ராவணன் ஆத்திரத்தில் இருந்தான்.
பிறகு மஹா பலசாலியான 'மஹாபார்ஷ்வன்' என்ற ஒருவன், ராவணனை பார்த்து கை குவித்து பேசினான்..
"ராமன் ஒரு சிறு பொடியன். அவனுக்கு மரத்தில் இருக்கும் தேன் கூட்டில் உள்ள தேனை கூட எடுக்க முடியாது.
நீங்கள் ஈஸ்வரன்.
ஈஸ்வரனுக்கே யார் ஈஸ்வரனாக முடியும்?
எதிரிகளை ஒடுக்க, சீதையை பலாத்காரம் செய்யுங்கள்.
அவளை அனுபவித்து விடுங்கள். பிறகு ஏற்படும் விளைவுகளை நாம் பார்த்து கொள்ளலாம்.
கும்பகர்ணன், உங்கள் மகன் இந்திரஜித் உங்களுடன் இருக்கும் போது, அந்த இந்திரன் தன் ஆயுதங்களை வீசினாலும் தடுத்து விடுவார்கள்.
சீதை திருப்பி கொடுப்பதோ (தானம்), சமாதானமோ, பேதமோ இங்கு தேவையே இல்லை. தேவைப்பட்டால் போர் செய்வோம்.
நம்மை எதிர்த்து எவன் வந்தாலும், அவன் மீது நம் ஆயுதங்கள் பாயும்"
என்று ராவணனுக்கு சாதகமாக பேசினான்.
மஹாபார்ஷ்வன் பேசிய வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுத்து, ராவணன் அவனுக்கு பதில் அளித்தான்.
"மஹாபார்ஷ்வா! நான் சொல்வதை கவனி. இது எனக்கு மட்டுமே இருந்த ரகசியம்.
மஹாபார்ஷ்வ நிபோதம் த்வம்
ரஹஸ்யம் கிஞ்சித் ஆத்மன:
- வால்மீகி ராமாயணம்
இது பல காலங்கள் முன் நடந்த ஒரு சம்பவம். நானே அதை உனக்கு சொல்கிறேன்.
சிர வ்ருத்தம் ததாக்யாஸ்தே
யத் அவாப்தம் மயா புரா
புஞ்சிகஸ்தலா என்று ஒரு தேவ கன்னிகை, சத்ய லோகத்தில் உள்ள ப்ரம்ம தேவனை பார்க்க ஆகாய மார்க்கமாக அக்னியை போன்று சென்று கொண்டிருந்தாள்.
பிதாமஹஸ்ய பவனம்
கச்சந்திம் புஞ்சிகஸ்தலாம் |
சஞ்சூர்யமானாம் அத்ராக்ஷம்
ஆகாசோ அக்னி சிகாமிவ ||
அவளை பலாத்காரம் செய்து அனுபவித்தேன்.
கலங்கிய குட்டை போல ஆன அவள், ப்ரம்ம தேவன் இருக்கும் சத்ய லோகத்துக்கு ஓடினாள்.
சா பிரசஹ்ய மயா புக்தோ
க்ருதா விவசனா தத: |
ஸ்வயம்பு பவனம் ப்ராப்தா
லோலிதா நளினி யதா ||
மஹாத்மாவான ப்ரம்ம தேவன் நடந்ததை அறிந்து கொண்டார்.
என் மீது கோபப்பட்டு என்னை சபித்தார்.
தஸ்ய தச்ச ததா மன்யே
ஞாதம் ஆஸீன் மஹாத்மனா |
அத சங்குபிதோ தேவோ மாம்
இதம் வாக்யம் அப்ரவீத் ||
'இனி எந்த ஒரு பெண்ணையாவது பலாத்காரம் செய்து கெடுக்க நீ முயன்றால், உன் தலை சுக்கு நூறாகி போகட்டும்' என்று சொல்லி விட்டார்.
அத்ய ப்ரப்ருதி யாம் அந்யாம்
பலான் நாரீம் கமிஸ்யாமி |
ததா தே சதகா மூர்கா
பலிஸ்யதி ந சம்சய: ||
இந்த சாபத்தின் பயத்தால் தான், சீதையை பலாத்காரம் செய்யாமல் இன்று வரை இருக்கிறேன்."
இத்யஹம் தஸ்ய சாபஸ்ய
பீத: ப்ரசபம் ஏவ தாம் |
நாரோபயே பலாத் சீதாம்
வைதேகீம் சயனே சுபே ||
என்று பதில் சொன்னான்.
எப்படிப்பட்ட கீழ்த்தரமான புத்தி கொண்ட ராவணன்!! என்று அறிந்து கொள்ளலாம்.
இப்படி,
கீழ்த்தரமான புத்தி கொண்ட ராவணன், சாபத்துக்கு பயந்து, பிறர் மனைவியான சீதையை விடவும் மனம் இல்லாமல், 'ஒரு வருட காலம் தந்தாவது, சீதையின் மனதை மாற்றி விட வேண்டும்' என்று முயற்சி செய்து கொண்டிருந்தான்.
"பிறர் மனைவியை தொட நினைத்த ராவணனை ஆதரிப்பவன், எத்தனை கீழ்த்தரமானவனாக இருக்க வேண்டும்?"
என்று நாம் தீர்மானிக்கலாம்.
தன் சொந்த சகோதரனனாலும், பலம் பொருந்தியவனனாலும், செல்வாக்கு மிகுந்தவனனாலும், அரசனே என்றாலும்,
பிறர் மனைவியை அபகரித்து வைத்து இருந்த ராவணனை, மீண்டும் 3வது முறையாக சொல்லி பார்த்தார் விபீஷணன்.
சபையில் அனைவருக்கு எதிராக எட்டி உதைத்து, 'நீ அந்த ராமனிடமே போ!' என்றான் ராவணன்.
'கீழ்தரமான இவனிடம் இனியும் இருக்க கூடாது' என்று
விபீஷணன் ராமபிரானை சரண் அடைவோம் என்று முடிவு செய்து கிளம்பினார்.
சாபத்துக்கு பயந்த இந்த பேடி ராவணனை, உயர்த்தி புகழும் சிலரை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?...
பூலோகத்துக்கு (பூ:) கீழே, 7 பாதாள லோகங்கள் உள்ளது.
பலி சக்கரவர்த்தி பூலோகம் முதல் பிரம்ம லோகம் (ஸ்த்ய லோகம்) வரை பிடித்து விட்டார்.
பலி சக்கரவர்த்தியிடம் வாமன அவதாரம் செய்து தானமாக வாங்கி தேவர்களை, மனிதர்களை, ரிஷிகளை வாழ வைத்தார் பரவாசுதேவன்.
7 பாதாள லோகங்களில் ஒன்றான "சுதலம்" என்ற லோகத்தில், பலி சக்கரவர்த்தியை இருக்க சொல்லி, அவனுக்கு காவலனாக தானே "கதாதரனாக" நிற்கிறார்.
"அடுத்த தேவ இந்திரன் பலி சக்கரவர்த்தி" என்றும் ஆசிர்வதித்து விட்டார்.
இனி, பிராணாயாமம் சொல்லும் போதும், காயத்ரி மந்திரம் சொல்லும் போதும், இந்த பாதாள லோகங்களை சொல்வதில்லை. இது ஏன்?
மாறாக, "ஓம் பூ, ஓம் புவ, ஓம் ஸுவ: ஓம் மஹ: ஓம் ஜன: ஓம் தப: ஓஹும் சத்யம்"
என்று நமக்கு மேல் இருக்கும் லோகங்களை சொல்கிறோம்.
பூலோகத்தில் (ஓம் பூ:) இருக்கும் நாம், நம்முடைய புண்ணியங்களை உயர்த்தி உயர்த்தி,
பித்ருக்கள் உள்ள லோகமான புவர் லோகத்துக்கும்,
தேவர்கள் உள்ள சொர்க்க லோகத்துக்கும்,
துருவனை போன்றோர் நக்ஷத்திரமாக இருக்கும் மகர லோகத்துக்கும்,
ரிஷிகள், யோகிகள், முனிகள் வாழும் ஜன மற்றும் தப லோகத்துக்கும்,
பிரம்ம தேவன் வசிக்கும் சத்ய லோகத்துக்கும்
செல்ல ஆசைப்பட வேண்டுமே தவிர, கீழ்த்தரமான வாழ்க்கை வாழ்ந்து, 'பாதாள லோகங்களுக்கு சென்று விட கூடாது' என்று நம்மை நிதானப்படுத்துகிறது.
சத்ய லோகத்துக்கும் காரணமான வைகுண்ட நாதனை அடைய ஆசைப்படும் புண்ணிய ஆத்மாக்கள், பிரம்ம தேவன் படைத்த இந்த 14 உலகங்களையும் விட்டு விட்டு, வைகுண்டம் என்ற பரமபதம் அடைந்து விடுகிறான்.
புண்ணியங்கள் செய்து, ஜீவ ஹிம்சை செய்யாமல், ஜீவ ஹிம்சையான உணவு உண்ணாமல், மற்றவர்களுக்கு உபயோகமாக வாழ்ந்து, தெய்வத்திடம் பக்தி கொண்டு மனிதன் வாழ வேண்டும்
என்று வழிகாட்டுகிறது இந்த மந்திரங்கள்..
"ஓம் பூ, ஓம் புவ, ஓம் ஸுவ: ஓம் மஹ: ஓம் ஜன: ஓம் தப: ஓஹும் சத்யம்"
என்று சொல்லும் போதே, நாம் செல்ல வேண்டிய பாதை என்ன? என்று காட்டுகிறது..
இந்த அனுபவத்துடன் பிராணாயாமம் செய்வோம். ஆத்மாவை உயர்த்துவோம்..
ஒரு கிறிஸ்தவன் கேட்டான் : உங்கள் ஹிந்து மதத்தில், பல தெய்வங்கள்.. அதில் ஒரு தெய்வம் பன்றி. இன்னொரு தெய்வம் ஆமை. இன்னொரு தெய்வம் மனிதன். இன்னொரு தெய்வம் நரனும் சிங்கமும் சேர்ந்த உருவம்... இப்படி நீங்கள் தெய்வத்தை காட்டி கொள்வது, மனிதன் வேறு, தெய்வம் வேறு என்று காட்டவா? மனித சக்தி வேறு? தெய்வ சக்தி வேறு என்று காட்டவா?...
கேட்ட கிறிஸ்தவன் கேலிக்காக கேட்காமல், உண்மையான சந்தேகத்துடனேயே கேட்டான்.
தெரிந்து கொள்ளும் ஆசையில் தான் கேட்டான்.
மகான்கள் நேர்மையாக, உண்மையிலேயே தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுபவனுக்கு, நேரடியாகவோ, அனுபவ ரீதியாகவோ கட்டாயம் பதில் கிடைக்க செய்வார்கள்.. சொல்வார்கள்..
குருநாதர் சொல்கிறார் : "மனிதன் வேறு தெய்வம் வேறு" என்று காட்டுவதற்காக இப்படி சொல்லப்படவில்லை.
இந்த அவதாரங்கள் கற்பனையும் அல்ல.
ஒவ்வொரு சமயத்தில், ஒவ்வொரு காரணத்துக்காக இது போன்ற அவதாரங்கள் நடந்தது.
"பன்றி" முகத்தில் பகவான், "க்ஷத்ரியனாக" பகவான், "ப்ராம்மணனாக" பகவான், "சண்டாளனாக" பகவான், "ரிஷியாக" பகவான் என்று பல வித அவதாரம் பகவான் செய்தார் என்பது ஒரு புறம் சத்தியமாக இருந்தாலும்,
"பகவான் எந்த ரூபத்திலும் வர சக்தி உடையவர்.. அவர் உன் கண் எதிரே கழுதையாகவும் வந்து நிற்பார், பிராம்மணனாகவும் வந்து நிற்பார், அரசனாகவும் வந்து நிற்பார்"
என்று மனிதனை நிதானிக்க செய்கிறார்.
இந்த உணர்வு தான், ஹிந்துக்களுக்கு ஜீவ காருண்யத்தை ஊட்டுகிறது.
"கல்லை கல் என்று மட்டும் பார்க்காதே! ஆடு மாடு வந்தாலும் மிருகமாக மட்டும் பார்க்காதே ! தெய்வத்தால் எப்படியும் வர முடியும் என்று அறிந்து கொள்! எதையும் அலட்சியம் செய்து விடாதே!!" என்று மனிதனை நிதானிக்க செய்கிறது.
கல்லை பார்த்தாலும், மரத்தை பார்த்தாலும், விலங்கை பார்த்தாலும், மனிதனை பார்த்தாலும், "அனைத்துக்குள்ளும் பரமாத்மா இருக்கிறார்" என்ற அனுபவத்தை கொடுக்கிறது.
"விலங்கு, பயிர்கள் எல்லாம் மனிதன் தின்பதற்கே" என்ற எண்ணம் ஹிந்துக்களுக்கு கிடையாது.
அப்படி இருந்தால் அவன் வழிதவறி போன ஹிந்து, என்றே சொல்லி வருத்தப்பட வேண்டும்.
"பகவான் எந்த ரூபத்திலும் வர சக்தி படைத்தவர்" என்கிற போது, ஹிந்துக்கள் யாரிடத்திலும், எதனிடத்திலும் இயற்கையாகவே மரியாதையோடு பழகுகிறார்கள்.
பகவான் ஒருவர் தான்.
பகவான் ரூபம், குணங்களை கடந்தவர் தான்.
அத்வைதம் "இதை தானே சொல்கிறது".
ஆயிரம் கைகளால் செய்ய வேண்டியதை, கைகள் இல்லாமலே செய்து விடுவார் பகவான்.
ஆயிரம் கண்கள் சேர்ந்து பார்க்க வேண்டிய காட்சிகளை, கண்கள் இல்லாமலேயே பார்த்து விடுவார் பகவான்.
பரமாத்மா கிருஷ்ணராக அவதாரம் செய்த போது, ஹஸ்தினாபுரத்தில் திருத்ராஷ்டிரன் அரண்மனையில் திரௌபதி "கோவிந்தா" என்று அலற, துவாரகையில் இருந்த கண்ணன் கேட்டார்.
உத்திர பிரதேசம் எங்குள்ளது? துவாரகை எங்குள்ளது?
"கடவுள் இருக்கிறார். அவர் அவதாரம் செய்ய தேவையில்லை. இருந்த இடத்திலேயே இருந்து கொண்டு நம்மை ரக்ஷிக்கிறார்"
இது போன்ற போதனைகள் புதிதான விஷயமில்லையே ஹிந்துக்களுக்கு.
கிருஷ்ண பரமாத்மா, திரௌபதி அலறியதை பல கிலோ மீட்டர் தள்ளி இருந்தும் கேட்டாரே! அது மட்டுமா,
வண்ண வண்ண புடவைகள் கைகள் இல்லாமலேயே கொடுத்தாரே!,
ஹஸ்தினாபுரம் வரை நடந்து செல்லாமலேயே, துவாரகையில் இருந்த படியே கொடுத்து, அவள் மானத்தை காப்பாற்றினாரே!.
கிருஷ்ண அவதார காலத்திலேயே, தான் பகவான், தனக்கு கை இல்லாமலேயே கொடுக்க முடியும், கண் இல்லாமலேயே பார்க்க முடியும், கால் இல்லாமலேயே பயணிக்க முடியும் என்று காட்டினாரே!
அஸ்தினாபுரம் பகவான் வராமலேயே ரக்ஷித்து விட்டாரே!. தெய்வம் வர தேவை இல்லை. அங்கிருந்தபடியே ரக்ஷிப்பார் என்று இதை தானே மற்ற மதங்கள் சொல்கிறது... ஹிந்துக்களுக்கு புதிதில்லையே!.
பின்பு ஏன் பகவான் அழகான கிருஷ்ண ரூபத்தை, ராம ரூபத்தை ஏற்றார்? பகவான் உருவம் எடுத்து கொள்வது பக்தன் பார்த்து ரசிப்பதற்காக தான்.
"பகவானுக்கு உருவம் இல்லை" என்று நினைப்பவனுக்கு, மறைந்தே இருக்கிறார். அவனுக்கு காட்சி
கிடைப்பதில்லை.
பொதுவாக ஹிந்துக்கள் ரசிகர்களாக இருக்கின்றனர்.
"பகவான் சர்வ சக்தி வாய்ந்தவர்" என்று ஒரு பக்கம் பேசி விட்டு, இன்னொரு பக்கம் "அவர் உருவம் தரிக்க மாட்டார்" என்று சொல்வதே தெய்வத்தை அவமானப்படுத்தும் பேச்சாகும்.
மனிதனுக்கு வழிகாட்ட ராமபிரானாக பரமாத்மா அவதரித்தார்.
மனிதனுக்கு தர்மத்தை காட்ட, மனிதனாக தானே அவதரித்து ஆக வேண்டும்.
மனிதனாக அவதரித்தும் தெய்வமாகவே இருந்து காட்டினார் கிருஷ்ண அவதாரத்தில்.
பிறந்த போதே "என்னை கோகுலத்தில் விடுங்கள்" என்று பேசினார். சாதாரண குழந்தை பேசுமா? 7 வயதில் மலையை சுண்டு விரலால் தூக்கி விட்டார். சாதாரண 7 வயது குழந்தை மலையை தூக்க முடியுமா?
இவர் செய்த எந்த செயலுமே பிரமிக்க தக்கதே தவிர, நாமும் செய்ய முடியாதது.. தெய்வம் தெய்வமாகவே இருந்தார். அனைத்து சக்திகளையும் காட்டினார்.
மோக்ஷம் அடைய பகவத் கீதையை உபதேசித்தார்.
சக்தியுள்ள தெய்வத்துக்கு, மனிதனாக மட்டும் தான், வர முடியுமா? இல்லையே.. நாயாக வந்தார் பாண்டுரங்கன்.. "வந்திருப்பது பகவான்" என்று நாமதேவர் கண்டுபிடித்து விட்டார்.
கழுதை ரூபத்தில் வந்தார் பகவான்,ஏகநாதர் கண்டுபிடித்து விட்டார்.
பிராம்மண ரூபத்தில் தத்த்ராத்ரேயர், பரசுராமர், வாமனன், வியாச ரிஷி போன்ற ரூபங்களில் வந்தார். 'தெய்வம் என்றால் கிரீடம் தானே வைத்து இருக்கும்?' என்று ஏமாறாமல், தெய்வம் எப்படி வந்தாலும், பாரத மக்கள் கண்டுபிடித்தனர்.
க்ஷத்ரியன் போல, கிரீடம், வாள், அம்பு வில் எடுத்து ராமபிரானாக வந்த போதும்,
க்ஷத்ரியன் போல, சக்கரம் எடுத்து கிருஷ்ண பரமாத்மாவாக வந்த போதும் பாரத மக்கள் கண்டுபிடித்தனர்.
"தெய்வம் அவதரிக்க முடியாது, தெய்வத்துக்கு அவதரிக்க சக்தி இல்லை, தேவையும் இல்லை"
என்று நினைப்பவர்களால், தெய்வ அவதாரம் நிகழ்ந்தாலும் உணர முடிவதில்லை.
வராக, கூர்ம, ராம அவதாரங்களை வழிபடும் போது, "பகவான் எந்த ரூபத்திலும் வருவார்" என்ற சிந்தனை, ஹிந்துக்களுக்கு சாதாரணமாகவே ஏற்பட்டு விடுவதால்,
மனித குணத்துக்கு மீறிய குணங்கள் கொண்டவர்கள் பிறக்கும் போதே, ஹிந்துக்களால் ஒரு கால கட்டத்தில், அவன் 'அசுரனா? தேவனா? ரிஷியா? ஸித்தனா? சிவபெருமானா? அல்லது சாக்ஷாத் அந்த நாராயணனா?'
என்று புரிந்து கொள்ள முடிகிறது.
"எதுவாகவும் பகவான் வர முடியும்" என்ற இந்த ஞானம் ஹிந்துக்களுக்கு இருப்பதாலேயே, தேவர்களும், சில சமயம் அசுரர்களும், ரிஷிகளும், சிவபெருமானும், நாராயணனும் பாரத மண்ணில் அவதரித்து கொண்டே இருக்கிறார்கள்.
"தெய்வம் வரவே வராது" என்று தீர்மானித்து விட்டவர்களிடம், "தெய்வம் இப்படி மட்டும் தான் இருப்பார்" என்று முடிவு கட்டி விட்டவர்களிடம், "தெய்வங்கள் வருவதே இல்லை".
அவர்கள் செய்யும் புண்ணிய கர்மாவுக்கு ஏற்ப பலனையும்,
அவர்கள் செய்யும் பாப கர்மாவுக்கு ஏற்ற பலனையும் கொடுத்து விட்டு,
மீண்டும் மீண்டும் பிறந்து கொண்டே இருக்கிறார்கள்.
மோக்ஷம் இவர்களுக்கு இப்போது இல்லை என்று சம்சார உலகில் உழன்று கொண்டே இருக்கிறார்கள்.
பாரத மண்ணில் தெய்வ அவதாரம், தேவ அவதாரம், ரிஷிகளின் அவதாரம், சித்தர்களின் அவதாரம் நிகழ்ந்து கொண்டே இருப்பதற்கு காரணம் இதுவே...
தெய்வத்தை பார்க்க தெரிந்தவனிடம், தெய்வமும் விளையாட ஆசைப்படும்.
கல் என்று நினைத்தால், கல்லுக்குள் தெய்வம் வருவதில்லை.
"கல்லுக்குள் தெய்வம் வரும்" என்று நினைக்கும் ஹிந்துவுக்கு, "சக்தி உள்ள தெய்வம் அவனுக்காக கல்லுக்குள் பிரவேசித்து" அவன் நம்பிக்கையை வளர்க்கிறது.
ஹிரண்யகசிபு தானே கல், மண் கொண்டு கட்டிய தூணை காட்டி, "இந்த தூணில் உன் நாராயணன் இருக்கிறானா?" என்று கேட்கிறான்.
அவன் சொல்வது உண்மைதான். அவன் கட்டிய தூண் தான். அது கல் தான்.
ஆனால், "அந்த தூணிலும் பரமாத்மா இருக்கிறார்" என்று அவன் பிள்ளை பிரகலாதன் சொல்ல, பக்தன் சொன்ன சொல்லுக்காக, பகவான் தன்னை கல்லுக்குள் பிரவேசித்து கொண்டு நரசிம்மமாக வெளிப்பட்டார்.
கல், தெய்வமா? இல்லை.
ஆனால், ஒரு பக்தன் அந்த கல்லில் தெய்வத்தை கண்டு விட்டால், அந்த கல்லிலும் தெய்வம் வருகிறார்.
"தெய்வம் உண்டு" என்று சொல்லி, ஆனால் "தெய்வத்துக்கு இந்த சக்தி கிடையாது, அவர் இப்படி பக்தனுக்காக வர மாட்டார்" என்று சொல்வதே வழிபடும் தெய்வத்தை இகழும் செயலாகும்.
தெய்வத்தை சிறுமைப்படுத்துவதை ஹிந்துக்கள் ஏற்றுக்கொள்வதில்லை.
ஹிந்துக்கள் பரந்த மனம் கொண்டதற்கு காரணமும் இதுவே. அதிதியையும் தெய்வமாக வழிபடும் வழக்கம் ஏற்பட்டதற்கு காரணமும் இதுவே. பசுவை தெய்வமாக வணங்குவதும் இதன் காரணமே. யாரை பார்த்தாலும் கை கூப்பி வணங்கும் காரணமும் இதுவே.
"தானே அனைத்துமாக இருக்கிறேன்" என்று பரமாத்மா நாராயணன் காட்டுவதை, ஹிந்துக்கள் புரிந்து கொள்ள முடிவதால், எதை பார்த்தாலும், யாரை பார்த்தாலும் வணங்குகிறார்கள்.
குருவே துணை.
இது அந்த கிறிஸ்தவனுக்கு புரிந்ததோ இல்லையோ!!..
ஹிந்துக்களுக்கு நம் பெருமை புரிந்து கொள்ள வாய்ப்பாக அமைகிறது.
வாழ்க நம் குருநாதர்.
வாழ்க ஹிந்துக்கள்.
வாழ்க நம் தெய்வங்கள்.
"சுகமாக இருக்க வேண்டும்" என்று தான், நாம் அனைவருமே ஆசைப்படுகிறோம். துக்கமாகவே இருக்க வேண்டும்!! என்று நம்மில் ஒருவர் கூட ஆசைப்படுவதில்லையே.... ஏன்?
ஏன் நம் முயற்சிகள் அனைத்தும், சுகத்தை நோக்கியே உள்ளது? நாம் ஏன் சுகத்தையே தேடுகிறோம்?
இது போன்ற நுட்பமான கேள்விக்கும் "ஹிந்து தர்மம் பதில் சொல்கிறது".
ஹிந்து தர்மத்தில் சொல்லாத விஷயங்களே கிடையாது..
இங்கிருந்த சில கருத்துக்களை தான், போலி மதங்கள் எடுத்து கொண்டு, "தான் ஏதோ புதிதாக ஏதோ ஒரு கருத்தை கண்டுபிடித்தது போல மக்களை ஏமாற்றுகிறது"!!
ஒரு ஹிந்துவுக்கு, போலி மதங்களை கண்டு ஏமாறுவதை காட்டிலும், முட்டாள் தனம் வேறு இருக்க முடியுமா?...
போலி மதங்களில் வீழாமல், ஹிந்துவாக வாழ ஆசைப்பட்டால் கூட, அது அவர்களின் அறிவு வளர்ச்சிக்கு உதவி செய்யும்..
மேலும் தொடருங்கள்...
தஸ்ய ப்ரியமேவ சிர:
மோதோ தக்ஷிண பக்ஷ:
ப்ரமோத உத்தர பக்ஷ:
ஆனந்த 'ஆத்மா'
என்று "தைத்ரிய உபநிஷத்" சொல்கிறது.
இங்கு, 'பரமாத்மா எப்படி இருக்கிறார்?' என்று வேதம் சொல்கிறது.
பரமாத்மா, 'ஆனந்த மூர்த்தியாகவே எப்பொழுதும் இருக்கிறார்'. பரமாத்மா, 'தலை முதல் பாதம் வரை அன்பு நிறைந்தவராகவே இருக்கிறார்.'
என்று வேதம் நமக்கு சொல்கிறது. "Supreme God (Narayana) by his True nature is always in state of happiness and lovable"
ஆனந்த மூர்த்தியான, பரமாத்மாவின் அம்சம் தான் "நாம்" (ஜீவாத்மா). "நாமும், பரமாத்மா நாராயணனும்" இருவருமே "ஆனந்த மூர்த்தி" தான்.
"நாமும், பரமாத்மாவை போல ஆனந்த மூர்த்தி தான்" என்பதை பல முறை மனதில் பதிய வைத்து கொள்ள வேண்டும்.
பரமாத்மா பரவாசுதேவனின் அம்சம் தான் தான் "நாம்", என்று வேதம் சொல்கிறது.
"உலகில் பிறந்து இருக்கும்" போது ஜீவாத்மா பரமாத்மாவோடு சேர்ந்து இருந்தாலும் பிரிந்தது போல காட்டிக்கொள்கிறது.
பிரிந்து இருக்கும் நிலையில், "த்வைதமாக" தெரிகிறது என்று வேதம் சொல்கிறது.
"மோக்ஷம்" அடைந்த பின், ஜீவாத்மா பரமாத்மாவோடு கலந்து விடுவதால், இரண்டுமே ஒன்று தான் ("அத்வைதம்) என்று வேதம் சொல்கிறது.
"கடல்" இருப்பதை நாம் காண்கிறோம்.
அதன் ஓரங்களில் கடல் "அலைகள்" உருவாகி மறைகிறது.
"அலைகள்" போன்று உருவாகி அழிந்து, மீண்டும் உருவாகி கொண்டே இருப்பது "ஜீவாத்மா". 'கடலை' போன்று எப்பொழுதுமே இருப்பவர் "பரமாத்மா"
"அலை" உருவாவதற்கு காரணம் "கடல்".
அது போல, "ஜீவாத்மா" பிறப்பதற்கு காரணம் "பரமாத்மா".
கடல் இருப்பதற்கு, அலைகள் காரணம் இல்லை. அலைகள் இல்லாமல், கடல் இருக்க முடியும். கடல் சுதந்திரமானது. அலைகள் கடலுக்கு கட்டுப்பட்டது.
அது போல, பரமாத்மா இருப்பதற்கு, ஜீவாத்மா காரணம் இல்லை. ஜீவாத்மாக்கள் இல்லாமல், பரமாத்மா இருக்க முடியும். பரமாத்மா சுதந்திரமானவர். ஜீவாத்மா பரமாத்மாவுக்கு கட்டுப்பட்டது.
அலைகள் ஒடுங்கிய நிலையில், கடலும் அலையும் உண்மையில் ஒன்று தான் (அத்வைதம்).
கடல் அலைகளை உருவாக்கி, த்வைதமாக காட்டுகிறது.
அது போல,
ஜீவாத்மா ஒடுங்கிய நிலையில் (ஞானம் பெற்ற/மோக்ஷ நிலை), பரமாத்மாவும் ஜீவாத்மாவும் உண்மையில் ஒன்றுதான் (அத்வைதம்).
பரமாத்மா, ஜீவாத்மாக்களை உருவாக்கி, த்வைதமாக காட்டுகிறது.
கடல் நினைத்தால் தான், அலைகள் அடங்க முடியும்.
அதுபோல, பரமாத்மா நினைத்தால் தான், நாம் பிறவா நிலையை பெற முடியும்.
நாம் பக்தி செய்யாதவரை, கடல் போன்ற பரமாத்மா, நம்மை மீண்டும் மீண்டும் அலைகளை போல பிறக்க செய்கிறார்.
பரமாத்மா, தன் அம்சமாக ஜீவாத்மாக்களை தானே ஸ்ருஷ்டி செய்தார்.
பரமாத்மா, அற்புதமான உலகங்களை படைத்து,
ஜீவாத்மாவுக்கு அதில் பஞ்ச பூதங்களால் உடம்பை கொடுத்து,
தன் உலக ஸ்ருஷ்டியை பார்த்து மயக்க செய்து,
தான் செய்த உலக சிருஷ்டியை அனுபவித்தால் சுகமும், கூடவே துக்கமும் வரும்படியாக செய்து,
தன் அம்சமான இந்த ஜீவாத்மா, "படைத்தவனிடம் சேர்ந்து விடுவோம்" என்று நினைக்கிறானோ?
அல்லது "தான் சுதந்திரன்!"
என்று சொல்லி கொண்டு, தான் படைத்த, உலகத்தில் உள்ள, உயிர்களை பார்த்து, இடங்களை பார்த்து, செடி கொடிகைகளை பார்த்து மயங்கி, பாவ புண்ணியங்கள் செய்து, சுகம் துக்கம் அனுபவித்து, மீண்டும் மீண்டும் உடல் எடுத்து கொண்டு, தான் படைத்த உலகத்திலேயே வாழ போகிறானா?
என்று பார்த்து கொண்டு இருக்கிறார் பரமாத்மா நாராயணன்.
பரமாத்மா சுதந்திரமானவர். நாம் சுதந்திரமானவர்கள் இல்லை.
நம்மை தனியாக பிரிக்கவும், தன்னிடம் சேர்த்து கொள்ளவும் சக்தி உள்ளவராக! இருக்கிறார் பரமாத்மா நாராயணன்.
பரமாத்மா, சுதந்திரமானவர்.
பரமாத்மா, அவதாரம் செய்ய நினைத்தால் சுதந்திரமாக அவதாரம் செய்கிறார். ஹனுமானை, சிரஞ்சீவியாக இரு!! என்று இவர் சொன்னால், சிரஞ்சீவியாகவே இருப்பார்.
"ஜடாயு என்ற பறவைக்கு மோக்ஷம் தருகிறேன்" என்று சொன்னால், ஜடாயு மோக்ஷம் சென்று விடுகிறார்.
'12 வருடம் முன் இறந்த பிள்ளையை மீண்டும் தர வேண்டும்' என்று சாந்தீபினி கேட்க, யமனிடம் சென்ற, பிள்ளையை (ஜீவாத்மாவை) தானே உடல் கொடுத்து, மீட்டு கொடுத்து விட்டார்.
குழந்தையாக இருந்த போதே, "கம்சன் என்ன செய்வானோ!! என்று உனக்கு பயமாக இருந்தால், என்னை கோகுலத்தில் விடு" என்று பேசுகிறார்.
7 வயதில், சிறுவன் போல இருந்து கொண்டு, தன் சுண்டு விரலில் ஒரு மலையையே தூக்கி விட்டார்.
10 வயதில், சிறுவன் போல இருந்து கொண்டு, தன்னை கொல்ல வந்த குவலயா பீடம் என்ற மதம் பிடித்த யானையை சுழற்றி அடித்து, அதன் வாயில் இருந்த பெரிய தந்தத்தை வேரோடு பிடுங்கி விட்டார்.
யமனே பயந்து நடுங்கும் ராவணன் போன்ற ராக்ஷசனை, மகா பலம் கொண்ட ராக்ஷச கூட்டத்தை, ஒரு கவசம் கூட அணியாமல், குரங்கு படைகளை வைத்து கொண்டு, ராக்ஷச படையை நிர்மூலமாக்கி, ராவணன் 10 தலையையும் கொய்து விட்டு,
அவன் சொத்தும் வேண்டாம், நகரமும் வேண்டாம்! என்று அப்படியே ராவணன் தம்பி விபீஷணனுக்கு கொடுத்து விட்டார்.
சிறுவன் எப்படி மலையை தூக்க முடியும்? குழந்தை எப்படி பேசும்? பிற நாட்டையே கைப்பற்றியும் அந்த நாட்டின் செல்வத்தின் மீது ஆசை இல்லாமல் எப்படி இருக்க முடியும்? குரங்கை ராணுவத்தில் வைத்து கொண்டு ஜெயிக்க முடியுமா? இன்னொருவரை எப்படி சிரஞ்சீவியாக்க முடியும்?
பரமாத்மா, மனித அவதாரம் எடுத்தாலும், சுதந்திரமாக தன் இஷ்டத்துக்கு செயல்படும் சக்தி உள்ளவர்.
நம் (ஜீவாத்மா) நிலைமை நமக்கு நன்றாக தெரியும்.
நம் பிறப்பே நம் கையில் இல்லை.
இதிலேயே நாம் சுதந்திரமானவர்கள் இல்லை என்று புரிந்து கொள்ளலாம்.
என்னென்ன முயற்சி செய்தாலும், நிரந்தரமான சுகத்தை அடையவே முடியவில்லை.
என்ன தான் செல்வம் சேர்த்தாலும், முதுமை நோய் வந்து பிறகு மீண்டும் துக்கம் வந்து விடுகிறது.
மரணம் நமக்கு தேவையான நேரத்தில் வர வைக்க முடியாது.
தற்கொலை செய்து கொண்டாலும், தற்கொலை செய்து கொண்ட பாவத்துக்கு மேலும் நோய் அதிகம் உள்ள குடும்பத்தில் பிறக்க நேரும் என்று ஹிந்து தர்மம் சொல்கிறது.
நாம் (ஜீவாத்மா) மனித அவதாரம் எடுத்தாலும், சுதந்திரமாக வாழ முடியாது.
நம்மை படைத்தவர் பரமாத்மா வாசுதேவன். அவரின் தயவு இல்லாமல் நிரந்தரமான சுகத்தை பெறவே முடியாது.
இப்படி சுதந்திரம் இல்லாத நாம், பரமாத்மாவிடம் சேர்ந்து இருந்த போது, பரமாத்மாவின் ஆனந்தத்தை நாமும் அனுபவித்து கொண்டே இருந்தோம் என்கிறது வேதம்.
பரமாத்மா லீலை (விளையாட்டு) காரணமாக, நம்மை அலை (ஜீவாத்மா) போன்று பிரித்து காட்டி, உலகங்களை ஸ்ருஷ்டி செய்து, உலகில் பிறக்க செய்து விட்டார்.
இதுநாள் வரை பரமாத்மாவிடமே இருந்த இந்த ஜீவாத்மா, தான் அனுபவித்த ஆனந்தத்தை இழந்ததும், தான் தொலைத்த அந்த அனுபவத்தை மீண்டும் பெறுவதற்கு பெரு முயற்சி செய்கிறது.
இந்த சோகமே, குழந்தை அழுகைக்கு காரணம்.
குழந்தை பிறந்த உடனேயே "க்வா க்வா க்வா..." என்று கதறுகிறது.
'அது பாலுக்கு அழுகிறது' என்று தாய் நினைக்கிறாள்.
"க்வா" என்ற சம்ஸ்க்ரித சொல்லுக்கு "எங்கே?" என்று அர்த்தம்.
உண்மையில்,
குழந்தை "தான் அனுபவித்த அந்த ஆனந்தம் எங்கே எங்கே எங்கே...?" என்று தான் அழுகிறது என்று காட்டுகிறது நம் வேதம்.
தாய் பால் கொடுக்க, அதில் ஒரு திருப்தி ஏற்பட, சமாதானம் அடைகிறது.
அந்த சுகம் சிறிது நேரத்தில் மறைந்ததும், மீண்டும் துக்கம் ஏற்பட, மீண்டும் அழுகிறது.
இந்த அழுகை மயானம் வரை தொடர்கிறது.
"தான் தொலைத்துவிட்ட ஆனந்தம் எது?" என்று அறிந்து கொள்ள முடியாத ஜீவன்,
தான் தொலைத்துவிட்ட ஆனந்தம் எது? என்று அறிந்து கொள்ள முடியாத ஜீவன், இனிப்பு சாப்பிட்டால் கிடைக்கும் சுகத்தை "ஆனந்தம்" என்று நினைக்கிறான்.
மனித உறவுகளால் ஏற்படும் சுகத்தை "ஆனந்தம்" என்று நினைக்கிறான்.
தன் உடலுக்கு கொள்ளும் சுகத்தை "ஆனந்தம்" என்று நினைக்கிறான்.
இப்படி உலகில் கிடைக்கும் சுகங்களை அனுபவித்து "இது தான் தான் விரும்பிய ஆனந்தமோ?!" என்று பார்க்கிறான்.
கிடைக்கும் சுகங்கள் யாவுமே சிறிது காலம் வரை தான் அவனுக்கு ஆனந்தம் தருவதை, அனுபவத்தில் காண்கிறான்.
ஒரு நாள் தான் அனுபவித்த சுகம், பிறகு துக்கமாக மாறுவதை காண்கிறான்.
ஒரு நாள் வெற்றி என்ற சுகத்தை அனுபவித்து, பிறகு அவனே தோல்வியை காண்கிறான்.
ஒரு நாள் மரியாதையுடன் வாழ்ந்து, பிறகு அவனே அவமானத்தை காண்கிறான்.
இளமை என்ற சுகத்தை அனுபவித்து, ஒருநாள் முதுமை என்ற கொடுமையை அனுபவிக்கிறான்.
இப்படி வாழ்நாள் முழுவதும், "தான் தொலைத்த ஆனந்தம் எங்கே?" என்று உலகில் தேடி தேடி, கடைசியில்,
அவன் தொலைத்த ஆனந்தத்தை கண்டுபிடிக்காமலேயே இறந்து விடுகிறான்.
இதனால், மீண்டும் பிறக்கிறான். சம்சாரத்திலேயே மீண்டும் மீண்டும் விழுகிறான்.
'பரமாத்மாவிடமிருந்து தான் நாம் வந்துள்ளோம். ஆனந்த மூர்த்தியான பரமாத்மாவோடு இருந்த பொழுது, தான் அனுபவித்த ஆனந்தமே நாம் தேடும் உண்மையான ஆனந்தம்!!'
என்று அறிந்து கொள்ளும் ஜீவாத்மா, பரமாத்மாவை பற்றி சிந்திக்க தொடங்குகிறது.
பரமாத்மா நாராயணனை பிடித்து கொள்ளும் ஜீவாத்மாக்கள், தான் ஆசைப்பட்ட ஆனந்தம் எங்கே உள்ளது? என்று அறிந்து கொள்கிறார்கள். அவர்களே மகாத்மாக்கள்!
அவர்களே ஞானிகள்!
அவர்களே சாதுக்கள்!
நாராயணனிடம் பக்தி செய்தவர்கள்,
அவர் அவதாரமான ராம, கிருஷ்ண அவதாரங்களில் பக்தி செய்தவர்கள், நாம் தேடும் உண்மையான ஆனந்தத்தை அடைந்து விட்ட திருப்தியை பெறுகிறார்கள்.
இப்படிப்பட்ட மகான்கள், எப்பொழுதுமே தன் வரையில் திருப்தியாகவும், ஆனந்தமாகவுமே எப்பொழுதும் இருக்கிறார்கள்.
நாமும், ராம பக்தி, கிருஷ்ணா பக்தி செய்வோம். நாம் தேடும் உண்மையான ஆனந்தத்தை இதே வாழ்நாளில் பெற்று விடுவோம்.
பூணூல் இடது தோளில் அணிவதை "உபவீதம்" என்று அழைக்கிறோம்.
தேவர்களுக்கு செய்யும் காரியங்களுக்கு பூணூல் இடது தோளில் (உபவீதமாக) இருக்க வேண்டும்.
நம் முன்னோர்களுக்கு செய்யும் காரியங்களுக்கு பூணூல் வலது தோளில் இருக்க வேண்டும்.
நம் ரிஷிகளுக்கு செய்யும் காரியங்களுக்கு பூணூல் மாலையாக இரு தோளில் இருக்க வேண்டும்.
முன்னோர்கள் பித்ரு லோகம் தென் திசையில் உள்ளது.
அதுபோல, தேவ லோகம் வட திசையில் உள்ளது.
பொதுவாகவே, எந்த வேத சம்பந்தமான பூஜையோ, யாகமோ கிழக்கு திசை பார்த்து தான் செய்ய வேண்டும்.
ஒருவருக்கு நமஸ்காரம் செய்தால் கூட, பொதுவாக கிழக்கு திசைபார்த்து தான் செய்கிறோம்.
கிழக்கு திசை பார்த்தே பெரும்பாலும் வேத காரியங்கள், நல்ல காரியங்கள் செய்வதால், நமக்கு இடப்பக்கம்வடக்காக இருப்பதால், பூணூல் இடமாகவே போட்டு கொள்கிறோம்.
நமக்கு வலப்பக்கம் தெற்கு திசை இருப்பதால், முன்னோர்களுக்கு தர்ப்பணம், திவச காரியங்கள் செய்யும் போது, பூணூல் வலமாக போட்டு கொள்கிறோம்.
ரிஷிகள் எங்கும் இருப்பதால், இரண்டு தோளும் படுமாறு மாலையாக போட்டு ரிஷி கடனை அடைகிறோம்.
பூணூல் நாம் அனைவரும் ஆவணி அவிட்டம் அன்று வேதமறிந்த வேதியரிடம் பக்தியுடன் வாங்கி போட்டு கொள்ள வேண்டும்.
இது ஒரு கவசம்.
மதம் மாற்ற வருபவர்கள், நெற்றியில் திலகம், பூணூல் அணிந்தவனை நெருங்கி அவன் போலி தெய்வங்களை பற்றி பேசுவதில்லை...
ஜாதி பேதம் இல்லாமல் அணியலாம்.
வேதமறிந்த வேதியரிடம் பக்தியுடன் வாங்கி போட்டு கொள்ள வேண்டும்.
ப்ராம்மணர்கள் மட்டுமின்றி, பாரத தேசத்தில் அனைவரும் பூணூல் அணிந்து இருந்தனர்..
"க்ஷத்ரிய அரசர்கள், வியாபாரிகள், சுய தொழில் செய்பவர்கள்" என்று அனைவரும் பூணூல் அணிந்து இருந்தனர்.
நம் தெய்வங்களும் பூணூல் அணிந்து இருப்பதை பார்க்கிறோம்.
இன்று ப்ராம்மணர்களில் கூட, சிலர் பூணூல் அணியாமல் திரிகின்றனர். மாமிசம் கூட சாப்பிடுகின்றனர்.
1200 வருட இஸ்லாமிய, கிறிஸ்தவ ஆக்ரமிப்பால், கோவில்கள், பாரத பெண்கள், செல்வங்களை மட்டும் இழக்கவில்லை நாம், இது போன்ற பழக்கத்தின் "ரகசியங்களையும்" தொலைத்தோம்..
'பூணூல் எதற்காக அணிந்தோம்?' என்ற காரணம் இன்று மறைந்து போனதால், 'எதற்கு பூணூல் அணிய வேண்டும்?' என்று பாரத மண்ணில் பிறந்த நாமே நம்மை கேட்டு கொள்கிறோம்..
பூணூல் அணிந்து இருப்பவர்களை பார்த்து, காரணமே இல்லாமல் பொறாமையும் படுகிறோம்..
பூணூல் அணிவதன் உள் அர்த்தங்கங்கள் என்ன?...புரிந்து கொள்வோமே..
பூணூல் 'மூன்று நூல்களை' கொண்டதாக இருக்கிறது..
பூணூலில் ஒரு 'முடிச்சும்' காணப்படுகிறது.
அதை "ப்ரம்ம முடிச்சு" என்று சொல்லி கேள்வி பட்டு இருப்போம்..
மூன்று நூல்கள் எதை உணர்த்துகிறது? "மனிதனாக பிறந்த நாம் அனைவருமே, "மூன்று பேருக்கு கடன் பட்டு" இருக்கிறோம்"
என்பதை பூணூலில் உள்ள இந்த 3 நூல்கள் உணர்த்துகிறது..
ஒன்று பித்ரு கடன்,
இரண்டு, ரிஷி கடன்,
மூன்றாவது, தேவ கடன்.
1. பித்ரு கடன்
இன்று வரை மோக்ஷம் அடையாத கோடிக்கணக்கான ஜீவாத்மாவில், நாமும் இருக்கிறோம்.
இன்று வரை மோக்ஷம் அடையாததாலேயே நாம் உலகத்தில் இன்று வரை பிறந்து இருக்கிறோம்.
ஜீவனான நமக்கு, "மனித உடல் கொடுத்து" இந்த உலகில் வாழ வழி செய்தவர்கள் "நம் பெற்றோர்கள்".
நமக்கு கொடுக்கப்பட்ட இந்த உடலை வைத்து கொண்டு, நாராயணனிடம் பக்தி செய்து மோக்ஷம் அடைந்து விட முடியும்...
இந்த உடலை வைத்து கொண்டு, உலக விஷயங்களில் ஈடுபடவும் முடியும்..
"உடலை கொடுத்த நம் பெற்றோர்களுக்கு, நாம் நன்றி செய்ய கடன் பட்டுள்ளோம்". இதை நமக்கு எப்பொழுதும் "நினைவுபடுத்தவே",பூணூல் அணிகிறோம்.
பூணூலில் உள்ள ஒரு நூல்"பித்ரு கடன் உனக்கு உள்ளது"
என்று நம்மை நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறது.
தாய், தந்தை, பாட்டி, தாத்தா, பாட்டனார்கள் அனைவருக்கும் இந்த உடல் கடன் பட்டுள்ளது.
அவர்கள் உயிருடன் இருக்கும் வரை, அவர்களை அனாதையாக விட்டு விடாமல், அவர்களுக்கு சேவை செய்து இந்த கடனுக்கு பதில் செய்ய வேண்டும்.
அவர்கள் உயிர் பிரிந்து "பித்ரு லோகம்" சென்றாலும்,
அவர்கள் வேறு பிறவியே எடுத்தாலும், அவர்கள் எங்கு இருந்தாலும் நன்றாக இருக்க வேண்டும் என்று பித்ரு தேவதைகளிடம் வேண்டி, அவர்கள் உயிர் பிரிந்த நாட்களில் திதி (திவசம்/சிரார்த்தம்) செய்து பித்ரு கடனை அடைக்க வேண்டும்.
"திவசம்" போன்ற காரியங்கள் செய்யும் போது, ஹிந்துக்கள் அனைவருமே பூணூல் அணிந்து கொள்கிறார்கள்..
காரணம் புரியாததால்!! பெற்றோருக்கு திதி கொடுத்த பிறகு, பூணூலை கழட்டி எறிந்து விடுகிறார்கள்... பூணூலை அணிந்து கொண்டே இருக்கலாமே.
ஒரு நூலை உடம்பில் போட்டுக்கொள்வது என்ன சிரமமான காரியமா? ஹிந்துக்கள் அனைவரும் சிந்திக்க வேண்டும்..
அமாவாசை தர்ப்பணம், திதி கொடுப்பதும்,
பெற்றோருக்கு நாம் செய்யும் நன்றி கடனே, நன்றி உணர்ச்சியே.. இது நம்முடைய ஒரு கடமையே.
"உனக்கு மனித உடல் கொடுத்த பெற்றோருக்கு நன்றி செய்ய என்றுமே மறந்து விடாதே"
என்று நம்மை நினைவு படுத்துவதற்கே நமக்கு பூணூல் அணிவிக்கப்பட்டது.
தாய் தந்தையை தெய்வமாக மதிப்பவன், அவர்கள் மனம் கோணாமல் வாழ ஆசைப்படுபவன், அவர்களுக்கு நன்றியுடன் வாழ ஆசைப்படுபவன், இந்த உயர்ந்த நோக்கத்தை நமக்கு நினைவுபடுத்தும் பூணூலை அவமதிப்பானா?..
"பூணூல் அறுப்பேன்" என்று சொல்பவன், "தாய் தந்தைக்கு நன்றி காட்டாதே.. அவர்களுக்கு நீ கடன் படவில்லை.." என்று தானே சொல்கிறான்.. பெற்றோரை மதிக்காத அப்படிப்பட்ட கீழ்த்தரமான மனிதர்கள் மனித குணம் உள்ளவர்களா?..
சிந்திக்க வேண்டும்...
2. தேவ கடன்
சூரிய தேவன், "கண்" என்ற உறுப்பிற்கு "பார்க்கும்" சக்தியை கொடுக்கிறார்..
அக்னி தேவன், மனித உடலுக்கு ஏற்ற சூட்டை கொடுத்து, உறுப்புகளை வேலை செய்ய உதவுகிறார்.
வாயு தேவன், 5 வாயுவாக உடல் முழுவதும் இருந்து, உடல் உறுப்புகள் அசைந்து வேலை செய்ய உதவுகிறார்.
இப்படி முப்பத்து முக்கோடி தேவர்களும், நம் உடலை இயங்க செய்ய உதவுவதால், உடலை அழுகி விடாமல் காக்கும் தேவர்களுக்கும் நாம் "கடன்" பட்டு இருக்கிறோம்.
ஸந்தியா வந்தனத்தில், "பிரணவ ஜபம், காயத்ரி ஜபம்" தவிர, மற்றவவைகள் மந்திரங்கள் அல்ல, ஸ்தோத்திரங்களாகவே இருக்கின்றன.
ஆரம்பம் முதல் கடைசி வரை, பல தேவதைகளின் பெயரை சொல்லி துதிப்பதாகவே சந்தியா வந்தனம் உள்ளது.. தேவதைகளின் ஸ்தோத்திரங்களாகவே இருக்கின்றன.
தினமும் மூன்று வேளை சந்தியா வந்தனம் செய்வதன் மூலமாகவே "தேவ கடனுக்கு" நாம் நன்றி செய்ய முடிகிறது..
சந்தியா வந்தனத்தில், நவ க்ரஹங்களை திருப்தி செய்கிறோம்.. எமனுக்கு கூட வந்தனம் செய்கிறோம்.. "யோவ: சிவதமோ ரஸ:" என்று சிவபெருமானை தியானித்து கொண்டே நம்மை சுத்தி செய்து கொள்கிறோம்.. "சர்வாப்யோ தேவதாப்யோ நமோ நம:" என்று அனைத்து தேவதைகளுக்கும் சேர்த்து நமஸ்காரம் செய்கிறோம்..
சந்தியா வந்தனம் ஒழுங்காக செய்தாலே, நாம் "தேவ கடனை" அடைத்து விடலாம்.
"சிவாய நம:, நமோ நாராயணா, முருகா போற்றி" என்று சொல்வதும்,
ஆழ்வார்களின் திவ்ய பிரபந்தங்கள், நாயன்மார் பதிகங்கள் போன்றவை பாடுவதும் கூட, நாம் செய்யும் ஸ்தோத்திரங்களே (துதிகள்).
"வேத மந்திரங்கள் வேறு, ஸ்தோத்திரங்கள் வேறு" என்று புரிந்து கொள்ள வேண்டும்.
இரண்டுமே பக்தியை கொடுக்கும், தெய்வத்திடம் அழைத்து செல்லும் என்றாலும், இரண்டும் ஒன்றல்ல..
வேதத்துக்கு நிகராக 4000 திவ்ய பிரபந்தங்கள் இருக்கிறது என்று சொல்கிறார்கள்..
4000 திவ்ய பிரபந்தங்களை "தமிழ் மறை" என்றே சொல்கிறார்கள்..
"வேதத்துக்கு நிகரான திவ்ய பிரபந்தத்தை, கோவிலில் பெருமாளுக்கு முன் பாட செய்தார்" ஸ்ரீ ராமானுஜர் (1017AD)..
'திவ்ய பிரபந்தம் படிக்கும் போது, தெளியாத வேத மந்திரங்களின் அர்த்தங்கள் கூட புரிந்து விடுகிறது' என்கிறார் ஸ்வாமி தேசிகர்.
திவ்ய பிரபந்தம் "வேதத்துக்கு நிகரானது" என்று மதிக்கப்பட்டாலும்,
கோவில்களில் திவ்ய ப்ரபந்தத்தை பெருமாள் முன் பாட வேண்டும் என்று சீர்த்திருத்தமே செய்தாலும்,
ஸ்ரீ ராமானுஜர், "திவ்ய பிரபந்தம் போதுமே என்று வேத மந்திரங்களை ஒதுக்கி விட வில்லை" என்று பார்க்கிறோம்..
"ஸ்தோத்திரம் வேறு, வேத மந்திரங்கள் வேறு" என்பதை அறிந்தவர் ராமானுஜர்.
பெருமாள் முன் பாடப்படும் திவ்ய பிரபந்தங்கள், பகவானை பற்றி பாடுகிறது.. இது ஸ்துதி.
ஆனால் "புருஷ சூக்தம்" போன்ற வேத மந்திரங்களை ஓதும் போது, அது பகவானை பற்றிய ஸ்துதி அல்ல, அது பகவானையே குறிக்கிறது..
"ஓம் நம சிவாய" என்று சொல்வதும், "பதிகங்கள்" பாடுவதும், சிவபெருமானை பற்றிய ஸ்துதிகளே..
ஆனால், "ருத்ரம்" போன்ற வேத மந்திரங்களை ஓதும் போது, அதுசிவபெருமானின் 11 ருத்ர ரூபத்தையே குறிக்கிறது..
மந்திரங்கள் ஸித்தி ஆகும் போது, தெய்வங்கள் நேரிடையாக பேச ஆரம்பித்து விடுகிறார்கள்..
நம் உடல் உறுப்புகளை பாதுகாக்கும் தேவர்களுக்கு, காலத்தில் மழை கொடுக்கும் தேவர்களுக்கு, நாம் அனைவருமே "தேவ கடன்" பட்டு இருக்கிறோம்.
மூன்று வேளையும் சந்தியா வந்தனம் செய்து "தேவ கடனை" அடைக்கிறோம்.
அது தவிர, தினமும் பூஜை அறையில் உள்ள அனைத்து தெய்வங்களுக்கும் நன்றியுடன் பூஜை செய்வது மூலமாகவும், குல தெய்வத்தை மறந்து விடாமல் வழிபடுவதின் மூலமாகவும், கோவில் திருப்பணிகளில் உடல் ரீதியாகவும், பொருள் ரீதியாகவும் முடிந்த உதவி செய்வதாலும், கோவிலில் உள்ள தெய்வங்களின் சொத்தை கொள்ளை அடிக்காமல் இருப்பது போன்றவை மூலமாகவும், "தேவ கடனை"அடைக்கிறோம்..
பூணூலில் உள்ள இரண்டாவது நூல் "தேவ கடன் உனக்கு உள்ளது" என்று நம்மை நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறது.
3. ரிஷி கடன் "ஓம்" என்ற மந்திரத்தை முதலில் க்ரஹித்து உலகுக்கு வெளிப்படுத்தியவர் ப்ரம்ம தேவன். "ப்ரணவஸ்ய ரிஷி ப்ரம்மா"
என்று சந்தியா வந்தனம் காட்டுகிறது. ப்ரம்மாவே ரிஷி தான்.
"ஓம் என்ற பிரணவம்" ஸித்தி ஆகும் போது, நம்மை படைத்த ஈஸ்வரன் நம்மை காப்பாற்றுகிறார் என்ற தெளிவான அறிவு ஏற்பட்டு விடும். உலகமே எதிர்த்தாலும், கலங்காத உள்ளம் ஏற்பட்டு விடும்.
"காயத்ரி மந்திரத்துக்கு" ரிஷி விஸ்வாமித்திரர்.
இப்படி வேத மந்திரங்களுக்கு ரிஷிகள் பலர்..
சக்தி வாய்ந்த வேத மந்திரங்களை நமக்கு கொடுத்த ரிஷிகள், நமக்கு "ஆயுர்வேதம், யோகா, சித்த மருத்துவம்" என்று பல சாஸ்திரங்களையும் அள்ளி கொடுத்தனர்..
அவர்கள் எங்கெல்லாம் "சிவ பெருமானையும், பெருமாளையும், முருகனையும், விநாயகரையும், அம்பாளையும், தேவதைகளையும்" பூலோகத்தில் தன் பக்தியால் தரிசித்தார்களோ,
அங்கெல்லாம் அந்த தெய்வங்கள் சாநித்யத்துடன் என்றுமே இருக்க செய்து, நமக்கு தெய்வங்கள் அருள் செய்ய, கோவில் அமைய காரணமாக அமைந்தனர்.
வாழ்க்கைக்கு வழிகாட்ட, ராமாயணம், மஹாபாரதம் போன்ற இதிஹாசங்களை நமக்கு கொடுத்தனர்..
நாம் அனைவருமே ப்ரம்ம தேவன் என்ற ரிஷியால் படைக்கப்பட்டவர்கள் தான்.. ரிஷிகளின் பரம்பரையில் வந்தவர்கள் நாம் அனைவருமே..
ரிஷிகள் விஞ்ஞானிகளுக்கும் மேலானவர்கள்.. இதே சமயம் அடுத்த வருடம் எத்தனை மணிக்கு சூரியன் உதயமாகும்? சந்திர க்ரஹனம் எப்போது ஏற்படும்? என்று இவர்கள் சொல்லி கொடுத்த முறையை கொண்டு, இன்று கூட ஒரு வருட கால நிலையை பஞ்சாங்கம் என்று எழுதி விடுகின்றனர்..
பூணூலில் உள்ள மூன்றாவது நூல் "ரிஷி கடன் உனக்கு உள்ளது" என்று நம்மை நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறது.
சந்தியா வந்தனத்தில் பிராணாயாம ஜபம் செய்து,
ஓங்காரத்திற்கு ரிஷியான ப்ரம்ம தேவனுக்கு நன்றி செலுத்துகிறோம்.
வால்மீகி, வியாசர் போன்ற ரிஷிகள் நமக்கு அளித்த "புராணங்கள், ராமாயணம், பாகவதம், பாரதம்" போன்றவைகளை கொஞ்சம் படித்தாலும், நம்மை பார்த்து ரிஷிகள் சந்தோஷப்படுகின்றனர்.
மூன்று வேளையும் ,
ஸந்தியா வந்தனம் செய்து வந்தாலே "தேவ கடனும் தீருகிறது, ரிஷி கடனும் தீருகிறது".
ரிஷிகளுக்கு நிகரான ஞானிகள், மகாத்மாக்கள், சந்நியாசிகளை கண்டால், அவர்களுக்கு முடிந்த சேவைகள் செய்து ரிஷி கடனை அடைக்கலாம்.
குருவிடம் உபதேசமாக மந்திர உபதேசங்கள் பெற்றுக்கொண்டு ஜெபிக்கும் போது, ரிஷி கடன் தீருகிறது.
அவர்கள் மடங்களில் சுத்தம் செய்வது, அன்னதானம் செய்வது, போன்ற சேவைகள் செய்யலாம்.
மகான்களின் அறிவுரை படி வாழ முயற்சிப்பது..
ரிஷிகள் நமக்கு கொடுத்த புராணங்களை படித்து உணர்வது,
ரிஷிகள் வழிபட்ட தெய்வங்களுக்கு சேவை செய்வது
போன்றவை மூலம் "ரிஷிகளின் கடனை" நாம் அடைக்கிறோம்..
இந்த "மூன்று கடனையும்" எந்த காரணம் கொண்டும் நாம் மறந்து விட கூடாது, என்பதற்காக, பூணூல் அனைவருக்குமே அணிவிக்கப்பட்டது..
இன்று ப்ராம்மணன் மட்டும் அணிவது வேதனைக்குரியது.. அனைவருமே அணிய வேண்டும்.
"ஓம் நம சிவாய" என்று நாம் செய்யும் ஸ்துதி சீக்கிரம் பலித்து, சிவபெருமான் பிரசன்னமாக, வேதம் கற்ற ப்ராம்மணர்கள்கையால் "ஆவணி அவிட்டம்" என்ற நாளில் பூணூல் வாங்கி போட்டு கொள்ள வேண்டும். அனைவரும் பூணூல் வாங்கி அணிய வேண்டும்.. நம் பிரார்த்தனைகள் பலிக்க, நாம் செய்யும் மந்திர ஜபங்கள் சீக்கிரம் பலிக்க, நினைத்த காரியங்கள் நிறைவேற, வேதம் கற்ற ப்ராம்மணர்கள் கையால் "ஆவணி அவிட்டம்" என்ற நாளில், பூணூல் வாங்கி போட்டு கொள்ள வேண்டும்.
யாதவ குலத்தில் அவதரித்த கிருஷ்ணரும் சந்தியா வந்தனம் செய்தார். பூணூல் அணிந்து இருந்தாரே!!
ஆசாரியும், பொற்கொல்லனும், வியாபாரியும் பூணூல் அணிந்து இருந்தனரே!!..
நாம் அனைவருமே நம் "பெற்றோருக்கு" கடன் பட்டு இருக்கிறோம்..
ப்ரம்ம தேவன் வழி வந்த நாம் அனைவரும், "ரிஷிகளுக்கு' கடன் பட்டு இருக்கிறோம்.
நம் உடல் ஒழுங்காக வேலை செய்வதும், உலகில் மழை பெய்வதும், காற்று மெல்ல வீசுவதும் தேவர்களால் என்பதால், நாம் அனைவரும் "தேவர்களுக்கு" கடன் பட்டு இருக்கிறோம்..
ஆதலால் பூணூல் அனைவரும் அணிந்து இருக்க வேண்டும்..
நாம் செய்யும் தெய்வ பிரார்த்தனைகள் பலிக்கவாவது, அனைவரும் பூணூல் அணிந்து இருக்க வேண்டும்..
மனிதனாக பிறந்த யாருமே "இந்த மூன்று கடனை அடைக்காமல் வாழ்ந்தால்" பாவத்தை சேர்த்து கொள்கிறான்..
இந்த "மூன்று கடன் நம் தலையில் இருப்பதை உணர்த்தவே" பூணூல் அணிகிறோம்..
பூணூல் அணிந்து கொண்டே இருக்கும் போது,
தவறான காரியங்கள்,
ஒழுக்ககேடான செயல்கள்,
கோவில் சொத்தை திருட வாய்ப்பு கிடைத்தாலும்,
நம்மை செய்ய விடாமல், நம் மனசாட்சியே தடுத்து விடும்..
ஒரு CCTV கேமராவை வைக்கும் போது, அந்த இடத்தில் யாரும் இல்லாமல் போனாலும், தவறான செயல்கள் செய்ய அது தடுப்பது போல, பூணூல் என்ற CCTV கேமரா, ஆண்களுக்கு அணிவிக்கப்பட்டது..
சில சமயங்களில் தெரிந்தே சில தவறுகள் செய்தாலும், பெரும்பாலும், "பூணூல் அணிந்தவர்கள் தவறு செய்ய அஞ்சுவதை காணலாம்".
சிறையில் பெரும் குற்றத்தை செய்து விட்டு இருப்பவர்களில், 99% மக்கள் மாமிசம் உண்பவர்களாகவும், பூணூல் அணியாதவர்களாகவும் தான் உள்ளனர்..
குற்றத்தை குறைக்க வல்லது பூணூல்..
இதன் அர்த்தங்கள் புரிந்து,
பாரத மண்ணில் ஒவ்வொரு மனிதனும் பூணூல் அணிய ஆரம்பித்தால், தானாகவே தனி மனித ஒழுக்கங்கள் சீர்பட்டு விடும்.
பூணூல் எதற்கு? அது என்ன உணர்த்துகிறது? என்று புரியாதவரை, இது வெறும் நூலாக தான் தோன்றும்..
பாரத மக்கள் விழிப்படைய வேண்டும்.. எதையும் ஆராய்ச்சி இல்லாமல் நம் முன்னோர்கள் செய்யவில்லை என்று புரிந்து கொள்ள வேண்டும்..
பெரும்பாலான ஹிந்துக்கள் மகான்களிடம் பக்தி, தெய்வ பக்தி, பித்ரு பக்தி
கொண்டவர்களாக இருப்பதால், அனைவருக்கும் பூணூல் அணிவிக்கப்பட்டது.
ரிஷி கடனும் இல்லாத, தேவ கடனும் இல்லாத, பித்ரு கடனும் இல்லாத பரவாசுதேவன் நாராயணன், "நாம் அணிந்தால் அவர்களும் அணிவார்கள்" என்று தானும் பூணூல் போட்டு கொள்கிறார்.
"நாம் நெற்றியில் திலகம் இட்டு கொள்ள வேண்டும்" என்று காண்பிக்க, தானும் இட்டு கொள்கிறார்.
கருணையே வடிவான தெய்வங்கள் அல்லவா! நம் தெய்வங்கள்.
பெற்றோரை மதிக்காதவன், நமக்கு மேல் தேவதைகள் உண்டு என்று உணராதவன், ரிஷிகளின் யோக சாஸ்திரம், வான சாஸ்திரம், ஆயுர்வேதம் என்று எதையும் மதிக்காதவன்
மட்டுமே, "பூணூல் அணிவதை தவிர்க்க நினைப்பான்".. அப்படிப்பட்டவனை மனிதன் என்று மதிப்பதே வீண்.
பெற்றவனுக்கு நன்றி காட்ட நினைக்கும் அனைவரும்,
தேவதைகளுக்கு நன்றி காட்ட நினைக்கும் அனைவரும்,
ரிஷிகளுக்கு நன்றி காட்ட நினைக்கும் அனைவரும்,
கட்டாயம் பூணூல் அணிந்து கொள்ள வேண்டும்..
இது "ஒரு ரக்ஷை" என்று நாம் அனைவரும் உணர வேண்டும்.
ஒரு CCTV கேமராவை போல, நம் உடம்பில் இந்த பூணூல் இருக்கும் போது,
பெற்றோர் விரும்பாத செயல்களை செய்ய, நாம் தயங்குவோம்.
தேவர்கள் வெறுக்கும் உடல் ரீதியான காரியங்களை செய்ய தயங்குவோம்.
ரிஷிகள் வெறுக்கும் வாழ்க்கை முறையை வாழ தயங்குவோம்.
இனி,
பூணூலில் போடப்பட்டு இருக்கும் "ப்ரம்ம முடிச்சை" பற்றி அறிந்து கொள்ள முயற்சிப்போம்..
ஓம் என்ற பிரணவத்தின் ரிஷி "ப்ரம்ம தேவன்" என்று அறிகிறோம்.
(ப்ரணவஸ்ய ரிஷி: ப்ரம்மா)
"பிராணாயாமம்" என்ற இந்த மூச்சு பயிற்சிக்கும், இந்த "ப்ரம்ம முடிச்சுக்கும்" சம்பந்தம் உள்ளது...
பிராணாயாமம் செய்யும் போது, 8 மாத்திரைகள், "ராம ராம.." என்று நிதானமாய் மனதில் உச்சரித்துக்கொண்டு, இடது மூக்கு வழியாக பூரகம் செய்து (மூச்சை இழுத்து), 16 மாத்திரைகள், "ராம ராம.." என்று நிதானமாய் மனதில் உச்சரித்துக்கொண்டு, வலது மூக்கு வழியாக ரேசகம் (மூச்சை விட்டு) செய்ய வேண்டும்.
பின்னர், 8 மாத்திரைகள், ராம ராம என்று நிதானமாய் மனதில் உச்சரித்துக்கொண்டு, வலது மூக்கு வழியாக பூரகம் செய்து (மூச்சை இழுத்து), 16 மாத்திரைகள், "ராம ராம.." என்று நிதானமாய் மனதில் உச்சரித்துக்கொண்டு, இடது மூக்கு வழியாக ரேசகம் (மூச்சை விட்டு) செய்ய வேண்டும்.
இது "ஒரு எண்ணிக்கை".
இந்த எண்ணிக்கையை, 64 வரை எண்ணிக்கையை ஏற்றிக் கொண்டு போகலாம்.
இவ்வாறு 6 மாதம் செய்தால், இடது மூக்கில் ஆரம்பித்து, முதுகு தண்டை பாம்பு போல சுற்றி வந்து, "மூலாதார சக்கரம்" வரை செல்லும், 'இடா என்ற பெண் குணங்களை கொண்ட நாடி' சுத்தி ஆகி விடும்..
அதே போல, வலது மூக்கில் ஆரம்பித்து, முதுகு தண்டை பாம்பு போல சுற்றி வந்து, "மூலாதார சக்கரம்" வரை செல்லும், 'பிங்களா என்ற ஆண் குணங்களை கொண்ட நாடியும்' சுத்தி ஆகி விடும்..
நாடி சுத்தி பிராணாயாமத்தை,
6 மாதம் செய்து வந்தால் - இரண்டு நாடியும் (இடா, பிங்களா) சுத்தி ஆகி, "மூலாதார சக்கரம்" தூண்டப்பட்ட நிலையில், உடலில் ஆரோக்கியம், மனதில் அமைதி, புத்தியில் விவேகம் இவைகள் உண்டாகும். ஒருக்கால் "ஓங்கார நாதம்" கேட்கவும் கூடும்.
6 மாதத்தில் இரு நாடிகளும் சுத்தி ஏற்பட்டதும், இந்த இரு நாடிகளுக்கும் நடுவே, முதுகு தண்டின் நடுவில், மூலாதார சக்கரம் ஆரம்பித்து, மேல் நோக்கி சக்தியை செலுத்தும் குணமுடைய "சுஷும்னா" என்ற நாடி விழித்து விடும்.
இடா என்ற நாடியும், பிங்களா என்ற நாடியும் கீழ் நோக்கி சக்தியை செலுத்தும் குணம் கொண்டவை..
இந்த இரு நாடிகள் மட்டுமே, நமக்கு வேலை செய்கிறது..
நம் பிராண சக்திகள் காமத்துக்கும், கோபத்துக்கும் விரயம் ஆகிறது..
இந்த இரண்டு நாடிகள் தடையில்லாமல் சஞ்சரிக்கும் போது,
இந்த இரண்டு நாடிகள் சுத்தி ஆகும் போது,
மேல் நோக்கி செல்லும் சுஷும்னா என்ற நாடி விழித்து, இடா, மற்றும் பிங்களா என்ற நாடிகளிலிருந்து கீழ் நோக்கி வரும் சக்தியை, அப்படியே திசை மாற்றி முதுகு தண்டின் நடுவே மேல் நோக்கி பாய்ச்சுகிறது..
இந்த அனுபவம் பேரானந்தத்தை பயிற்சி செய்பவருக்கு கொடுத்து விடும்.
'இடா பிங்களா' நாடிகள் கீழ் நோக்கி சக்தியை எடுத்து செல்கிறது.
இது உலக விஷயங்களில் நம்மை இழுத்து செல்கிறது.
'சுஷும்னா' என்ற நாடி விழித்தெழும் போது, நம் ப்ராண சக்தி, மேல் எழும்பி செல்லும் போது, இது வரை அனுபவிக்காத நிலை ஏற்படும்.
சுஷும்னா நாடி தெய்வீக விஷயங்களில் நம்மை இழுத்து செல்லும். ஒரு சாரை பாம்பு எப்படி நெளிந்து நெளிந்து வேகமாக செல்லுமோ, அது போல, குண்டலினி சக்தி சுஷும்னா நாடியில் உயரே செல்லும்.
தெய்வ தரிசங்கள் ஏற்படுவதற்கு முன், ஸித்திகள் கை கூடும்.
இந்த ஸித்திகளில் மயங்கி விழுந்தால், பெற்ற சக்திகள் அந்த ஸித்திகளை அனுபவிப்பதில் செலவாகி, தெய்வ தரிசனம் கிடைக்காமல் போக செய்யும்.
எந்த ஞானி, இந்த ஸித்திகளை புறந்தள்ளி மேலும் முயற்சிக்கிறானோ, அவனுடைய பிராண சக்தி, சஹஸ்ரார சக்கரம் வரை சென்று, மோக்ஷத்தை நேரிடையாக பெற்று விடுகிறான். அந்த ஜென்மத்தோடு பிறப்பு இறப்பு என்ற சூழலில் இருந்து மீண்டு, வைகுண்டம் சென்று விடுகிறான்.
7 சக்கரங்களில், 'மூலாதார சக்கரத்தில்' உள்ள இந்த சுஷும்னா நாடி, மேல் எழும்பி 'சுவாதிஸ்டான சக்கரத்தை' தொட்டு விட்டால், உடல் ஆரோக்கியம் தானாகவே ஏற்பட்டு விடும்.. களைப்பே இல்லாத தேகத்தை பெற்று விடுவான்.. 'சுவாதிஸ்டான சக்கரம்' நன்கு தூண்டப்பட்டுள்ள மனிதன், தனக்கும் இந்த உடலுக்கும் இடைவெளியை உணர்வான்..
இந்த இரு சக்கரத்தின் நடுவே ஒரு முடிச்சு உள்ளது.
இந்த முடிச்சுக்கே "ப்ரம்ம முடிச்சு" என்று பெயர்.
இதே ப்ரம்ம முடிச்சை தான் பூணூலில் வைத்து, "இந்த ப்ரம்ம முடிச்சை அவிழ்க்க முயற்சி செய்" என்று நமக்கு நினைவுபடுத்துகிறது..
பிராணாயாமம் செய்து, மூலாதார சக்கரத்தில் இருக்கும் சுஷும்னா நாடியை மேலே எழும்பி விட முடியும்..
ஆனால் வெறும் ப்ராணாயாமத்தால் மட்டுமே இந்த ப்ரம்ம முடிச்சை தாண்டி, அடுத்த சக்கரமான சுவாதிஸ்டான சக்கரத்தை அடைய முடியாது..
நம் மீது உள்ள பித்ரு கடனை, தேவ கடனை, ரிஷி கடனை உணர்ந்து, அதற்கான நன்றியை விடாமல் செய்து கொண்டிருந்தால்,
ரிஷிகளில் முதன்மையான ப்ரம்ம தேவன் கருணையால்,
அவர் படைத்த உலகை கண்டு, எதிர்கால பயம் ஏற்படாத நிலையை கொடுக்கிறார். தெய்வ பலம் தனக்கு இருப்பதை உணர்வதால், தானாகவே உலக பயம் விலக, ப்ரம்ம முடிச்சு தானாக அவிழ்கிறது..
ஸந்யாஸத்தை ஏற்றவர்கள், பூணூலை அவிழ்த்து விடுகிறார்கள்.
அவர்கள் குடும்பத்தை, சுகத்தை விட்டு சன்யாசம் ஏற்கிறார்கள்.
தெய்வ பலத்தை கையில் எடுக்கும் இவர்கள், எதிர்கால பயத்தை விட்டு விடுகிறார்கள். ப்ரம்ம முடிச்சு தானாக அவிழ்கிறது.
ஆதலால் பூணூல் இவர்கள் அணிவதில்லை.
மறுபிறவி எடுத்த சந்யாசமானாலும், தேவ கடனை, ரிஷி கடனை இவர்கள் விடுவதில்லை. தாயை விட்டுவிடுவதில்லை. ஆதி சங்கரர், சன்யாசம் ஏற்ற பின், தன் தாய் கடைசி காலத்தில் இருப்பதை அறிந்து, தாயை பார்க்க வந்து விட்டார்.
அவருடைய தாய், பரவாசுதேவனை எப்படியெல்லாம் பார்க்க ஆசைப்படுகிறாளோ, அப்படி எல்லாம் பார்க்க பரவாசுதேவன் நாராயணனை பிரார்த்திக்க, கிருஷ்ணராகவும், ராமராகவும், விஷ்ணுவாகவும், சிவபெருமானாகவும் தரிசனம் பெற்று, நற்கதி அடைந்தாள். ப்ரம்ம முடிச்சு அவிழ, தடைபட்ட ஓட்டம் விலகுகிறது...
நாடி சுத்தியால், எழுப்பப்பட்ட சுஷும்னா நாடி, மூலாதார சக்கரத்தை தாண்டி, மேலே உள்ள சுவாதிஸ்டான சக்கரத்தை அடைகிறது...
மேலும் பிராணாயாமம் கும்பத்தோடு (மூச்சை அடக்கி) செய்ய, செய்ய, சுஷும்னா நாடி மேலும் எழும்பி மணிப்பூரக சக்கரத்தை தூண்டுகிறது .
தொப்புளுக்கு நேரான முதுகு தண்டில் மணிப்பூரகம் சக்கரம் உள்ளது. மணிப்பூரகம் சக்கரம் தூண்டப்பட்ட மனிதன், கடும் உழைப்பாளியாக வாழ்வில் சிறந்து விளங்குவான்.
இந்த இடத்தில் தான் நினைப்பது எல்லாம் தானாக நடக்க ஆரம்பிக்கும்.. மனிதர்கள் தானாக வந்து விழுவார்கள்...
மேலும் பிராணாயாமம் செய்ய, செய்ய, சுஷும்னா நாடி மேலும் எழும்பி இதயத்துக்கு நேராக உள்ள அனாகதம் சக்கரத்தை அடைய முயல்கிறது.
இந்த சக்கரத்தை அடைய விடாமல், ப்ரம்ம முடிச்சு இருந்ததை போன்று, இங்கு விஷ்ணு முடிச்சு தடுக்கும்...
இதையும் ப்ராணாயாமத்தால் மட்டும் அவிழ்க்க முடியாது...
விஷ்ணு பகவானை தியானித்து பக்தி செய்ய செய்ய, நம் புத்தியில் உள்ள சுயநலம் கரைந்து விடும்.. அவர் அணுகிரஹத்தால் தான் தன் முயற்சிகளுக்கு பலன் கிடைத்தது என்று தெளிவு ஏற்படுகிறது..
சுயநல எண்ணம் கரைய, விஷ்ணு முடிச்சு அவிழ, சுஷும்னா நாடி மேலும் எழும்பி இதயத்துக்கு நேராக உள்ள 'அனாகதம் சக்கரத்தை' அடைகிறது.
இந்த சக்கரம் தூண்ட படும்போது, உலகத்தில் யாரை பார்த்தாலும் ப்ரம்ம ஸ்வரூபமாகவே தோன்றும்...
பிரகலாதன் எதை பார்த்தாலும் அதில் நாராயணன் இருப்பதை பார்த்தது போல, யாரை பார்த்தாலும் தோன்றும்.. எதை பார்த்தாலும் தோன்றும்.. மனதில் அன்பு பெருகும்.. அன்பே உருவாக ஆகி விடுவார்கள்..
சில சமயங்களில் படைக்கும் சக்தியும் பெற்று விடுவார்கள்..
மேலும் முயற்சி செய்ய, சுஷும்னா நாடி மேலும் எழும்பி, கழுத்துக்கு நேராக உள்ள விசுக்தி என்ற சக்கரத்தை அடையும். இந்த சக்கரம் தூண்டப்படும் போது, வரும் தீமைகளை தடுத்து நிறுத்தும் சக்தி ஏற்படும்.
மேலும் பிராணாயாமம் செய்ய, செய்ய, சுஷும்னா நாடி மேலும் எழும்பி நெற்றியின் நடுவில் உள்ள ஆக்கினை சக்கரத்தை அடைய முயல்கிறது.
இந்த சக்கரத்தை அடைய விடாமல், ப்ரம்ம முடிச்சு, விஷ்ணு முடுச்சு இருந்ததை போன்று, இங்கு ருத்ர முடிச்சு தடுக்கும்...
தான் எப்படி ஒரு ஆன்மீக முன்னேற்றத்தை பெற்று விட்டோம் என்ற கர்வம் இருக்கும் வரை, ஆக்கினை சக்கரத்தை அடைய முடியாது.
கர்வத்தை ஈஸ்வரனிடம் தொலைத்து, சரணாகதி செய்தால், ருத்ர முடிச்சு தானாக அவிழ்ந்து, ஆக்கினை சக்கரத்தை தூண்டுகிறது...
மூன்றாவது நெற்றி கண் போல, ஞானம், பேரறிவு போன்றவை உண்டாகும்.
கடைசியாக குண்டலினியாகிய மின்னல் கொடி (பிராண சக்தி), ஆறு விதமான ஜோதிகளை (சக்கரம்) தாண்டி, பரஞ்ஜோதியை (சஹஸ்ரார சக்ரம்) அடைந்து, இரண்டற கலந்து விடும்.
இதுவே முக்தி நிலை.
ப்ராணயாமத்தில் ஸித்தி பெற்றவனுக்கு, சமாதி தானே கை கூடும்.
ப்ராணயாமத்தில் ஸித்தி பெறாதவன், ப்ரத்யாஹாரம், தாரணை, தியானம் போன்ற வழியில் சென்றும் "சமாதி" நிலையை அடையலாம்.
நம் ஹிந்து தர்மத்தில் எதற்கும் காரணம் உண்டு.
"ஓம் நம சிவாய", "நமோ நாராயண" என்று நாம் சொல்லும் ஸ்தோத்திரங்கள் பலிக்க, தெய்வ அனுக்கிரஹம் நமக்கு பலிக்க, நம் மீது உள்ள தேவ கடனை, ரிஷி கடனை, பித்ரு கடனை கழிக்க, பூணூல் தேவை.நாம் அனைவருமே பூணூல் அணிந்து கொள்ள வேண்டும்.
இதை வேதம் கற்ற வேதியர்களிடம், "ஆவணி அவிட்டம்" அன்று அனைவரும் மிகுந்த மதிப்புடன், மரியாதையுடன் வாங்கி பெற்று போட்டு கொள்ள வேண்டும்.
ஆவணி அவிடத்தில் வேதியர்கள் வேத மந்திரங்கள் சொல்லி புது பூணூலை கொடுப்பதால், நாம் சொல்லும் பிரார்த்தனைகள் உடனே பலிக்கும்.
திருமணம் ஆன பின், மேலும் ஒரு பூணலை போட்டுக்கொள்கிறான். இங்கு, தன் மனைவிக்கு இருக்கும் இந்த மூன்று கடனையும் தான் ஏற்று கொண்டு, மேலும் பொறுப்பை ஏற்கிறான். அவளின் தெய்வீக பாதைக்கும், தான் உழைக்கிறான். பத்னி இதனால், கணவனுக்கு நன்றியுடன், தர்மத்தில் இருந்து, அவனை தாயாக, துணைவியாக பார்த்து கொள்கிறாள். மூன்றாவது பூணூல் கிடையாது. ஆனால் பிராம்மணர்கள் அங்க வஸ்திரம் இன்று அணியாமல் இருப்பதால், மூன்றாவது பூணூலை அங்கவஸ்திரமாக போட்டு விடுகிறார்கள். சட்டை அணியாத, அங்க வஸ்திரம் அணிந்தே இருக்கும் வேதியர்கள், இந்த மூன்றாவது பூணூலை அணிவதில்லை.