Followers

Search Here...

Showing posts with label பாசுரம். Show all posts
Showing posts with label பாசுரம். Show all posts

Monday 3 February 2020

பாசுரம் (அர்த்தம்) - எம்மனா! என் குல தெய்வமே! என்னுடைய நாயகனே! - பெரியாழ்வார் திருப்பதி பெருமாளை பார்த்து பாடிய அழகான பாசுரம். தமிழன் தெரிந்து கொள்ள வேண்டாமா?

பாசுரம் (அர்த்தம்) : திருப்பதி பெருமாள்

எம்மனா!!
என் குல தெய்வமே!!
என்னுடைய நாயகனே!!
நின்னுளேனாய்ப் பெற்ற நன்மை
இவ்வுலகினில் யார் பெறுவார்?
-- திருமொழி (பெரியாழ்வார்)




பெரியாழ்வார், திருமலையில் உள்ள ஸ்ரீனிவாசபெருமாளை 3 அழகான பெயர்கள் சொல்லி கூப்பிடுகிறார்...
முதலில்,
  • "எம்மனா!!" என்று கூப்பிடுகிறார்.
பிறகு,
  • "என் குலதெய்வமே!!" என்று கூப்பிடுகிறார்.
பிறகு
  • "என்னுடைய நாயகனே!!" என்று உரிமையுடன் கூப்பிடுகிறார்.

இந்த 3 நாமங்களின் உள் அர்த்தம் தெரியாமல் போனாலும், இந்த சொற்களே இனிக்கிறது...

அர்த்தம் தெரிந்து கொண்டால், தினமும் இந்த 3 நாமத்தை திரும்ப திரும்ப சொல்ல ஆசை வந்து விடும் நமக்கு.
'பெரியவாச்சான் பிள்ளை (உபேயம், உபாயம், பர தெய்வமாக),
ஆளவந்தார் (ஞான விரோதி, ஆஸ்ரய விரோதி, மோக்ஷ விரோதி), 
உடையவர் ஸ்ரீராமானுஜர் (தேக அபிமானம் கழிந்து, அன்ய ஷேசத்துவம் கழிந்து, ஸ்வஸ் ஸ்தாதந்திரியமும் கழிந்து)
போன்ற ஆச்சார்யர்கள் 'இந்த மூன்று சொற்களின் (எம்மனா, என் குலதெய்வமே, என்னுடைய நாயகனே) அர்த்தத்தை பலவாறு ரசிக்கிறார்கள்' என்றும் பார்க்கிறோம்.

மரணத்தை ஒருவன் பார்த்தாலேயே "உடல் வேறு ஆத்மா வேறு" என்ற ஞானம் (அறிவு) கொஞ்சம் பகுத்தறிவு உள்ளவனுக்கும் வந்து விடும்.
ஆதலால்,
"உடல் வேறு ஆத்மா வேறு" என்று நினைப்பது மட்டுமே உண்மையான ஞானம் என்று நினைக்கக்கூடாது.. அது மட்டுமே ஞானம் இல்லை.

"நான் ஜீவன் (ஆத்மா)! நான் பகவானுடைய தாஸன்!"
என்று நினைப்பதே 'உண்மையான ஞானம்' என்கிறார்கள் நம் ஆச்சார்யர்கள்.

"உடல் நானில்லை, ஜீவனே நான். ஜீவனாகிய நான் ஒரு தனித்த பொருள்" என்று பகவானை விலக்கி விட்டு,
"தான் ஆத்மா, தான் சுதந்திரமானவன்" என்று நினைத்து கொள்வதே உண்மையான ஞானத்துக்கு விரோதம் தான்.
இப்படி நினைப்பதே "ஞான விரோதம்" என்கிறார்கள் நம் ஆச்சாரியர்கள். (அத்வைதம்)

(அத்வைதம் என்ன சொல்கிறது? விஷிஸ்டாத்வைதம் என்ன சொல்கிறது?) மேலும் அறிய இங்கே படிக்கவும்.

"எம்மனா" (எம்பெருமான்) என்ற சொல்லுக்கு
"உடல் நானில்லை, ஜீவனே (ஆத்மா) நான். ஜீவனாகிய நான் ஒரு தனித்த பொருள் இல்லை. நான் சுதந்திரமானவன் இல்லை. நான் பகவானின் தாஸன்"
என்று அர்த்தம் காட்டுகிறார்கள், நம் ஆச்சாரியர்கள். (விசேஷ அத்வைதம்)

ஆதலால்,
"எம்மனா" (எம்பெருமான்) என்று சொல்லும் போதே,
நமக்கு "ஞான விரோதமான அத்வைத புத்தி ஒழிந்து விடும்" என்கிறார்.




அது போல,
"என் குலதெய்வமே" என்று சொல்லும்போதே,
நமக்கு "ஆஸ்ரய விரோதமான புத்தி ஒழிந்து விடும். பெருமாளை ஆஸ்ரயிக்க வேண்டும் என்ற புத்தி ஏற்படும்" என்கிறார்.
அது போல,
"என்னுடைய நாயகனே" என்று சொல்லும்போதே,
நமக்கு "மோக்ஷ விரோதமான புத்தி ஒழிந்து விடும். வெறும் சுதந்திரம் (விடுதலை) மட்டும் பெறாமல், வைகுண்டம் (வீடு) என்ற நம் சொந்த வீட்டுக்கு (மோக்ஷம்) போக வேண்டும் என்ற புத்தி ஏற்படும்" என்கிறார்.




மேலும்
நாம் இந்த பிறவியில் அடைய வேண்டியது (உபேயம்) எது?
(What should we achieve?)
என்ற கேள்விக்கு,

"எம்மனா" (எம்பெருமான்) என்று சொல் மூலம்,
"நாம் அடைய வேண்டியவர் (உபேயம்), நம்முடைய பகவான் நாராயணனே"
என்ற தெளிவு ஏற்படுத்துகிறார், பெரியாழ்வார்.
"எம்மனா" என்ற சொல்லுக்கு "நான் அவருடையவன். அவருடைய சொத்து" என்று பொருள்.

நாம் அடைய வேண்டியது ("உபேயம்") யார் என்று தெரிந்து விட்டது.சரி...
ஆனால்,
பெருமாளை அடைய வேண்டிய வழி (உபாயம்) என்ன?
என்ற அடுத்த கேள்விக்கு,

"என் குலதெய்வமே" என்ற சொல் மூலம்,
"நாம் பெருமாளை அடைய வேண்டிய வழி (உபாயம்), அவரையே நம் குல தெய்வமாக கொள்வது தான்"
என்ற தெளிவை நமக்கு ஏற்படுத்துகிறார் பெரியாழ்வார்.

"பெருமாளை குலதெய்வமாக நீ ஆக்கிக்கொண்டால், 
நீ மட்டுமல்ல, உன் பரம்பரையில் பிறந்த அனைவருமே, 
அவர்கள் பிறவியில் அடைய வேண்டியதான (உபேயம்) பெருமாளை அடைந்து விடுவார்கள்"
என்கிறார் பெரியாழ்வார்.
"குலதெய்வமாக வெங்கடேசபெருமாளே அமைந்தவர்களுக்கு, வைகுண்டம் போகும் வழியையும் காட்டி, அடையும் லட்சியமாகவும் பெருமாளே இருந்து, மோக்ஷம் வரை துணையாகவே இருக்கிறார்" என்கிறார் பெரியாழ்வார்.

"யாருக்கு குலதெய்வமாக வெங்கடேசபெருமாள் அமைந்தாரோ!, அவர்களே பாக்கியவான்" என்கிறார் பெரியாழ்வார்.
மஹாபாரதத்தில் திரௌபதி "கோவிந்தா..." என்று தன் குலதெய்வமாக பெருமாளை வரித்து கொண்டதற்காக, அவளுடைய பேரன் பரிக்ஷித் கர்ப்பத்திலேயே அழிய வேண்டும் என்று அஸ்வத்தாமன் நினைத்தும், திரௌபதி என்ற பக்தைக்காக அவள் குலத்தை அழிய விடாமல் ரக்ஷித்தார் பெருமாள்.

குலதெய்வமாக இருந்து, நாமும் நம் பரம்பரையும், மோக்ஷம் போகும் வரை, நம் கூட இருந்தே ரக்ஷிக்கிறார்.

"என்னுடைய நாயகனே" என்ற சொல் மூலம், "பரதெய்வம் நாராயணனே"
என்ற தெளிவு ஏற்படுத்துகிறார் பெரியாழ்வார்.

உலகத்தில்,
சிலருக்கு இஷ்ட தெய்வமாக (உபேயமாக) "வெங்கடேச பெருமாள்" இருக்கிறார்.
அவர்கள் பெருமாளை "எம்மனா" (எம்பெருமான்) என்கிறார்கள்.

இன்னும் சிலருக்கு குல தெய்வமாக (உபாயமாக) "வெங்கடேச பெருமாள்" இருக்கிறார். 
அவர்கள் பெருமாளை "என் குல தெய்வமே" என்கிறார்கள்.

சிலருக்கு பர தெய்வமாக "வெங்கடேச பெருமாள்" இருக்கிறார். அவர்கள் பெருமாளை  "என்னுடைய நாயகனே" என்கிறார்கள்.

"தனக்கோ உபேயமாகவும் (இஷ்டதெய்வம்), உபாயமாகவும் (குலதெய்வம்), பரதெய்வமாகவும், 
மூன்று சம்பந்தத்துடன் பெருமாள் இருக்கிறாரே!"
என்ற பெருமிதமடைந்து பாடுகிறார் பெரியாழ்வார்,




பரதெய்வமாக இருக்கும் நாராயணனே, தனக்கு குலதெய்வமாகவும் இருக்கிறார். தனக்கு இஷ்டதெய்வமாகவும் இருக்கிறார்.
பெருமாள், 
என்னையும், என் பரம்பரையையும் ரக்ஷிக்கிறார் என்கிற போது,
என்னை பற்றியும் எனக்கு கவலையில்லாமல்
என் குடும்பத்தை பற்றியும் கவலையில்லாமல்
என்னை உங்கள் திருவடியை ஆச்ரயித்து கொண்டு இருக்குமாறு செய்து கொண்டு, நீங்கள் என்னை சுகமாக வைத்துக்கொண்டு, ரக்ஷிக்கிறீர்களே !!
உம்மிடத்தில் எனக்கு பரிபூரணமான ப்ரேமை உண்டாகும் படி செய்து, எப்பொழுதும் உங்கள் தொண்டுக்காகவே என்னை ஆக்கி,
என்னை வெளி உலக காரியங்களில் இங்கும் அங்கும் போக விடாமல் தடுத்து,
நீங்கள் என்னை பரிபாலிக்கும் அழகும்,
உங்கள் கருணைக்கு பாத்திரமாக இருக்கும் என் நிலையும்,
எனக்கு கிடைத்த நன்மையை (பாக்கியத்தை) போல, இவ்வுலகினில் யார் பெறுவார்? 
என்று என்கிறார் பெரியாழ்வார்.
அதையே,
நின்னுள் உள்ளேனாய்ப் பெற்ற நன்மை
இவ்வுலகினில் யார் பெறுவார்?
என்று பெருமிதம் அடைகிறார்.

நாமும் வெங்கடேச பெருமாளை, பரதெய்வமாகவும், குலதெய்வமாகவும், இஷ்ட தெய்வமாகவும் கொள்வோம்.
சர்வ மங்களத்தையும் திருப்பதி பெருமாளே, நமக்கும் நம் பரம்பரைக்கும் அருள்வார். 


குருவே துணை !



Saturday 1 February 2020

பாசுரம் (அர்த்தம்) - திருவுக்கும் திருவாகிய செல்வா - திருமங்கை ஆழ்வார் தேவாதிராஜ பெருமாளை (தேரழுந்தூர்) பார்த்து பாடிய அழகான பாசுரம். தமிழன் தெரிந்து கொள்ள வேண்டாமா?

திருமங்கையாழ்வார் தேர்அழுந்தூரில் உள்ள தேவாதிராஜ பெருமாளை மங்களாசாசனம் செய்து, தன்னை காப்பாற்றுமாறு சரணடைகிறார்.

திருமங்கை ஆழ்வார் "அர்ச்சா திருமேனியையே" பெருமாளின் அவதாரமாக அனுபவிப்பவர்.





அற்புதமான பாசுரம்..
அனைவரும் தெரிந்து புரிந்து கொள்ள வேண்டிய பாசுரம். .

திருவுக்கும் திருவாகிய செல்வா!!
தெய்வத்துக்கு அரசே!!
செய்ய கண்ணா!!
உருவச் செஞ்சுடராழி வல்லானே!!
உலகுண்டவொரு வா!!
திருமார்பா!!
ஒருவற்காற்றி உய்யும் வகையென்றால்
உடன் நின்று ஐவர் 
என்னுள் புகுந்து ஒழியாது
அருவித் தின்றிட!!
அஞ்சி!! நின்னடைந்தேன்!!
அழுந்தூர் மேல்திசை நின்ற
அம்மானே!!
-- பெரிய திருமொழி (திருமங்கையாழ்வார்)

பாசுரத்தின் அர்த்தம் :

மஹாலக்ஷ்மியின் கடாக்ஷம் யாருக்கு கிடைக்கிறதோ!! அவர்களுக்கு குறைவில்லாத செல்வம் கிடைக்கிறது.
எல்லோருக்கும் மங்களம் கொடுப்பவள் மஹாலக்ஷ்மி.

செல்வம் மட்டுமல்ல,
உலகில் நாம் காணும் அழகும், பொலிவும், அனைத்து மங்களமும் மஹாலக்ஷ்மியின் கடாக்ஷமே..

நமக்கு சர்வ மங்களத்தை தரும், திருவாகிய மஹாலக்ஷ்மி தனக்கு மங்களம் கிடைக்க, திருவாகிய நாராயணனை சரணடைந்து அவருக்கு பாத சேவை செய்து கொண்டிருக்கிறாள்.
திருவாகிய மஹாலக்ஷ்மியே தனக்கு வேண்டிய செல்வத்தை, அழகை, தன் பதியான திருவாகிய திருமாலிடம் பெறுகிறாளே !! பெருமாளே "செல்வமாக" இருக்கிறாரே!!
என்று பெருமாளின் பெருமையை நினைத்து திருமங்கையாழ்வார்
'திருவுக்கும் திருவாகிய செல்வா' என்கிறார்.
அழகுக்கெல்லாம் அழகர்,
பொலிவுக்கெல்லாம் பொலிவு உடையவர்,
செல்வதுக்கெல்லாம் செல்வமாக இருப்பவர்,
சர்வ மங்களத்துக்கும் மங்களத்தை தருபவர்,
மகாலட்சுமிக்கு பதியாக இருப்பவர்,
தானே பெரும் நிதியாக (செல்வமாக) இருப்பவர், 
எம்பெருமான் நாராயணன்.

அப்படிப்பட்ட பெருமைமிகுந்த பெருமாள் தன் எதிரே நின்று, திரு அழுந்தூர் என்ற திவ்ய தேசத்தில் தேவாதிதேவனாக காட்சி கொடுக்க, 'எனக்கு நிதியே' என்று கொஞ்சுவதை போல, "திருவுக்கும் திருவாகிய செல்வா' என்கிறார் திருமங்கையாழ்வார்.

மேலும்,
"தெய்வத்துக்கு அரசே" என்ற பதத்தை கொண்டு, தெய்வத்துக்கும் தெய்வமாக (தேவாதிராஜன்) பெருமாள் இருக்கிறார் என்று பூரிக்கிறார்.

தேவர்களுக்கு இந்திரன் (தலைவன்) யார்?
இந்திரன் (தலைவன்/அரசன்) என்ற சொல் யாரை குறிக்கிறது?
என்ற கேள்வியை 'இந்திர ப்ராணாதி கரணம்' என்ற வேதாந்தத்தில் ஒரு கேள்வியாக கேட்டு, அதற்கு பதில் சொல்கிறது.







"இந்திரன் யார்?" என்று இப்படி கேள்வி கேட்டு, இந்திரன் என்ற பெயரில் பலர் உள்ளார்களே!!.. என்று கேள்வி கேட்டு, முடிவும் சொல்கிறது...

மனிதர்களுக்கு (நரன்) தலைவனை "நரேந்திரன்" என்று சொல்வார்கள்.
தேவர்களுக்கு தலைவனை "தேவேந்திரன்" என்று சொல்வார்கள்.
சுரர்களுக்கு தலைவனை "சுரேந்திரன்' என்று சொல்வார்கள்.
மிருகங்களுக்கு தலைவனை "ம்ருகேந்திரன்" என்று சொல்வார்கள்.
யார் அனைவருக்கும் தலைவனோ அவரையே "இந்திரன்" என்று சொல்வார்கள்.

'இவர் இவருக்கு தலைவன், இவருக்கு இவர் தலைவனில்லை' என்று இல்லாமல்,
'நரன், தேவன்...' என்று விசேஷம் இல்லாமல், அனைவருக்கும் தலைவனாக இருக்கும் நாராயணனே 'இந்திரன்' என்று முடிக்கிறது வேதாந்தம்.
உப தெய்வங்களான இந்திரன், ப்ரம்மா, ருத்ரன், மனு போன்றவர்களுக்கெல்லாம் "அரசர்" என்ற பெருமையுடைய பரம்பொருள் அல்லவா, என் கண் முன்னே இருக்கிறார்!!
என்றதும்,
திரு அழுந்தூர் தேவாதிராஜ பெருமாளை பார்த்து
"தெய்வத்துக்கு அரசே"
என்று பாடுகிறார் திருமங்கை ஆழ்வார்.

தேவேந்திரனுக்கு மட்டும் அரசனல்ல (தேவராஜன் மட்டுமல்ல),
உலகில் தெய்வங்கள் என்று இருக்கும் அனைவருக்கும் அரசனாக இருக்கிறார் என்பதால்,
இந்த பெருமாளுக்கு "தேவாதிராஜன்" என்று பெயர் கொடுத்தார்.

மேலும்,
செய்ய கண்ணா!
உருவச் செஞ்சுடராழி வல்லானே!
உலகுண்ட ஒருவா!
திருமார்பா!
என்றெல்லாம் உங்களை எப்பொழுதும் பாடி மகிழ ஆசைப்படுகிறேன்!!
ஆனாலும், 
'என்னை பக்தி செய்ய விடாமல், என் கூடவே பிறந்த 5 சத்ருக்கள் உங்களிடம் நேரம் செலவழிக்கவே விடாமல் தடுக்கிறார்களே!!'
என்று புகார் சொல்கிறார்.

ருக்மிணி ஸ்ரீ கிருஷ்ணரை மணம் செய்து கொள்ள ஆசைப்பட்டாள்.
ஆனால்,
இவளுடன் கூட பிறந்த 5 சகோதரர்களான 'ருக்மி, ருக்மரதன், ருக்மபாஹு, ருக்மகேசன், ருக்மமாலி' ஆகிய ஐவருமே ருக்மிணியை, ஸ்ரீ கிருஷ்ணரிடம் சேர விடாமல் தடுத்தார்கள்.

5 பேரையும் அடக்கி, ருக்மிணி ஆசைப்பட்டது போலவே, வந்து மணந்து கொண்டார் ஸ்ரீ கிருஷ்ணர்.
இந்த
அது போல,
'தன்னுடன் பிறந்த 'கண், காது, மூக்கு, நாக்கு, தோல்' என்ற இந்த 5 சத்ருக்கள், பெருமாளிடம் நேரம் செலவிடவே அனுமதிப்பதில்லை' 
என்று தன் குறையை பெருமாளிடம் சொல்லி, 
'இந்த சத்ருக்களிடமிருந்து மீட்டு, தன்னிடம் சேர்த்து கொள்ள வேண்டும்' என்று ப்ரார்திக்கிறார்.

பெருமாளை கொஞ்சம் பார்ப்போம் என்று கோவில் சந்நிதி முன் நின்றால் கூட, 'கண்' பெருமாளை பார்க்காமல் அங்குமிங்கும் பார்க்கிறது...
சரி, ஸ்ரீ கிருஷ்ணரை பற்றி உபன்யாசம் கேட்கலாம் என்று உட்கார்ந்தால், 'காது' உபன்யாசத்தை கேட்க மறுத்து, ஏதேதோ கேட்க ஆசைப்படுகிறது...

"இப்படி என்னுடன் பிறந்த இந்த ஐவருமே, ருக்மிணி பிராட்டிக்கு அமைந்த சகோதரர்களை போல, கிருஷ்ண பக்தி செய்ய தடுக்கிறார்களே!!
இவர்கள் கொஞ்சம் கூட ஓயாமல் (no rest/ஒழியாது) என்னை பக்தி செய்ய விடாமல் தடுக்கிறார்களே!!"
என்று தன் உடன் பிறந்த இந்த ஐவரை பற்றி புகார் சொல்வது போல,
"உடன் நின்று ஐவர்
என்னுள் புகுந்து ஒழியாது" என்கிறார்.

"இப்படி என்னை பெருமாளிடம் பக்தி செய்ய விடாமல், இந்த கண்ணும், காதும், நாக்கும், மூக்கும், தோலும் என்னை
அருவித் தின்றிட, இவர்களிடமிருந்து என்னை நான் விடுவிக்க சக்தி இல்லாமல், உன்னிடம் பக்தி செய்ய முடியாமலேயே இருந்து விடுவேனா!! என்று அஞ்சி,
திருஅழுந்தூர் மேல்திசை நின்ற
அம்மானே (எம்பெருமானே), உன்னிடம் ருக்மிணி பிராட்டி சரண் அடைந்தது போல நின்னடைந்தேன்"
என்று பாடுகிறார் ஆழ்வார்.




உபரிஜரவசு என்ற அரசன் தன் ஆகாய விமானத்தில் பறந்து கொண்டு இருக்கும் போது, அவன் ஆகாய தேர், இந்த ஊரில் நின்று போக, அவருடைய தேர் இங்கு அழுந்தியதால், இந்த ஊருக்கு தேர் அழுந்தூர் என்ற பெயர் ஏற்பட்டது..

உபரிஜரவசுவுக்கு, பெருமாள் கண்ணனாக நின்று கொண்டு, ஒரு கையால் பசுவை (ஆ) கட்டிக்கொண்டு (மருவி) காட்சி கொடுத்ததால், இந்த பெருமாளுக்கு ஆமருவியப்பன் என்று பெயர்.
மயிலாடுதுறை அடுத்து உள்ளது தேரழுந்தூர் என்ற இந்த திவ்யதேசம்.
மூலவர் பெயர் : தேவாதிராஜன்
உத்சவர் : ஆமருவியப்பன்


Thursday 30 January 2020

தெய்வ பக்தியின் மூன்று நிலைகள் என்ன?... தெய்வத்திடம் காதல் கொண்டு ஆழ்வார்கள் பாடுகிறார்கள் என்று பார்க்கிறோம்... ஆழ்வார்கள் நிலை என்ன? தெரிந்து கொள்ள வேண்டாமா... ஹிந்துக்கள்.

தெய்வ பக்தியின் மூன்று நிலைகள் என்ன? 
தெரிந்து கொள்வோமே !!

1. காம்யார்த்தமான பக்தி:

  • உலக ஆசை உடையவர்கள். 
  • தெய்வம் தனக்கு அணுகிரஹம் செய்யும் என்று உணர்நதவர்கள். 
  • தெய்வத்திடம் பக்தி செய்து, விரதம் இருந்து, தெய்வ அணுகிரஹத்தால் தன் உலக ஆசைகளை பூர்த்தி செய்து கொள்பவர்கள்.




கோவிலுக்கு செல்வது, 
தெய்வ விக்ரஹங்களை சிலையாக பார்க்காமல் பெருமாளாக பார்ப்பது, 
விரதம் இருப்பது, 
மந்திரங்கள் ஜபிப்பது போன்றவை செய்கிறார்கள்

2. சாதனா பக்தி:

  • உலக ஆசை குறைந்து இருப்பவர்கள்.
  • தெய்வத்தின் அருளை அனுபவத்தில் உணர்நதவர்கள்.
  • உலக ஆசைகளை தெய்வத்திடம் பிரார்த்திப்பதை விட, அந்த தெய்வத்தை பற்றி, நன்கு புரிந்து கொள்ளவே ஆர்வம் மிக்கவர்கள். 
  • அதற்கு தேவையான சாதனைகளை செய்பவர்கள்.




கோவிலின் தத்துவத்தை அறிய முயல்பவர்கள்,
மந்திரங்களின் ஆழ்ந்த அர்த்தத்தை அறிந்து கொள்ள முயல்பபவர்கள்,
தெய்வத்தின் புராண சரித்திரங்கள், குணங்கள் போன்றவற்றில் ஆழ்ந்து உணருபவர்கள்,
தெய்வத்தை பற்றி அறிய தனி மனித ஒழுக்கம் என்று உணர்நதவர்கள்,
தியானம் யோகம் செய்து புலன்களை கட்டுப்படுத்தி வைத்து இருப்பவர்கள்.

ராமானுஜர் "திருவஷ்டாக்ஷர மந்திரத்தின் பொருள் அறிய", தான் யதிராஜராக இருந்த போதும்,
'ஸ்ரீரங்கத்தில் இருந்து திருக்கோஷ்டியூர் வரை' நடந்து சென்றும், 'திருக்கோஷ்டியூர் நம்பி' அதன் அர்த்தத்தை தகுதி இல்லாதவர்க்கு சொல்லி விட கூடாதே என்று தயங்கி மறுத்தார்.




ஸ்ரீரங்கம் திரும்பிய ராமானுஜர் சற்றும் மனம் தளரவில்லை.
17 முறை தொடர்ந்து ஸ்ரீரங்கத்திற்கும் திருக்கோஷ்டியூருக்கும் நடையாய் நடந்தார்.
இவ்வாறு தொடர்ந்து 17 முறை ராமானுஜர் வந்தபோதும், நம்பி அர்த்தத்தை சொல்ல தயங்கி மறுத்தார்.

அந்த பாதயாத்திரையின் பலன் 18வது சந்திப்பில் கிடைத்தது. 
உண்மையான ஆர்வமும்,
அலுப்பு அடையாமல்,
தன் மீது கோபமும் இல்லாமல் இருக்கும் ராமனுஜரே, மந்திரத்தின் பொருளை அறிய தகுதி ஆனவர்,
என்று அறிந்து, அர்த்த விஷேஷத்தை போதித்தார்.

சாதனா பக்தியில், எப்படி ஒரு பக்தன் இருப்பான்? என்று தன் சரித்திரத்திலேயே காண்பித்தார் ஸ்ரீ ராமானுஜர்.
ஞானத்தில் பூர்ணரான ராமானுஜர், 'நாதீகனும், காம்யார்த்த பக்தி செய்பவனும் கூட, பரமபதம் இதே ஜென்மத்தில் அடைந்து விட வேண்டும்' என்ற பரந்த நோக்கில், தான் கஷ்டப்பட்டு பெற்ற உபதேசத்தை இலவசமாக அனைவருக்கும் கிடைக்கும் படியாக கொடுத்து விட்டார்.

3. ஞான பக்தி :

  • உலக வாழ்க்கையை மதிக்காதவர்கள். 
  • செல்வம் சேர்ந்தாலும், ஏழையானாலும் குறைபட்டு கொள்ளாதவர்கள்.
  • இந்த ஆத்மா எப்பொழுது இந்த உடலை விட்டு, பரந்தாமனை அடையுமோ என்று தவிப்பவர்கள்.




ஜீவனாகிய தன்னை பெண்ணாகவும்,
பரமாத்மா நாராயணனே தன் புருஷனாகவும்,
"தன் கணவனிடம் சேரும் காலம் எப்பொழுதோ!!"
என்று பரமபதத்தையே எதிர்பார்த்து, தெய்வத்திடம் விரக தாபத்தில் இருப்பவர்கள்.
(ஆழ்வார்கள் இந்த நிலையிலேயே இருந்தனர்) 
ஆழ்வார்கள் தன்னை காதலியாகவும், பெருமாளை காதலானாகவும் கதறி அழுது பாடும் பாசுரங்கள், இவர்களின் ஞான பக்தி நிலையை நமக்கு காட்டுகிறது.

இந்த அனுபவத்தில் ஆழ்வார்கள் பாடிய பாசுரங்களை, நாத்தீகன் மட்டுமல்ல, காம்யார்த்தமான பக்தி செய்பவனும், சாதனா பக்தி செய்பவன் கூட படித்தாலும், "ஆழ்வார்கள் எந்த நிலையில் இப்படி பாடினார்கள்!!" என்று புரிந்து கொள்ள முடியாமல், "இது ஏதோ உலகத்தில் காணும் காதல் பாடல்" என்றே நினைப்பார்கள்.


இதன் காரணமாகவோ என்னவோ!! வைஷ்ணவ சம்ப்ரதாயத்தில், ஆழ்வார்கள் பாசுரங்களை, அதன் அர்த்தத்தை விஷ்ணு சஹஸ்ரநாமம் போல, அனைவருக்கும் தராமல், ஞானத்தின் தகுதி பார்த்தே பகிர்ந்துள்ளனர் என்று தெரிகிறது..

நமக்கு ஞான பக்தி இல்லாமல் போனாலும், ஆழ்வார்கள் நிலை வராது போனாலும்,
குறைந்தபட்சம் நாதீகர்களாகவாவது வாழாமல், காம்யார்த்த பக்தியாவது செய்து கொண்டு, தெய்வ அணுகிரஹத்தால், குருவின் துணையால், மேலும் மேலும் ஆன்மீக வளர்ச்சி நோக்கி செல்வோம்.

வாழ்க ஹிந்துக்கள்..
வாழ்க ஹிந்து தர்மம்.






Monday 13 January 2020

பாசுரம் (அர்த்தம்) - பறவை ஏறும் பரம புருஷா... இரவு செய்யும் பாவக் காடு (பெரியாழ்வார்). "பாவம் செய்ய கூடாது" என்று தான் நாம் அனைவருமே நினைக்கிறோம். இருந்தாலும், "பாவம் தொடர்ந்து செய்கிறோமே!!".. ஏன்? காரணத்தை ஆழ்வார் மூலம் தெரிந்து கொள்வோமே !!

திருப்பதியில், ஆதிசேஷனே "7 மலைகளாகவும் இருக்கிறார்". 
இந்த 7 மலைகளுக்கு, பொதுவாக "திருமலை" என்றும் "சேஷாத்ரி" என்றும் "சேஷகிரி" என்றும் பெயர்.
அதில் சில மலைகள், சில பக்தர்களின் பெயர்களில் அமைந்தது.

ஏழு மலைகளின் பெயர்கள்:
1. நாராயணாத்ரி (நாராயண முனிக்கு ஸ்ரீனிவாச பெருமாள் வைகானச பூஜையை உபதேசித்த இடம் என்பதால்) ஸ்ரீனிவாச பெருமாள் இருக்கும் இடம்.
2. வேங்கடாத்ரி (பாபங்கள் பொசுங்கும் என்பதால்)
3. சேஷாத்திரி (ஆதி சேஷனை குறிக்கிறது). சிலர் நிலாத்ரி என்றும் சொல்கிறார்கள்.
4. அஞ்சனாத்ரி (ஆஞ்சநேயர் அவதரித்த இடம். அவள் தாய் அஞ்சனாவின் பெயரில்)
5. சிம்மாத்ரி ( நரசிம்ம  அவதார ஸ்தலம் என்பதால்)
6. கருடாத்ரி (கருடன் அம்ருத கலசத்தோடு இங்கு அமர்ந்ததால்)
7. வ்ருஷபாத்ரி (வ்ருஷபன் என்ற அசுரன் ஞானம் பெற்றதால்)





பாபங்கள் பொசுங்கும் என்பதால் திருமலைக்கு வேங்கடாத்ரி என்ற பெயரும் உண்டு.

வேங்கடம் (வேம்+கடம்) என்றால் "பாவங்களை எரிப்பது" என்று பொருள்.

  • "வேம்" என்றால் பாவம் என்று தமிழில் அர்த்தம்.
  • "கடம்" என்றா எரித்து (fry) என்று தமிழில் அர்த்தம்.


பெரியாழ்வார், பெருமாளை சரணாகதி செய்யும் போது, "திருமலையப்பனை நினைத்து கொண்டு, வெங்கட்ரமனா கோவிந்தா!!  என்று கதறி அழைத்து விட்டாலே, நம் பாவங்கள் எல்லாம் எரிந்து போகும்"
என்கிறார்.
"வேங்கடம்" என்ற சொல்லுக்கு விளக்கம் போல, நமக்கு இந்த பாசுரத்தை காட்டுகிறார் - பெரியாழ்வார்.

பறவை ஏறும் பரம புருஷா!
நீ என்னை கைக்கொண்டபின்
பிறவி என்னும் கடலும் வற்றிப்  
பெரும்பதம் ஆகின்றதால்
இரவு செய்யும் பாவக் காடு
தீக்கொளீஇ வேகின்றதால்
அறிவையென்னும் அமுத ஆறும்
தலைப்பற்றி வாய்க்கொண்டதே! 
-  திருமொழி (பெரியாழ்வார்)

"பாவம் செய்ய கூடாது" என்று தான் நாம் அனைவருமே நினைக்கிறோம். இருந்தாலும், "பாவம் தொடர்ந்து செய்கிறோமே!!".. ஏன்?

"அஞானம் தான், நாம் பாவம் செய்வதற்கு காரணம்"
என்கிறார் பெரியாழ்வார்.

'எந்த அஞானத்தை சொல்கிறார் பெரியாழ்வார்? தெரிந்து கொள்வோமே!

"இரவு செய்யும் பாவக் காடு" என்கிறார் பெரியாழ்வார்.
இங்கு "இரவு" என்று "அஞானத்தை" சொல்கிறார் பெரியாழ்வார்.

"ஏன் இப்படி தொடர்ந்து பாவத்தை செய்கிறேன்? ஏன் பாபியாகவே இருக்கிறேன்?"
என்று ஒரு பக்தன் தன்னையே நொந்து, ராமபிரானை பார்த்து உண்மையை சொல்கிறான்.
"ராமா, நீங்கள் தர்மத்துக்காக எத்தனை, படாதபாடு பட்டீர்கள் !!
தர்மத்துக்காகவே பூமியில் நீங்கள் அவதரித்தீர்கள்..., 
நானோ தர்ம துரோகியாக இருக்கிறேன்!!

மனிதர்கள் எப்படி தர்மத்தில் வாழ வேண்டும்? என்று காட்ட, வைகுண்டத்தை விட்டு விட்டுமனிதனாகவே தானும் அவதரித்து, தாங்கள் பட்ட கஷ்டங்கள் எல்லாம், தர்மத்துக்காக தானே !! 
தர்மத்தை நிலைநிறுத்துவதற்கு தானே !!
நானோ, தர்ம துரோகியாக இருக்கிறேன் !!
என்று சொல்ல,







"அப்படி என்ன, நீ அதர்ம செய்து விட்டாய்?" 
என்று ராமபிரான் பரிந்து கேட்க,

"ராமா, இப்படியா எனக்கு பரிந்து பேசுவது?
எது எதுவெல்லாம் தர்மத்துக்கு உகந்த காரியங்களோ, அது எதையுமே செய்யாதவன் நான்!
அது மட்டுமல்ல, 
எது எதுவெல்லாம் தர்மத்துக்கு எதிரானதோ, அதையெல்லாம் செய்தவன் நான்!

'இந்த அதர்மம் செய்தேன், அந்த அதர்மம் செய்யவில்லை என்று இல்லாமல்', உலகத்தில் உள்ள அனைத்து அதர்ம காரியங்களையும், 
தேடி தேடி, பார்த்து பார்த்து, ஆசைப்பட்டு ஆசைப்பட்டு செய்திருக்கிறேன்.

இப்படி பாபங்களே செய்ததற்கு காரணம் என்ன தெரியுமா?
'உடம்பே நான்' என்ற அஞானமே, நான் செய்யும் இத்தனை பாபத்துக்கும் காரணம்.
'உடம்பே நான்' என்ற அகம்பாவத்தால், இத்தனை பாவங்களும் செய்கிறேன்.
எத்தனை நாள் இப்படியே இருந்து விடப்போகிறேன்? 
ஒரு நாள் நிச்சயம் செத்து விடுவேனே!!
இவ்வளவு பாப காரியங்கள் செய்கிறேனே!! இப்படியாவது பிழைக்க வேண்டுமா? இந்த உடம்பு நிரந்தரமானதா!!
ஒரு சாண் வயிற்றுக்கு சோறு போட்டு காப்பாற்ற, இத்தனை பாபங்களை நான் செய்ய வேண்டுமா?
புலன்களுக்கு சுகம் கிடைக்க, இத்தனை பாபங்களை நான் செய்ய வேண்டுமா?

'உடம்பே நான்' என்ற அகம்பாவம் தானே, என் பாபங்கள் அனைத்துக்கும் காரணம்.
'உடம்பு நான் இல்லை, ஆத்மா தான் நான்' என்ற நினைவு கூட இல்லாமல் பாபம் செய்து கொண்டே போகிறேனே!!
அது போகட்டும்,
'ஐயோ!! இப்படி இந்த உடம்புக்காக இத்தனை பாபங்களை செய்கிறோமே!! என்று நினைத்தாவது கண்ணீர் விட்டாயா?' 
என்று கேட்டு விடாதீர்கள்.

'நான் பாபி' என்ற எண்ணம் ஒரு எள் அளவிற்காவது இருந்தால் தானே! என் கண்களில் நீர் சிந்தும்...

'நான் ஏதோ பரமபுண்ணியவான் போலவும், பாவமே செய்யாதவன் போலவும் தானே நானே என்னை பற்றி நினைத்து கொண்டு இருக்கிறேன்'.

'நான் ரொம்ப யோக்கியன். நான் நீதி தவறி நடக்க மாட்டேன்' 
என்று தைரியமாக சொல்லி கொண்டு இருப்பேனே தவிர, 
தனக்கு தானே ஒரு முறை கூட சிந்தித்து பார்த்தது கிடையாது. 
என்னை பற்றி ஒரு அனுதாபம் கூட ஏற்பட்டது கிடையாது, எனக்கு!!

நான் ஏன் சிந்தித்தது கிடையாது? என்று நீங்கள் கேட்டால், 
'ஆத்மா தான் நான்' என்ற ஞானம் இல்லாதது தான் நான் சிந்திக்காததற்கு காரணம். 
'உடம்பே நான்' என்ற அஞானம் தான் நான் சிந்திக்காததற்கு காரணம்.
என்றான் அந்த பக்தன்

பெரியாழ்வார் சொல்கிறார்,
'உடம்பே நான்' என்று இருக்கும் அஞான ஜனங்கள், 'பாபம் செய்கிறோம்' என்ற நினைவு கூட இல்லாமல், 
'புஷ்ப தோட்டம்' போடுவது போல,
தன் பாபங்களை கொண்டே அவரவர்களுக்கு ஒரு பெரிய 'பாப தோட்டம்' போடுகிறார்களாம்.

இதையே "இரவு செய்யும் பாவக்  காடு" என்று சொல்கிறார் பெரியாழ்வார்.

"தெரியாமல் இந்த பாவங்கள் செய்து விட்டாயோ?" என்று கேட்டால், "தெரிந்தே செய்த பாப காடு"  (செய்யும் பாவக் காடு) என்கிறார் பெரியாழ்வார்.

ஒரு தோட்டம் போடுவது போல, அஞானிகள், இந்த உடம்புக்காக, தெரிந்தே 'பாபம் என்ற தோட்டத்தை' அமைத்துக்கொள்கிறார்களாம்.

இப்படி அஞானிகள், 'உடம்பே நான்' என்று கஷ்டப்பட்டு, ஜென்ம ஜென்மாக ஆசையுடன் வளர்த்த இந்த பாபத்தோட்டம்,
திடீரென்று ஒரு சந்தர்ப்பம், ஒரு காட்டு தீயில் சிக்கி, அந்த காடே பொசுங்கி விட்டது!!
என்கிறார் பெரியாழ்வார்.
"திருமலையப்பா... கோவிந்தா... ரமா ரமண கோவிந்தா...வேங்கட ரமண கோவிந்தா"
என்று திருப்பதியில் இருந்து கூட வேண்டாம், இருக்கும் இடத்திலிருந்தே "திருமலையப்பா... கோவிந்தா... ரமா ரமண கோவிந்தா... வேங்கட ரமண கோவிந்தா"
என்று சொல்லிவிட்டால் கூட,
நாம் பார்த்து பார்த்து வளர்த்த இந்த பாப காடு, 
"கோவிந்தன்" என்ற பெரும் காட்டுத்தீயில் பொசுங்கி விடுமே!! 
என்கிறார் பெரியாழ்வார்.




"இப்படி நாம் வளர்த்த பாப காடு, 'கோவிந்தா' என்று சொன்னவுடனேயே பாபங்கள் பொசுங்கியது மட்டுமில்லாமல், கற்பகவருக்ஷங்களே நிறைந்த பசுமையான  காடாகவும் ஆகி விட்டது" என்கிறார் பெரியாழ்வார்.

அறிவையென்னும் அமுத ஆறும்
தலைப்பற்றி வாய்க்கொண்டதே

என்று சொல்லும் போது,
"கோவிந்தா" என்று சொன்னவுடன், அந்த வேங்கடநாதன் தன்னை கரம் பிடிக்க (நீ என்னை கைக்கொண்டபின்), 
அஞானம் என்ற இருள் விலகி, மோக்ஷம் நிச்சயமாகிவிட,
ஞானம் ஏற்பட்டு (அறிவையென்னும் அமுத ஆறும்), 
ஆத்ம ஞானம் புத்தியில் (தலைபற்றி) ஏற்பட்டு, 
பெருமாளின் கருணையை நினைத்து ஏற்பட்ட பக்தியால் 
"கோவிந்தா.. கோவிந்தா..." என்று நாமம் வாயில் வருகிறதே (வாய்க்கொண்டதே)!! 
என்கிறார் பெரியாழ்வார்.

"வேங்கடம்" என்ற சொல்லுக்கு விளக்கம் போலநமக்கு இந்த பாசுரத்தை காட்டுகிறார் - பெரியாழ்வார்.

பாபங்களை பொசுக்கும் வேங்கடாத்ரியில், வீற்று இருக்கும் ஸ்ரீனிவாசன், 'நம் பாபங்களை மட்டும் போக்குவதில்லை, பாபங்களை போக்கி, நமக்கு நல்லதையே கிடைக்க செய்து, நல்லதையே நினைக்க செய்து, தன்னிடம் பக்தி உண்டாகும் படி செய்து, மோக்ஷ வாசலையும் திறந்து விடுகிறார்'.


ஸ்ரீனிவாச பெருமாளை பக்தியுடன் சேவிப்போம்.

முழுசி வண்டாடிய - திருமங்கை ஆழ்வார் அஷ்டபூஜை பெருமாளை பார்த்து பாடிய பாசுரத்தின் அர்த்தம் தெரிந்து கொள்வோமே..



Thursday 9 January 2020

பாசுரம் (அர்த்தம்) - கதியேல் இல்லை நின் அருள் அல்லது - திருமங்கை ஆழ்வார் திருநீர்மலையில் உள்ள பெருமாளை பார்த்து பாடிய அழகான பாசுரம். தமிழன் தெரிந்து கொள்ள வேண்டாமா?

திருமங்கை ஆழ்வார் "அர்ச்சா திருமேனியையே" பெருமாளின் அவதாரமாக அனுபவிப்பதால், பெருமாளின் திவ்ய காட்சியை பார்க்க கூட இவர் ஆசைப்படவில்லை..
அர்ச்ச அவதாரமே இவருக்கு பகவானாக தெரிவதால், பல இடங்களில் "கண்டு கொண்டேன்" என்று பாடுவதை பாசுரங்களில் கவனிக்கிறோம்..




கதியேல் இல்லை
நின் அருள் அல்லது
எனக்கு நிதியே
திருநீர்மலை நித்திலத் தொத்தே,
பதியே பரவித் தொழும்
தொண்டர் தமக்குக் கதியே 
உனை "கண்டு கொண்டு" 
உய்ந் தொழிந்தேனே
என்று "பெரிய திருமொழி"யில் திருமங்கை ஆழ்வார் பாடும் போது,
வால்மீகி முனிவருக்கு ஏற்பட்ட தாபத்தை போக்க, அர்ச்ச திருமேனியுடன் திருநீர்மலையில் காட்சி கொடுத்த எம்பெருமானை பார்த்த உகப்பில் "கண்டு கொண்டேன்" என்று பாடுகிறார்.

புருவத்தின் மத்தியில் எம்பெருமான் திவ்ய காட்சி கண்டதை சொல்கிறாரா? இல்லை..
எம்பெருமான் ராமராக தன் விபவ அவதாரத்தை காட்டி தரிசனம் தந்ததை சொல்கிறாரா? இல்லை.
திருமங்கை ஆழ்வார், திருநீர்மலையில், அர்ச்சா திருமேனியுடன் இருக்கும் எம்பெருமானையே தனக்காக அவதரித்த பெருமாளாகவே பார்த்தார்.
சிலையாக தோன்றிய எம்பெருமானை பார்த்ததினால் வந்த உகப்பில் "கண்டு கொண்டேன்" என்று ஆனந்தப்படுகிறார்..



இந்த பாசுரத்தை ஆரம்பிக்கும் போது "கதியேல்" என்ற சொல்லை கொண்டு ஆரம்பிக்கிறார்.

திருநீர்மலை பெருமாளை நேரில் கண்ட திருமங்கை ஆழ்வார், "தனக்கு ஒரு கதி உண்டா? மோக்ஷத்துக்கு கதி (வழி) உண்டா?" என்று தன் மனசாட்சியையே கேட்க.. மனசாட்சியே பதிலாக
"என் திறமையால் எனக்கு மோக்ஷத்துக்கு கதி இல்லை." என்று  சொல்ல,
"எனக்கும் என்று ஒரு கதி (வழி) உண்டாகில், அது உம்முடைய அருளை கொண்டு தான்" என்று எம்பெருமான் அருளை எதிர்பார்த்து,
கதியேல் இல்லை...
நின் அருள் அல்லது
என்று ஆரம்பிக்கிறார் திருமங்கை ஆழ்வார்.
மேலும்,
உலகத்தில் உள்ளவர்கள் பொதுவாக, வயதான காலத்துக்காக தன் பாதுகாப்புக்காக, நிதியை சேர்த்து வைத்து கொள்வார்கள்..
அதே போல,
பரலோக வாழ்க்கைக்காக, புண்ணிய காரியங்களை செய்து புண்ணியம் என்ற நிதியையும் சேர்த்து வைத்து கொள்வார்கள்..

இந்த இரண்டு நிதியுமே அல்பமானவை, நிரந்தரமற்றவை..
சேர்த்த பணம் எல்லாம் ஒருநாள் செல்வழிந்து போய் விடும்..
இல்லை, செல்வம் இருக்கும் இவன் போய் விடுவான்..



புண்ணியம் காக்குமே என்றாலும், கொஞ்ச காலம் சொர்க்க லோகத்தில் இருக்க செய்து விட்டு, "பூலோகத்தில் நீ செய்த புண்ணியங்கள் இன்றுடன் தீர்ந்தது போ" என்று இந்திரனும் கீழே தள்ளி விட்டு விடுவான்..
மீண்டும் பிறக்க வேண்டியது தான்...

இதனை கருத்தில் கொண்டு,
செல்வம் என்ற நிதியையும் தள்ளி,
புண்ணியம் என்ற நிதியையும் தள்ளி விட்டு,
திருமங்கை ஆழ்வார், "எனக்கு இகத்திலும் பரத்திலும் என்றும் அழியாத வைப்பு மா நிதியாக எம்பெருமானே திருநீர்மலையில் இருக்கிறார்" என்று பாடுகிறார்.
எனக்கு நிதியே
திருநீர் மலை நித்திலத்தொத்தே

இங்கு நித்தில தொத்தே என்றால் "பவள கொத்து" என்று அர்த்தம்..

பவளத்திற்கு இயற்கையாகவே ஒரு குளிர்ச்சி உண்டு.
பவள மணி மாலையாக கழுத்தில் போட்டு கொண்டால், உடல் குளிர்ச்சியாகும்..
இங்கு, பவள கொத்து என்று திருநீர்மலை எம்பெருமானையே சொல்லி கொஞ்சுகிறார் திருமங்கை ஆழ்வார்.

குளிர்ச்சி தரும் கருணை கொண்ட திருநீர்மலை பெருமாளை பார்த்ததுமே, 'பெருமாளையே ஒரு பவள மாலை என்ற தன் நிதியாக ஆக்கிக்கொண்டு, தன் கழுத்தில் போட்டு கொண்டு விட வேண்டும்' என்று ஆசை உண்டாகி விட்டது ஆழ்வாருக்கு.




"எனக்கும் கதி உண்டா?" என்று மோக்ஷத்துக்கு வழி தெரியாமல் வந்த தனக்கும், "கதி உண்டு" என்று காட்டி விட்டார் திருநீர்மலை பெருமாள் என்றதும், அடுத்த பதத்தில் "பதியே" என்று சொல்லி, "உன்னை கண்டு கொண்டேன்" என்று சரண் அடைகிறார்..

பதியே பரவித் தொழும் தொண்டர் தமக்குக்
கதியே உனை "கண்டு கொண்டு" 
உய்ந் தொழிந்தேனே


ஆழ்வார்கள் பாசுரங்கள் தமிழே தமிழ்...

மேலும் பாசுரம் அர்த்தத்துடன் அறிந்து கொள்ள "முளைக்கதிரைக் குறுங்குடியுள் முகிலை"



Friday 3 January 2020

பாசுரம் (அர்த்தம்) - முழுசி வண்டாடிய தண் துழாயின் - திருமங்கை ஆழ்வார். காஞ்சியில் அஷ்டபுஜ பெருமாளை பார்த்து பாடிய அழகான பாசுரம். தமிழன் தெரிந்து கொள்ள வேண்டாமா?

அனைத்து படைப்புக்கும், உயிர்களுக்கும் ஆதிமூலமாக (root) இருக்கும் ஸ்ரீமந் நாராயணன் கஜேந்திரனை காக்க, எட்டு கைகளுடன், எட்டு ஆயுதங்கள் ஏந்தி வந்தார் காஞ்சிபுரத்தில்.




கஜேந்திரனை முதலையிடமிருந்து காப்பாற்ற ஒரு சக்கரமே போதும்!!
இருந்தாலும் 8 கைகளுடன் வந்து தரிசனம் கொடுத்தாரே பெருமாள்?!
உண்மையில், பெருமாள், தன் அஷ்ட மஹிஷிகளுடன் கஜேந்திரனுக்கு  தரிசனம் தரவே 8 கைகளுடன் வந்தாராம்.
"அர்ச்ச அவதாரமே பெருமாள். அர்ச்ச அவதாரமே போதும்" என்று இருந்தவர் திருமங்கை ஆழ்வார்.

அவர் காஞ்சிபுரம் வந்து அஷ்ட புஜனாய் இருக்கும் பெருமாளை கண்டதும், தானே "பரகால நாயகி" என்ற பெண்ணாகி விட்டார்.

பெருமாள் தன் 8 மஹிஷிகளுடன்,   தன் எதிரே தரிசனம் கொடுக்க,
"அடடா.. யார் இவர்? இவர் போல நாம் யாரையுமே பார்த்ததில்லையே!! ஏற்கனவே 8 மஹிஷிகளுடன் இருக்கும் இந்த பெருமாள், மங்கையான தன்னையும் கரம் பிடிக்க பார்க்கிறாரே!!"
என்று தானும் ஒரு மங்கையாகவே ஆகி, பெருமாளை பார்த்து சொக்கி போய்விட்டார்.
"பெருமாள் எப்படி அவருக்கு காட்சி கொடுக்கிறார்?" என்ற தன் அனுபவத்தை அப்படியே நமக்கும் பாசுரமாக கொடுக்கிறார்.

பாசுரம் மிகவும் அழகானது..




முழுசி வண்டாடிய தண் துழாயின்
மொய்மலர் கண்ணியும்,
மேனி அஞ்சாந்து இழுசிய கோலம் இருந்தவாறும்
எங்ஙனஞ் சொல்லுகேன்!! ஓவிநல்லார் எழுதிய தாமரை என்ன கண்ணும்
ஏந்தி எழில் ஆகமும்
தோளும் வாயும்,
அழகிய தாம் இவர் யார் கொல் என்ன
அட்ட புயகரத் தேன் என்றாரே

பெருமாள் எப்படி அவருக்கு காட்சி கொடுக்கிறார்? என்ற தன் அனுபவத்தை அப்படியே நமக்கும் கொடுக்கிறார்.

பெருமாள் கழுத்தில் துளசி மாலை இருப்பதை, முதலில் கவனித்த பரகால நாயகியாக இருக்கும் திருமங்கை ஆழ்வார், "தண் துழாய்" என்று வர்ணிக்கிறார்.

பெருமாள் அணிந்திருந்த துளசி மாலையிலிருந்து, நறுமணம் எங்கும் பரவி இருந்ததாம்.
பெருமாள் கழுத்தில் இருந்ததாலேயே துளசி துளியும் வாடாமல், பச்சைபசேல் என்று கண்ணுக்கு குளிர்ச்சியை தந்ததால், "துழாய்" என்று மட்டும் சொல்லாமல் "தண் துழாய்" என்ற பதத்தை சொல்லி, "நல்ல தன்மையுடன் கூடிய துளசி மாலையை பெருமாள் அணிந்து இருக்கிறார்" என்று கவனிக்கிறார் ஆழ்வார்.

துளசி மாலையுடன்,
5 விதமான பூக்களை கொண்டு, கண்டு கண்டாக கட்டிய (மொய் மலர் கண்ணி) ஒரு அழகான வைஜயந்தி மாலையும் அணிந்து இருந்தாராம் பெருமாள்.
பெருமாள் அணிந்து இருந்த துளசி மாலையின் நறுமணமும், 5 வித பூக்களால் கட்டப்பட்ட வைஜயந்தி மாலையையும் பார்த்து விட்டு, தேன் குடிக்கும் ஆவலில், அந்த பூக்களின் மகரந்தத்தில் வண்டுகள் ரீங்காரமிட்டு ஆடிக்கொண்டு (முழுசி வண்டாடிய) இருப்பதை பார்த்து விட்டாளாம் இந்த பரகால நாயகி.

இந்த மாலையே இந்த நாயகியின் மனதை மயக்க,
அடுத்ததாக பெருமாள் மேனி எப்படி இருக்கிறது? என்று பார்த்தாளாம்.

கல்யாணம் போன்ற சுப நிகழ்ச்சிக்கு செல்லும் போது, சந்தனம் கொடுப்பார்கள்.
பொதுவாக நாம், சந்தனத்தை தொடுவோம், அதிகபட்சம் கொஞ்சம் நெற்றியில், கொஞ்சம் கைகளில், மார்பில் பூசி கொள்வோம்.

அஷ்ட புஜமாக இருக்கும் இந்த பெருமாளும் சந்தனம் பூசி கொண்டு இருந்தாராம்.. ஆனால் நம்மை போன்று, கொஞ்சம் நெற்றியில், கைகளில் மட்டும் பூசிக்கொண்டு இருக்க வில்லையாம்.
அங்கே இங்கே என்று நாகரீகமாக கை, நெற்றி என்று மட்டும் பூசி கொள்ளாமல், அவர் இஷ்டத்துக்கு முதுகு, கழுத்து என்று வேண்டிய இடத்திலெல்லாம் சந்தனத்தை இழுசி கொண்டு, சந்தன குழம்பு போல நறுமணத்துடன் நின்று கொண்டு, காட்சி கொடுக்க,
"மேனி அஞ்சாந்து இழுசிய கோலம் இருந்தவாறும்"
என்று வர்ணிக்கிறார்.




வெளி பொருட்களான துளசி மாலையும், வைஜயந்தி மாலையும், சந்தனமும் எப்படி இருந்தது? என்று கவனித்து வர்ணித்துக்கொண்டு இருந்த பரகால நாயகி, அவர் மேனி எப்படி இருக்கிறது? என்று சற்று கவனிக்க,
"அந்த திவ்யமான பெருமாளின் திருமேனி அழகை எப்படி சொல்வேன்?" என்று வியந்து,
"எங்ஙனஞ் சொல்லுகேன்?" என்ற சொக்கி நிற்கிறார்.

ப்ரம்மாவின் ஸ்ருஷ்டியில் படைக்கப்பட்ட நம்மையே நன்றாக கவனித்தால் ஏதாவது ஒரு சிறு குறையாவது தென்படும்.
முதுகு லேசாக கூனி இருக்கும்,
புருவங்கள் அழகாக இருக்காது,
ஒரு கண் இன்னொரு கண் போலவே இருக்காது.. இப்படி ஏதாவது ஒரு குறை ப்ரம்ம படைப்பில் இருக்குமாம்.

ஆனால், இந்த பரகால மங்கையின் முன் நின்று காட்சி கொடுக்கும் இவரை பார்த்தால், சாமுத்ரிகா லக்ஷணம் தெரிந்த ஒரு நல்ல ஓவியன் (ஓவிநல்லார் எழுதிய) இவ்வளவு நீளம் கை, இவ்வளவு நீளம் கால், விரல் என்று குறையே இல்லாமல் எழுதிய ஓவியம் போல, அமைப்பாக இருந்தாராம்.

சாமுத்ரிகா லக்ஷணம் இவரை பார்த்து தான் எழுதப்பட்டதோ என்று வியக்கும் அளவுக்கு, அப்படி ஒரு அழகுள்ள இவரின் மேனியை பார்த்து,
தாமரை போன்ற கண்களை, ஓவியத்தில் எழுதியது போல,
ஓவியத்தில் எழுதியது போல மார்பும்,
(என்ன கண்ணும், ஏந்தி எழில் ஆகமும், தோளும் வாயும்)
ஓவியத்தில் எழுதியது போல தோளும்,
ஓவியத்தில் எழுதியது போல வாயும், கொண்ட பெருமாளை கண்டு,
"இப்படி அழகாக ஒருத்தர் இருக்க முடியுமா? யார் இவர்?" என்று, பரகால நாயகி சொக்கி நின்று கேட்க,
(அழகிய தாம் இவர் யார் கொல் என்ன)
பெருமாளே தன்னை "அஷ்டபுஜன்" என்று அறிமுகப்படுத்தி கொண்டு,
(அட்ட புயகரத் தேன் என்றாரே) தன்னை ஆட்கொண்டார்
என்கிறார் திருமங்கை ஆழ்வார்.

காஞ்சிபுரம் சென்று அஷ்டபுஜ பெருமாளை தரிசிக்கும் போது, திருமங்கை ஆழ்வார் பாடிய இந்த பாசுரத்தை அவசியம் சேவிக்க வேண்டும்.
மேலும் பாசுரம் அர்த்தத்துடன் அறிந்து கொள்ள "கதியேல் இல்லை நின் அருள் அல்லது"




Friday 13 December 2019

பிரபந்தங்கள், பதிகங்கள், பஜகோவிந்தம், கந்த ஷஷ்டி கவசம் சொல்லி பிரார்த்தனை செய்வதற்கும், வேத மந்திரங்களை சொல்வதற்கும் வித்யாசம் உண்டா? தெரிந்து கொள்ள வேண்டாமா?

தெய்வ சாந்நித்யம்:
"ருத்ரம், புருஷ சூக்தம்" போன்ற வேத மந்திரங்கள், சரியாக உச்சரிக்க படும்போது,
தெய்வங்கள் அந்த இடத்தில் தன் சாந்நித்யத்தை வெளிப்படுத்துகிறார்கள்.

"தெய்வ சாந்நித்யம்" அதிகம் உள்ள இடத்தில், எளிதாக "தெய்வ அருள்" பாமரனுக்கும் கிடைத்துவிடும்.



தெய்வ அருள்:
ஆழ்வார்கள் பாசுரங்களும், நாயன்மார்கள் பதிகங்களும் பாடும் போது,
தெய்வத்தை நாம் ஸ்துதி (போற்றி) செய்வதால், பக்தனுக்கு பக்தி வளர்கிறது..
தெய்வ அருள் (அனுக்கிரஹம்) கிடைக்கிறது.


4000 திவ்ய பிரபந்தங்கள் "வேதத்துக்கு ஈடானது" என்று கூறுகிறார்கள் பெரியோர்கள்.

"தமிழ் மறை" என்று திவ்ய பிரபந்தத்தை கூறுகிறார்கள் பெரியோர்கள்.

வேதத்தை அறிந்த, சர்வ சாஸ்திரமும் கரை கண்ட 'ஸ்வாமி வேதாந்த தேசிகர்', 
கடைசியாக ஆழ்வார்கள் தமிழில் அருளிய "திவ்ய பிரபந்தங்களை" எடுத்து படிக்கும் போது,
'தான் கற்ற வேதத்தின் சாரம் அனைத்தும் 4000த்தில் அடங்கி இருப்பதை கண்டு பிரமித்தார்' என்று அறிகிறோம். 
"தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே" என்று திவ்ய பிரபந்தத்தை வேதத்துக்கு நிகராக உயர்த்தி பேசுகிறார்.
"மறையில் (வேதத்தில்) தெளியாத அர்த்தங்கள் எல்லாம், பிரபந்தங்கள் மூலம் தெளிந்தது" என்று திவ்ய பிரபந்தத்தின் பெருமையை உரைக்கிறார் தேசிகர் என்று அறிகிறோம்.

அதே போல, யதி ராஜரான "ராமானுஜர்", 
திவ்ய பிரபந்தத்தை அனைத்து வைஷ்ணவ கோவில்களிலும் பெருமாளுக்கு முன் பாட வேண்டும் என்று, பெரும் சீர்திருத்தம் செய்தார். 
"திவ்ய பிரபந்தம் கேட்காத பெருமாள் கோவில் உலகில் இல்லை" என்ற அளவுக்கு தமிழ் மொழியில் உள்ள "திவ்ய பிரபந்தத்தை" உலகெங்கும் பரப்பினார்.

இப்படி "திவ்ய பிரபந்தத்தை பெருமாள் முன் கட்டாயம் பாட வேண்டும்" என்று தமிழை முன் நிறுத்தினார் ராமானுஜர்.

வேதத்துக்கு நிகரான 'திவ்ய பிரபந்தத்தை பெருமாளே உகந்து கேட்கிறார்' என்றதும், 
அதற்காக, உடனே ராமானுஜர்,
"இனி வேத மந்திரங்கள் ஓத வேண்டாம்.. பூஜை விதிகளை மாற்றுங்கள். திவ்ய ப்ரபந்தமே போதும்!!" என்று சொல்லி விடவில்லை.
இதை நாம் கவனிக்க வேண்டும்.. 
இதில் உள்ள ரகசியத்தை அறிந்து கொள்ள முயற்சிக்கவேண்டும்..

வேதமும், திவ்ய ப்ரபந்தமும் இரண்டையும் அறிந்தவர் ராமானுஜர். 
இரண்டுக்கும் உள்ள வேற்றுமையை அறிந்தவர்.. 

"ஸ்துதி வேறு, மந்திரங்கள் வேறு" என்ற வேற்றுமையை அறிந்தவர் ராமானுஜர்.
"ஸ்துதி (prayer) வேறு, மந்திரங்கள் வேறு" என்ற வேற்றுமையை  நாமும் உணர வேண்டும்..
"திவ்ய ப்ரபந்தமோ, பதிகங்களோ, கந்த சஷ்டி கவசமோ, கந்த குரு கவசமோ, அபிராமி அந்தாதியோ" மந்திரங்கள் அல்ல.. 
இவை அனைத்துமே "தெய்வத்தை பற்றிய ஸ்துதிகள், பாடல்கள்".

"ருத்ரம், புருஷ சூக்தம்" போன்ற வேத மந்திரங்கள், தெய்வத்தை பற்றிய ஸ்துதிகள், பாடல்கள் அல்ல.. 




'ருத்ரம்' போன்ற வேத மந்திரங்கள் உச்சரிக்க படும் போது, அந்த வேத ஒலிகள், சிவபெருமானை போற்றி பாடவில்லை.
மாறாக,
ஏகாதச ருத்ரர்களையே (11 ரூபத்தில் உள்ள சங்கரனை) அங்கு ஆவிர்பவிக்க செய்கிறது. 
சிவபெருமானை போற்றி பாடும் வெறும் பாடல் அல்ல 'ருத்ரம்' போன்ற வேத மந்திரங்கள்.
சிவபெருமானையே ஆவிர்பவிக்க செய்கிறது ருத்ரம்' போன்ற வேத மந்திரங்கள்.
இந்த வேற்றுமையை நாம் உணர வேண்டும்.




'புருஷ சூக்தம்' போன்ற வேத மந்திரங்கள் உச்சரிக்க படும் போது, அந்த வேத ஒலிகள், ப்ரம்ம தேவனை படைத்த, உலக சிருஷ்டிக்கு காரணமான மூலமான பரமாத்மா நாராயணனை வெறுமனே போற்றி பாடுகிறது என்று நினைக்க கூடாது.
மாறாக, பரமாத்மா நாராயணனையே அங்கு ஆவிர்பவிக்க செய்கிறது.
நாராயணனை போற்றி பாடும் வெறும் பாடல் அல்ல 'புருஷ சூக்தம்' போன்ற வேத மந்திரங்கள்.
நாராயணனை ஆவிர்பவிக்க செய்யும் வேத மந்திரங்கள் இவை என்று அறிய வேண்டும்.

நாராயணனை, போற்றி பாடப்படும் திவ்ய ப்ரபந்தமும்,
நாராயணனை, ஆவிர்பவிக்க செய்யும் வேத மந்திரமும் 
ஒன்று என்று நினைக்க கூடாது.
இந்த வேற்றுமையை ஹிந்துக்கள் நாம் உணர வேண்டும்.

தமிழில் அர்ச்சனை செய்தால் கடவுளுக்கு புரியாதா?
என்று கேட்பது வீண் பிடிவாதம்..
மனிதர்களுக்கு இடையே உள்ள காழ்ப்புணர்ச்சியை, தெய்வத்திடம் நாம் காண்பிக்க கூடாது. 
2000 வருடத்துக்கு முன்பேயே, பெருமாள் தமிழ் பிரபந்தங்களை கேட்டு கொண்டு தான் இருக்கிறார். 
ஊமை தன் மனதில் பிரார்த்தனை செய்தாலும் புரிந்து கொள்கிறார்.
காழ்ப்புணர்ச்சியை ருத்ரம்' போன்ற வேத மந்திரங்கள் மீீது காண்பிக்க கூடாது. 

தெய்வ சாந்நித்தியம் வேத மந்திரங்களால் மட்டுமே ஏற்படுகிறது.
தெய்வ சாந்நித்தியம் உள்ள கோவில்களில்,
நாம் போய் நின்று"கோவிந்தா.. கோவிந்தா..." என்று ஸ்துதி செய்தால் கூட, நினைத்த காரியங்கள் நிறைவேறுகிறது.

தெய்வத்துக்கு எந்த மொழியும் தடையில்லை.. ஊமை பாஷையும் அறிந்தவர் அவர்.
ஆனால், நாம் செய்யும் பிரார்த்தனைகள் பலிக்க, அந்த தெய்வங்கள் தன் சாந்நித்யத்தை காட்ட, வேத மந்திரங்கள் அவசியம். 

வேதத்தை ஒதுக்கி, வழிபடும் இடங்களில், தெய்வ சாந்நித்யம் குறைகிறது. 

ஹிந்து தர்மத்தின் மீது பொறாமை கொண்டவர்கள், 'வேத மந்திரங்கள் கோவிலில் ஒலிக்க கூடாது' என்று பெருமுயற்சி செய்கின்றனர். 
கோவிலை காப்பது ஹிந்துக்களின் கடமை.

வேத மந்திரங்கள் கோவிலில் ஒலிக்க செய்வது ஹிந்துக்களின் கடமை.

கோவிலில் 'பாசுரங்கள், பதிகங்கள், கந்த சஷ்டி கவசம்' பாடுவதும் நமக்கு உள்ள கடமை.

இதை ஹிந்துவாக பிறந்த எவரும் மறக்க கூடாது. 





ஹிந்து கலாச்சாரத்தை கெடுத்து, தன் போலி தெய்வங்களை பாரத மண்ணில் விதைக்க முயலும் கீழ்தரமானவர்களை ஒடுக்க வேண்டியது, ஒவ்வொரு ஹிந்துவுக்கும் கடமை.


"ஸ்துதி வேறு, மந்திரங்கள் வேறு" என்ற வேற்றுமையை நாமும் உணர வேண்டும்..

கோவிலில், "ருத்ரம், புருஷ சூக்தம்" போன்ற வேத மந்திரங்கள் ஓதி அர்ச்சகர்கள், தெய்வ சாநித்தியம் குறையாமல் பார்த்து கொள்ள வேண்டும்.. அர்ச்சகர்கள் பார்த்து கொள்கிறார்கள்.
கோவிலில் "பாசுரங்கள், பதிகங்கள், பஜனைகள் பாடி" பக்தர்கள் தன் பக்தியை வெளிப்படுத்தி, தெய்வ சாந்நித்யம் நிறைந்த அந்த இடத்தில், தெய்வ அனுகிரஹத்தை பெற முயற்சிக்க வேண்டும்.

'வேத மந்திரங்கள் கூடாது, பாசுரங்கள், பதிகங்கள் மட்டுமே சொல்ல வேண்டும், தமிழில் போற்றி பாட வேண்டும்' 
என்று சொல்ல சொல்லி அர்ச்சகரை தடுக்க கூடாது.

"தெய்வ சாநித்யத்தை" வேத மந்திரங்களால் நிலைக்க செய்வது, அர்ச்சகர்கள் கடமை.
"தெய்வ அருளை" பாடல்கள் மூலம் ஸ்துதி (prayer songs) செய்து பெற வேண்டியது நம் கடமை.. 

தமிழில் உள்ள பக்தி பாடல்களை, பாசுரங்களை பாட தான், 'நாம்' இருக்கிறோம். மறக்க கூடாது.

கோவிலுக்கு சென்று ஏதாவது பாட 'நாம்' ஆசைபட வேண்டும்.
கோவிலுக்கு சென்று  'நமோ நாராயணா, சிவாய நம, முருகா போற்றி' என்றும், பாசுரங்களை, பதிகங்களை 'நாம்' ஸ்துதி செய்ய வேண்டும்.

வெறும் மரம் போல தெய்வத்துக்கு முன் நின்று விட்டு வெளியே செல்வது, கோடீஸ்வரனிடம் சென்று 1 ரூபாய் பிச்சை வாங்குவது போல ஆகும்.  


கோவிலுக்கு செல்லும் நாம், அர்ச்சகர் என்ன சொல்ல வேண்டும்? என்று சொல்வதை விட, நாம் என்ன சொல்ல வேண்டும்? என்று கவனிக்க வேண்டும்.

அர்ச்சகர் தெய்வ சாந்நித்யம் குறையாமல் வேத மந்திரங்களை சொல்ல வேண்டும்.
பக்தர்களான நாம், தெய்வ அனுகிரஹத்தை பெற அவரை போற்றி பாட வேண்டும். 
இதற்காக தானே, நமக்கு இத்தனை பக்தி பாடல்களை நமக்கு சித்தர்கள், நாயன்மார்கள், ஆழ்வார்கள் கொடுத்து இருக்கிறார்கள். 
சிந்திக்க வேண்டாமா ஹிந்துக்கள்??.


Wednesday 13 November 2019

4000 திவ்ய பிரபந்தத்தில் வேதம் எப்படி அடங்கியது? எந்த காரணத்தால் இப்படி சொன்னார்கள்? தமிழ் மொழியில் சொல்லப்பட்ட 4000த்தை "தமிழ் மறை" என்று ஏன் சொன்னார்கள்?

"பரமாத்மாவை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்" என்ற ஆசையுள்ள நமக்கு, வள்ளலாக வந்தார்கள் "ஆழ்வார்கள்"..

கடல் போன்றது "வேதம்'..




வேதம், "பகவானை பற்றி மட்டும் சொல்லவில்லை, உபதேவதைகள் பற்றியும், உலக ஸ்ருஷ்டி ஆரம்பித்து, உலகத்தில் அர்த்தங்களை பெறுவதற்கான அனைத்து கலைகளையும் பற்றி சொல்கிறது..."


"4 வேதங்கள் மட்டும் வேதத்தில் அடக்கம்" என்று நினைத்து விட கூடாது...

"அர்த்தங்களை (wealth) பெறுவதற்கு பல விஷயங்களையும் சொல்கிறது" வேதம்...

  • ஆயுர்வேதம் (medicine)
  • ஸ்தாபத்யம் (engineering)
  • காந்தர்வ வேதம் (music)
  • தனுர் வேதம்(army)
  • சிக்ஷை (expert in phonetics, phonology, pronunciation)
  • கல்பம் (expert in knowing  procedures for Vedic rituals and rituals associated with major life events such as birth, wedding and death in family, as well as discussing the personal conduct and proper duties of an individual in different stages of his life)
  • வியாகரணம் (expert in grammers and linguistic analysis)
  • நிருக்தம் (expert interpretation of words and to help establish the proper meaning of the words)
  • சந்தஸ் (expert in poetic metres)
  • ஜோதிஸம் (expert in knowing Auspicious time for rituals and expert in astrology and astronomy.)
  • ஸ்ம்ருதி,
  • இதிகாசம் (knowledge about history),
  • புராணம் (knowledge about very old history) இவைகளும்,
  • காவியம்,
  • நாடகம்,
  • அலங்காரம்
  • யோகம் (expert in meditation, contemplation and liberation)
  • ஸாங்க்யம் (Expert in consciousness and matter)
  • நியாயம் (Expert in exploring sources of knowledge)
  • சௌகதம்
  • ஆர்ஹதம்
  • மீமாம்ஸா (expert in correct conduct, both ethical and liturgical)
  • பாசுபதம்
  • பாஞ்சராத்ரம் (expert in Agama rules and guiding five observances every day to lord narayana)

என்று பல வேதத்தில் அடக்கம்.

"கடல் போன்ற வேதத்தை ஒருவன் முழுமையாக படித்து, உபதேவதைகள், அர்த்தங்களை (wealth) பற்றி சொல்லும் வேத பாகங்களை தள்ளி விட்டு, குறிப்பாக பரமாத்மாவை பற்றி வேதம் என்ன சொல்கிறது?" என்று தெரிந்து கொள்வதற்கு கலியுகத்தில் நமக்கு ஆயுசு போதாது....

"பரமாத்மாவை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்" என்ற ஆசையுள்ள நமக்கு, வள்ளலாக வந்தார்கள் "ஆழ்வார்கள்"..
ஆழ்வார்கள், "வேதத்தின் சாரத்தை, இதிகாச, புராணங்களின் சாரத்தை (essence) நமக்கு 4000 திவ்ய பிரபந்தமாக கொடுத்து விட்டார்கள்."

பகவானை பற்றி அறிய, 'வேதம் முழுவதையும் படிக்க முடியாத நமக்கு, பகவானை பற்றி வேதம் சொல்லும் விஷயத்தை' அப்படியே தமிழில், கொடுத்து விட்டார்கள் ஆழ்வார்கள்.

வேதம் என்ற "பழத்தை" பிழிந்து,
அர்த்தவாதங்கள் சொல்லும் வேத மந்திரங்களை "சக்கை" என்று தள்ளி விட்டு,
பரமாத்மாவை பற்றி மட்டுமே சொல்லும் வேத மந்திரங்களை "சாறு" போல எடுத்து,
4000 திவ்ய ப்ரபந்தமாக "தமிழில்"  நமக்கு சிரமப்படாமல் அருந்தி சுவைப்பதற்கு கொடுத்து விட்டார்கள் ஆழ்வார்கள்.
"பகவானை பற்றி அறிந்து கொள்ள, 
வேதம் முழுக்க படிக்க அவசியமில்லை, 4000 திவ்ய பிரபந்தங்களே போதும்"
என்ற அளவுக்கு தமிழ் மக்களுக்கு பெரும் நிதியாக கொடுத்து விட்டார்களே ஆழ்வார்கள்..

"4000 திவ்ய ப்ரபந்தம் புரிந்து கொண்டால், பகவானை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
இந்த ரகசியம் தெரிந்த தமிழன் திவ்ய ப்ரபந்ததை விடுவானா?.. "




பிரபந்தங்கள் தமிழனின் பொக்கிஷமாயிற்றே... தமிழ் மொழியாயிற்றே..

வேதம் "கடல் போன்றது" என்று எடுத்துக்காட்டாக சொல்வதற்கு காரணம் உண்டு..

கடல் தண்ணீரில் "உப்பு" கலந்து இருக்கும்..
பல ஜீவராசிகள் அதை சார்ந்து இருக்கிறது...
மனிதர்களாகிய நமக்கோ, கடல் முழுக்க நீர் இருந்தாலும், அதில் ஒரு சொட்டு நீர் கூட தாகத்தை தணிக்காது...
மனிதனும் நீரை நம்பி தான் வாழ்கிறான்.




மனிதனுக்கு நீர் கொடுப்பதற்காக அந்த கடலின் மேல், மேகங்கள் சென்று, அது தன் சாமர்த்தியத்தால், கடலில் உள்ள உப்பை மட்டும் விலக்கி விட்டு, நல்ல தண்ணீரை மட்டும் உறிஞ்சிக்கொள்கிறது...

கர்ப்பம் தரித்த பெண் போல, கார்மேகமாக நகர்ந்து நகர்ந்து, நம் கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் வந்து, அம்ருதம் போன்ற மழையை பொழிந்து நம் தாகத்தை தீர்த்து விடுகிறது...
கடல் நீரில் (வேதம்) உள்ள
உப்பை (அர்த்தவாதங்களை) விலக்கி,
சுவையான நீரை மட்டும் (பகவானை பற்றி மட்டுமே)  எடுக்க தெரிந்த மேகங்கள் போல நமக்கு 'ஆழ்வார்கள்' கிடைத்தார்கள்.

வேதத்தில், சாரம் இல்லாத  சாஸ்திரங்களை விலக்கி, சாரத்தை மட்டும் எடுக்கும் சக்தி நமக்கு கிடையாது..

எம்பெருமான் அருள் பெற்ற, அருள் பெற்றதால் ஞானத்தை அடைந்த
ஆழ்வார்கள்,
12 கருமேகங்களாக நம் தமிழகத்தில் உதித்து,
வேத நாயகனான நாராயணனின் பரத்துவத்தை, குணங்களை சொல்லும் வேத பாகங்களை, "மேகம்" சுத்தமான நீரை மட்டும் உறிஞ்சுவது போல உறிஞ்சி,
நம்மை போன்ற சாமானிய ஜனங்களும் "கோவிந்தனின் நாமத்தை, அவர் மகிமையை, அவர் குணங்களை, அவர் கருணையை அறிந்து கொள்ளும்" படியாக,
"4000 திவ்ய ப்ரபந்தங்கள்" என்ற அம்ருத மழையாக பொழிந்து விட்டனர்..

அதனால்,

  1. பெரியாழ்வார் அருளிய "திருப்பல்லாண்டு, திருமொழி"
  2. ஆண்டாள் அருளிய "திருப்பாவை, நாச்சியார் திருமொழி"
  3. குலசேகராழ்வார் அருளிய "பெருமாள் திருமொழி"
  4. திருமழிசையாழ்வார் அருளிய "திருச்சந்தவிருத்தம்", "நான்முகன் திருவந்தாதி"
  5. தொண்டரடிப்பொடியாழ்வார் அருளிய "திருமாலை, திருப்பள்ளி எழுச்சி"
  6. திருப்பாணாழ்வார் அருளிய "அமலனாதிபிரான்"
  7. மதுரகவியாழ்வார் அருளிய "கண்ணிநுண்சிறுத்தாம்பு"
  8. திருமங்கையாழ்வார் அருளிய "பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருஎழுகூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல்"
  9. பொய்கை ஆழ்வார் அருளிய "முதல் திருவந்தாதி"
  10. பூதத்தாழ்வார் அருளிய "இரண்டாம் திருவந்தாதி"
  11. பேயாழ்வார் அருளிய "மூன்றாம் திருவந்தாதி"
  12. நம்மாழ்வார் அருளிய "திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி"
    திருவரங்கத்தமுதனார் அருளிய "இராமானுச நூற்றந்தாதி"

ஆகிய 4000த்தில் சொல்லப்பட்டு இருக்கும் அனைத்தும், வேதத்தின் சாரமான "பரமாத்மாவின் குணங்களையே, தத்துவத்தையே பேசுகிறது"...

சர்வ சாஸ்திரங்களும் 4000த்தில் அடங்கி விடுகிறது.
நம்மாழ்வார் "ரிக், யஜுர், சாம, அதர்வண" ஆகிய 4 வேதங்களின் சாரத்தை பிழிந்து,
"திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி" என்ற "தமிழ் மறை"களாக நமக்கு கொடுத்தார்.

திருமங்கையாழ்வார், "சிக்ஷை, கல்பம், வியாகரணம், நிருக்தம், சந்தஸ், ஜோதிஸம்" ஆகிய 6 சாஸ்திரங்களின் சாரமாக,
"பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருஎழுகூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல்" என்ற "தமிழ் சாஸ்திரங்களாக" நமக்கு கொடுத்தார்.




ஆறு சாஸ்திரத்தின் சாரமும், பெரிய திருமொழியில் இருப்பதை நாம் காணலாம். 
திவ்ய தேசம் பற்றி சொல்லும் போது, அந்த திவ்ய தேசத்தில் உள்ள வீதிகளை வர்ணிக்கும் போதே, தான் கற்ற சாஸ்திர ஞானத்தை பிரபந்தத்தில் காட்டி விடுகிறார்.
நாம் உலக விஷயமான சாஸ்திரங்களை கற்றாலும், அதன் மூலமாகவும் நமக்கு மேலும் பகவத் பக்தி ஏற்பட செயது கொள்ள வேண்டும் என்று காட்டுகிறார் திருமங்கையாழ்வார்.

தான் கற்ற 6 சாஸ்திரங்களையும் திருமங்கையாழ்வார், உலக விஷயங்களுக்கு பயன்படுத்தாமல், எம்பெருமானுக்கே பயன்படுத்தினார்.

உலக சாஸ்திரங்களை கற்றாலும், அதன் மூலம் பகவத் பக்தியை உயர்த்தி கொள்ளவே நாம் முயற்சிக்க வேண்டும் என்று காட்டுகிறார்.. திருமங்கையாழ்வார்.

அது போல, 2 இதிகாசங்கள், புராணங்களும் 4000த்தில் அடங்கி விடுகிறது..

ஸ்ரீ ராமாயணத்தை ராமபிரானை பற்றி அறிய, குலசேகராழ்வார் அருளிய பெருமாள் திருமொழியே போதுமானது...
வால்மீகி ராமாயணத்தின் சாரமாக, நமக்கு ராமபிரானின் குணத்தை நமக்கு காட்டுகிறார்..

"பாகவதம்" போன்ற சாத்வீக புராணங்களின் சாரமாக, பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் நாச்சியார் போன்றவர்கள் அருளிய பிரபந்தங்களே நமக்கு பகவத் பக்தி அனுபவத்தை கொடுத்து விடுகிறது..

"விஷ்ணு தர்மத்தை" அறிய, தொண்டரடிப்பொடியாழ்வார் அருளிய திருமாலை, திருப்பள்ளி எழுச்சி போன்றவைகளே அந்த சாரத்தை நமக்கு தந்து விடுகிறது..

இப்படி "மோக்ஷத்துக்கு வழி சொல்லும் புராணங்கள், இதிகாசங்கள், சாஸ்திரங்கள், 4 வேதம் உட்பட அனைத்தும்" 4000 திவ்ய பிரபந்தத்தில் அடங்கி விடுகிறது..

தமிழர்களுக்கு "பொக்கிஷம்" அல்லவா திவ்ய பிரபந்தங்கள்..
அர்த்தங்கள் பொதிந்த, பக்தியை தரக்கூடிய, 'தமிழ் மறை' அல்லவா திவ்ய பிரபந்தங்கள்..

4 வேதங்களையும், புராணங்களையும், சாஸ்திரங்களையும் முழுவதாக படித்து இருந்தவர்களால் தானே, இவையெல்லாம் 4000த்தில் அடங்கி இருப்பதாக சொல்லி இருக்க முடியும்!!..

4000த்தில் இவையாவும் அடங்கி உள்ளது!! என்று சொன்னவர்கள் யார்? என்றும் நாம் கவனிக்க வேண்டாமா?

சர்வ சாஸ்திரங்களும் 4000த்தில் அடங்கி விடுகிறது என்று  யார் சொன்னார்கள்? 
என்று கவனிக்கும் போது தான், திவ்ய பிரபந்தத்தின் பெருமை நமக்கு புரியும்..

சம்ஸ்க்ரிதம் தெரியாதவன், இதையாவது தெரிந்துகொள்ளட்டும் என்று கொடுக்கப்பட்ட சாதாரண புத்தகம் இல்லையே, 4000 பிரபந்தங்கள்...
வெறுமனே தமிழ் கற்று கொள்வதற்காக, ஏற்பட்ட நூல் இல்லையே 4000 பிரபந்தங்கள்...
சர்வ சாஸ்திரமும், வேதமும், புராணங்கள், இதிகாசங்கள் உட்பட அனைத்தும் கரைகண்ட,
பெரியவாச்சான் பிள்ளை, தேசிகர், ராமானுஜர் போன்ற ஆச்சாரியர்கள் வாக்கியத்தால் நமக்கு 4000த்தின் பெருமை தெரிகிறது..

சர்வ சாஸ்திரமும் கரை கண்ட பெரியவாச்சான் பிள்ளை, போன்ற மகான்கள், கடைசியாக '4000த்தை கையில் எடுக்கும் போது, அதில் உள்ள பிரபந்தங்களோடு வேத சாஸ்திரங்களை, புராண, இதிஹாசங்களை காட்டி விளக்கம் கொடுக்கும் போது, நமக்கு 4000த்தின் பெருமை தெரிகிறது..'

தேசிகர் போன்று சாஸ்திரத்தில் கரை கண்டவர் கிடையாது...
அவர் சம காலத்தில் சிம்மமாக இருந்த மகா பண்டிதர்கள் எல்லாம், இவர் வித்வத்தை பார்த்து பெருமதிப்பு கொண்டிருந்தனர்..

சர்வ சாஸ்திரமும் அறிந்த தேசிகர், கடைசியில் 4000த்தை கையில் எடுத்து வாசிக்க வாசிக்க, "தெளியாத மறை நிலமெல்லாம் தெளிகிறது" என்று சொல்கிறார்..

யார் இப்படி சொல்கிறார்? என்பதை கவனிக்க வேண்டும்..
"தான் கற்ற வேதங்களில், புரியாத சில வாக்கியங்கள், 4000 திவ்ய பிரபந்தத்தை படிப்பதால், புரிந்து விடுகிறது என்று யார் சொல்கிறார்? என்று பார்க்க வேண்டும்..
அப்பொழுது தான், நமக்கு 4000த்தின் மகத்துவம் புரியும்.

"தான் வேத சாஸ்திரம் படித்து அதன் அர்த்தத்தை புரிந்து கொள்ள இயலாத இடங்களை கூட 4000 திவ்ய பிரபந்தத்தில் பார்க்கிறேன்" என்று சொல்கிறார் தேசிகர்..

அற்புதமான திவ்ய பிரபந்தத்தை, தமிழனாக பிறந்த ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்..

இதன் உண்மையான ஆழ்ந்த அர்த்தங்களை, ஞானத்தில் உயர்ந்த, பரமாத்மாவிடம் திட பக்தி உள்ள, மகான்களிடம் கேட்டு மனதில் உள்வாங்கி, அனுபவிக்க வேண்டும்..  




திவ்ய பிரபந்தங்களே நமக்கு பரமாத்மாவை பற்றிய ஞானத்தை, பக்தியை தரும்.
தமிழனாக பிறந்ததற்கு பெருமை படுவோம்.

வாழ்க 4000 திவ்ய பிரபந்தம்.
வாழ்க ஆழ்வார்கள்.   வாழ்க நாயன்மார்கள். 
வாழ்க நம் பாரத மண்ணில் உதிக்கும் மகான்கள்.