பரகால நாயகியாக இருந்து, திருமங்கையாழ்வார் பாடுகிறார்.
Followers
Search Here...
Tuesday 11 January 2022
ஸ்ரீரங்கம் வா, உனக்கு இடம் தருகிறேன்' என்று பெருமாள் பரகால நாயகியிடம் சொல்கிறார். இருகையில்சங் கிவைநில்லா.. பாசுரம் அர்த்தம் தெரிந்து கொள்வோம்
Thursday 6 January 2022
இப்படி ஒரு பெண்ணை பெற்றோமே! என்று ஆனந்தமும் அடைகிறாள் பரகால நாயகியின் தாய். பாசுரம் "தோராளும் வாளரக்கன் செல்வம் மாளத்..." அர்த்தம் தெரிந்து கொள்வோம்.
பெருமாளை அடைய முடியாமல் தவிக்கும் ஆழ்வார், தன் நிலையை தானே நேரடியாக பெருமாளிடம் சொல்லிக்கொள்ளாமல், தன்னையே பரகால நாயகியாக ஆக்கிக்கொண்டு, தன் தாயின் மூலம் பெருமாளிடம் தன் விரகத்தை சொல்லி புலம்புகிறார்.
தேர் ஆளும் வாள் அரக்கன் செல்வம் மாள !
தென் இலங்கை முன் மலங்க !
செந்தீ ஓங்கி! போர் ஆளன் !
ஆயிரம் வாணன் மாள
பொருகடலை அரண் கடந்து புக்கு மிக்க !
பார் ஆளன் ! பார் இடந்து !
பாரை உண்டு ! பார் உமிழ்ந்து !
பார் அளந்து ! பாரை ஆண்ட ! பேர் ஆளன் !
பேர் ஓதும் பெண்ணை !
மண்மேல் பெரும் தவத்தாள்
என்று அல்லால் பேசலாமே!
- திருமங்கையாழ்வார் (திருநெடுந்தாண்டகம்)
பரகால நாயகியின் தாயார், தன்னுடைய பெண் குழந்தை படும் வேதனையை கண்டு வருந்தி மேலும் பாடுகிறாள்.
"சதுரங்க சேனைக்கு மஹாரதனாகவும், கையில் சந்திரஹாசம் என்ற வாளை வைத்து இருந்த ராக்ஷஸனான ராவணன் (தேர் ஆளும் வாள் அரக்கன்) சீதாதேவியை இலங்கைக்கு தூக்கி சென்று விட்டான் என்றதும், முதலில் ஹநுமானை அனுப்பி, செல்வங்கள் குவிந்து இருக்கும் இலங்கையை (தென் இலங்கை), தீயில் (செந்தீ ஓங்கி) பொசுக்கி ராவணனை கலங்கடித்து (முன் மலங்க), பிறகு தானே நேருக்கு நேர் போர் செய்து (போர் ஆளன்), ராவணனை கொன்று, சீதை பிராட்டியை மீட்ட ராமபிரானே !
ஆயிரம் தோள்களை உடையனான பாணாஸுரனை (ஆயிரம் வாணன்) ஒழித்து கட்ட (மாள), அலை எறிகின்ற கடலாகிய கோட்டையை கடந்து (பொருகடலை அரண் கடந்து) அவனுடைய இடத்திற்கே சென்று (புக்கு) போரிட்டு வெற்றிபெற்ற (மிக்க) கண்ணனே!
இந்த பூமிக்கு பதியே! (பார் ஆளன்)
பூமியை பிரளய ஜலதிதிலிருந்து தூக்கிய வராஹ மூர்த்தியே! (பார் இடந்து)
கிருஷ்ணாவதார காலத்தில் மண்ணை உண்டு, பிரளய காலத்தில், உலகத்தை உண்டு தன் திருவயிற்றில் அடக்கியவரே ! (பாரை உண்டு)
உலக ஸ்ருஷ்டி செய்ய சங்கல்பித்த போது, உலகை மீண்டும் வெளிப்படுத்தியவரே! (பார் உமிழ்ந்து) என்றும்,
திருவிக்ரமனாக இருந்து உலகை அளந்தவரே ! (பார் அளந்து)
ராம அவதாரத்தில் இந்த உலகை அரசாண்டவரே (பாரை ஆண்ட) என்று,
பெருமை பொருந்திய எம்பெருமானுடைய (பேர் ஆளன்) திருநாமங்களையே ஓயாது பாடி (பேர் ஓதும்), கண்ணீர் விட்டு கொண்டிருக்கும் இது போன்ற பெண்ணை இந்த உலகில் காண முடியுமோ?
பெருமாளிடம் பக்தி உள்ள இப்படி ஒரு பெண்பிள்ளையை இந்த உலகில் (மண்மேல்) பெற்று தந்த பாக்கியவதி அல்லவோ இவள்! என்று தானே, என்னை அனைவரும் சொல்வார்கள்!"
என்று திருமங்கையாழ்வாராகிய பரகால நாயகியின் தாய், 'ஒரு புறம் 'இப்படி வாடி போகிறாளே என் மகள்!' என்று வருந்தினாலும், பெருமாளிடம் இவள் கொண்டிருக்கும் பக்தியை நினைத்து, இப்படி ஒரு பெண்ணை பெற்றோமே!' என்று ஆனந்தமும் அடைகிறாள்.
தோராளும் வாளரக்கன் செல்வம் மாளத் தென்னிலங்கை முன்மலங்கச் செந்தீ ஒல்கி,
பேராள னாயிரம் வாணன் மாளப் பொருகடலை யரண்கடந்து புக்கு மிக்க
பாராளன், பாரிடந்து பாரை யுண்டு பாருமிழ்ந்து பாரளந்து பாரை யாண்ட
பேராளன், பேரோதும் பெண்ணை மண்மேல் பெருந்தவத்தள் என்றல்லால் பேச லாமே?
'8 சீர்களை கொண்ட பாடல்' என்பதால், திருநெடுந்தாண்டகம் என்ற வரிசையில் வருகிறது. இதை பற்றி தெரிந்து கொள்ள, இங்கே பார்க்கவும்.
.
Tuesday 28 December 2021
தமிழா! தமிழ் இலக்கணம் பாசுரங்களில் எப்படி உள்ளது? என்று தெரிந்து கொள்வோமே நாலு கவி பெருமாள் என்று பெயர் பெற்ற திருமங்கையாழ்வாரின், பெருமையை அறிந்து கொள்வோமே! திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டாகம் என்றால் என்ன? தெரிந்து கொள்வோம்.
திருமங்கையாழ்வார் 30 பாடல்களை 'நெடுந்தாண்டகம்' என்ற செய்யுள் நடையில் எம்பெருமானை பாடினார்.
"திருநெடுந்தாண்டகம்" என்று பெயர்.
திருமங்கையாழ்வார் 20 பாடல்கள் 'குறுந்தாண்டகம்' என்ற நடையில் எம்பெருமானை பாடினார்.
ஒரு பாடலில்,
- ஒவ்வொரு அடியிலும் 8 சீர் இருந்தால்,
- அந்த பாடல் தெய்வத்தை பற்றியோ, ஒரு நாயகனை பற்றியோ பாடினால்,
- ஒவ்வொரு 8 சீரிலும்,
- 1,2,5,6 ஆகிய நான்கு சீர்கள் காய்ச்சீர்களாகவும்,
- 3,4,7,8 ஆகிய நான்கு சீர்கள் இயற்சீர்களாகவும், குறிப்பாக இயற்சீர் நான்கினுள் (தேமா, புளிமா, கருவிளம், கூவிளம்)
- 3,7 ஆகிய சீர்கள் புளிமா, அல்லது தேமாவாக,
- 4,8 ஆகிய சீர்கள் தேமாவாக மட்டுமே அமைந்தால்,
அதற்கு "நெடுந்தாண்டகம்" என்று பெயர்.
திருமங்கையாழ்வார் பாடிய பாசுரங்கள் எப்படி நெடுந்தாண்டகத்தில் அமைந்து இருக்கிறது?
பாசுரம்:
முற்றாரா வனமுலையாள் பாவை மாயன் மொய்யகலத் துள்ளிருப்பாள் அஃதும் கண்டும்
அற்றாள் தன் நிறையழிந்தாள் ஆவிக் கின்றாள் அணியரங்க மாடுதுமோ தோழீ என்னும்
பெற்றேன்வாய்ச் சொல்லிறையும் பேசக் கேளாள் பேர்ப்பாடித் தண்குடந்தை நகரும் பாடி
பொற்றாம ரைக்கயம்நீ ரா டப் போனாள் பொருவற்றா ளென்மகள்உம் பொன்னும் அஃதே
இந்த பாசுரத்தில்,
ஒவ்வொரு அடியிலும் 8 சீர் இருக்கிறது.
பெருமாளே இங்கு நாயகன்.
பாசுரத்தின் முதல் அடி (உதாரணத்திற்கு):
- முற்/றா/ரா - நேர் நேர் நேர் - தேமாங்காய் (காய் சீர்)
- வன/முலை/யாள் - நிரை நிரை நேர் - கருவிளங்காய் (காய் சீர்)
- பா/வை - நேர் நேர் - தேமா (மா சீர்)
- மா/யன் - நேர் நேர் - தேமா (மா சீர்)
- மொய்/யக/லத் - நேர் நிரை நேர் - கூவிளங்காய் (காய் சீர்)
- துள்/ளிருப்/பாள் - நேர் நிரை நேர் - கூவிளங்காய் (காய் சீர்)
- அஃ/தும் - நேர் நேர் - தேமா (மா சீர்)
- கண்/டும்- நேர் நேர் - தேமா (மா சீர்)
1,2,5,6 - காய் சீராக அமைந்து இருக்கிறது.
3,7, 4,8 - மா சீராக அமைந்து இருக்கிறது.
எழுத்துகள் சேர்ந்து "நேர்" அல்லது "நிரை" அசையாகும்,
அசைகள் சேர்ந்து சீராகும்,
"முற்றாரா" என்பது ஒரு சீர். இதில் இரண்டு தமிழ் சொற்கள் இருக்கிறது (முற்று ஆரா)
"மொய்யகலத் துள்ளிருப்பாள்" என்ற இரண்டு சீரில் 3 தமிழ் சொற்கள் இருக்கிறது (மொய் அதலத்துள் இருப்பாள்)
பெருமாளை பற்றி இந்த 'நெடுந்தாண்டகம் என்ற விருத்தத்திலேயே 30 பாடல்கள் பாடுகிறார்' நம்முடைய திருமங்கையாழ்வார்.
ஒரு பாடலில்,
- ஒவ்வொரு அடியிலும் 6 சீர் இருந்தால்,
- அந்த பாடல் தெய்வத்தை பற்றி பாடினால்,
- ஒவ்வொரு 6 சீரிலும், பொதுவாக எல்லா சீர்களும் இயற்சீர்களாகவே வந்தால் (சிலசமயங்களில் காய்ச்சீரும் இருப்பதுண்டு),
- பெரும்பாலும் 1,4 ஆகிய சீர்கள் விளச்சீராகவும் (கருவிளம் or கூவிளம்),
- 2,3,5,6 ஆகிய சீர்கள் மாச்சீர்களாகவும் (தேமா, புளிமா) வந்தால்,
அதற்கு "குறுந்தாண்டகம்" என்று பெயர்.
திருமங்கையாழ்வார் பாடிய பாசுரங்கள் எப்படி குறுந்தாண்டகத்தில் அமைந்து இருக்கிறது?
பாசுரம்:
வானவர் தங்கள் கோனும் மலர்மிசை அயனும் நாளும்
தேமலர் தூவி ஏத்தும் சேவடிச் செங்கண் மாலை
மானவேல் கலியன் சொன்ன வண்டமிழ் மாலை நாலைந்தும்
ஊனம தின்றி வல்லார் ஒளிவிசும் பாள்வ ர் தாமே
இந்த பாசுரத்தில்,
ஒவ்வொரு அடியிலும் 6 சீர் இருக்கிறது.
பெருமாளே இங்கு நாயகன்.
பாசுரத்தில் முதல் அடி (உதாரணத்திற்கு):
- வா/ன/வர் - நேர் நிரை - கருவிளம் (விள சீர்)
- தங்/கள் - நேர் நேர் - தேமா (மா சீர்)
- கோ/ணும் - நேர் நேர் - தேமா (மா சீர்)
- மலர்/மிசை - நிரை நிரை - கருவிளம் (விள சீர்)
- அய/னும் - நேர் நேர் - தேமா (மா சீர்)
- நா/ளும் - நேர் நேர் - தேமா (மா சீர்)
இங்கு,
1,4 - விள சீராக அமைந்து இருக்கிறது..
2,3,5,6 - மா சீராக அமைந்து இருக்கிறது.
திருமங்கையாழ்வாரின் கவித் திறனை பார்த்து, முருகப்பெருமானே அவருக்கு 'நாலு கவி பெருமாள்' என்று பட்டமளித்து அவருக்கு "வேல்" பரிசாக அளித்தார். (சைவர்கள், முருகப்பெருமானின் அவதாரமான ஞானசம்பந்தர் கொடுத்தார் என்று சொல்கின்றனர்)
ஆழ்வார்களில், வேல் வைத்திருக்கும் ஒரே ஆழ்வார் இவர் ஒருவரே!
திருமங்கைமன்னன் என்றும் பரகாலன் என்றும் நீலன் என்றும் கலியன் என்றும் அழைக்கப்படும் திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்.
பெருமாளின் இதயத்தில் பெரியபிராட்டி இருக்கிறாள் என்று தெரிந்தும், பெருமாளை பரகால நாயகி ஆசைப்படுகிறாள். பாசுரத்தின் அர்த்தம் தெரிந்து கொள்வோம். முற்றாரா வனமுலையாள்...
பெருமாளை அடைய முடியாமல் தவிக்கும் ஆழ்வார், தன் நிலையை தானே நேரடியாக பெருமாளிடம் சொல்லிக்கொள்ளாமல், தன்னையே பரகால நாயகியாக ஆக்கிக்கொண்டு, தன் தாயின் மூலம் பெருமாளிடம் தன் விரகத்தை சொல்லி புலம்புகிறார்.
முற்று ஆராவனம் முலையாள் பாவை மாயன்
மொய் அதலத்துள் இருப்பாள் அஃதும் கண்டும்
அற்றாள் தன் நிறைவு அழிந்தாள் ஆவிக்கின்றாள்
'அணி அரங்கம் ஆடுதுமோ தோழீ' என்னும்
பெற்றேன் வாய் சொல்லி இறையும் பேச கேளாள்
பேர்ப்பாடி தண்குடந்தை நகரும் பாடி
பொற்றாமரை கயம் நீராட போனாள்
பொருவு அற்றாள் என் மகள்
உம் பொன்னும் அஃதே?
- திருமங்கையாழ்வார் (திருநெடுந்தாண்டகம்)
பரகால நாயகியின் தாயார், தன்னுடைய பெண் குழந்தை படும் வேதனையை கண்டு வருந்தி, "இவளுக்கு நாம் ஏதேனும் ஹிதமான வார்த்தை சொல்லிப் பார்ப்போம், அதனாலாவது ஒரு வழி பிறக்குமோ?‘ என்றெண்ணி பாடுகிறாள்.
"அழகிய முத்து ஹாரங்களை மார்பில் அணிந்து இருக்கும், அம்ருதம் கடையும் போது அம்ருதம் போல வெளிப்பட்ட அழகில் நிகரில்லாத 'பெரியபிராட்டி, ஆராவமுதனான எம்பெருமானின் அழகிய திருமார்பினுள் இருக்கிறாள்' என்பதை நேராக கண்ட பிறகும், தன் ஆசையை விட மறுக்கிறாளே என்னுடைய மகள் !
(முற்று ஆராவனம் முலையாள் பாவை மாயன் மொய் அதலத்துள் இருப்பாள் அஃதும் கண்டும்)
'அச்சம் மடம் நாணம்' இது தானே பெண்ணுக்கு லக்ஷணம்! யார் என்ன சொல்வார்களோ! என்ற அச்சமும் இவளிடம் இல்லை. நாணமும் இல்லையே! தன்னுடைய வெட்கத்தை விட்டு, 'தனக்கும் எம்பெருமானிடத்தில் ஒரு இடம் கிடைக்குமா?' என்று கேட்டுக்கொண்டு பெரு மூச்சு விட்டு நிற்கிறாளே !
(அற்றாள் தன் நிறைவு அழிந்தாள் ஆவிக்கின்றாள்)
அருகில் இருக்கும் தோழியை பார்த்து, பயமே இல்லாமல், 'தோழீ! திருவரங்கம் சென்று ஒரு குதி குதித்து ஆடினால் தான் மனதுக்கு சமாதானம் ஆகும் போல இருக்கிறது. திருவரங்கம் சென்று ஆடுவோமா?‘ என்கிறாளே !
('அணி அரங்கம் ஆடுதுமோ தோழீ' என்னும்)
பெற்றவள் அருகிலேயே இருக்கிறேன். தாயிடம் சொல்லிக்கொண்டு போகவேண்டும் என்று கூட இவளுக்கு தோன்றவில்லையே! 'என் வார்த்தையை கொஞ்சமாவது கேள்' என்று சொன்னாலும் 'கேட்கமாட்டேன்' என்கிறாள்.
(பெற்றேன் வாய் சொல்லி இறையும் பேச கேளாள்)
எப்பொழுது பார்த்தாலும் வாயில் நாம சங்கீர்த்தனமே செய்கிறாள். இப்படி சதா சர்வகாலமும் பஜனை செய்தே கெட்டு போய் விட்டாளே !
'பகவத் பஜனை தானே ! செய்யட்டும்' என்று கொஞ்சம் இடம் கொடுத்தால், இவளோ இப்படி பஜனையிலேயே மூழ்கி போய் விட்டாளே !
'திருக்குடந்தை ஆராவமுதனை பார்க்க போகிறேன் என்று பஜனை செய்கிறாளே !"
(பேர்ப்பாடி தண்குடந்தை நகரும் பாடி)
'எம்பெருமானை அடைய முடியாததால் ஏற்பட்ட விரகத்தை தனித்து கொள்ள, பொற்றாமரை குளத்தில் சென்று நீராடி விட்டு வருகிறேன்' என்று சொல்லி விட்டு சென்று விட்டாளே !
(பொற்றாமரை கயம் நீராட போனாள்)
உலகத்தில் பெண்கள் எல்லோரும் எப்படி இருக்கிறார்கள்.. என்னுடைய மகள் மட்டும் இப்படி வேறுபட்டு இருக்கிறாளே!!"
என்று பரகால நாயகியின் தாய் வருத்தப்பட்டாள்.
'பரகால நாயகியாக' இருப்பவர் திருமங்கையாழ்வார் தான்.
இவரை போலவே,
நம்மாழ்வாரும் தன்னை 'பராங்குச நாயகியாக' வரித்து கொண்டு, எம்பெருமானை அடைய பல பாசுரங்கள் பாடி இருக்கிறார்.
திருமங்கையாழ்வாருக்கு 'நம்மாழ்வார் நிலையும், தன் நிலையும் ஒன்று போல இருக்க', தனக்கு தாயாக இருப்பவள், பராங்குச நாயகியின் தாயாரை பார்த்து,
"தோழீ! என் மகள் (திருமங்கையாழ்வார்) தான் இப்படி இருக்கிறாளா? அல்லது உன் பெண்ணுக்கும் (நம்மாழ்வார்) இதே நிலை தானோ?"
(பொருவு அற்றாள் என் மகள் உம் பொன்னும் அஃதே?) என்று கேட்பது போல பாடுகிறார்.
பரகால நாயகியின் (திருமங்கையாழ்வார்) தாய், தன் மகளின் விரகத்தை கண்டு வருந்துகிறாள்.
நம்மாழ்வாராகிய பராங்குச நாயகியின் தாயார், திருமங்கையாழ்வாராகிய பரகால நாயகியின் தாய் சொன்னதை கேட்டு விட்டு சொல்கிறாள்,
"தோழீ! என் மகளை பார்த்தால், 'இவள் நப்பின்னை என்ற ஆயர் குலமகளோ! அல்லது பூமி தேவியோ! அல்லது சாக்ஷாத் மஹாலட்சுமியோ! என்பது போல, எப்பொழுது பார்த்தாலும் 'தொலைவில்லி மங்கலம்... தொலைவில்லி மங்கலம்" என்றே சொல்லி கொண்டிருந்தவள், என்னிடம் சொல்லிக்கொள்ளாமலேயே சென்று விட்டாள். உன் மகளாவது பொற்றாமரை குளம் செல்கிறேன் என்று சொல்லி விட்டு தானே சென்று இருக்கிறாள்.
இருவருமே அநேகமாக 'தொலைவில்லி மங்கலம்' (இரட்டை திருப்பதி) தான் சென்று இருப்பார்கள். வா 'தொலைவில்லி மங்கலம்' செல்வோம்" என்று சமாதானம் செய்தாள்.
பின்னை கொல்?
நில மா மகள் கொல்?
திருமகள் கொல்? பிறந்திட்டாள், என்ன மாயங்கொலோ இவள்? 'நெடுமால்' என்றே நின்று கூவுமால்
முன்னி வந்தவன் நின்று இருந்து
உறையும் தொலைவில்லி மங்கலம்
சென்னியால் வணங்கும்
அவ்வூர் திரு நாமம் கேட்பது சிந்தையே!
- நம்மாழ்வார் (திருவாய்மொழி)
Monday 27 December 2021
வெட்கத்தை விட்டு 'நான் திருநீர்மலையே போய் விடுகிறேன்' என்று பேசும் பரகால நாயகியின் நிலை. பாசுரம் அர்த்தம் தெரிந்து கொள்வோம்.. கார்வண்ணம் திருமேனி கண்ணும் வாயும் - திருமங்கையாழ்வார்
பெருமாளை அடைய முடியாமல் தவிக்கும் ஆழ்வார், தன் நிலையை தானே நேரடியாக பெருமாளிடம் சொல்லிக்கொள்ளாமல், தன்னையே பரகால நாயகியாக ஆக்கிக்கொண்டு, தன் தாயின் மூலம் பெருமாளிடம் தன் விரகத்தை சொல்லி புலம்புகிறார்.
கார்வண்ணம் திருமேனி !
கண்ணும், வாயும், கைத்தலமும், அடியிணையும் கமல வண்ணம் !
பார்வண்ண மடமங்கை பத்தர் !
பித்தர் பனிமலர்மேல் பாவைக்கு !
பாவம் செய்தேன் !
ஏர் வண்ண என் பேதை! என் சொல் கேளாள் !
'எம்பெருமான் திருவரங்கம் எங்கே?' என்னும்
'நீர்வண்ணன் நீர்மலைக்கே போவேன்' என்னும்
இதுவன்றோ நிறைவு அழிந்தார் நிற்குமாறே?
- திருமங்கையாழ்வார் (திருநெடுந்தாண்டகம்)
பரகால நாயகியின் தாயார், தன்னுடைய பெண் குழந்தை படும் வேதனையை கண்டு வருந்தி, "இவளுக்கு நாம் ஏதேனும் ஹிதமான வார்த்தை சொல்லிப் பார்ப்போம், அதனாலாவது ஒரு வழி பிறக்குமோ?‘ என்றெண்ணி பாடுகிறாள்.
"எம்பெருமானின் ரூப சௌந்தர்யத்தையே நினைத்து நினைத்து மயங்கி போகிறாள் என்னுடைய பெண்குழந்தை.
அவர் திருமேனி அங்கம் எப்படி இருக்கும் தெரியுமா? 'நீருண்ட மேகம் போல இருக்கும்' என்று சொல்கிறாள்.
(கார்வண்ணம் திருமேனி)
அவர் கண்கள் எப்படி இருக்கும் தெரியுமா?
அவர் உதடுகள் எப்படி இருக்கும் தெரியுமா?
அவர் திருக்கைகள் எப்படி இருக்கும் தெரியுமா?
அவர் திருவடிகள் எப்படி இருக்கும் தெரியுமா?
'இவை ஒவ்வொன்றும் செந்தாமரை பூத்தது போல சிவந்து இருக்கும்' என்று சொல்கிறாள்.
(கண்ணும், வாயும், கைத்தலமும், அடியிணையும் கமல வண்ணம்)
'எம்பெருமானுக்கு 'ஸ்ரீதேவி, பூதேவி' என்று இரு பிராட்டி.
பூதேவியின் பக்தியை மதிக்கிறார். அவள் அன்புக்கு (பற்றுக்கு) கட்டுப்பட்டு இருக்கிறார்' என்று சொல்கிறாள்.
(பார்வண்ண மடமங்கை பத்தர்)
'தாமரை மேல் அமர்ந்து இருக்கும் ஸ்ரீதேவிக்கோ இவர் ஒரு பித்தர். அவளிடத்தில் அவ்வளவு மோகம் கொண்டு இருக்கிறார்.' என்று சொல்கிறாள்.
(பனிமலர்மேல் பாவைக்கு பித்தர்)
உடனே
'நானும் ஒரு நாயகி இங்கு இருக்கிறேனே! ஆனால் எனக்கு மட்டும் இவர் கிடைக்கவில்லையே! என்ன பாவம் செய்தேனோ?' என்று சொல்லி அழுகிறாள் என் குழந்தை.
என்னுடைய பெண்பிள்ளை இப்படி இருக்கிறாளே! இது நான் செய்த பாவமோ?" என்று பரகால நாயகியின் தாயும் வருந்துகிறாள்.
(பாவம் செய்தேன்?)
மேலும்,
"நல்ல அழகான வண்ணமுடைய என்னுடைய பெண் குழந்தை, முக்தமான ஸ்வபாவமுடைய என்னுடைய மகள், என்னுடைய பேச்சை கேட்காமல், எப்பொழுது பார்த்தாலும் 'எம்பெருமான் திருவரங்கம் எங்கே? எங்கே? என்றே பாடிக்கொண்டு இருக்கிறாளே!
(ஏர் வண்ண என் பேதை ! என் சொல் கேளாள் ! எம்பெருமான் திருவரங்கம் எங்கே? என்னும்)
'இப்படியெல்லாம் பாடாதே! நிறுத்து !' என்று இவளை அதட்டினால்,
'நான் நீர்வண்ணன் இருக்கும் (சென்னை) திருநீர்மலைக்கே போய் விடுகிறேன்.' என்று பேசுகிறாளே!
(நீர்வண்ணன் நீர்மலைக்கே போவேன்! என்னும்)
ஒரு பெண்ணுக்கு, 'அச்சம், மடம், நாணம்' என்ற ஸ்த்ரீ லக்ஷணம் இருக்க வேண்டாமா?
இப்படி வெட்கத்தை விட்டு, 'ரங்கா ரங்கா ரங்கா.. கோவிந்தா கோவிந்தா கோவிந்தா' என்று உரக்க சொல்கிறாளே!
இப்படி வெட்கத்தை விட்டு, ஒரு பெண் இருப்பாளோ? வெட்கத்தை விட்ட பெண்ணை பெற்றவர்களின் நிலைமை இப்படி தான் இருக்குமோ!"
(இதுவன்றோ நிறைவு அழிந்தார் நிற்குமாறே?)
என்று பரகால நாயகியின் (திருமங்கையாழ்வார்) தாய், தன் மகளின் விரகத்தை கண்டு வருந்துகிறாள்.
ஜோடி புறாக்கள் கொஞ்சுவதை கேட்டு உருகி போகும் பரகால நாயகியின் நிலை. பாசுரம் அர்த்தம் தெரிந்து கொள்வோம்.. பொங்கு ஆர் மெல் இளங்கொங்கை - திருமங்கையாழ்வார்
பெருமாளை அடைய முடியாமல் தவிக்கும் ஆழ்வார், தன் நிலையை தானே நேரடியாக பெருமாளிடம் சொல்லிக்கொள்ளாமல், தன்னையே பரகால நாயகியாக ஆக்கிக்கொண்டு, தன் தாயின் மூலம் பெருமாளிடம் தன் விரகத்தை சொல்லி புலம்புகிறார்.
பொங்கு ஆர் மெல் இளங்கொங்கை பொன்னே பூப்ப !
பொரு கயல் கண் நீர் அரும்ப போந்து நின்று
செங்கால மட புறவம் பெடைக்கு பேசும்
சிறு குரலுக்கு உடலுருகி சிந்தித்து ஆங்கே
தண்காலும் தண்குடந்தை நகரும் பாடி
தண்கோவலூர் பாடி ஆட கேட்டு
நங்காய் நம் குடிக்கு இதுவோ நன்மை என்ன?
நறையூரும் பாடுவாள் நவில்கின்றாளே!
- திருமங்கையாழ்வார் (திருநெடுந்தாண்டகம்)
பரகால நாயகியின் தாயார், தன்னுடைய பெண் குழந்தை படும் வேதனையை கண்டு வருந்தி, "இவளுக்கு நாம் ஏதேனும் ஹிதமான வார்த்தை சொல்லிப் பார்ப்போம், அதனாலாவது ஒரு வழி பிறக்குமோ?‘ என்றெண்ணி பாடுகிறாள்.
இளம் கன்னிகையாக பொற்குடம் போன்ற அழகிய மார்புடைய என் பெண் குழந்தை, கிருஷ்ண விரகம் என்ற அக்னியால், சாம்பல் பூத்தது போல ஆகிவிட்டாளே! என்னுடைய பெண், இப்படி விரகத்தில் உருக்குலைந்து போய் விட்டாளே!
(பொங்கு ஆர் மெல் இளங்கொங்கை பொன்னே பூப்ப)
கண்களில் எப்பொழுதும் கண்ணீரோடு இருக்கிறாளே! நிலைகொள்ள முடியவில்லையே ! ஒரு இடத்தில இவளால் உட்கார முடியவில்லையே! எழுந்திருந்து எழுந்திருந்து யாரையோ தேடி தேடி எதிர்பார்க்கிறாள், உட்காருகிறாள். மறுபடியும் எழுந்திருக்கிறாள். மறுபடியும் உட்காருகிறாளே !
(பொரு கயல் கண் நீர் அரும்ப போந்து நின்று)
பாம்புக்கு பயந்து, புலியின் வாயிலே விழுந்தது போல, தாய் கண்டிக்கிறாள் என்று வாசலுக்கு சென்ற என் பெண் இரண்டு ஜோடி புறா கொஞ்சிக்கொள்வதை கேட்டு விட்டு, "அதைவிட கொடிய சொல் செவியிலே விழுந்தது" என்கிறாளே!
அழகியதான சிவந்த கால்களை உடைய இரண்டு ஜோடி புறாக்கள் கொஞ்சி கொண்டு இருக்க, அவை கொஞ்சி பேசிக்கொள்ளும் குரலை கேட்டு விட்டு, இவள் உடலுருகி போய் விடுகிறாளே !
"இவை கூட தம் தம் ஜோடியோடு களித்து இருக்கிறதே! நம் நிலைமை இப்படியாயிற்றே!" என்று சிந்தித்து உடலுருகி அங்கேயே நிற்கிறாளே!
(செங்கால மட புறவம் பெடைக்கு பேசும் சிறு குரலுக்கு உடலுருகி சிந்தித்து ஆங்கே)
இப்படியே நிற்கும் இவள், அடுத்த நொடி, காஞ்சியில் இருக்கும் விளக்கொளி பெருமாளை நினைத்து கொண்டு 'திருத்தண்கால்" (தூப்புல்) என்று திவ்ய தேசத்தின் பெயரை சொல்கிறாள்.
"என்னடிம்மா சொல்கிறாய்? என்று கேட்டால்,
கும்பகோணத்தில் இருக்கும் சாரங்கபாணியை நினைத்துக்கொண்டு "திரு குடந்தை" என்று சொல்கிறாள்.
(தண்காலும் தண்குடந்தை நகரும் பாடி)
'இவள் ஒரு நிலையில் இல்லையே !' என்று கவலைப்பட்டு இருக்க,
இவளோ த்ரிவிக்ரம பெருமாளை நினைத்து கொண்டு "திருக்கோவலூர்" என்று சொல்லி பாடுகிறாள், ஆடுகிறாள்.
இப்படி இவள் சொல்வதை கேட்டு, "குழந்தை! நம்முடைய குடும்பத்திற்கு இது பழக்கமா? இப்படி செய்யலாமா? நீ ஒரு பெண் குழந்தையாக இருந்து கொண்டு, இப்படி செய்யலாமா? நம்முடைய குடும்பத்திற்கு இது நன்றாகவா இருக்கிறது? என்று கேட்டால்,
(தண்கோவலூர் பாடி ஆட, கேட்டு, நங்காய் நம் குடிக்கு இதுவோ நன்மை என்ன?)
"அம்மா! திரு நறையூரும் (எனும் நாச்சியார் கோவில்) பாடுவேன்.. கேள்" என்கிறாளே !
(நறையூரும் பாடுவாள் நவில்கின்றாளே)
என்று பரகால நாயகியின் (திருமங்கையாழ்வார்) தாய், தன் மகளின் விரகத்தை கண்டு வருந்துகிறாள்.
திவ்ய தேசத்தின் பெயரை சொல்லி சொல்லி உருகி போகும் பரகால நாயகியின் நிலை. பாசுரம் அர்த்தம் தெரிந்து கொள்வோம்.. கன்று மேய்த்து இனிது உகந்த - திருமங்கையாழ்வார்
பெருமாளை அடைய முடியாமல் தவிக்கும் ஆழ்வார், தன் நிலையை தானே நேரடியாக பெருமாளிடம் சொல்லிக்கொள்ளாமல், தன்னையே பரகால நாயகியாக ஆக்கிக்கொண்டு, தன் தாயின் மூலம் பெருமாளிடம் தன் விரகத்தை சொல்லி புலம்புகிறார்.
'கன்று மேய்த்து இனிது உகந்த காளாய்' என்றும்,
'கடிபொழில் சூழ் கணபுரத்து என் கனியே' என்றும்,
'மன்று அமர கூத்தாடி மகிழ்ந்தாய்' என்றும்,
'வட திருவேங்கடம் மேய மைந்தா' என்றும்,
'வென்று அசுரர் குலம் களைந்த வேந்தே' என்றும்,
'விரிபொழில் சூழ் திருநறையூர் நின்றாய்' என்றும்,
'துன்று குழல் கருநிறத்து என் துணையே' என்றும்
துணைமுலை மேல் துளிசோர சோர்கின்றாளே!!
- திருமங்கையாழ்வார் (திருநெடுந்தாண்டகம்)
பரகால நாயகியின் தாயார், தன்னுடைய பெண் குழந்தை படும் வேதனையை கண்டு வருந்தி, "இவளுக்கு நாம் ஏதேனும் ஹிதமான வார்த்தை சொல்லிப் பார்ப்போம், அதனாலாவது ஒரு வழி பிறக்குமோ?‘ என்றெண்ணி பாடுகிறாள்.
'யாரை பற்றி நினைத்தால் மூர்ச்சை ஆகிறதோ, அவரை பற்றி நினைக்காதே' என்று சொன்னாலும் கேட்காமல், அவரையே நினைத்து நினைத்து மூர்ச்சை அடைகிறாள் என்னுடைய பெண்.
திவ்ய தேசத்து பெயரை யாராவது தப்பி தவறி சொல்லிவிட்டால் கூட, இவள் அழுது அழுது சோர்ந்து விடுகிறாள்.
'அவரை பற்றி நினைக்காதே! பேசாதே!' என்று சொன்னால், விரகத்தினாலே இவளுக்கு உயிர் போய் விடுமோ! என்றும் கவலையாக இருக்கிறது.
'சரி அனுமதிப்போம்' என்று நினைத்து, 'நீ உன் ஆசை தீர பாடம்மா' என்று சொன்னால், பாட பாட அழுது சோர்ந்து விடுகிறாள் என்னுடைய பெண்.
'பக்தி செய்யாதே' என்று இவளிடம் சொன்னாலும் ஆபத்தாக இருக்கிறது.
'பக்தி செய்' என்று சொன்னாலும் ஆபத்தாக இருக்கிறது.
'பக்தி என்றால் என்ன?' என்று தெரியாத எனக்கோ, இவளிடத்தில் பாசம் மட்டுமே இருக்கிறது.
'என் பெண் குழந்தை இப்படி இருக்கிறாளே! இவளை எந்த வழியில் கொண்டு போய் சரி செய்வது?' என்று தெரியவில்லையே!!
பசு மாடுகளை மேய்த்து அதை காப்பதில் மிகவும் மகிழ்ச்சி கொள்ளும் இளம் பருவத்தில் இருக்கும் காளையே! கோபாலா! கோபாலா! கோபாலா! என்று அழைக்கிறாள்..
(கன்று மேய்த்து இனிது உகந்த காளாய்' என்றும்)
நாற்புறமும் நந்தவனம் சூழ்ந்த திருகண்ணபுர பெருமாளை நினைத்து 'கனியே' என்று அழைக்கிறாள்.
(கடிபொழில் சூழ் கணபுரத்து என் கனியே என்றும்)
கூத்து ஆடுபவனை கண்டால், பார்ப்பவர்கள் தான் பொதுவாக ஆனந்தப்படுவார்கள். கண்ணனோ, தலையில் குடத்தை வைத்து கொண்டு அரங்கத்தில் பலர் மகிழ ஆட, பிறர் மட்டுமின்றி, தானும் தன் ஆட்டத்தை கண்டு ரசிக்கிறார்.
தலையில் குடத்தை வைத்து கொண்டு அரங்கத்தில் (மன்று) ஆட, அந்த நடனத்தை பார்த்து மக்கள் அனைவரும் சபாஷ் போட, தன் ஆட்டத்தை கண்டு தானே மகிழும் குடக்கூத்தனே! என்று அழைக்கிறாள்.
('மன்று அமர கூத்தாடி மகிழ்ந்தாய்' என்றும்)
வட திருவேங்கடம் என்ற திருப்பதியில் வீற்று இருப்பவரே! கோவிந்தா! கோவிந்தா! என்று அழைக்கிறாள்.
('வட திருவேங்கடம் மேய மைந்தா' என்றும்)
அசுர ராக்ஷஸ கூட்டங்களை ஒழித்து வெற்றி பெற்ற பெருவீரனே! வேந்தே! என்று அழைக்கிறாள்.
('வென்று அசுரர் குலம் களைந்த வேந்தே' என்றும்)
எங்கும் பச்சை பசேல் என்று சோலையாக காணப்படும் நாச்சியார் கோவில் என்று அழைக்கப்படும் திருநறையூரில் இருக்கும் பெருமானே! என்று அழைக்கிறாள்.
('விரிபொழில் சூழ் திருநறையூர் நின்றாய்' என்றும்)
நெருக்கமான, சுருள் சுருளான கேசத்துடன், நீலமேக ச்யாமள ரூபத்துடன் எனக்கு துணையாக இருப்பவரே! என்று சொல்கிறாள்.
('துன்று குழல் கருநிறத்து என் துணையே' என்றும்)
இப்படி சொல்லி சொல்லி, கண்களில் இருந்து கண்ணீர் அவர் மார்பில் விழும் படியாக அழுது அழுது சோர்ந்து விடுகிறாளே!
(துணைமுலை மேல் துளிசோர சோர்க்கின்றாளே!!)
என்று பரகால நாயகியின் (திருமங்கையாழ்வார்) தாய், தன் மகளின் விரகத்தை கண்டு வருந்துகிறாள்.
Monday 20 December 2021
ஆழ்வார் தன்னையே கோபிகையாக ஆகி வீணையோடு பேசிக்கொண்டு தானாக சிரிப்பதை பார்த்து, பரகால நாயகியின் தாயார் புலம்புவது போல பாடுகிறார். கல்லுயர்ந்த நெடுமதி்ள் சூழ்.. பாசுரம் அர்த்தம் தெரிந்து கொள்வோம்.
பெருமாளை அடைய முடியாமல் தவிக்கும் ஆழ்வார், தன் நிலையை தானே நேரடியாக பெருமாளிடம் சொல்லிக்கொள்ளாமல், தன்னையே பரகால நாயகியாக ஆக்கிக்கொண்டு, தன் தாயின் மூலம் பெருமாளிடம் தன் விரகத்தை சொல்லி புலம்புகிறார்.
'கல் உயர்ந்த நெடுமதி்ள் சூழ்
கச்சி மேய களியே' என்றும்
'கடல் கிடந்த கனியே' என்றும்
'அல்லியம் பூ மலர் பொய்கை பழனம் வேலி
அணி அழுந்தூர் நின்று உகந்த அம்மான்' என்றும்
சொல் உயர்ந்த நெடுவீணை
முலைமேல் தாங்கி தூமுறுவல்
நகை இறையே தோன்ற நக்கு
மெல் விரல்கள் சிவப்பு எய்த தடவி ஆங்கே
மென்கிளி போல் மிக மிழற்றும் என் பேதையே
- திருமங்கையாழ்வார் (திருநெடுந்தாண்டகம்)
பரகால நாயகியின் தாயார், தன்னுடைய பெண் குழந்தை படும் வேதனையை கண்டு வருந்தி, பாடுகிறாள்.
"கருங்கற்களால் மதிற்சுவர்கள் ஓங்கி உயர்ந்து காஞ்சிபுரத்தை சூழ்ந்திருக்க (கல் உயர்ந்த நெடுமதி்ள் சூழ் கச்சி) அங்கு எழுந்தருளியிருக்கும் (மேய) மதயானை போன்ற ஹஸ்தி வரதனே ! என்று இவள் பாட (களியே என்றும்)
திருப்பாற்கடலில் படுத்திருக்கும் கனிபோன்றவனே! என்று இவள் பாட (கடல் கிடந்த கனியே)
சுகந்தமுடைய அல்லி பூக்கள் பூக்கும் தடாகங்களையும் (அல்லியம் பூ மலர் பொய்கை) நீர்நிலைகளையுமே (பழனம்) வேலியாக உடைய (வேலி) அழகிய திருவழுந்தூரிலே (தேரழுந்தூர்) நின்று (அணி அழுந்தூர் நின்று), உள்ளம் உகந்து இருக்கும் என் ஸ்வாமியே! என்று இவள் பாட (உகந்த அம்மான்' என்றும்)
அவள் பாடிய இந்த திவ்ய நாமசங்கீர்த்தனத்தை கேட்டு (சொல் உயர்ந்த) அந்த நீண்ட வீணையும் திருப்பி பாட (நெடுவீணை), தனது நாதனை இந்த வீணையும் பாடுகிறதே என்ற பூரிப்பில், தனது மார்பின் மீது தாங்கி கொண்டு (முலைமேல் தாங்கி) பெருமாளையே ஸ்பரிசித்து விட்டது போன்று புன்முறுவல் செய்கிறாள் (தூமுறுவல்).
பல்வரிசைகள் (நகை) தெரியும் படி (இறையே தோன்ற) தனக்கு தானே சிரிக்கிறாள் (நக்கு).
இயற்கையாகவே சிவந்து இருக்கும் விரல்கள் இன்னமும் சிவக்கும்படி நாள் முழுவதும் தந்தி கம்பிகளை வருடி (மெல் விரல்கள் சிவப்பு எய்த தடவி அந்த வீணையை) அதற்கும் மேலே (ஆங்கே) தானே ஒரு கிளிப்பிள்ளை போலே (மென்கிளி போல்) மழலைச்சொற்களால் பாடிக்கொண்டு நிற்கிறாள் (மிகமிழற்றும்).
என் வயிற்றில் பிறந்த அறியா பெண்ணான இவள், இவையெல்லாம் எங்கே கற்றாள்? (என் பேதையே)"
என்று பரகால நாயகியின் தாய், தன் பெண் (திருமங்கையாழ்வார்) நிலை கண்டு வருந்துகிறாள்.
Tuesday 9 November 2021
மாயவரம் என்ற மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள இந்தளூர் என்ற திவ்ய தேசத்தில் உள்ள பெருமாளை நினைத்து திருமங்கையாழ்வார் பாடிய பாசுரம் "முன்னை வண்ணம்". அர்த்தம் தெரிந்து கொள்வோம்..
மயிலாடுதுறை பெருமை கொள்ள முக்கிய காரணம் பரிமள ரங்கநாதன் ஆலயம் இருக்கும் "திருஇந்தளூர்" என்ற திவ்ய தேசம்.
ஹிந்துவாக பிறந்தவர்கள் வாழ்நாளில் காணவேண்டிய ஆலயங்களில் ஒன்று !
காவிரியின் வடகரையில் அமைந்துள்ள திருஇந்தளூர் திருத்தலம் இது.
மாயவரம் அல்லது மயிலாடுதுறையில் இருக்கும் இந்த திருஇந்தளூர் கோயிலின் மூலவர் பெயர்: பரிமள ரங்கநாதன்.
இவருக்கு இன்னொரு பெயர்: மருவினிய மைந்தன்.
உற்சவர் பெயர்: சுகந்தவ நாதன்
108 திருத்தலங்களில் 86 தலங்களை நேரில் கண்டு பாடியவர் திருமங்கையாழ்வார்.
ஒரு சமயம்,
மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள ‘திருஇந்தளூர்’ என்னும் திவ்ய தேசத்தில் குடி கொண்டிருக்கும் ‘பரிமள ரங்கனாதரை’ தரிசிக்கச் சென்ற பொழுது, அர்ச்சகர் பூஜை முடிந்து, கதவு சாத்தி சென்று விட்டார்.
கோவில் சன்னதி மூடி இருந்ததால் பெருமாளை தரிசிக்க முடியவில்லை.
பெருமாளை பார்க்க முடியவில்லையே! என்ற தாபம் ஆழ்வாருக்கு ஏற்பட்டது.
நமக்கு வேண்டிய ஒருவன், நமக்குரிய பொருளை தரமறுத்தால் நாம் என்ன சொல்வோம்?
”பரவாயில்லை! நீரே வைத்துக் கொண்டு நலமாய் வாழுங்கள்" என்று உரிமையாக கோபத்தோடு சொல்வோம் இல்லையா?
அது போல,
ஆழ்வார், உள்ளே இருக்கும் பரிமள ரங்கநாதரை நோக்கி, "நான் உனது அடிமை என்று அறிந்த பின்னும், காட்சி கொடுக்காமல் தாழிட்டுக் கொள்வது உமக்குப் பழியைத் தேடித் தரும். உமது அழகை நீரே வைத்துக் கொள்ளவும்"
என்று பெருமாளிடம் உரிமையாக கோபப்பட, உள்ளே இருந்த பெருமாள், ஆழ்வாரை காண தானே வந்து விட்டார்.
பெருமாள், ஆழ்வாரை பார்த்து, "என்னை பாரும்" என்று சொல்லி, "நான் ஒவ்வொரு யுகத்திலும் எப்படி இருந்தேன் தெரியுமா? க்ருத யுகத்தில் வெண்மையாக இருந்தேன். த்ரேதா யுகத்திலே சிவப்பாக இருந்தேன். த்வாபரயுகத்தில் நீல வர்ணத்தில் இருந்தேன்" என்று காட்ட, தான் கண்ட காட்சியை பாசுரமாக நமக்கு தருகிறார்.
முன்னை வண்ணம் பாலின் வண்ணம்
முழுதும் நிலைநின்ற பின்னை வண்ணம்
கொண்டல் வண்ணம்
வண்ணம் எண்ணுங்கால்
பொன்னின் வண்ணம்
மணியின் வண்ணம்
புரையும் திருமேனி இன்ன வண்ணம்
என்று காட்டீர், இந்தளூரீரே !
- பெரிய திருமொழி (திருமங்கையாழ்வார்)
க்ருத யுகத்தில் ஸத்வ குணம் நிறைந்தவர்களாக பெரும்பாலும் இருப்பதால், பால் போன்ற 'வெண்மை' நிறத்தை கொண்டீர்கள்.
த்ரேதா யுகத்திலே 'சிவந்த' நிறத்தை கொண்டீர்கள்.
த்வாபர யுகத்தில் 'நீல' நிறத்தை கொண்டீர்கள்.
இந்தளூரில் உள்ள பெருமானே !
உமக்கு பல நிறங்கள் உள்ளனவாக சாஸ்த்ரங்கள் சொல்கிறது.
இங்கு அர்ச்சையாக எழுந்தருளியிருக்கும் இருப்பிலே எந்த நிறம் கொண்டிருக்கிறீர் என்பதை அடியேன் அறியவேண்டாமோ?" என்று கேட்க,
“இதோ பாராய், இதுவே என் வண்ணம்” என்று சொல்லி பரிமள ரங்கநாதர் ஆழ்வாருக்கு தன் அர்ச்சா ரூபத்தை காட்டி அருளினார்.
திருமங்கை ஆழ்வாரின் அழகு தமிழை பருக விரும்பியதே பரிமள ரங்கனின் விவாதத்தின் நோக்கம்!
இறுதியில், ஆழ்வார் அரங்கனைத் தரிசித்துவிட்டே சென்றார்!
மூலவர்: பரிமளரங்கநாதர்
தாயார்: பரிமள ரங்கநாயகி என்ற புண்டரீகவல்லி
Thursday 29 July 2021
ஸ்ரீரங்கம் பெருமை... பாசுரம் (அர்த்தம்) - "பச்சை மா-மலை போல் மேனி". ஸ்ரீரங்கத்தில் (திருச்சி மாவட்டம்) வீற்று இருக்கும் ரங்கநாத பெருமாளை தொழும் பாசுரம். தொண்டரடிப்பொடியாழ்வார் வர்ணிக்கிறார். அர்த்தம் தெரிந்து கொள்வோமே !
Wednesday 23 December 2020
பாசுரம் (அர்த்தம்) - "வையம் ஏழும் உண்டு". திருவஹீந்திரபுரத்தில் (கடலூர் மாவட்டம்) வீற்றுஇருக்கும் தேவநாத பெருமாளை தொழும் பாசுரம். திருமங்கையாழ்வார் வர்ணிக்கிறார். அர்த்தம் தெரிந்து கொள்வோமே !
திருவஹீந்திரபுரம் திவ்ய தேசம்… (கடலூர் மாவட்டம் அருகில் உள்ளது.)
பெருமாள்: தேவநாதன். தாயார்: ஹேமாம்புஜவல்லி
திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்யும் போது, இந்த பெருமாளோடு, அந்த ஊரின் அழகை பார்த்து அப்படியே வர்ணித்து திவ்ய தேசத்தை அப்படியே நம் கண் முன் கொண்டு வந்து விடுகிறார்.
வையம் ஏழும் உண்டு
ஆலிலை வைகிய மாயவன்!
அடியவர்க்கு மெய்யனாகிய தெய்வநாயகன் இடம் !
மெய்தகு வரைச்சாரல்
மொய்கொள்
மாதவி சண்பகம் முயங்கிய
முல்லையங் கொடியாட !
செய்ய தாமரைச்
செழும்பணை திகழ்தரு
திருவயிந்திரபுரமே !
- பெரிய திருமொழி (திருமங்கையாழ்வார் )
இந்த பாசுரத்தை பாடும் போதே, இந்த திவ்ய தேசம் அவரை எப்படி வரவேற்றது? என்று காட்டுவது போல இருக்கிறது.
அந்த திவ்ய தேசத்தில் கழனி வழிகள் எப்படி இருந்தது? முல்லை எப்படி இருந்தது? என்று சொல்லி கொண்டே ஆழ்வார் வர, பெருமாளோடு, திவ்ய தேசத்தையும் சேர்த்து நமக்கு காட்டி விடுகிறார்.
அந்த ஓஷதி மலையில் சாரல் விழ (மெய்தகு வரைச்சாரல் ), அந்த மலையில் எங்கு பார்த்தாலும் வளர்ந்து இருக்கும் செண்பக மரத்தின் (மொய்கொள் மாதவி சண்பகம் முயங்கிய) மேல் முல்லை கொடி படர்ந்து ஆட (முல்லையங் கொடியாட), தடாகங்களில் நன்கு செழித்து ஓங்கிய தாமரையும் (செய்ய தாமரைச்), மலை ஓரங்களில் செழித்து ஓங்கிய பனை மரங்களும் (செழும் பணை திகழ்தரு) நிரம்பி இருக்க, அதை பார்த்த ஆழ்வாருக்கு தன்னை ஆசையோடு திவ்ய தேசமே வரவேற்ப்பது போல இருந்ததாம்.
இப்படி திவ்ய தேசத்தின் அழகை நம் கண் முன்னே கொண்டு வந்த ஆழ்வார், அப்படிப்பட்ட அழகிய திவ்ய தேசத்தில், ஏழு உலகங்களையும் உண்டு தன் திருவயிற்றில் வைத்து கொண்டு (வையம் ஏழும் உண்டு), பிரளய ஜலத்தில் ஒரு பயமுமில்லாமல் ஒரு சிறு ஆலிலையில் படுத்து உறங்கும் மாயன் (ஆலிலை வைகிய மாயவன்!) அங்கு இருக்கிறார் என்று பாடுகிறார்.
'கல் என்றால் கல், பெருமாள் என்றால் பெருமாள். உண்டு என்றால் உண்டு. இல்லை என்றால் இல்லை' என்று நம் பக்தியை பொறுத்து, தான் இருப்பதை நமக்கு காட்டும் படியாக அடியவர்க்கு மெய்யனாகிய தேவநாதன், என்கிறார்.
'ஆஸ்ரயித்து உபாசனை செய்யத்தக்க பெருமாள், தேவநாத பெருமாள்' என்கிறார் தேசிகர்.
தேசிகர் அவதரித்த ஸ்தலம் "தூப்புல்" (காஞ்சிபுரம்).
வேதாந்த தேசிகருக்கு, அவதார ஸ்தலம் காஞ்சிபுரமாக இருந்தாலும், பெருமாளின் சாஷாத்காரம் கிடைத்த இடமோ "திருவஹீந்திரபுரம்".
காலத்தில் உபநயனம் ஆகி சாஸ்திரங்கள் அனைத்தும் அத்யயனம் செய்து முடித்தும் திருப்தி ஏற்படவில்லை தேசிகருக்கு.
'படிப்பு தானே இவை.. படித்தது அனுபவத்தில் வந்தால் தானே முழுமை' என்று நினைத்தார் வேதாந்த தேசிகர்.
'வேதாந்தம் படித்தும் அனுபவத்தில் வரவில்லையென்றால், பெருமாள் கிடைக்க மாட்டார்' என்று புரிந்து கொண்டார் ஸ்வாமி தேசிகர்.
'சாஸ்திரமும் கற்றதன் பலனாக, பெருமாளை நேரில் பார்க்க வேண்டும்' என்று ஆசைப்பட்டார் ஸ்வாமி தேசிகர்.
இந்த சிந்தனையோடு, 'தீர்த்தம், மூர்த்தி, மலை, திவ்ய தேசம்' இவை நான்கும் சேர்ந்த திவ்ய தேசத்தை தேடி வந்தார் ஸ்வாமி தேசிகர்.
'கடில தீர்த்தம், ஓஷதி மலை, தேவநாத பெருமாள், திவ்ய தேசம்' என்று நான்கும் பொருந்தி இருக்கும் இடமாக திருவஹீந்திரபுரம் இருப்பதை கண்டு கொண்டார்.
இந்த திவ்ய தேசத்தில் இவருடைய மாமா "கிடாம்பி அப்புள்ளார்" என்ற பரம வைஷ்ணவர் இருந்தார்.
இவரை பார்க்க வந்த தேசிகர், தன் மாமாவிடம் "பெருமாள் தனக்கு ப்ரத்யக்ஷம் ஆவாரா?" என்று கேட்டார்.
உடனே அப்புள்ளார், தேசிகருக்கு, கருட மந்திரத்தை உபதேசம் செய்தார்.
மேலும்,
'எந்த கருடன் பெருமாளை இங்கு சாஷாத்கரிக்க வந்தாரோ! அந்த கருடனை குறித்து இங்கு நீ பக்தியோடு தியானம் செய்.
இந்த கருட மலையில் அமர்ந்து கொண்டு, கருட மந்திரத்தை அக்ஷரத்துக்கு லட்சம் ஜபம் செய்' என்று சொல்ல,
அது போலவே தேசிகரும் பக்தி யோகத்தால் தியானம் செய்ய, கருடன் தேசிகருக்கு ப்ரத்யக்ஷமானார்.
கருடன் தேசிகருக்கு "ஹயக்ரீவ மந்திரத்தை தானே உபதேசிக்க", அதையும் ஈடுபாடு குறையாத பக்தியோடு ஜபம் செய்ய, பெருமாள், தேசிகருக்கு இந்த மலையில் ஹயக்ரீவ மூர்த்தியாகவே ப்ரத்யக்ஷமாகி காட்சி கொடுத்தார்.
ஹயக்ரீவ தரிசனம் ஏற்பட்டதுமே, படித்தது எல்லாம் அனுபவ பூர்வமாகி தெளிந்த ஞானம் ஏற்பட்டது தேசிகருக்கு.
சர்வ கலையும் தெரிந்தவராகி இருந்தார், ஸ்வாமி தேசிகர்.
இதனை கேட்டு அசூயை பட்ட ஒரு சிற்பி, 'சர்வ கலையும் தெரிந்தவர் என்றால், சிற்ப கலை தெரியுமா? அதிலும் தன்னையே சிற்பமாக அப்படியே செதுக்கி காட்ட முடியுமா?" என்று கேட்க,
தேசிகர், 'தன்னையே சிற்பமாக வடித்து கொடுத்து விட்டார்".
ஒரு சிற்பிக்கு மற்றவர் உருவத்தை செதுக்குவது எளிது.
தன் ரூபத்தை தானே வடிப்பது என்பது சிற்ப கலையில் தேர்ச்சி பெற்றவர்களால் மட்டுமே முடியும்.
'சிற்ப கலையும் தெரிந்தவர்' என்று தானே தன்னை அப்படியே சிலையாக வடித்து விட்டார் தேசிகர்.
அந்த சிற்பி அமைதியாக திரும்பி விட்டான்.
தானே செய்த தன் திருமேனியை தானே ஆலிங்கனம் செய்து கொண்டு, தன் சிஷ்யர்களுக்கு ஆராதனைக்காக கொடுத்து விட்டார் தேசிகர்.
தேசிகரே வடித்த, தேசிகரே ஆலிங்கனம் செய்து கொண்ட, அந்த அர்ச்சா திருமேனி இன்றும் உள்ளது.
இப்படி பின்னாளில் தேசிகர் போன்ற பல அடியவர்க்கு, ப்ரத்யக்ஷமாகும் (மெய்யனாகிய) தேவநாத பெருமாள் (தெய்வ நாயகன்) வீற்று இருக்கும் இடம், திருவஹீந்திரபுரம் என்று, இனி வரும் பக்தர்களுக்கும் ப்ரத்யக்ஷமாகும் பெருமாள் என்று அப்போதே பாடி மங்களாசாசனம் செய்து விட்டார் திருமங்கையாழ்வார்.
இங்கு திருமங்கையாழ்வார் "தெய்வ நாயகன்" என்று பாடியதை விளக்கி தேசிகர் சொல்லும் போது,
தேவர்களுக்கும் நாயகன் என்ற கருத்தில் மட்டும் ஆழ்வார் இந்த பதத்தை குறிப்பிடவில்லை,
தெய்வ சாரூப்யம் கொண்ட, வைகுண்டத்திலேயே இருக்கும் நித்ய பார்க்ஷதர்களான, கருடனுக்கும், அஹீந்திரனுக்கும் தெய்வம் என்ற கருத்தில், திருமங்கையாழ்வார் 'தெய்வ நாயகன்" என்று பெருமாளை பாடுகிறார் என்று விளக்கினார்.
இதுவும் பொருத்தமானதே.
மேலும், தெய்வ சாரூப்யம் கொண்ட கருடனுக்கும், அஹீந்திரனுக்கும் அனுக்கிரகம் செய்து கொண்டு பரமபத்திலேயே இருக்கலாமே பெருமாள். எதற்காக திருவஹீந்திரபுரம் வந்தார்? என்ற கேள்வி எழலாம்..
அதற்கான பதிலாக "அடியவர்க்கு மெய்யனாகிய" என்ற பதத்தில் ஆழ்வார் காட்டுவதை விளக்குகிறார் பெரியவாச்சான் பிள்ளை.
மோக்ஷன் அடைந்து விட்ட, நித்ய சூரிகளான கருடனும், அஹீந்திரனுமே (தெய்வ) வணங்கும் பெருமாள் (நாதன்), கருணையின் காரணமாக, தன்னை பல 'அடியார்களும் ஆச்ரயிக்க வேண்டுமே' என்று ஆசைப்பட்டு, வைகுண்டத்தை விட்டு விட்டு, கூடவே தெய்வ சாரூப்யம் அடைந்த கருடனையும், அஹீந்திரனையும் (தெய்வ) கூடவே அழைத்து கொண்டு வந்து விட்டார் என்று, 'அடியவர்க்கு மெய்யனாகிய" என்ற பதத்தில் உள்ள ஆழ்ந்த அர்த்தத்தை நமக்கு விளக்குகிறார்.
மேலும், தேசிகர் மங்களாசாசனம் செய்கிறார்.
தேசிகர் தன் அனுபவத்தை சொல்வதாக உள்ளது..
ப்ரணத சுர கிரீட ப்ராந்த மந்தார மாலா
விகளித மகரந்த ஸ்நிக்த பாதாரவிந்த: |
பசுபதி விதி பூஜ்ய: |
பத்ம பத்ரா யதாக்ஷகா |
ஹனி பதிபுர நாத: |
பாது மாம் தேவநாத: |
- தேசிகர்
திருவஹீந்திரபுர 'தேவநாத பெருமாளை' மங்களாசாசனம் செய்கிறார்
தமிழ் அர்த்தம்.
தேவர்கள், மந்தார புஷ்பத்தை எடுத்து கொண்டு வந்து தேவநாத பெருமாளின் திருவடியில் சமர்பிக்கிறார்களாம்.
அந்த மந்தாரபூக்களில் வழிந்து வரும் தேனாலேயே பெருமாளுக்கு பாத பூஜை (பாத்யம்) செய்தார்களாம் தேவர்கள்.
எந்த தேவர்கள் வந்தார்களாம்? முப்பத்து முக்கோடி தேவர்களோ?
அவர்களுக்கும் மேற்பட்ட தேவனான, கைலாயத்தில் உள்ள பசுபதியும், சத்ய லோகத்தில் உள்ள ப்ராம்மாவும் மிகவும் ப்ரகாசனான முகத்தோடு, இந்த தேவநாத பெருமாளின் இருபக்கமும் இருந்து கொண்டு பூஜித்து கொண்டிருக்க, 'தேவாதி தேவனாக இருக்கும், அஹீந்திரனுக்கு தேவனாக இருக்கும் இந்த பெருமாள் என்னை ரக்ஷிக்கட்டும்'
என்று பாடுகிறார் தேசிகர்.
குருநாதர் துணை..
Saturday 5 December 2020
தொட்டாச்சாரியார் கைங்கர்யம் செய்த தக்கான் பெருமாள்... பாசுரம் (அர்த்தம்) - "மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை". சோளிங்கர் பெருமாளுக்கு திருமங்கையாழ்வார் இங்கு மங்களாசாசனம் செய்கிறார். அர்த்தம் தெரிந்து கொள்வோமே!! !
சப்தரிஷிகளுக்கும் குருவாக கடிகாசலத்தில் இருக்கும் யோக ஆஞ்சநேயர், வழிபட்ட யோக நரசிம்மர் இன்றும் கடிகாசலத்தில் வீற்று இருக்கிறார்.
திருகடிகை என்றும் கடிகாசலம் என்றும் சோளிங்கர் என்றும் அழைக்கப்படும் இந்த திவ்ய தேசம், ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட புண்ணிய க்ஷேத்திரம்.
திருமங்கையாழ்வார் இந்த திவ்ய தேசத்துக்கு வந்து மங்களாசாசனம் செய்த பாசுரம்:
மிக்கானை
மறையாய் விரிந்த விளக்கை
என்னுள் புக்கானை
புகழ்சேர் பொலிகின்ற பொன்மலையை தக்கானை
கடிகைத் தடங்குன்றின் மிசையிருந்த அக்காரக் கனியை
அடைந்து உய்ந்து போனேனே
என்று பாடுகிறார்.
பெரிய திருமொழியில் இந்த பாசுரம் உள்ளது.
கடிகாசலம் (சோளிங்கர்) பெருமாளை பார்த்து கொஞ்சி பேசுகிறார், திருமங்கையாழ்வார்.
பெருமாளின் பெருமையை நினைத்ததும்,
யாரும் சமமில்லாத, எல்லாருக்கும் மேற்பட்டவனே ! (மிக்கானை) என்று ரசிக்கிறார்.
மேலும்,
அழியாத வேத விளக்காக இருக்கிறார் (மறையாய் விரிந்த விளக்கை) என்றும் ரசிக்கிறார்.
அப்படிப்பட்ட பெருமைமிக்க பெருமாள், தன் ஆத்மாவாகவும் இருக்கிறாரே என்றதும், உடனே,
எனக்கு அந்தர்யாமியாக இருப்பவனே ! (என்னுள் புக்கானை) என்று ரசிக்கிறார்.
உடல் ரீதியாக பார்த்தால், பெருமாளும் நாமும் ஒன்றாகி விட முடியாது..
ஆனால்,
'ஆத்மா' என்று பார்க்கும் போது, நாமும் (ஜீவனும்), பெருமாளும் (பரமாத்மாவும்) ஞான ஸ்வரூபம் தானே..
வேதமும் ஜீவனையும், பரமாத்மாவையும் நண்பர்கள் என்று இரு கிளியை காட்டி சொல்வது ஞாபகம் வர, திருமங்கையாழ்வார், பெருமாளும், தானும் நண்பன் என்று வேதமே சொல்வதால், சமமானவன் (தக்கானை) என்று சொல்லி ஆனந்தப்படுகிறார்.
மேலும் வாக்குக்கு அப்பாற்பட்ட பெருமாளை! தெவிட்டாத இன்பமாக இருக்கும் பெருமாளை! எப்படி கொஞ்சுவது? என்று ஒரு பக்கம் திகைத்து, கொஞ்சவும் ஆசை ஏற்பட்டதால், உலகத்தில் கிடைக்கும் தித்திப்பான அக்கார வடிசில் (அக்காரமே!), கனியே! என்று ஆசை தீர கொஞ்சுகிறார்.
இப்படி திருமங்கையாழ்வார், கடிகாசலம் (சோளிங்கர்) பெருமாளை பார்த்து "தக்கானை" என்றும், "அக்கார கனி" என்றும் அழைத்ததே, பெருமாளுக்கு பெயரும் ஆனது.
இங்கு தாயார் திருநாமம் சுதாவல்லி நாச்சியார் என்ற அம்ருதவல்லி.
பெருமாள் பெயரால் 'தக்கான் குளம்' எனற தீர்த்தம் உள்ளது.