Followers

Search Here...

Monday 18 June 2018

உயர்ந்த குணமான பொறுமையால், கோபத்தை வெல்லுபவனே புத்திசாலி

பொறுமை என்பது மிக உயர்ந்த குணமாகும்.

உயர்ந்த குணமான பொறுமையால், கோபத்தை வெல்லுபவனே புத்திசாலி.

கோபம் வந்தவனுக்கு,
இது பேசக்கூடாதது
இது பேசக்கூடியது
இது செய்யத்தக்கது
இது செய்யத்தகாதது என்று விவேகம் இருப்பதில்லை.



கோபம் வந்தவன் தகாத வார்த்தைகளால் குரு, மாதா, பிதா, தெய்வம் இவர்களைக் கூட திட்டி விடுகிறான்.

கோபம் வந்தவன் தன் மனைவியை கூட விபச்சாரி என்று திட்டி விடுகிறான். இப்படி திட்டினால், யாருக்கு அவமானம்?

கோபம் வந்தவன் தன் மகனைப் பார்த்து அல்பாயஸே என்கிறான். மகன் செத்து விட்டால் நிம்மதியாய் இருப்பானா?

கோபம் வந்தவன் தன் மனைவியை பார்த்து விதவையே என்கிறான். தன்னையே திட்டிக்கொண்டதாகும். தான் சாகாமல் மனைவி எப்படி விதவை ஆக முடியும்?

கோபம் வந்தவன் தான் சம்பாதித்த பொருட்களையே தூக்கி எறிந்து உடைத்து பாழாக்குகிறான். யாருக்கு நஷ்டம்?



கோபம் வந்தவன் வீட்டில் சாப்பிடாமல் பட்டினி கிடக்கிறான். யாருக்கு சிரமம்?

கோபம் வந்தவன் கார்யாலயத்தில் வேலையை விட்டு விடுகிறான். அப்புறம் திண்டாடுகிறான்.

கோபம் வந்தவன் விரோதியை மட்டுமின்றி மனைவி மக்களைக் கூட கொலை செய்து விடுவான்.

முன் கோபிகளுக்கு புத்தி கிடையாது. 
முன் கோபிகளுக்கு இஹமும் இல்லை. பரமும் இல்லை.
கோபக்காரனை யாரும் வெறுப்பார்கள்.
அதிகக் கோபக்காரனிடமும், அனாவசிய கோபக்காரனிடமும் யாரும் பயப்பட மாட்டார்கள். அலக்ஷ்யம் செய்வார்கள். பரிகாசமும் செய்வார்கள். கோபத்தை கிளப்பி விட்டு வேடிக்கைப் பார்ப்பார்கள்.

உலகத்திலும், குடும்பத்திலும் தன் மதிப்பை இழப்பது தவிர "கோபக்காரனுக்கு" வேறு பயன் கிடையாது.
கோபத்தினால் இவ்வாறு பல தொல்லை உண்டு.


உத்தமமான மனைவி - இல்லறம் நடத்த முக்கிய பங்கு வகிப்பவள். உத்தமமான மனைவி யாருக்கு கிடைப்பாளோ, அவனே பாக்கியவான்

இல்லறம் நடத்த முக்கிய பங்கு வகிப்பவள் மனைவி.




கிருஹஸ்தனுக்கு மூலம் கிருஹிணியே.
கணவனுக்கு ஆதாரம் மனைவியே.
சுகத்திற்கு காரணம் அவளே.
தர்மத்திற்கு காரணம் அவளே.
சந்ததிக்கு காரணமும் அவளே
என்று சிவ புராணம் கூறுகிறது.

ஏழ்மையையும், இல்லாமையையும் பாராட்டாமல் இருக்கும் உத்தமியே க்ருஹ லட்சுமி ஆவாள்.
கிடைத்ததைக் கொண்டு கண்ணியமாக குடும்பம் நடத்தும் உத்தமியே க்ருஹ லட்சுமி ஆவாள்.
வீட்டை துப்புரவாக வைத்துக் இருக்கும் உத்தமியே க்ருஹ லட்சுமி ஆவாள்.




மாமனார் மாமியாருக்கு அடங்கி நடக்கும் உத்தமியே க்ருஹ லட்சுமி ஆவாள்.

பர்த்தாவை குறை சொல்லாமல் இருக்கும்  உத்தமியே க்ருஹ லட்சுமி ஆவாள்.

சிரித்த முகத்துடன் பழகும்  உத்தமியே க்ருஹ லட்சுமி ஆவாள்.

குழந்தைகளிடம் பொறுமையும், வாத்ஸல்யமும் உள்ள  உத்தமியே க்ருஹ லட்சுமி ஆவாள்.
தேவ பித்ரு காரியங்களில் சிரத்தை உள்ள  உத்தமியே க்ருஹ லட்சுமி ஆவாள்.

சோம்பல் இல்லாமல் உழைக்கும்  உத்தமியே க்ருஹ லட்சுமி ஆவாள்.

பர புருஷனை திரும்பியும் பாராதவளும் ஆன  உத்தமியே க்ருஹ லட்சுமி ஆவாள்.

இத்தகைய மனைவி யாருக்கு கிடைப்பாளோ, அவனே பாக்கியவான்.


கணவன் மனைவி எப்படி இருக்க வேண்டும்? இல்லற தர்மம் என்றால் என்ன? தெரிந்து கொள்ள வேண்டாமா?

கணவன் மனைவி இல்லற தர்மம்

பார்யையின்
அருமை தெரிந்த பர்த்தாவும்,
பர்த்தாவின் அருமை தெரிந்த பார்யையும்
குடும்பத்துக்கு அணிகலன் ஆவார்கள்.

சில ஆண் பிள்ளைகள், பெற்றோர்களின் சொல்லைக் கேட்டு கொண்டு அருமையான பார்யையை கைவிட்டு விடுகின்றனர் அல்லது கொடுமை படுத்துகின்றனர்.




இதை விடப் பரிதாபம், சிலர் பார்யையின் சொல்லைக் கேட்டுக் கொண்டு, பெற்றோர்களை அடித்து விரட்டி விடுகின்றனர்.

மாமியாருக்கும், மாற்றுப்பெண்ணுக்கும் 'ஒற்றுமை என்பதே வராது'.
இவர்கள் இருவரிடமும் சமமாக பழகும் சாமர்த்தியமுடையவனே இல்லறத்தில் பிரவேசிக்கலாம்.
தன் பெற்றோர்களை பற்றி தன் மனைவியிடமே ஏசலாகாது.
அதுபோல, ஒரு ஸ்திரீயும், தன் பிறந்தகத்தைப் பற்றி தன் புருஷனிடமும், தன் புக்ககத்து பந்துக்களிடம் ஜம்பம் அடித்துக் கொள்ள கூடாது.
பிறந்தகத்தை விட புக்ககத்தில் பாசமுடைய உத்தமிகள் அரிது.

தன் புகுந்த குடும்பத்திற்கு மித மிஞ்சிய பொருள்களையும், பணத்தையும் பிறந்தகத்திற்கு அனுப்புபவள் பர்த்தாவுக்கு நிம்மதியை தர மாட்டாள்.
அதே போல,
தன் மனைவி மக்களை விட்டு, தான் சம்பாதிக்கும் பொருளை, விவாஹம் ஆகி தனியாக போய் விட்ட தம்பி, தங்கைகளுக்கு செலவழிப்பவனும், ஆடம்பர செலவு செய்பவனும், ஸாத்வியான மனைவிக்கு நிம்மதியை தர மாட்டான்.

வருவாய்க்கு மிஞ்சிய ஆடை,  ஆபரணம், உணவு, சினிமா,  டீவி, வாரப் பத்திரிகை, சூதாட்டம், மது பாணம், ஆஸ்பத்திரி, கோர்ட் இவைகளுக்கே செலவு செய்பவனும்,
சத்சங்கம், தெய்வ பக்தி, ஆலய வழிபாடு, கதாசிரவணம், நாம சங்கீர்த்தனம் இவை எதுவும் அறியாதவனும் "இகத்திலும் கெட்டான், பறத்திலும் கெட்டான்" என்று ஆவான்.

கூனியைப் போல் சூழ்ச்சி செய்து குடும்பத்திற்க்கே நாசம் விளைவிக்கும் துஷ்ட சங்கத்தை வீட்டில் விலக்க வேண்டும்.




நிம்மதி அளிக்கும் சத் சங்கத்தையே வீட்டில் வரவேற்க வேண்டும்.
போலியான "சாதுக்களையும், குருமார்களையும்" கண்டு ஏமாந்து விடக் கூடாது. அவர்களுக்கு ஸ்திரீகள் நெருங்கி சேவை செய்யும் படி விடக் கூடாது.
சாது வேஷம் போட்டு "ராவணன்" சீதையை கொண்டு போனது இதற்கு பிரமாணமாகும்.
எனவே சாதுக்களிடம் ஸ்திரீகள் மிதமாகவே பழக வேண்டும்.

எப்பொழுதும் ஸ்திரீகளின் கற்பில் கவனத்துடன் இருக்கும் கணவனே புத்திசாலி.

மனைவியை "சந்தேகிக்கவும் கூடாது. நம்பவும் கூடாது". நடு நிலைமையில் அவளிடம் பழக வேண்டும்.

யாரிடமும் தன் மனைவியை மிதமாக பழக விடும் கணவன் பிறகு கஷ்டப்பட மாட்டான்.


Monday 11 June 2018

மனம் தளர்ச்சி அடையும் போது, தற்கொலை வரை நம்மை கொண்டு போகும். வீர ஹனுமானும் இதற்கு தீர்வு சொல்கிறார்






மனதில் நமக்கு தளர்ச்சி அல்லது சலிப்பு அடையும் போது சோகம் உண்டாகும்.

சோகம் உண்டானால் சோம்பேறித்தனம் உண்டாகும்.

சோம்பேறித்தனம்  உண்டானால்
மனம் வீணான பயத்தை உண்டாக்கும்.

வீணான பயம், புத்தியை குழப்பும்.

புத்தி குழம்ப குழம்ப, தாழ்வு மனப்பான்மை உண்டாகும்.

தாழ்வு மனப்பான்மை ஒரு மனிதனை தற்கொலை செய்து கொள்ள கூட தூண்டி விடும்.

தாழ்வு மனப்பான்மை, தன்னால் மற்றவர்க்கு கஷ்டம், தான் இருப்பதும் வீண் என்று தோன்ற செய்து விடும்.

சோம்பேறித்தனம் அதிகமாவதால், உடல் அமைதியாக இருந்தாலும் மனம் அடங்காமல் இருப்பதால், மனம் வீணான பொய்யான கேள்விகளை எழுப்பும்.
இதனால் ஏற்படும் பயம், தாழ்வு நிலையை ஏற்படுத்தும்.
தாழ்வு மனப்பான்மை தற்கொலை வரை தூண்டி விடும்.

இந்த சோக நிலையிலிருந்து விடு பட, வழி என்ன?
செயலில் உற்சாகமும், தெய்வ ப்ரார்த்தனையுமே !

புத்தி உடையவரும், பலசாலியும், புகழ் உடையவரும், தைரியம் உடையவரும், பயம் அறியாதவருமான ஹனுமனுக்கே தற்கொலை செய்து கொள்ளலாமா!! என்று ஒரு ஸமயம் தோன்றிவிட்டது.
நம்ப முடியுமா நம்மால்?







ஆனால் சோம்பேறித்தனத்தை விரட்டி, உற்சாகத்துடன் தெய்வ நம்பிக்கையுடன் செயல் பட்டால் வாழ்வில் வழி பிறக்கும் என்று காட்டினார். இதுவே நாம் அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டிய முக்கியமான பாடம்.

ஹனுமான் நள்ளிரவு வரை இலங்கை முழுவதும் ஸீதையைத் தேடித் தேடி அலைந்து காணாமல் மனம் சலித்து ஒரு தனித்த மரத்தில் அமர்ந்து வருந்தலானார்.
இனி இலங்கையில் ஒரு நாலு அங்குலம் இடம் கூட இல்லையாம். அப்படி தேடிவிட்டாராம்.
காண முடியவில்லையே என்று நினைத்து ஏங்கி தவித்து கண்ணீர் விட்டார்.

ஸீதையைத் தேடியும் காணாதபடி ஹனுமான் வருந்தி தனக்குள் தானே சிந்திக்கலானார்.

ஸீதையைக் காணாமல் நான் திரும்புவேனாகில் இவ்வளவு முயற்சியும் வீணே!
நான் கடலைத் தாண்டியது கூட பெரிய காரியமில்லை.
ஸீதையைக் காணாமல் திரும்பிச் சென்று, வானரர்களுக்கு என்ன பதில் சொல்லுவேன்?
ஸீதையைக் காணவில்லை என்று சொல்லிக்கொண்டு சுக்ரீவனிடம் சென்றால், சுக்ரீவன் வானரர்களை கொன்று போடுவான்.
ஸம்பாதி இங்கு ஸீதை இருப்பதாக சொன்னாரே, அதுவும் பொய்யோ?
ஸீதையைக் காணாமல் ராமரும் உயிர் தியாகம் செய்வார்.
இதனால், அவர் தம்பி லக்ஷ்மணனும் உயிரை விட்டு விடுவார்.
நண்பர்களுக்கு உபகாரம் செய்ய முடியவில்லையே என்று சுக்ரீவனும் உயிர் துறப்பான்.
தலைவனை இழந்த  வானரர்களும் மாண்டு போவார்கள்.
தன் தமையன் வனவாஸம் முடிந்து வராததால் பரதனும், சத்ருக்னனும் தீக்குளித்து விடுவார்கள்.
இதனால் அயோத்தி நாட்டு மக்களும் உயிர் துறப்பது திண்ணம்.
இவ்வளவு பேர்கள் உயிர் துறப்பதை விட நான் இங்கேயே ப்ராணத் தியாகம் செய்து விடுவது நலம் என்று நினைத்தார்.

பிறகு இத்தகைய அதைரியத்திற்கு இடம் தரக்கூடாது.
சோகம் யாவரையும் சோம்பேறி ஆக்கிவிடும்.
சோகத்தை விட உற்சாகமே முக்கியம்.

எனவே உற்சாகத்தை கைவிடலாகாது. தெய்வ அனுகூலத்துடன் மறுமுறை ஸீதையைத் தேட முயற்சிப்போம் என்று நினைத்தார்.




மனித முயர்சியோடு தெய்வ துணையும் வேண்டும் என்று உணர்ந்தார்.
ஸீதையை காண ஸீதையையே மனதில் வேண்டினார். இவ்வாறு ஸீதையை வணங்கி விட்டு உற்சாகத்துடன் எழுந்த ஹனுமானுக்கு அசோக வனம் கண்ணிற்பட்டது.
ஆஹா! இந்த இடம் இதுவரை தேடவில்லையே! நிச்சயம் ஸீதை இங்கு தான் இருப்பாள் என்று ஹனுமான் சந்தோஷத்துடன் அசோகவனத்தை நோக்கி நடந்தார். ஸீதையைக் கண்டார்.

என்ன நடக்குமோ, ஏது நடக்குமோ என்று பயந்த ஒரு விஷயம், உற்சாகம், முயற்சி, தெய்வ பிரார்த்தனை மூலம் இங்கு எளிதானது.
இதுவே நாமும் அறிந்து கொள்ள வேண்டிய பாடம்.

ராமாயணத்தில் இது போன்று வாழ்க்கைக்கு தேவையான பல விஷயங்களை கற்றுக் கொள்ளலாம்.



நமக்கு 2 சரீரம் உண்டு : ஸூக்ஷ்ம சரீரம், ஸ்தூல சரீரம்

நமக்கு 2 சரீரம் உண்டு : ஸூக்ஷ்ம சரீரம், ஸ்தூல சரீரம்:

உயிருடன் இருக்கும் காலத்தில், ஸுக, துக்கங்களை அனுபவித்துக் கொண்டு, குடும்ப நலனை கவனித்தது உடல் இல்லை, உடலுக்குள் இருந்த ஜீவனே.

இந்த ஜீவனே, எல்லா காரியங்களையும் செய்து கொண்டும், அனுபவித்து கொண்டும் இருந்து வருகிறான்.




சரீரமே "நான்" என்று கர்வத்துடன் இருப்பவன் கூட, தன்னுடைய மரண காலத்தில் உண்மை உணர்வான்.

மரண காலத்தில், இந்த ஸரீரம் வேறு, ஜீவன் வேறு என்று தெரிய வருகிறது.

அதனால் தான், அந்த ஜீவன் போன பிறகு, உடல் எந்த காரியங்களையும்  செய்ய முடியாமலும், அனுபவிக்க முடியாமலும் கிடக்கிறது.

உடல்(சரீரம்) இரண்டாக உள்ளது.
* ஸூக்ஷ்ம சரீரம்,
* ஸ்தூல சரீரம்.

எலும்பு, மஜ்ஜை, நரம்பு, சதை, இரத்தம், தோல் ஆகியனவற்றால் ஆன நம் பௌதீக உடல் - ஸ்தூல சரீரம்

5 ப்ராணங்கள், 5 ஞான இந்திரியங்கள், 5 கர்ம இந்திரியங்கள், மனம் -
ஆக 16 கலையுள்ளது ஸூக்ஷ்ம சரீரம்.

நிச்சயமற்ற எண்ணங்கள் தான் "மனம்" என்று சொல்வோம்.
5 ஞான இந்திரியங்கள் (காது, தோல், கண், நாக்கு, மூக்கு)
5 கர்ம இந்திரியங்கள் (வாய், கைகள், கால்கள், எருவாய், கருவாய்)
5 ப்ராணன்கள் (ப்ராண வாயு, அபான வாயு, வ்யான வாயு, உதான வாயு, ஸமான வாயு)
மொத்தம் 16. இந்த 16 வாசனைகளையும் கொண்டது ஸூக்ஷ்ம சரீரம்.

ஸூக்ஷ்ம சரீரம் வாஸனா மயமானது.
இந்த நம் சரீரத்தை பார்க்க முடியாது. இருப்பதை உணர முடியும்.
அதாவது,
புரியும் படி சொல்ல வேண்டுமென்றால்,
கண் தெரியாதவனும் திடீரென யாராவது கூப்பிட்டால் திரும்புகிறான். அவனுக்கு தான் கண் தெரியாதே ! திரும்புவானேன்? இது தான் வாசனை.

வயோதிக தசையில் சரீரம் ஸ்திரீ ஸம்போகத்துக்கு உரியதாக இல்லாத போதிலும், யுவதியையும், அழகியையும் கண்டு ஆசைப்படுகிறான். இது தான் வாசனை.

உடலை காட்டிலும், உணர்ச்சி தனியாக இருக்கிறது.
இதற்கு காரணமென்ன? அதுதான் ஸூக்ஷ்ம சரீரம்.

ஸூக்ஷ்ம சரீரத்தின் உதவியாலேயே இந்த ஸ்தூல சரீரம் இயங்குகிறது.

ஸூக்ஷ்ம சரீரம் போய் விட்டால், ஸ்தூல சரீரம் சவம் ஆகிவிடுகிறது.

ஸ்தூல சரீரத்தை விட்டு ஜீவன் ஸூக்ஷ்ம சரீரத்துடன் மரண காலத்தில் வெளியேறுகிறான்.




ஸூக்ஷ்ம சரீரத்துடன் சென்ற ஜீவன், கொஞ்ச நாட்கள் பிரேத சரீரத்தை பெறுகிறான்.
இந்த பிரேத சரீரத்துடன் ஆகாசத்தில் ஸஞ்சாரம் செய்கிறான்.

பிரேத சரீரத்துடன் ஸஞ்சாரம் செய்யும் ஜீவன், பூலோகத்தில் இருந்த தன் மனைவி, மக்களிடமும், இறந்து போய் கிடைக்கும் ஸ்தூல சரீரத்திலும் ஆசை இருக்கிறது.
மீண்டும் மனைவி, மக்களுடன் பேசி பழக வேண்டும், சுக துக்கங்களை அனுபவிக்க வேண்டும் என்று வாசனை இருக்கிறது.
அதன் உடலானது தகனம் செய்யப்பட்டு விட்டதால், அந்த பிரேதத்துக்கும் பசி,தாகம் முதலியவை உண்டாகி விடுகிறது.

ஒருவர் இறந்து போன பிறகு அவருக்கு செய்ய வேண்டிய கர்மா 'அபர காரியம்' என்று சொல்லப்படுகிறது.

'அபர காரியம்' செய்யப்படாமல் இருக்கும் போது, ஜீவன் உடலை விட்டு விலகிய பின், பிரேத சரீரத்துக்குள் இருக்கும் ஜீவன் பிரேதங்களாகவே (ஆவி) அலைகின்றனர்.

அபர காரியம் பற்றி தெரிந்து கொள்ள
Proudhindudharma
படிக்கவும்.