Followers

Search Here...

Thursday 24 December 2020

திருமலையின் நீளம் என்ன? திருப்பதி பெருமாள் எதற்காக வந்தார்? என்ன சொன்னார்? கைங்கர்யம் செய்பவர்கள், ஆதிசேஷனை போல கைங்கர்யம் செய்ய வேண்டும்.

"ஞானம் அடைந்த ஜீவன் மட்டுமே வைகுண்டம் (மோக்ஷம்) அடைய முடியும். 

ஞானம் அடையாதவரை, மீண்டும் பிறந்து கொண்டே இருக்கிறார்கள்."
இது பரவாசுதேவன் நியமித்த விதி (சட்டம்).

வைகுண்டத்தில் உள்ள அனைத்து ஜீவனும், பிறப்பு இறப்பில் இருந்து முக்தி அடைந்தவர்கள்.

மீண்டும் இவர்கள், பூலோகத்திலோ, சொர்கத்திலோ, மகர லோகத்திலோ, ஜன, தப, ப்ரம்ம லோகத்திலோ, பாதாள லோகங்களிலோ பிறவி எடுப்பதில்லை.

இவர்களாக ஆசைப்பட்டால், பெருமாளை போன்று அவதாரம் கூட செய்ய முடியும்.
அணுகிரஹம் செய்ய முடியும்.

மோக்ஷம் என்ற பேரானந்தமும், பரவாசுதேவனின் தரிசனமும் இவர்களுக்கு நிரந்தர சொத்து.

வைகுண்டத்தில் உள்ள பரவாசுதேவனுக்கு  

  • உலகங்களை படைக்க, காக்க, அழிக்க என்று பல கடமைகள் உண்டு.

ஆனால்,

வைகுண்டத்தில் இருக்கும் முக்தி அடைந்த ஜீவனுக்கு,  

  • எந்த உலக பொறுப்பும் கிடையாது.   
  • இவர்கள் அனுபவிப்பது நிரந்தரமான ஆனந்த அனுபவம் மட்டுமே.
  • இவர்களும் பரவாசுதேவனை போல சுந்திரமானவர்கள்
  • எங்கும் செல்ல கூடியவர்கள். (அஜாமிளனை எம தூதர்களிடமிருந்து மீட்க இவர்களே வந்தார்கள்.)
  • நாராயணனை போலவே சங்கு சக்கரம் உள்ளவர்கள்.



  • திவ்ய ரூபம் உடையவர்கள்.
  • அவர்களுக்கும் பரவாசுதேவன் அனுபவிக்கும் ஆனந்தம் உண்டு.

வைகுண்டத்திற்கு முக்தி அடையாத ஜீவன் வர முடியாது என்பதால், பரவாசுதேவன் தானே விருப்பப்பட்டு, அவர்கள் இருக்கும் லோகங்களில் அவதாரங்கள் செய்கிறார்.

'மோக்ஷம் கொடுக்க வேண்டும் என்ற கருணையின் காரணமாக' அவதாரம் செய்கிறார். 

'மோக்ஷத்தில் நமக்கு ஆசை வருவதற்காகவும்' அவதாரம் செய்கிறார்.

'தன்னை புரிந்து கொள்ளவும்' அவதாரம் செய்கிறார்.

ப்ரம்ம லோகத்தில் இருக்கும் ப்ரம்மாவும் "வைகுண்டம்" சென்று பெருமாளை பார்க்க முடியாது.

பெரிய பெரிய முனிவர்கள், ரிஷிகள், தேவர்கள், ருத்ரன் உட்பட யாரும் வைகுண்டம் சென்று பார்க்க முடியாது.

தேவர்கள், ரிஷிகள், ப்ரம்மா, சிவன் என்று அனைவரும் பார்க்க வேண்டும் என்பதால், வைகுண்டத்தில் இருந்து கொண்டே, க்ஷீராப்தி என்ற பாற்கடலில், "மகாவிஷ்ணு"வாக வ்யூஹ அவதாரம் செய்து, தரிசனம் கொடுக்கிறார்.

வைகுண்டத்தில் கைங்கர்யம் செய்து கொண்டிருக்கும் ஆதிசேஷன், க்ஷீராப்தியிலும் கூடவே அவதாரம் செய்தார்.

அவரவர் தகுதிக்கு ஏற்ப தரிசனம் கொடுக்க, ஆங்காங்கு ஒரு காரியாலயம் (office) அமைத்துக்கொள்வதை போன்று தேவ, ப்ரம்ம, ருத்ரன், ரிஷி, கிண்ணரர்கள் என்று அனைவருக்காகவும், க்ஷீராப்தியில் அவதாரம் செய்து, தரிசனம் கொடுத்து, அபயம் தருகிறார் பெருமாள்.

க்ஷீராப்தி என்ற பாற்கடலில், 1000 தலைகள் கொண்ட ஆதிசேஷன் மேல், விஷ்ணு என்ற பெயருடன் பரவாசுதேவன் பள்ளி கொண்டு இருக்கிறார்.

வைகுண்டத்தில் கைங்கர்யம் செய்து கொண்டிருக்கும் மகாலட்சுமி,
விஷ்ணு பத்னியாக இதே பாற்கடலில், தேவர்களும் அசுரர்களும் அம்ருதம் கடையும் போது தோன்றினாள்.

ஆதிசேஷனின் 1000 தலைகளிலும் நாக ரத்தினங்கள் ப்ரகாசித்தன

பெருமாளின் பிம்பம் இந்த ஆயிரம் நாகரத்தினங்களிலும் பிரகாசிப்பதை பார்த்து ரசித்து கொண்டே, பெருமாளின் திருவடியை பிடித்து விட்டுக்கொண்டு இருந்தாள், மகாலட்சுமி.

அந்த சமயம், பரவாசுதேவனை பார்ப்பதற்கு, நாரதர் திருபாற்கடல் வந்தார்.

பாற்கடலில் ஜெய விஜயர்கள் அனுமதி இன்றி, பெருமாளை பார்க்க யாரும் உள்ளே போக முடியாது. 
சனகாதி முனிவர்களையே ஒரு முறை ஜெய விஜயர்கள் தடுத்து விட்டனர்.

நாரதர் மட்டும் இதற்கு விதிவிலக்கு.
த்ரிலோகமும் சுற்றும் நாரதரை மட்டும் யாருமே தடுப்பது இல்லை.
இவரின் முகவெட்டு அப்படி.

இவரை பார்த்தால் கம்சனுக்கு, ஹிரண்யகசிபுவுக்கு கூட, வரவேற்க தோன்றுமாம்.

நாராயண நாமத்தை எப்பொழுதும் சொல்லும் நாரதருக்கு, எங்கு சென்றாலும் வரவேற்பு, மதிப்பு.
கம்சன் போன்றவர்களே நாரதரை வரவேற்பார்கள் என்றால், நாரதரை ஜெய விஜயர்கள் தடுப்பார்களா?..

நாரதர் வீணா கானம் செய்து கொண்டே திருபாற்கடல் வருகிறார்
அடிக்கடி இங்கு வந்து பெருமாளை சேவிப்பது இவருக்கு வழக்கமும் கூட.

எம்பெருமான் நாரதர் வருவதை கண்டதும், சந்தோஷமாக எழுந்து கொண்டு, ஆசையோடு வரவேற்றார்.

பவள பேழையில் முத்துக்களை கோர்த்து வைத்தது போல, எம்பெருமானின் உதடும், பற்களும் இருந்ததாம்.

தேவர்களுக்கும் தேவனான எம்பெருமான், பீதாம்பரம் உடுத்தி,  சங்கு சக்கரம் ஏந்திய கரங்களுடன், கண்ணுக்கு ஆனந்தம் தரக்கூடிய திவ்ய மங்கள வ்யூஹ ரூபத்தை உடையவராய் இருந்தார்.

எம்பெருமானை பார்த்து, கை குவித்து நாரதர் துதிக்கலானார்.
"நாம (name) ரூபங்களை (figure) கடந்து,
எல்லா இடத்திலும் அகண்டமாக இருந்து கொண்டு,
'ஸத்'தாய், 'சித்'தாய், ஆனந்தமாய்,
சத்தியத்தின் சொரூபனாய் இருக்கக்கூடிய நீங்கள்,
பக்தர்களுக்காக திவ்ய மங்கள (மஹாவிஷ்ணு) ரூபத்தை (Figure) ஏற்கிறீர்கள்.

சாமான்ய தேவர்கள், பரதெய்வமான உங்கள் பெருமைக்கு அருகில் கூட வர முடியாது.

கர்ம தாஸர்களாக இருப்பவர்கள் தேவர்கள்.
ஒருவன் செய்யும் கர்மாவுக்கு (செயலுக்கு) தகுந்த பலனை கொடுப்பவர்கள் தேவர்கள். அவ்வளவு தான்.

தானாக ஒருவனுக்கு கிருபை செய்ய தேவர்களுக்கு சக்தியும் கிடையாது.

'நீ ஏன் என்னை காப்பாற்றவில்லை?' என்று இந்திரனை கேட்டாலும்,
'வாஸ்தவம் தான். நீ தினமும் கோவிலுக்கு வந்தாய், என்னை பூஜை செய்தாய். இருந்தாலும் உன் பூஜா பலன் அவ்வளவு தான், உன் நம்பிக்கைக்கு அவ்வளவு தான் பலன் கொடுக்க முடியும்'
என்று கை விரித்து விடுகின்றனர்.




ஆனால் நீங்கள் ஒருவர் மட்டுமே, "உன் கால பலன் அவ்வளவு தான். உன் கர்ம பலன் அவ்வளவு தான்"
என்று சால்ஜாபுகள் சொல்லாமல், பிறர் யோக்கியதை பார்த்து அனுக்கிரகம் செய்யாமல்,  தீனர்களுக்கும் அனுக்கிரகம் செய்கிறீர்கள்.

மற்ற தெய்வங்களுக்கும் புராணம் உள்ளது.
உங்களுக்கும் புராணம் உள்ளது.

ஆனால் உங்களை போன்று வேறு எந்த தெய்வமும் உதவி செய்ததாக தெரியவில்லை.

எது தர்மம்? என்பதை தெரிந்து கொள்ள 'சப்த ப்ரம்மமாகிய வேதத்தை பார்த்து தெரிந்து கொள்கிறோம்'

அப்படிப்பட்ட வேதமே ஒரு சமயம், பிரளய ஜலத்தில் போய் விட்டது

மது கைடபர்கள் வேதத்தை எடுத்து கொண்டு சென்று விட்டனர் என்ற பொழுது, மற்ற தெய்வங்கள் எல்லாம் எங்கே போனார்கள்?
பேசாமல் இருந்து விட்டனரே!!

இப்படி மற்ற எந்த தெய்வங்களும் முன் வராத போது, நீங்கள் தானே மத்ஸ்ய அவதாரம் எடுத்து பிரளய ஜலத்தில் நீந்தி வேதத்தை மீட்டீர்கள்.

ஒரு சமயம், பிரளய ஜலத்தில் பூமியே மூழ்கி விட, பூமி தேவியை காப்பாற்ற, ஒரு தேவனும் முயற்சி செய்யவில்லையே? அப்பொழுதும் சும்மா இருந்தார்களே!!

எல்லா தெய்வங்களுக்கும் கோவில் உள்ளது.
ஒவ்வொரு தெய்வத்துக்கும் பக்தர்கள் உண்டு. புராணங்கள் உண்டு.
'பூமியே மூழ்கி விட்டது' என்றதும் இவர்கள் யாருமே ஒரு முயற்சியும் செய்யவில்லையே!! 

உமக்கோ, உடம்பு பறக்கிறது..  உடனே 'வராஹ அவதாரம்' செய்து பூமியை பிரளய ஜலத்தில் இருந்து மீட்டு காப்பாற்றினீர்கள்.

இப்படி பூமியையே காப்பாற்றி, பூமிக்கே ஆதாரமாக இருக்கும் உங்களை, இவர்கள் நன்றியுடன் நினைத்து பார்க்காமல் இருக்கிறார்கள்.

ஒரு சமயம் தேவர்களுக்கு 'அம்ருதம் வேண்டும்' என்று ஆசைப்பட்டு உங்களிடம் வந்து சரணாகதி செய்தார்கள்.


நீங்களே இவர்களுக்காக 'மந்திர மலையை தூக்கி கொண்டு வந்து, 
பாற்கடலில்'
கடையுமாறு சொன்னீர்கள்.
கடையும் பொழுது மலை கடலில் உட்கார்ந்து விட, உடனே கூர்ம அவதாரம் செய்து மலையை முதுகில் தாங்கி, கடையுமாறு சொன்னீர்கள்.

 

'பெருமாளுக்கு முதுகு வலிக்குமே!! இப்படி கடைந்தாவது அம்ருதம் நாம் சாப்பிட வேண்டுமா?'
என்று ஒரு தேவனுக்காவது தோன்றியதா? இல்லையே !!

அம்ருதம் வருகிறதா?... அம்ருதம் வருகிறதா?.. 
என்று தானே பார்த்து கொண்டு இருந்தனர்.

இவ்வளவு கிருபை செய்கிறீர்களே. 
யாருக்காவது நன்றி இருக்கிறதா?

'ரூபத்தை கடந்த பரவாசுதேவனான நீங்கள், திருமேனி எடுத்து கொள்வதே, பிறருக்கு உதவி செய்வதற்கு தான்' என்று அறிகிறேன்.

ஹிரண்யகசிபு 14 லோகங்களையும் (ப்ரம்ம லோகம் முதல் பாதாளம் வரை) தன் தவ வலிமையாலும், உடல் வலிமையாலும் கைப்பற்றி விட்டான்.

யாரும் இவனை ஒன்றுமே செய்ய முடியாத அளவுக்கு சக்தி பெற்று இருந்தான்.

இவன் ஒருவனே 71 சதுர் யுகம் ஆட்டி வைத்தானே. 
எந்த தேவனுக்காகவாவது சக்தி இருந்தால், ஹிரண்யகசிபுவை எதிர்த்து இருக்கலாமே?

ப்ரம்மா முதல் அனைத்து தேவர்களும் பொட்டி பாம்பாக அடங்கி இருந்தார்களே, இவனிடம்.

பிரகலாதன் வரும் வரை, தேவர்கள் அனைவரும் "ஹிரண்யன் அடிப்பானே!" என்று பயந்து
"ஹிரண்யாய நம: ஹிரண்யாய நம:"
என்று சொல்லிக்கொண்டு அமைதியாக இருந்தனரே !!

இப்படி ஒருவனும் ஹிரண்யனை அடக்க புறப்படவில்லை.



அங்கும், நீங்கள் தானே, கடைசியில் பிரகலாதனுக்காக நரசிம்மமாக வந்து, ஹிரண்யனை வதம் செய்து, தேவர்களையும் வாழ வைத்தீர்கள்.

புராணங்களை எடுத்து பார்த்தால், ஆதியில் இருந்து அந்தம் வரை உங்கள் புகழ் தானே தெரிகிறது.

'உலக நிர்வாக பொறுப்பை' நீங்கள் அல்லவோ வைத்துள்ளீர்கள்.
திடீரென யாராவது வந்து, நான் ஈஸ்வரன் என்று சொல்லி விட முடியுமா?

பிரகலாதன் பேரன் பலி சக்கரவர்த்தியும் அவன் ஆட்சி காலத்தில் பூலோகம் முதல் ப்ரம்ம லோகம் வரை கைப்பற்றி விட்டான்.

தேவர்கள் மீண்டும் வாழ இடம் இல்லாமல் தவித்தனர்.
இந்திரனுக்கு அழ கூட தெம்பு இல்லாமல், அவன் தாய் 'அதிதி' உங்களிடம் வந்து அழுது பிரார்த்தித்தாள்.

அப்பொழுதும் நீங்கள் தானே வாமன மூர்த்தியாக அவதாரம் செய்து பலி சக்கரவர்த்தியையும் தன் பக்தனாக்கி, உலகை மீட்டு, இந்திரனுக்கு மீண்டும் சொர்க்க லோகத்தை கொடுத்தீர்கள்.

மண்ணை தானமாக பலி சக்கரவர்த்தியிடம் தானமாக பெற்று, அதற்கு பதிலாக, தன்னையே அவனுக்கு கொடுத்து விட்டீர்களே!!.
'சுதலம்' என்ற பாதாள லோகத்தில், அவனுக்கு இடம் கொடுத்து, அவன் மாளிகையில் நீங்களே கதையை வைத்துக்கொண்டு 'கதாதரனாக' காவல் காத்து கொண்டு இருக்கிறீர்களே?

வயலில் பயிர் செய்த தானியங்களை, ஆடு மாடுகள் மேய்ந்து விடாமல் இருக்க, வேலி அமைப்பது வழக்கம்.

ஆனால் வேலியே பயிரை நாசம் செய்வது போல, ஒரு சமயம், மக்களை காப்பாற்ற வேண்டிய க்ஷத்ரியர்கள் (armed protection force) வலுத்து போய், அவர்களே வீடுதோறும் புகுந்து, கொள்ளை அடித்து, மக்களை கொன்று, அராஜகம் செய்கிறார்கள் என்றதும்,
நீங்களே 'பரசு-ராமராக' அவதாரம் செய்து, அதர்மம் செய்யும் க்ஷத்ரியர்கள் அனைவரையும் 21 தலைமுறைகள் நிர்மூலமாக்கி, அவர்கள் கொட்டத்தை அடக்கி, மீண்டும் அவர்களை, அவர்கள் தர்மத்தில் இருக்க செய்தீர்கள்.

சாதுக்களான மக்களை காப்பாற்றவும் நீங்கள் தானே வர வேண்டி இருக்கிறது.

'கோடாலி, சூலம்' என்று எத்தனை தெய்வங்கள் வைத்து உள்ளன.
அதை வைத்துக்கொண்டு, உலகத்தில் அதர்மம் தலைவிரிக்கும் போதும், பயன்படுத்தாமல், ஒன்றும் செய்யாமல் இருந்தனரே.

கோடாலி எடுத்து, நீங்கள் வந்து தானே மக்களை காப்பாற்ற வேண்டி இருக்கிறது.

தர்மம் வீழ்ச்சி அடையும் போது, எந்த தெய்வமும் "தர்மம் இப்படி பட்டு போய் விட்டதே!!" என்று கவலை படுவதாக கூட தெரியவில்லையே!!

அதே சமயம் "இந்திராய ஸ்வாஹா"
என்று தர்ம ரீதியாக யாராவது ஆஹுதி கொடுத்தால் மட்டும், அதை பெற்று கொள்ள வருகின்றனர்.

'தர்மம் அழிந்து போகிறதே! காப்பாற்ற வேண்டுமே!' என்றால் மட்டும், நீங்கள் தான் வர வேண்டி இருக்கிறது. வேறு எவரும் வருவதில்லை.

இப்படி எதற்கும் தாங்களே வந்து காப்பாற்ற வேண்டி இருக்க, பிற தேவதைகளையும் தன் இஷ்ட தெய்வமாக வழிபடுகின்றனரே!! ஜனங்கள்.

அப்படி என்ன தான் இந்த தெய்வங்கள் இவர்களுக்கு அனுக்கிரகம் செய்து விட்டனரோ? என்று தெரியவில்லை.

மற்ற தெய்வங்களை வணங்கும் இவர்களுக்கு, பரதெய்வமான உங்களின் குண விசேஷங்கள் என்ன?
மற்ற தெய்வங்களின் குண விசேஷங்கள் என்ன? என்பது தெரியவில்லையே!

இப்படி மற்ற தெய்வங்களையும் வழிபடும் இவர்கள், நீரே இவர்களின் ஆத்மாவுக்கு சொந்தக்காரன் என்று அறிந்து கொள்ளவில்லையே!!

காம்யார்த்தமான (பலனை எதிர்பார்த்தே) பக்தி செய்பவர்களாகவே பெரும்பாலும் இருக்கின்றனர்.

"அந்த தேவதையை வழிபட்டால் உடனே பலித்து விடும்" என்று கேள்விப்பட்டால் கூட, அந்த தெய்வத்தின் பக்கம் ஓடி விடுகின்றனர்.

எனக்கு இக லோக சௌக்கியங்கள் எதுவும் வேண்டாம்.
எனக்கு 'உங்கள் சரணத்தில் பக்தியே நிலைக்குமாறு' செய்யுங்கள்.

என்னிடத்தில் தியான யோகமும் இல்லை, கர்ம யோகமும் இல்லை, ஞான யோகமும் இல்லை.

தகுதி பார்க்காமல், நீங்கள் யாரையும் ஏற்றுக்கொள்வீர்கள்! என்றும் மட்டும் அறிவேன்.

உங்கள் பெருமை அறியாமல், நீங்களே இந்த ஜீவனுக்கு (ஆத்மாவுக்கு) சொந்தக்காரர் என்றும் தெரியாமல், பிற தெய்வங்களையும் வழிபடுபவர்களை நான் குறையாக சொல்லவில்லை.

அவரவர் பக்குவத்தை பொறுத்து, அவரவர்கள் பக்தி செய்கின்றனர் என்று அறிகிறேன்.

ஏதோ ஒரு அல்ப பலனுக்காக, ஏதோ ஒரு தெய்வத்திடம் பக்தி செய்கின்றனர்.

என்னை பொருத்தியவரை ஆதி தேவனான உங்களை தவிர, வேறு தெய்வம் எனக்கு தெரியாது.

என்னுடைய கண் பார்வை கூட வேறு ஒரு தெய்வத்திடம் திரும்புவதில்லை."
என்று சொல்லி, கை குவித்து நின்று கொண்டிருந்தார் நாரதர்.

பொதுவாக, ஜனங்களோடு ஜனங்களாக இருந்தால், எல்லோரையும் ஒரு சேர பார்க்க முடியாது.
கொஞ்சம் மாடியில் ஏறி நின்று பார்த்தால், அந்த தெருவில் போகும் எல்லோரையும் ஒரு சேர பார்க்க முடியும்.

'பூலோகத்தில் தனக்கு ஒரு ஏழு அடுக்கு மாடி அமைத்துக்கொண்டு, அங்கு நின்று கொண்டால், எல்லோரையும் பார்க்கலாமே'
என்று சங்கல்பம் செய்தார் பாற்கடலில் உள்ள எம்பெருமான்.




கண் மலர்ந்து பார்த்த, எம்பெருமான், ஆதிசேஷன் மேல் சாய்ந்து கொண்டே பேசலானார்,
"நாரதா ! பூலோகத்தில் அவதாரம் செய்து கொஞ்சம் விளையாடி விட்டு வரலாம் என்று நினைக்கிறேன்.
எனக்கு பூலோகத்தில் ஒரு தகுந்த இடம் பார்த்து சொல்.

எல்லோரும் காம்யார்த்த பக்தியே செய்து கொண்டு, என்னிடம் பக்தி செய்வதை கூட விட்டு விட்டு, ஏதேதோ தெய்வங்களை வழிபடுகிறார்கள் என்று குறைபட்டு கொண்டீர்கள்.

அவர்கள் மேல் தோஷம் இல்லை. அது என் தோஷம் தான், நாரதா!

காரணம், நான் பொதுவாக காம்யார்த்த (பலனை எதிர்பார்த்து) பக்தி செய்பவர்களிடம் முகம் கொடுக்காமலேயே இருக்கிறேன்.

அதனாலேயே அவர்களும் வேறு தெய்வங்களிடம் சென்று விடுகின்றனர்.

காம்யார்த்த பக்தி, பிரார்த்தனைக்கு முகம் சுளிக்காமல், எப்பொழுதும் பிரசன்னமாக இருந்து கொண்டே இருந்தால், என்னிடமே இவர்கள் அனைவரும் திரும்பி வருவார்கள்.

ஆதலால், நீங்களே ஒரு ஏற்ற இடத்தை பூலோகத்தில் கண்டுபிடித்து சொல்வீர்கள் என்றால், அங்கேயே நான் அவதாரம் செய்ய நினைத்துள்ளேன்.

எனக்கு வைகுண்டம், க்ஷீராப்தி கூட முக்கியமில்லை.
நான் நிரந்தரமாக பூலோகத்திற்கு வர சங்கல்பித்து உள்ளேன்.

நான் பூலோகத்திற்கு வந்த பிறகு, இந்த சம்சார கடலில் தத்தளிக்கும் ஜனங்கள், என்னை பார்த்ததும், 'என்ன செய்கிறார்கள்?' என்று பார்க்க போகிறேன்.

'கோவிந்தா... கோவிந்தா...'
என்று அனைவரின் வாயிலும் என் நாமத்தை வரவழைத்து, காம்யார்த்த பலனையும் கொடுத்து, மோக்ஷமும் கிடைக்க அனுக்கிரகம் செய்கிறேன்."

என்றார் வைகுண்டபதி.

நாரதர், "என்னை போய் பூலோகத்தில் தகுந்த இடம் எது என்று சொல்ல சொல்கிறீர்களே?" என்றார்.

மகாவிஷ்ணு, சிரித்து கொண்டே, "நீர் மூன்று உலகங்களிலும் சுற்றுபவர் ஆயிற்றே. உமக்கு தெரியாத இடங்களே கிடையாது.
பூலோகத்துக்கு வந்து விட போகிறேன். உம்மை கேட்காமல் யாரிடம் கேட்பது?
" என்றார்.

நாரதர், "பாற்கடலில் இருக்கும் இந்த திவ்ய ரூபத்துடன் இப்படியே பூலோகம் வர சங்கல்பித்து உள்ளீர்களா?" என்று ஆச்சரியம் பொங்க கேட்க,

மகாவிஷ்ணு, "நான் இங்கு பாற்கடலில் இருப்பதை போலவே பூலோகத்திற்கு வர போவதில்லை.
பூலோகத்திற்கு ஏற்ற, அர்ச்சா திருமேனியுடன் அவதாரம் செய்ய சங்கல்பித்து உள்ளேன்.

க்ஷீராப்தியில் என் வ்யூஹ அவதாரத்தை, ஞானியான ரிஷிகளும், ப்ரம்மா, ருத்ரன், தேவர்கள், கிண்ணரர்கள் மட்டுமே பார்க்க முடியும்.
அஞானிகள், பூலோகவாசிகள் இங்கு வந்து பார்க்க முடியாது.

'அஞானிகள் கூட என்னை பார்க்க வேண்டும்' என்பதால், அர்ச்சா திருமேனியுடன் பூலோகத்தில் அவதரிக்க உள்ளேன்" என்றார்.

இதை கேட்ட நாரதர் மேனி சிலிர்த்து எம்பெருமானின் கருணையை நினைத்து கண்ணீர் விட்டார்.

நாரதர் பேசலானார்,
"உங்கள் கிருபைக்கு எல்லையில்லை.
நீங்கள் மத்ஸ்ய, கூர்ம அவதாரங்கள் செய்த போதே, ஏன் இப்படி பெருமாள் தன்னை வருத்தி கொண்டு தானே அவதாரம் செய்கிறார்?
என்று கூட வருந்துவேன்.

இப்படி இருக்க, 'ஒரு விக்ரஹம் போல அர்ச்ச அவதாரம்  செய்து வருவேன்' என்று சொல்கிறீர்களே?

வைகுண்டத்தையும் விட்டு விட்டு, இந்த ஆனந்த ஸ்வரூபனான மஹாவிஷ்ணு ரூபத்தையும் விட்டு விட்டு, ஒரு அசேதனமான (அசையாத) கல் போன்று அவதாரம் செய்வேன் என்கிறீர்களே?"
என்று வருத்தப்பட்டார்.

உடனே பகவான்,
"நாரதா ! நான் கொஞ்சம் சைதன்யம் இருக்கும்படியாக வந்தால் கூட, எவ்வளவு தான் பொறுமையாக இருந்தாலும், சாஸ்திரத்தை மீறி என் முன்னே நடக்கும் அபசாரங்களை, மன்னிக்க முடியாமல் போய் விடும்.

நான் கொஞ்சம் சைதன்யம் தெரியும் படியாக வந்தாலும், உணர்ச்சி என்பது ஏற்படுமல்லவா?

எந்த அபசாரங்கள் செய்தாலும், 'அபசாரங்களுக்கு தண்டனை என்னும் உணர்ச்சி கூட என்னில் வெளிப்பட கூடாது' என்பதால்,  என்னை கல்லாக்கி கொண்டு பூலோகத்தில் அவதாரம் செய்வேன்.

'கருணை ஒன்றே' செய்ய வேண்டும்.
அபசாரங்கள் செய்தாலும், அதை பொருட்படுத்தாமல் இருக்க, அர்ச்சா திருமேனியே சிறந்தது.

அர்ச்சா திருமேனியாக இல்லாமல், நான் விபவ அவதாரமாகவே செய்தால், எல்லையில்லாமல் செய்யும் அபசாரங்களை பொறுத்து கொள்ள முடியாமல் போய்விடுகிறது.

விபவ அவதாரம் செய்து வந்தால், அபசாரத்தை கண்டு கொஞ்சமாவது கோபம் வந்து விடும்.

ஆதலால், நான் ஒரு சிலா மூர்த்தியாக என்னை ஆக்கிக்கொண்டு கலியில் அவதாரம் செய்வேன்.
அதற்காக சிலையாகவே இருந்து விடாமல், சிலை ரூபத்திலிருந்து கொண்டே அனைவரையும் பார்த்து, அணுகிரஹம் செய்து கொண்டே இருக்க போகிறேன்.

நான் பார்க்க கல் போல அவதாரம் செய்தாலும், அளவு கடந்த கருணையை வழங்குவேன்.

கல் போல நான் அவதாரம் செய்வதற்கு காரணமே, ஜனங்களின் அபசாரங்களை சகித்து கொள்ளத் தான்.

என் மீதோ, என் எதிரோ எத்தனை அபசாரங்கள் நடந்தாலும், அதை பொருட்படுத்தாமல் கருணை செய்ய, துளிகூட உணர்ச்சி இல்லாமல் இருக்க வேண்டும் என்பதாலேயே, நான் அர்ச்ச அவதாரம் செய்ய சங்கல்பித்தேன்.

அர்ச்ச அவதாரமாக இருந்தும் அளவு கடந்த கருணையை பொழிவேன்."
என்று பகவான் சொல்ல,

"பூலோகத்தில், 'சுவர்ணமுகி' என்ற நதிக்கரை ஓரம், கிழக்கு பாரத கடலுக்கு அருகே மேற்கு பாகத்தில் உள்ள பிரதேசம் ஏற்ற இடமாக உங்கள் திருவிளையாடலுக்கு இருக்கும்."
என்று பகவான் அவதாரத்துக்கு ஏற்ற இடத்தை நாரதர் சொன்னார்.

பெருமாள் அவதரிக்க இப்படி இடத்தை சொன்னதை கேட்ட ஆதிசேஷன், "தனக்கு ஏதாவது இதில் கைங்கர்யம் உண்டா?"
என்று எதிர்பார்க்க,
பகவான் தான் படுத்திருக்கும் ஆதிசேஷனை பார்த்து,
"எல்லா விதத்திலும் எனக்கு ஆட்பட்டவன் நீ.
நீ முதலாக பூலோகத்துக்கு சென்று, அங்கு பர்வதமாக (மலையாக) இரு. நான் அங்கு வந்து திருவிளையாடல் செய்கிறேன்.
"
என்று ஆதிசேஷனை பூலோகத்திற்கு அனுப்பினார் பகவான்.

ஒரு பாம்பு நெளிந்து நெளிந்து, பார்ப்பதற்கு மேடு பள்ளம் போல தோன்றுவது போல, ஒரு மலையாக தோன்றிய ஆதிசேஷன், நெளிந்து நெளிந்து ஏழு மலைகளாக ஆகி, சேஷாத்ரி (ஆதிசேஷன் மலை) என்ற பெயருடன், எம்பெருமான் அவதார காலத்திற்காக எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.

சர்வ விதமான கைங்கர்யத்தையும் செய்பவர் என்பதாலேயே இவருக்கு 'ஆதிசேஷன்' என்று பெயர்.

'தான் ஸ்வாமி இல்லை, தான் எம்பெருமானின் சொத்து'
என்று இருப்பதால் இவருக்கு "சேஷன்" என்று பெயர்.

இவரே எம்பெருமானின் முதன்மையான சொத்தாக இருப்பதால், இவரை "ஆதிசேஷன்" என்கிறோம்.

ஆதிசேஷன் எம்பெருமானுக்கு எப்படி எல்லாம் சேவை செய்கிறார்? என்று பார்க்கும் போது, ஆதிசேஷனின் பெருமை நமக்கு புரியும்.

"ஸ்ரீவைகுண்டத்தில்" எம்பெருமான் பரவாசுதேவனாக இருந்தால், இவர் அமர்வதற்கு தானே 'சிம்மாசனம்' ஆகி விடுகிறார்.

"பாற்கடலில்" எம்பெருமான் வ்யூஹ அவதாரம் செய்து மகாவிஷ்ணுவாக இருந்தால், இவர் படுத்தால், தானே 'பஞ்சுபடுக்கை' ஆகி விடுகிறார்.

எம்பெருமான் நடந்து சென்றால், தானே அவருக்கு 'குடையாகி' விடுகிறார்.
(கிருஷ்ண அவதாரம் செய்த போது யமுனையை கடக்கும் போது குடையானார்)

எம்பெருமான் நின்றால், தானே அவர் திருவடிக்கு 'பாதுகை' ஆகி விடுகிறார்.
(ஸ்ரீனிவாசனாக பெருமாள் நிற்க  சேஷாத்திரி (திருமலை) ஆனார்)

இப்படி

  • சர்வ தேச (எந்த இடத்திலும்),
  • சர்வ கால (எந்த சமயத்திலும்),
  • சர்வ அவஸ்தைகளிலும் (எந்த நிலையிலும்)

எம்பெருமானுக்கு சர்வ கைங்கர்யமும் (எந்த சேவையும்) செய்யக்கூடியவர் ஆதிசேஷன்.

எம்பெருமானுக்கு கைங்கர்யம் செய்பவர்கள், ஆதிசேஷனை போல ஆசையோடு செய்ய வேண்டும்.

ஏழுமலைகளாக 'முதல் யுக'த்திலேயே தோன்றிவிட்ட ஆதிசேஷன், "சேஷாத்ரி" என்ற பெயருடன் எம்பெருமான் அவதாரத்திற்கு கலியுகம் வரை காத்து கொண்டிருந்தார்.

ஆதிசேஷன் "சேஷாத்ரி" என்ற 7 மலையாக ஆகி இருந்தார். 

காலப்போக்கில் ஒவ்வொரு மலைக்கும் தனி பெயர் ஏற்பட்டது. 

1. சேஷாத்ரி (உண்மையான பெயர்)

2. வ்ருஷபாத்ரி (வ்ருஷபன் என்ற அசுரன் ஞானம் பெற்ற மலை)

3. சிம்மாத்ரி (நரசிம்ம அவதாரம் நிகழ்ந்த இடம்)

4. அஞ்சனாத்ரி (ஹனுமான் பிறந்த மலை)

5. கருடாத்ரி (அம்ருத கலசம் கருடன் கொண்டு வந்த போது, அமர்ந்த மலை)

6. வெங்கடாத்ரி (பாவங்களை பொசுக்கும் மலை, வெங்கடேச பெருமாள் இருக்கும் மலை)

7. நாராயணாத்ரி (நாராயண பட்டருக்கு வைகானச முறைப்படி பூஜை செய் என்று உபதேசத்த மலை)

"அத்ரி" என்றால் மலை என்று அர்த்தம்.

ஆதிசேஷன் எத்தனை நீளமாக படுத்தார்? திருமலையின் நீளம் என்ன?

 

ஆதிசேஷனின் தலை (சிரசு) ஆரம்பிக்கும் இடத்தில், 'காளஹஸ்தி' என்ற க்ஷேத்ரம் உள்ளது.

ஆதிசேஷனின் இதய பகுதியில் அமைந்த க்ஷேத்ரமே "அஹோபிலம்".

ஸ்ரீசைலம் என்ற இடத்தில் ஆதிசேஷனின் வால் பகுதி முடிகிறது

அந்த பாம்பின் வளைந்து இருக்கும் தலையின் உச்சத்தில் ஆதிசேஷன் தரித்து இருந்த நாக ரத்தினத்தின் உச்சத்தில், வெங்கடேசபெருமாள் தன்னை வெளிக்காட்டி, அந்த சிரசையே "வெங்கடாத்ரி" என்ற ஒரு மலையாக ஏற்று வீற்றிருக்கிறார். 

காளஹஸ்தி ஆரம்பித்து, ஸ்ரீசைலம் வரை ஆதிசேஷன் படுத்தார் என்றால், ஏழு மலைகளின் நீளம் நமக்கு புரியும்.

பூலோகத்திற்கு கொண்டு வந்து விட்டார் ஆதிசேஷன்.

இப்படி அதி ஆச்சர்யமாக எம்பெருமான் வருவதற்காக படுத்து விட்டார் ஆதிசேஷன்.

இதை பார்த்த கங்கை, இந்த திருமலைக்கு ஒரு வெள்ளை கொடி பறக்க விடுவது போல, ஆகாச கங்கையாக பொழிய ஆரம்பித்தாள்.

கங்கையே வந்தவுடன், ஏழு மலையையும் சூழ்ந்து கொண்டு அனைத்து புனிதமான தீர்த்தங்களும் ஆங்காங்கே உருவானது.

மலையே செழிப்பு நிறைந்து, பூக்களும், மரங்களும் நிறைந்த பசுமையான சோலை ஆனது. திருமலையே, எம்பெருமானை வரவேற்க காத்திருந்தது.

மலையாக பார்க்காமல், ஆதிசேஷனாக பார்க்கும் போது தான், பக்தன் எப்படி எல்லாம் கைங்கர்யம் செய்கிறான்? என்பது புரியும்.

காற்றில் மரங்கள் யாவும் அசைவதை பார்த்தால், ஆதிசேஷனின் ஆயிரம் தலைகள் அசைவது போல தோன்றுமாம் பக்தனுக்கு.

ஏழு மலையையும்,  வெண்மையான மேகங்கள் சூழ்ந்து வருவதை பார்த்தால், க்ஷீராப்தியில் இருந்த பாற்கடல், 'ஆதிசேஷனும் கிளம்பி விட்டார், எம்பெருமானும் கிளம்பி விட்டார், இனி வைகுண்டத்தில் எனக்கு என்ன வேலை?'
என்று திருமலைக்கு வந்து விட்டதோ! என்று தோன்றுமாம் பக்தனுக்கு.

'வைகுண்டத்தில் இருந்து ஆதிஷேஷனே திருமலையாக வந்து விட்டார்' என்று உணர்ந்த ரிஷிகள், தங்கள் ஆஸ்ரமங்களை கலைத்து விட்டு, திருமலை வந்து பகவத் தியானத்தில் ஈடுபட ஆரம்பித்தனர்.

மயில்களும், குயில்களும் ஆனந்தமாக கானம் செய்து விளையாடியது.




காள என்றால் சிலந்தி,
ஹஸ்தி என்றால் யானை.
இந்த ஸ்தலத்தில் யானையும், சிலந்தியும் சிவ பூஜை செய்த காரணத்தால், இந்த இடத்திற்கு பிற்காலத்தில் "காளஹஸ்தி" என்ற பெயர் உண்டானது.
காளஹஸ்தி 'சிவ' ஸ்தலமாகவும் உள்ளது.

ஸ்ரீசைலம் என்பதும் மற்றொரு சிவக்ஷேத்ரம். இந்த சிவக்ஷேத்ரத்தில், மருத மரமாக (அர்ஜுன மரம்) சிவபெருமானே இருக்கிறார். 
பார்வதி தேவி இங்கு மல்லிகை கொடியாக ஆகி, அந்த மருத மரத்தை சுற்றிக்கொண்டு இருக்கிறாள்.
இதனால் இங்கு சிவபெருமானுக்கு "மல்லிகார்ஜூன்" என்றும் பெயர்.

இயற்கையாக தோன்றிய மலை அல்ல திருமலை.  ஆதிசேஷனே மலையாக இருக்கிறார். 

இங்கு வசிக்கும் மிருகமும், மனிதர்களும், பறவைகளும் என்ன பிரார்த்தனை செய்து இப்படி திருமலையில் வாசம் செய்கிறார்களோ? நமக்கு தெரியாது.

மகான்கள், ஆழ்வார்கள் எல்லோரும் இந்த கண்ணோட்டத்தில் தானே திருமலையை பார்த்தனர். பார்க்கின்றனர்.

ஸ்ரீ ராமானுஜரின் சிஷ்யர் 'அனந்தாழ்வார்' திருமலையில் பூ கைங்கர்யம் செய்து கொண்டிருந்தார்.
ஒரு சமயம், அனந்தாழ்வார் தன் சிஷ்யர்களுடன் 'மேல் நாட்டு திவ்ய தேசங்கள் ஆரம்பித்து, அனந்த பத்மநாபன் வரை சேவிக்கலாம்' என்று புறப்பட்டார்.

'பயணத்திற்கு, திருமலை பிரசாதமே எடுத்துக்கொள்ளலாம்!' என்று ஒரு மூட்டையில் பிரசாதம் எடுத்துக்கொண்டு, கிளம்பினார்கள்.

கிளம்பி வெகுதூரம் சென்ற பின், 'சரி சாப்பிடலாம்' என்று நினைத்து, பிரசாத மூட்டையை அவிழ்க்க, அதில் எறும்புகள் இருப்பதை பார்த்தார், அனந்தாழ்வார்.

அவர் சிஷ்யர்கள்,
"எறும்பை தட்டி விட்டு சாப்பிடலாமா? இல்லை அப்படியே பிரசாதத்தை வைத்து விட்டு பயணத்தை தொடரலாமா?"
என்று கேட்க,
அனந்தாழ்வார்,
"இந்த எறும்புகள் எல்லாம் திருமலையில் இருந்தே வந்திருக்கிறது.
'எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனோ?' (பெருமாள் திருமொழி)
என்று குலசேகராழ்வார் செய்த பிரார்த்தனை, இந்த எறும்புக்கு கிடைத்துள்ளதே!

இது நாள் வரை, திவ்யதேச வாசம் செய்த எறும்புகளை, இப்படி ஏதோ ஒரு கிராமத்தில் விட்டு விட கூடாது.
இவையெல்லாம் எந்த ஜீவனோ நமக்கு தெரியாது.

திருமலை வாசம் பெற்ற இந்த ஜீவனை, நாம் மீண்டும் திருமலை சென்று, அங்கேயே இந்த பிரசாதத்தை வைத்து விட்டு நம் பயணத்தை மீண்டும் தொடர்வோம்"
என்று சொல்லி அவர்கள் யாத்திரையை நிறுத்து விட்டு, மீண்டும் திருமலையில் ஏறி, அந்த எறும்புகளை பிரசாத மூட்டையுடன், மீண்டும் ஸ்வாமி புஸ்கரணி தீர்த்தம் அருகே,  திருமலையிலேயே விட்டு விட்டு, மீண்டும் யாத்திரையை தொடர்ந்தனர்.

நம் பூர்வ ஆச்சாரியர்கள் எப்படி திருமலையை பக்தியுடன் பார்த்தனர்? அங்குள்ள ஜீவராசிகளை எப்படி மதித்து உள்ளனர்? என்று புரிகிறதே.

திருமலையை மற்ற  இயற்கையாக தோன்றிய மலை போலவா ஆழ்வார்கள் பார்த்தனர்? இல்லையே.

ஆழ்வார்கள், ராமானுஜர் பார்த்த கண்ணால், திருமலையை நாமும் பார்க்கும் பொழுது தானே, நமக்கும் திருமலையின் மகத்துவம் புரியும்.
அந்த பக்தி நமக்கும் வரும்.

ஆதிசேஷனே ஏழு மலையாக இருக்கும் போது,
பரவாசுதேவனே திருமலையப்பனாக நின்று கொண்டு இருக்கும் போது,
இங்கு வசிக்கும் விலங்குகளும், பறவைகளும் மட்டும் சாதாரணம் என்று நினைக்க தோன்றுமா? ஒரு பக்தனுக்கு.

ஆழ்வார்கள் போன்று நமக்கும் பக்தி வர ஆசைப்பட வேண்டும்.

"எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனோ?" (பெருமாள் திருமொழி)
என்று குலசேகராழ்வார் பாடும் பொழுது,
இங்கு இருக்கும் செடி, கொடிகளுக்கு கூட மங்களாசாசனம் செய்து விட்டாரே! என்று தோன்றுகிறது.

இங்கு இருக்கும் ஈ, எறும்பு கூட, எந்த மகானோ! என்றல்லவா நமக்கு தோன்ற வேண்டும்.

ஆயிரம் நாக்கு உடைய ஆதிஷேஷனே திருமலையின் மகத்துவத்தை சொல்ல முடியாத போது, 18 புராணங்களும் திருமலையின் மகத்துவத்தை சொல்வது ஆச்சர்யமில்லையே.

ஆதிஷேஷனே, கலியில் ஸ்ரீ ராமானுஜராக 1017CEல் அவதாரம் செய்தார்.

ஒரு சமயம், யதிராஜனாக (சந்நியாசி) ஆன பின்பு, திருமலையில் ஒரு மாதம் தங்கி, அவர் பூர்வ க்ருஹத்தில் மாமாவான "திருமலை நம்பி"யிடம் ராமாயண காலட்சேபம் கேட்கலாம் என்ற ஆசையோடு திருமலை வந்தார்.

"எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனோ"
என்ற ஆழ்வார் பாசுரத்தை எண்ணி,
'திருமலையில் எப்படி கால் வைத்து போவேன்?'
என்று தயங்கி, தன் இரு கால்களையும் மடக்கி, வாழைத்தண்டால் இருக்க கட்டி கொண்டு, தன் முழங்காலால் நடக்க ஆரம்பித்தார்.

'ஸ்ரீ ராமானுஜர் முழங்கால் தேய திருமலை ஏறிக்கொண்டு இருக்கிறார்' என்று கேள்விப்பட்ட திருமலை நம்பி, கீழே இறங்கி ஓடி வந்தார்.

 

 அதற்குள் ராமானுஜர் முதல் கோபுரம் வரை வந்து விட்டார்.

பூர்வ ஆஸ்ரமித்தில் தன் மருமகன் தான் 'ராமானுஜர்' என்றாலும், யதிராஜராக ஆகி விட்ட ராமானுஜரை சேவித்துக்கொண்டே,
"ஏன் இப்படி வர வேண்டும்?" என்று கேட்க,
"தங்களை சேவிக்கலாம் என்று தான் வந்து கொண்டிருந்தேன்"
என்றார் ராமானுஜர்.

"யதிராஜர் இப்படி முட்டுக்கால் தேய வந்தால் இது சாத்தியமா?
சாதாரணமாக காலால் நடந்து வந்து பெருமாளை திருமலை ஏறி வந்து தரிசிப்பதே ஜனங்களுக்கு கடினமாக இருக்கும் போது, தாங்கள் ஆதிசேஷனாக இருக்கும் திருமலை மேல், கால் படக்கூடாது என்று இப்படி கால்களை கட்டிக்கொண்டு, ஏறி வந்தால், யதிராஜரே கால் வைக்க தயங்கினார் என்று தெரிந்தால், ஒருத்தர் கூட திருமலை வந்து எம்பெருமானை தரிசிக்க மாட்டார்களே!!

நீங்கள் திருமலையில் கால் வைத்து நடப்பது தோஷமில்லை.
ஒரு தாயார் தன் மடி மீது குழந்தை வைத்து கொள்ளும் போது, சில சமயம் தன் சின்ன காலால், தாயை உதைத்தாலும், அது அவளுக்கு ஏற்பு உடையதாக இருக்கும்.
அதை அவள் அபசாரம் என்று நினைப்பதில்லை.
அதுபோல,
திருமலையில் கால் வைத்து ஏறினாலும், அது பெருமானுக்கு ஏற்புடையதாக இருக்குமே தவிர அபசாரமாக இருக்காது.
கால் வைத்து வாருங்கள் என்று சொல்ல தான் ஓடிவந்தேன்"

என்றார் திருமலை நம்பி.

"இதை சொல்வதற்கு யாராவது சிறுவனை அனுப்பி இருக்க கூடாதோ.
நான் ஏற்று இருப்பேனே. இதற்கு தேவரீர் தானே புறப்பட்டு வர வேண்டுமா?"

என்று ராமானுஜர் கேட்க,

"திருமலை முழுவதும் தேடி பார்த்து விட்டேன். அடியேனை தவிர சிறுவன் இங்கு கிடைக்கவில்லை.
யாரை பார்த்தாலும் என்னை விட பெரியவராகவே தெரிகிறது.
இவர் என்ன பாக்கியம் செய்து திருமலையில் வாசம் செய்கிறாரோ என்று மனதில் தோன்றுகிறது.
இங்கு பிறந்த ஈ, எறும்பு கூட என்ன பாக்கியம் செய்ததோ என்று தான் தோன்றுகிறது.
யாரை பார்த்தாலும் பெரியவாளாக தோன்றுகிறது."

என்றார்.

ராமானுஜர் பிறகு, திருமலை ஏறி, பெருமானை தரிசித்தார்.

திருமலையை மற்ற  இயற்கையாக தோன்றிய மலை போலவா, ஆழ்வார்கள் பார்த்தனர்? இல்லையே.

ஆழ்வார்கள், ராமானுஜர் பார்த்த கண்ணால், திருமலையை நாமும் பார்க்கும் பொழுது தானே, நமக்கும் திருமலையின் மகத்துவம் புரியும்.

இப்படி ஆச்சர்யமாக ஆதிஷேஷனே ஏழு மலைகளாக ஆகி, எம்பெருமான் வரவுக்காக காத்திருந்தார்.

கலியுகம் ஆரம்பித்த சமயத்தில், பூலோகத்தில் எல்லாம் தயார் நிலையில் இருக்க, க்ஷீராப்தியில் இருக்கும் பரமபத நாதன், திருமலைக்கு புறப்பட தயாரானார்.



Wednesday 23 December 2020

பாசுரம் (அர்த்தம்) - "வையம் ஏழும் உண்டு". திருவஹீந்திரபுரத்தில் (கடலூர் மாவட்டம்) வீற்றுஇருக்கும் தேவநாத பெருமாளை தொழும் பாசுரம். திருமங்கையாழ்வார் வர்ணிக்கிறார். அர்த்தம் தெரிந்து கொள்வோமே !

திருவஹீந்திரபுரம் திவ்ய தேசம்…  (கடலூர் மாவட்டம் அருகில் உள்ளது.)

பெருமாள்:  தேவநாதன். தாயார்: ஹேமாம்புஜவல்லி

திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்யும் போது, இந்த பெருமாளோடு, அந்த ஊரின் அழகை பார்த்து அப்படியே வர்ணித்து திவ்ய தேசத்தை அப்படியே நம் கண் முன் கொண்டு வந்து விடுகிறார்.

வையம் ஏழும் உண்டு 

ஆலிலை வைகிய மாயவன்! 

அடியவர்க்கு மெய்யனாகிய தெய்வநாயகன் இடம் !

மெய்தகு வரைச்சாரல் 

மொய்கொள் 

மாதவி சண்பகம் முயங்கிய

முல்லையங் கொடியாட !

செய்ய தாமரைச் 

செழும்பணை திகழ்தரு 

திருவயிந்திரபுரமே !

 - பெரிய திருமொழி (திருமங்கையாழ்வார் )

இந்த பாசுரத்தை பாடும் போதே, இந்த திவ்ய தேசம் அவரை எப்படி வரவேற்றது? என்று காட்டுவது போல இருக்கிறது.


அந்த திவ்ய தேசத்தில் கழனி வழிகள் எப்படி இருந்தது? முல்லை எப்படி இருந்தது? என்று சொல்லி கொண்டே ஆழ்வார் வர, பெருமாளோடு, திவ்ய தேசத்தையும் சேர்த்து நமக்கு காட்டி விடுகிறார்.


அந்த ஓஷதி மலையில் சாரல் விழ (மெய்தகு வரைச்சாரல் ), அந்த மலையில் எங்கு பார்த்தாலும் வளர்ந்து இருக்கும் செண்பக மரத்தின் (மொய்கொள் மாதவி சண்பகம் முயங்கிய) மேல் முல்லை கொடி படர்ந்து ஆட (முல்லையங் கொடியாட), தடாகங்களில் நன்கு செழித்து ஓங்கிய தாமரையும் (செய்ய தாமரைச்), மலை ஓரங்களில் செழித்து ஓங்கிய பனை மரங்களும் (செழும் பணை திகழ்தரு) நிரம்பி இருக்க, அதை பார்த்த ஆழ்வாருக்கு தன்னை ஆசையோடு திவ்ய தேசமே வரவேற்ப்பது போல இருந்ததாம்.


இப்படி திவ்ய தேசத்தின் அழகை நம் கண் முன்னே கொண்டு வந்த ஆழ்வார், அப்படிப்பட்ட அழகிய திவ்ய தேசத்தில், ஏழு உலகங்களையும் உண்டு தன் திருவயிற்றில் வைத்து கொண்டு (வையம் ஏழும் உண்டு), பிரளய ஜலத்தில் ஒரு பயமுமில்லாமல் ஒரு சிறு ஆலிலையில் படுத்து உறங்கும் மாயன் (ஆலிலை வைகிய மாயவன்!) அங்கு இருக்கிறார் என்று பாடுகிறார்.


'கல் என்றால் கல், பெருமாள் என்றால் பெருமாள். உண்டு என்றால் உண்டு. இல்லை என்றால் இல்லை' என்று நம் பக்தியை பொறுத்து, தான் இருப்பதை நமக்கு காட்டும் படியாக அடியவர்க்கு மெய்யனாகிய தேவநாதன், என்கிறார்.


'ஆஸ்ரயித்து உபாசனை செய்யத்தக்க பெருமாள், தேவநாத பெருமாள்' என்கிறார் தேசிகர்.

தேசிகர் அவதரித்த ஸ்தலம் "தூப்புல்" (காஞ்சிபுரம்).

வேதாந்த தேசிகருக்கு, அவதார ஸ்தலம் காஞ்சிபுரமாக இருந்தாலும், பெருமாளின் சாஷாத்காரம் கிடைத்த இடமோ "திருவஹீந்திரபுரம்".


காலத்தில் உபநயனம் ஆகி சாஸ்திரங்கள் அனைத்தும் அத்யயனம் செய்து முடித்தும் திருப்தி ஏற்படவில்லை தேசிகருக்கு.

'படிப்பு தானே இவை.. படித்தது அனுபவத்தில் வந்தால் தானே முழுமை' என்று நினைத்தார் வேதாந்த தேசிகர்.

'வேதாந்தம் படித்தும் அனுபவத்தில் வரவில்லையென்றால், பெருமாள் கிடைக்க மாட்டார்' என்று புரிந்து கொண்டார் ஸ்வாமி தேசிகர்.


'சாஸ்திரமும் கற்றதன் பலனாக, பெருமாளை நேரில் பார்க்க வேண்டும்' என்று ஆசைப்பட்டார் ஸ்வாமி தேசிகர்.


இந்த சிந்தனையோடு, 'தீர்த்தம், மூர்த்தி, மலை, திவ்ய தேசம்' இவை நான்கும் சேர்ந்த திவ்ய தேசத்தை தேடி வந்தார் ஸ்வாமி தேசிகர்.


'கடில தீர்த்தம், ஓஷதி மலை, தேவநாத பெருமாள், திவ்ய தேசம்' என்று நான்கும் பொருந்தி இருக்கும் இடமாக திருவஹீந்திரபுரம் இருப்பதை கண்டு கொண்டார்.


இந்த திவ்ய தேசத்தில் இவருடைய மாமா "கிடாம்பி அப்புள்ளார்" என்ற பரம வைஷ்ணவர் இருந்தார்.

இவரை பார்க்க வந்த தேசிகர், தன் மாமாவிடம் "பெருமாள் தனக்கு ப்ரத்யக்ஷம் ஆவாரா?" என்று கேட்டார்.

உடனே அப்புள்ளார், தேசிகருக்கு, கருட மந்திரத்தை உபதேசம் செய்தார்.

மேலும்,

'எந்த கருடன் பெருமாளை இங்கு சாஷாத்கரிக்க வந்தாரோ! அந்த கருடனை குறித்து இங்கு நீ பக்தியோடு தியானம் செய். 

இந்த கருட மலையில் அமர்ந்து கொண்டு, கருட மந்திரத்தை அக்ஷரத்துக்கு லட்சம் ஜபம் செய்' என்று சொல்ல, 

அது போலவே தேசிகரும் பக்தி யோகத்தால் தியானம் செய்ய, கருடன் தேசிகருக்கு ப்ரத்யக்ஷமானார்.




கருடன் தேசிகருக்கு "ஹயக்ரீவ மந்திரத்தை தானே உபதேசிக்க", அதையும் ஈடுபாடு குறையாத பக்தியோடு ஜபம் செய்ய, பெருமாள், தேசிகருக்கு இந்த மலையில் ஹயக்ரீவ மூர்த்தியாகவே ப்ரத்யக்ஷமாகி காட்சி கொடுத்தார்.

ஹயக்ரீவ தரிசனம் ஏற்பட்டதுமே, படித்தது எல்லாம் அனுபவ பூர்வமாகி தெளிந்த ஞானம் ஏற்பட்டது தேசிகருக்கு.

சர்வ கலையும் தெரிந்தவராகி இருந்தார், ஸ்வாமி தேசிகர்.

இதனை கேட்டு அசூயை பட்ட ஒரு சிற்பி, 'சர்வ கலையும் தெரிந்தவர் என்றால், சிற்ப கலை தெரியுமா? அதிலும் தன்னையே சிற்பமாக அப்படியே செதுக்கி காட்ட முடியுமா?" என்று கேட்க, 

தேசிகர், 'தன்னையே சிற்பமாக வடித்து கொடுத்து விட்டார்".


ஒரு சிற்பிக்கு மற்றவர் உருவத்தை செதுக்குவது எளிது

தன் ரூபத்தை தானே வடிப்பது என்பது சிற்ப கலையில் தேர்ச்சி பெற்றவர்களால் மட்டுமே முடியும்.


'சிற்ப கலையும் தெரிந்தவர்' என்று தானே தன்னை அப்படியே சிலையாக வடித்து விட்டார் தேசிகர். 

அந்த சிற்பி அமைதியாக திரும்பி விட்டான். 

தானே செய்த தன் திருமேனியை தானே ஆலிங்கனம் செய்து கொண்டு, தன் சிஷ்யர்களுக்கு ஆராதனைக்காக கொடுத்து விட்டார் தேசிகர்.

தேசிகரே வடித்த, தேசிகரே ஆலிங்கனம் செய்து கொண்ட, அந்த அர்ச்சா திருமேனி இன்றும் உள்ளது. 


இப்படி பின்னாளில் தேசிகர் போன்ற பல அடியவர்க்கு, ப்ரத்யக்ஷமாகும் (மெய்யனாகிய) தேவநாத பெருமாள் (தெய்வ நாயகன்) வீற்று இருக்கும் இடம், திருவஹீந்திரபுரம் என்று, இனி வரும் பக்தர்களுக்கும் ப்ரத்யக்ஷமாகும் பெருமாள் என்று அப்போதே பாடி மங்களாசாசனம் செய்து விட்டார் திருமங்கையாழ்வார்


இங்கு திருமங்கையாழ்வார் "தெய்வ நாயகன்" என்று பாடியதை விளக்கி தேசிகர் சொல்லும் போது, 

தேவர்களுக்கும் நாயகன் என்ற கருத்தில் மட்டும் ஆழ்வார் இந்த பதத்தை குறிப்பிடவில்லை, 

தெய்வ சாரூப்யம் கொண்ட, வைகுண்டத்திலேயே இருக்கும் நித்ய பார்க்ஷதர்களான,  கருடனுக்கும், அஹீந்திரனுக்கும் தெய்வம் என்ற கருத்தில், திருமங்கையாழ்வார் 'தெய்வ நாயகன்" என்று பெருமாளை பாடுகிறார் என்று விளக்கினார். 

இதுவும் பொருத்தமானதே

மேலும், தெய்வ சாரூப்யம் கொண்ட கருடனுக்கும், அஹீந்திரனுக்கும் அனுக்கிரகம் செய்து கொண்டு பரமபத்திலேயே இருக்கலாமே பெருமாள். எதற்காக திருவஹீந்திரபுரம் வந்தார்? என்ற கேள்வி எழலாம்..

அதற்கான பதிலாக "அடியவர்க்கு மெய்யனாகிய" என்ற பதத்தில் ஆழ்வார் காட்டுவதை விளக்குகிறார் பெரியவாச்சான் பிள்ளை.


மோக்ஷன் அடைந்து விட்ட, நித்ய சூரிகளான கருடனும், அஹீந்திரனுமே (தெய்வ) வணங்கும் பெருமாள் (நாதன்), கருணையின் காரணமாக, தன்னை பல 'அடியார்களும் ஆச்ரயிக்க வேண்டுமே' என்று ஆசைப்பட்டு, வைகுண்டத்தை விட்டு விட்டு, கூடவே தெய்வ சாரூப்யம் அடைந்த கருடனையும், அஹீந்திரனையும் (தெய்வ) கூடவே அழைத்து கொண்டு வந்து விட்டார் என்று, 'அடியவர்க்கு மெய்யனாகிய" என்ற பதத்தில் உள்ள ஆழ்ந்த அர்த்தத்தை நமக்கு விளக்குகிறார்.

மேலும், தேசிகர் மங்களாசாசனம் செய்கிறார்.

தேசிகர் தன் அனுபவத்தை சொல்வதாக உள்ளது..

ப்ரணத சுர கிரீட ப்ராந்த மந்தார மாலா 

விகளித மகரந்த ஸ்நிக்த பாதாரவிந்த: |

பசுபதி விதி பூஜ்ய: |

பத்ம பத்ரா யதாக்ஷகா |

ஹனி பதிபுர நாத: |

பாது மாம் தேவநாத: |

 - தேசிகர்

திருவஹீந்திரபுர 'தேவநாத பெருமாளை' மங்களாசாசனம் செய்கிறார்

தமிழ் அர்த்தம்.

தேவர்கள், மந்தார புஷ்பத்தை எடுத்து கொண்டு வந்து தேவநாத பெருமாளின் திருவடியில் சமர்பிக்கிறார்களாம்.

அந்த மந்தாரபூக்களில் வழிந்து வரும் தேனாலேயே பெருமாளுக்கு பாத பூஜை (பாத்யம்) செய்தார்களாம் தேவர்கள்.

எந்த தேவர்கள் வந்தார்களாம்? முப்பத்து முக்கோடி தேவர்களோ?

அவர்களுக்கும் மேற்பட்ட தேவனான, கைலாயத்தில் உள்ள பசுபதியும், சத்ய லோகத்தில் உள்ள ப்ராம்மாவும் மிகவும் ப்ரகாசனான முகத்தோடு, இந்த தேவநாத பெருமாளின் இருபக்கமும் இருந்து கொண்டு பூஜித்து கொண்டிருக்க, 'தேவாதி தேவனாக இருக்கும், அஹீந்திரனுக்கு தேவனாக இருக்கும் இந்த பெருமாள் என்னை ரக்ஷிக்கட்டும்

என்று பாடுகிறார் தேசிகர்.

குருநாதர் துணை..


தேசிகர் (திருவஹீந்திரபுரம் - கடலூர்) மங்களாசாசனம் செய்கிறார்.. அர்த்தம் தெரிந்து கொள்வோமே ! திவ்ய தேசம் (பெருமாள்: தேவநாதன். தாயார்: ஹேமாம்புஜவல்லி))

திருவஹீந்திரபுரம் திவ்ய தேசம்…  (கடலூர் மாவட்டம் அருகில் உள்ளது.)

பெருமாள்:  தேவநாதன். தாயார்: ஹேமாம்புஜவல்லி

'ஆஸ்ரயித்து உபாசனை செய்யத்தக்க பெருமாள், தேவநாத பெருமாள்' என்கிறார் தேசிகர்.

தேசிகர் அவதரித்த ஸ்தலம் "தூப்புல்" (காஞ்சிபுரம்).

வேதாந்த தேசிகருக்கு, அவதார ஸ்தலம் காஞ்சிபுரமாக இருந்தாலும், பெருமாளின் சாஷாத்காரம் கிடைத்த இடமோ "திருவஹீந்திரபுரம்".


காலத்தில் உபநயனம் ஆகி, சாஸ்திரங்கள் அனைத்தும் அத்யயனம் செய்து முடித்தும், தேசிகருக்கு திருப்தி ஏற்படவில்லை.

'படிப்பு தானே இவை.. படித்தது அனுபவத்தில் வந்தால் தானே முழுமை' என்று நினைத்தார் வேதாந்த தேசிகர்.

'வேதாந்தம் படித்தும் அனுபவத்தில் வரவில்லையென்றால், பெருமாள் கிடைக்க மாட்டார்' என்று புரிந்து கொண்டார் ஸ்வாமி தேசிகர்.

'சாஸ்திரமும் கற்றதன் பலனாக, பெருமாளை நேரில் பார்க்க வேண்டும்' என்று ஆசைப்பட்டார் ஸ்வாமி தேசிகர்.





இந்த சிந்தனையோடு, 'தீர்த்தம், மூர்த்தி, மலை, திவ்ய தேசம்' இவை நான்கும் சேர்ந்த திவ்ய தேசத்தை தேடி வந்தார் ஸ்வாமி தேசிகர்.


'கடில தீர்த்தம், ஓஷதி மலை, தேவநாத பெருமாள், திவ்ய தேசம்' என்று நான்கும் பொருந்தி இருக்கும் இடமாக திருவஹீந்திரபுரம் இருப்பதை கண்டு கொண்டார்.

இந்த திவ்ய தேசத்தில் இவருடைய மாமா "கிடாம்பி அப்புள்ளார்" என்ற பரம வைஷ்ணவர் இருந்தார்.

இவரை பார்க்க வந்த தேசிகர், தன் மாமாவிடம் "பெருமாள் தனக்கு ப்ரத்யக்ஷம் ஆவாரா?" என்று கேட்டார்.

உடனே அப்புள்ளார், தேசிகருக்கு, கருட மந்திரத்தை உபதேசம் செய்தார்.

மேலும்,

'எந்த கருடன் பெருமாளை இங்கு சாஷாத்கரிக்க வந்தாரோ! அந்த கருடனை குறித்து இங்கு நீ பக்தியோடு தியானம் செய். 

இந்த கருட மலையில் அமர்ந்து கொண்டு, கருட மந்திரத்தை அக்ஷரத்துக்கு லட்சம் ஜபம் செய்' என்று சொல்ல, 

அது போலவே தேசிகரும் பக்தி யோகத்தால் தியானம் செய்ய, கருடன் தேசிகருக்கு ப்ரத்யக்ஷமானார்.

கருடன் தேசிகருக்கு "ஹயக்ரீவ மந்திரத்தை தானே உபதேசிக்க", 

ஈடுபாடு குறையாத பக்தியோடு ஹயக்ரீவ மந்திரத்தை ஜபம் செய்ய, பெருமாள், தேசிகருக்கு இந்த மலையில் ஹயக்ரீவ மூர்த்தியாகவே ப்ரத்யக்ஷமாகி காட்சி கொடுத்தார்.

ஹயக்ரீவ தரிசனம் ஏற்பட்டதுமே, படித்தது எல்லாம் அனுபவ பூர்வமாகி தெளிந்த ஞானம் ஏற்பட்டது தேசிகருக்கு.

சர்வ கலையும் தெரிந்தவராகி இருந்தார், ஸ்வாமி தேசிகர்.


இதனை கேட்டு அசூயை பட்ட ஒரு சிற்பி, 'சர்வ கலையும் தெரிந்தவர் என்றால், சிற்ப கலை தெரியுமா? அதிலும் தன்னையே சிற்பமாக அப்படியே செதுக்கி காட்ட முடியுமா?" என்று கேட்க, 

தேசிகர், 'தன்னையே சிற்பமாக வடித்து கொடுத்து விட்டார்".


ஒரு சிற்பிக்கு மற்றவர் உருவத்தை செத்துக்குவது எளிது

தன் ரூபத்தை தானே வடிப்பது என்பது சிற்ப கலையில் தேர்ச்சி பெற்றவர்களால் மட்டுமே முடியும்.


'சிற்ப கலையும் தெரிந்தவர்' என்று தானே தன்னை அப்படியே சிலையாக வடித்து விட்டார் தேசிகர். 

அந்த சிற்பி அமைதியாக திரும்பி விட்டான். 

தானே செய்த தன் திருமேனியை தானே ஆலிங்கனம் செய்து கொண்டு, தன் சிஷ்யர்களுக்கு ஆராதனைக்காக கொடுத்து விட்டார் தேசிகர்.

தேசிகரே வடித்த, தேசிகரே ஆலிங்கனம் செய்து கொண்ட, அந்த அர்ச்சா திருமேனி இன்றும் உள்ளது. 

தேசிகர் மங்களாசாசனம் செய்கிறார்.

தேசிகர் தன் அனுபவத்தை சொல்வதாக உள்ளது..

ப்ரணத சுர கிரீட ப்ராந்த மந்தார மாலா 

விகளித மகரந்த ஸ்நிக்த பாதாரவிந்த: |

பசுபதி விதி பூஜ்ய: |

பத்ம பத்ரா யதாக்ஷகா |

ஹனி பதிபுர நாத: |

பாது மாம் தேவநாத: |

 - தேசிகர்

திருவஹீந்திரபுர 'தேவநாத பெருமாளை' மங்களாசாசனம் செய்கிறார்

தமிழ் அர்த்தம்.

தேவர்கள், மந்தார புஷ்பத்தை எடுத்து கொண்டு வந்து தேவநாத பெருமாளின் திருவடியில் சமர்பிக்கிறார்களாம்.

அந்த மந்தாரபூக்களில் வழிந்து வரும் தேனாலேயே பெருமாளுக்கு பாத பூஜை (பாத்யம்) செய்தார்களாம் தேவர்கள்.

எந்த தேவர்கள் வந்தார்களாம்? முப்பத்து முக்கோடி தேவர்களோ?

அவர்களுக்கும் மேற்பட்ட தேவனான, கைலாயத்தில் உள்ள பசுபதியும், சத்ய லோகத்தில் உள்ள ப்ராம்மாவும் மிகவும் ப்ரகாசனான முகத்தோடு, இந்த தேவநாத பெருமாளின் இருபக்கமும் இருந்து கொண்டு பூஜித்து கொண்டிருக்க, 'தேவாதி தேவனாக இருக்கும், அஹீந்திரனுக்கு தேவனாக இருக்கும் இந்த பெருமாள் என்னை ரக்ஷிக்கட்டும்

என்று பாடுகிறார் தேசிகர்.

குருநாதர் துணை


Sunday 20 December 2020

ராவணன் என்ன பேசினான்? சீதா தேவி என்ன சொன்னாள்? ஹனுமானின் கேட்டுக்கொண்டு இருக்கிறார். வால்மீகி ராமாயணம் தெரிந்து கொள்வோமே!

மரத்தில் ஒளிந்து இருக்கும் ஹனுமானை குளிர்விக்க, சந்திரன் (நிலவு ) தன் மிதமான  குளிர்ச்சியை அந்த இரவில் கொடுத்து கொண்டு இருந்தார்.

அப்பொழுது, ஹனுமான், அளவுக்கு மீறிய சுமையை சுமந்து கொண்டு, கடலில் தத்தளிக்கும் படகு போல, தாளமுடியாத சோகத்தை சுமந்து கொண்டு இருக்கும், சீதையை தரிசித்தார்.

(ச ததர்ச தத: சீதாம் பூர்ண சந்திர நிபணனாம் | சோக பாரைர் இவ ந்யஸ்தாம் பாரைர் நாவம் இவாம்பஸி || - வால்மீகி ராமாயணம்)




அந்த வாயு புத்ரன் ஹனுமான், சீதா தேவியோடு, பயங்கர ரூபத்துடன் சூழ்ந்து இருக்கும் ராக்ஷஸிகளை பார்த்தார்.


அந்த ராக்ஷஸிகளில் சிலர் 

  • ஒரு கண்ணுடன் இருந்தார்கள்.
  • சிலர் ஒரு காதுடன் இருந்தார்கள், 
  • சிலர் துருத்திக்கொண்டு இருக்கும் காதுகளோடு இருந்தார்கள், 
  • சிலருடைய காது மாட்டின் காதுகள் போல இருந்தது.
  • சிலருடைய காது யானை காதுகள் போல இருந்தது,
  • சிலருக்கு காதுகளே இல்லை.
  • சிலருக்கு பெரிய காது இருந்தது.
  • சிலருடைய கால்கள் யானை காலாக இருந்தது,
  • சிலருக்கு குதிரை போன்ற காலாக இருந்தது.
  • சிலருக்கு மாட்டு கால் போன்று இருந்தது.
  • சிலருடைய கால்கள் நெளிந்து பல முடிச்சுக்களோடு இருந்தது. 
  • சிலருக்கு ஒரே ஒரு கண் இருந்தது. 
  • சிலருக்கு ஒரே கால் இருந்தது. 
  • சிலருக்கு கால் மிக நீளமாக இருந்தது.
  • சிலருக்கு கால்களே இல்லை.
  • சிலருக்கு தலை பெரிதாக இருந்தது.
  • சிலருக்கு கழுத்து நீண்டு இருந்தது.
  • சிலருக்கு மார்பகம் பெரிதாக இருந்தது.
  • சிலருக்கு வயிறு பெறுத்து இருந்தது 
  • சிலருக்கு முகம் மட்டும் அகண்டு இருந்தது.
  • சிலருக்கு மூக்கு நீண்டு இருந்தது.
  • சிலருக்கு நாக்கு நீண்டு வெளியில் தொங்கி கொண்டு இருந்தது.
  • சிலருக்கு நாக்கே இல்லை.
  • சிலருக்கு மூக்கே இல்லை.

  • சிலருக்கு சிங்கம் போன்ற முகம் இருந்தது.
  • சிலருக்கு மாடு போன்ற முகம் இருந்தது.
  • சிலருக்கு பன்றி போன்ற முகம் இருந்தது.

(ஹஸ்தி-பாதா மஹா-பாதா கோ-பாதா பாதசூடிகா | அதிமாத்ர சிரோ-க்ரீவா அதிமாத்ர குசோதரீ || - வால்மீகி ராமாயணம்)

மயிர் கூச்சரியும் படி, இப்படி பயங்கரமான ரூபத்தில் இருக்கும் ராக்ஷஸிகளை, மரத்தின் மேல் அமர்ந்து இருக்கும் ஹனுமான் பார்க்கிறார்.

பயங்கரமான ராக்ஷஸிகள் சூழ்ந்து இருக்க, மரத்துக்கு அடியில், தேவியும், ராஜகுமாரியுமான அப்பழுக்கற்ற சீதை அமர்ந்து இருப்பதை ஹனுமான் தரிசித்தார்.

பெரும் சோகத்தில் இருந்த சீதையின் நீண்ட கேசம் புழுதி மண்ணால் படர்ந்து இருந்தது.


வானில் ஜொலிக்கும் நக்ஷத்திரம் தன் புண்ணியங்கள் முடிந்ததால், ஒருவேளை பூமியில் வந்து விழுந்து விட்டதோ?

இந்த தேவி அலங்கார ஆபரணங்கள் இல்லாமல் இருக்கிறாளே !

அவளுக்கு இப்பொழுது ஆபரணமாக இருப்பது அவள் கணவனின் மீது உள்ள அன்பும், அக்கரையும் தான் என்று தெரிகிறதே!!


ஒரு தாமரை தனியாக இருந்தாலும், மண்ணில் விழுந்தாலும் அதன் பொலிவு குறையாதது போல, இந்த தேவியின் மேல் புழுதி படர்ந்து இருந்தாலும் பொலிவு குறையாமல் இருக்கிறாளே!

ராக்ஷஸ தலைவன் இவளை சிறைபிடித்து, இவளை தன் சொந்தங்களுடன் இருக்க விடாமல் செய்து விட்டானே!

இந்த தேவியை பார்த்தால், யானை கூட்டத்தில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு, சிங்கத்தின் கூட்டத்தில் அகப்பட்ட யானை போல இருக்கிறாளே!

(வியூதாம் சிம்ஹ சம்ருத்தாம் பத்தாம் கஜ வதூம் இவ | - வால்மீகி ராமாயணம்)

நிலவின் கிரணங்களை மேகங்கள் மறைத்து விடுவது போல தேவி இருந்தாள்.

வெகு நாட்கள் வாசிக்கப்படாத வீணை, போல இருந்தாள் தேவி.


இவள் தன் பதிக்கு சேவை செய்ய வேண்டியவள், ராக்ஷஸிகளால் சிறைபிடிக்கப்பட வேண்டியவள் இல்லை.

இந்த அசோக வனத்தின் மத்தியில், சோகம் என்ற பெரும் கடலில் மூழ்கி இருக்கிறாள்.

ரோஹிணி நக்ஷத்திரத்தை க்ரஹங்கள் பிடித்து இருப்பது போல துன்பப்படுகிறாள்.

ஹனுமான் இந்த தேவியை பூக்கள் இல்லாத கொடி போல பார்த்தார்.


புழுதி படர்ந்து இருந்தாலும், நிலவு போன்ற இந்த தேவி, புழுதியை மீறி கொண்டு பேரழகுடன் ஜொலித்தாள்.

அந்த தேவியின் ஆடைகளும் புழுதி படர்ந்து இருந்தது.

மான் போன்ற விழி கொண்ட அந்த தேவி கம்பீரமாகவும், அதே சமயம் மிகவும் மெலிந்து காணப்பட்டாள்.

அதே சமயம், தன் கற்பை திடமாக காத்து கொண்டு இருப்பவளாக காணப்பட்டாள்.


பெரும் பயத்துடன் அந்த மான் விழியாள் அங்கும் இங்கும் பார்த்து கொண்டிருந்தாள்.

(தினமும் ராவணன் வருவான். வந்து விடுவானோ? என்ற பயத்தில் சீதை சிங்கத்திடம் சிறைப்பட்ட மான் போல தவித்து கொண்டிருந்தாள்)


அவள் விடும் பெரு மூச்சில் வெளிப்பட்ட அக்னி காற்று, சுற்றி இருக்கும் இலைகளை எரித்து சாம்பலாக்கி விடுமோ

இவள் சோகத்தின் மறு உருவமோ?

இந்த தேவியின் சோகம், திடீரென்று பல மடங்காக அதிகரித்து காணப்படுகிறதே! 

ஆஹா! இந்த நிலையிலும், பொறுமையை இழக்காமல் இருக்கிறாளே ! 

அலங்காரம் ஆபாரணம் இல்லாமல் போனாலும், இந்த தேவி பொலிவுடன் இருக்கிறாளே!

(தாம் க்ஷமாம் சுவி பக்தாங்கி வின ஆபரண ஷோபிணீம் | - வால்மீகி ராமாயணம்)

ஹனுமான், தான் கண்டு கொண்டு இருப்பது, தான் தேடி வந்த சீதா தேவி தான் என்று உணர்ந்து கொண்டு, எல்லையில்லா ஆனந்தம் அடைந்தார்.

கண்களில் கண்ணீர் பெருக, தன் இதயத்தால் ராம, லக்ஷ்மணர்களை தியானத்தார்.




தான் பார்ப்பது சீதை தான் என்றாலும், அவசரப்பட்டு விடாமல், மரத்திலேயே ஒளிந்து தகுந்த சமயம் எதிர்பார்த்து இருந்தார் ஹனுமான்.

இரவு முடிய இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தது.

இரவு கொஞ்சம் கொஞ்சமாக வில ஆரம்பிக்க

வேதமும், வேத அங்கங்களும் அறிந்த ஹனுமான் காதில், 'வேத மந்திரங்கள்' கேட்டது.

(சடங்க வேத விதுஷாம் க்ரது ப்ரவர யாஜினாம் | சுஸ்ராவ ப்ரஹ்ம கோஷாம் ச வி-ராத்ரே ப்ரஹ்ம ராக்ஷஸாம் || - வால்மீகி ராமாயணம்)

அதை தொடர்ந்து, மங்கள இசை வாசிக்கப்பட

நீண்ட கைகள் கொண்ட வலிமைமிக்க ராவணன் தன் படுக்கையில் இருந்து எழுந்து கொண்டான்.


கலைந்து இருந்த மாலைகள், கேசங்களுடன் இருந்த ராவணனுக்கு, எழுந்தவுடனேயே சீதையின் நினைவு வந்தது.

சீதையை அடையும் ஆசையை அடக்க முடியாமல் இருந்தான் ராவணன்.

உடனே, 

தன்னை அலங்காரம் செய்து, ஆபரணங்களை அணிந்து கொண்டு, பூக்களும், பழங்களும் பூத்து குலுங்கும், தாமரை தடாகங்கள், பல விட பறவைகள் சூழ்ந்து இருக்கும் அசோக வனம் நோக்கி புறப்பட்டான்.


அவன் வந்து கொண்டிருந்த  சாலைகளில், நவரத்தினங்கள் பதித்து இருந்த தோரணங்களை பார்த்து கொண்டே, அசோக வனத்திற்குள் நுழைந்தான்.


நூற்றுக்கணக்கான தேவதை போன்ற பெண்கள் ராவணனை தொடர்ந்து வந்தனர்.

இப்படி வரும் ராவணனை கண்டால், 'இவன் தான் இந்திரனோ!' என்று தோன்றியது.


சிலர் தங்கத்தால் ஆன விளக்கை ஏந்தி கொண்டு இருந்தனர்.

சிலர் ராவணனுக்கு விசிறி கொண்டே வந்தனர்.

சிலர் தங்க பாத்திரத்தில் குளிர்ந்த நீரை கொண்டு வந்தனர்.

இன்னும் சிலர், ராவணன் அமர இருக்கைகளை தூக்கி கொண்டு வந்தனர்.

சிலர் ரத்தினங்கள் பதித்த குவளையில் மதுபானம் சுமந்து கொண்டு வந்தனர்.

இன்னும் சிலர், ராவணனுக்கு தங்கத்தால் ஆன நிலவு போன்ற குடையை எடுத்து கொண்டு வந்தனர்.


இன்னும் தூக்கம் களையாத பெண்களின் மத்தியில் ராவணன், மேக கூட்டத்தில் மிளிரும் மின்னல் போல அசோக வனத்திற்குள் நுழைந்தான்.

ராவணனோடு கூடவே நடந்து வந்த இந்த பெண்கள் வியர்த்து இருந்தனர்.

ஆனாலும் ராவணன் மீது இருந்த காதலாலும், மரியாதையாலும் கூடவே வந்தனர்.


சீதையின் நினைவை சுமந்து கொண்டே, தீய எண்ணத்துடன், காமத்துடன் வரும் ராவணன், சீதை இருக்குமிடம் அருகில் வந்ததும், மெதுவாக நடக்க ஆரம்பித்தான்.

மரத்தில் சமயம் எதிர்பார்த்து காத்து இருந்த ஹனுமான் காதில், இந்த பெண்கள் அணிந்து இருந்த ஒட்டியானங்கள், வளையல்கள் எழுப்பும் சத்தம் கேட்டது.

இந்த சத்தம் வரும் திசையை பார்த்த ஹனுமான், அளக்க முடியாத வீரமும், ஆண்மையும் கொண்ட ராவணன் வந்து கொண்டிருப்பதை பார்த்தார்.

எண்ணெய் விளக்கை பல பெண்கள் ஏந்தி கொண்டு இருக்க, அதன் நடுவில் ராவணன் ஜொலித்துக்கொண்டு இருந்தான்.

காமத்துடன், சுய பெருமையுடனும், அகம்பாவத்துடன் காணப்பட்டான் ராவணன்.

அவன் கண்கள் சிவப்பாக இருந்தது. அதே சமயம் ஆண் அழகன் போல காணப்பட்டான்.


ஹனுமான் அப்பொழுதும் மரத்திலேயே ஒளிந்து கொண்டு இருந்தார்.

அருகில் வர வர, ஹனுமான் ராவணனை நன்றாக பார்த்தார். 

கூடவே வந்து கொண்டிருந்த இளமையையும் அழகும் குடி கொண்டிருந்த பெண்களையும் பார்த்தார்.


இவர்களோடு, ராவணன் பறவைகளும் மான்களும் துள்ளி விளையாடும் சீதை சிறைபிடித்து வைத்து இருக்கும் இடத்திற்குள் நுழைந்தான்.


ஜொலிக்கும் நக்ஷத்திரங்களுக்கு நடுவே சந்திரன் ஜொலிப்பது போல, ராவணன் காணப்பட்டான்.


"அரண்மனையில் தூங்கி கொண்டிருந்த அதே ராவணன் தான், இங்கு வந்து இருக்கிறான்" என்று புரிந்ததும், 'வந்து இருப்பது நிச்சயம் ராவணன் தான்' என்று புரிந்து கொண்டார் ஹனுமான்.


மேலும் என்ன நடக்கிறது? என்று பார்க்க ஏதுவான திசையில் இருக்கும் கிளைக்கு தாவினார்.


ராவணனுடைய தேஜஸை பார்க்கும் போது, வீரத்தில்-பலத்தில்-அறிவில் மேன்மையுடைய ஹனுமானுடைய தேஜஸ் (பொலிவு) அன்று குறைவாக தெரிந்தது.

(ச ததாப்ய உக்ர தேஜா: சந்நி: தூத: தஸ்ய தேஜஸா | பத்ர குஹ்யாந்தரே சக்தோ ஹனுமான் சம்வ்ருதோ பவத் || - வால்மீகி ராமாயணம்)

மரத்தின் இலைகளுக்கு நடுவே அமர்ந்து கொண்டு ஹனுமான் நடப்பதை கவனித்து கொண்டு இருந்தார்.




கருமையான கூந்தலும், அழகான உடல் அமைப்பும் கொண்ட சீதா தேவியின் அருகில் வந்து நின்றான் ராவணன்.

(இப்படி தினமும் வந்து வந்து நிற்பான் ராவணன்.. கண்டபடி பேசுவான்…)


இளமையும், அழகும், ஆபரணங்கள் அணிந்து ஜொலிக்கும் ராவணனை, அப்பழுக்கற்ற சீதை தலை நிமிர்ந்து பார்த்தாள்.

வாழை மரம் புயல் காற்றால் அசைந்து பரிதவிப்பது போல, சீதை பரிதவித்தாள்.

உடனே சீதா தேவி, தன் கால்களை குறுக்கி தன் வயிற்று பகுதியை மறைத்து கொண்டு, இரு கைகளால் தன் மார்பை மறைத்து கொண்டு, அழ ஆரம்பித்தாள்.


சூறாவளி காற்று நடு கடலில் உள்ள கப்பலை நிலை குலைய செய்வது போல, ராவணன் சீதையை நிலைகுலைய செய்தான்.

சீதாதேவி வெறும் தரையில் அமர்ந்து இருந்தாள்.

தன் சபதத்திலிருந்த நுழுவாத பெண் போல காணப்பட்டாள் சீதை.

உயர்ந்து வளர்ந்த மரத்தில், முறிந்து விழுந்த கிளையோ? என்பது போல காணப்பட்டாள்.

மண்ணில் வீழ்ந்த தாமரை தன் பொலிவை மறைத்து கொண்டாலும் அழகை மறைக்க முடியாதது போல காணப்பட்டாள்!

சீதையின் மனம் என்ற குதிரை, வேகமாக ராமபிரானை நோக்கி சென்றது.

சீதாதேவி காய்ந்து போன இலை போல ஆகி விட்டாள்.

ராமபிரானோடு மனதில் ஐக்கியமாகிவிட்ட சீதை, கண்ணீரில் நனைந்தாள்

தனக்கு ஏற்பட்ட சோகத்தை அமைதியுடன் எதிர் கொண்டாள்.

சீதையின் சோகத்திற்கு முடிவும் தெரியவில்லை.

ஆனாலும், சீதையின் மனது அந்த ராமபிரானை தொடர்ந்து கொண்டு இருந்தது.


சீதா தேவி தன்னை கவ்வி உள்ள இந்த சோகத்தால், பல நாட்கள் பட்டினியால், ராம தியானத்தால், ராவணன் மேல் உள்ள பயத்தால் ஒடுங்கி இருந்தாள்.


உயிரை தரிக்க மட்டும் சிறிது உண்டாள். 

தன் கற்பே தன் சொத்து என்று கட்டி காத்து கொண்டிருந்தாள்.


'ராவணன் ஒழிய வேண்டும், ராமபிரானோடு சேர வேண்டும்' 

என்று கை குவித்து கொண்டு எப்பொழுதும் பிரார்த்தனை செய்து கொண்டே இருந்தாள் சீதா தேவி.

(ஆயாசமானாம் துக்கார்தாம் ப்ராஞ்லிம் தேவதாம் இவ | பாவேந ரகு முக்யஸ்ய தச க்ரீவ பராபவம் || - வால்மீகி ராமாயணம்)

தன் மரணத்தை தானே வரவழைத்து கொள்ள, ராவணன் சீதையிடம் ஆசை வார்த்தை பேசி மயக்க நினைத்தான்.


தன் எதிரே நிற்கும் ராவணனை பார்க்க சகிக்காமல், அப்பழுக்கற்ற சீதாதேவி அங்கும் இங்கும் ராமபிரானை எதிர்பார்த்து கொண்டு, தனியாக அழுது கொண்டே இருந்தாள்.


சீதாதேவியே கற்புக்கரசி

அவளுடைய ஒழுக்கமே இன்று அவளை பரிதவிக்க செய்கிறது.

ராவணன் சீதாதேவியிடம் பேசலானான்…

"என்னை பார். எதற்காக உன்னை மறைத்து கொண்டு உட்கார்ந்து கொண்டு இருக்கிறாய்?

நான் உன்னை விரும்புகிறேன், நீண்ட கண்கள் உடையவளே!

என்னை மதித்து கொஞ்சம் பார், என் அன்பே !


உன் அங்கங்கள் ஒவ்வொன்றும் எத்தனை அழகாக இருக்கிறது.

அனைவரது இதயத்தையும் இந்த அழகு பேதலிக்க செய்து விடும்.


மனிதர்களோ, தேவைக்கு ஏற்றபடி உருவத்தை மாற்றும் சக்தியுள்ள ராக்ஷஸர்களோ! இங்கு இல்லை.

என்னை கண்டு பயம் கொள்ளாதே!


பயந்த பெண்ணே! கடத்தி செல்வதும், மணமான பெண்ணை அணுகுவதும் ராக்ஷஸ தர்மம். 


நீ என்னை விரும்பி ஏற்றுக்கொள்ளாத வரை நான் உன்னை தொட மாட்டேன்.

நான் உனக்காக காத்து கொண்டு இருப்பேன்.

அது வரை, என் காமம் என்னுடனேயே கட்டுப்பாட்டில் இருக்கும்.

ஆதலால் பயப்படாதே! 

என்னிடம் பரஸ்பர நம்பிக்கை கொள். என்னை விரும்பு.

சோகப்படாதே!

(ராவணன் ஏன் சீதையை நெருங்க பயந்தான்? என்று அவனே பிறகு சொல்கிறான். இதை தெரிந்து கொள்ள இங்கே படியுங்கள்.)

முடிந்து கொள்ளாத கூந்தலுடன், தரையில் அமர்ந்து கொண்டு, ராமனையே நினைத்துக்கொண்டு, அழுக்கு ஆடையுடன், தேவையே இல்லாமல் பட்டினி இருந்து கொண்டு இருப்பது உனக்கு பொருத்தமே இல்லை.


என்னை ஆனந்தப்படுத்து. 

அற்புதமான ஆடைகள், சந்தனம் கலந்த நறுமண திரவியங்கள், பல வித தேவலோக ஆபரணங்கள், உயர்ந்த ரக பானங்கள், கட்டில்கள், இருக்கைகள், நீ கேட்க அருமையான இசைகள் நாட்டியங்கள், வாத்தியங்கள் இருக்கிறது. அனைத்தும் எடுத்துக்கொள்.


நீ பெண் வர்க்கத்திலேயே ரத்தினம் போன்றவள். இப்படி இருக்காதே!

உன் அங்கங்களில் அழகான ஆடைகளையும், ஆபரணங்களையும் அணிந்து கொள்.


என்னை விரும்பிய பிறகு, உனக்கு எந்த குறையும் ஏற்பட வாய்ப்பில்லை.

ஓடும் நதி எப்படி திரும்பாதோ, அது போல, உன்னுடைய உள்ள இளமை போனால் திரும்பாது

அழகானவளே! 

மூன்று உலகத்திலும் ஈடில்லாத உன் அழகை அந்த ப்ரம்ம தேவன் படைத்து விட்டு சோர்ந்து போய் இருப்பான் என்று நினைக்கிறேன்.

உன் அழகை பார்த்து, ஒரு வேளை 'ஆண் மகனாக இருந்தால்', ப்ரம்ம தேவனும் மதி மயங்கி இருப்பான் என்று நினைக்கிறேன்.

நான் உன் அங்கத்தில் உள்ள எந்த இடத்தை பார்த்தாலும், என்னால் அந்த இடத்தை விட்டு, என் கண்ணை எடுக்கவே முடியவில்லை.

(யத்யத் பஸ்யாமி தே காத்ரம் சீதாம்சு ஸத்ருஸானனே | தஸ்மிம் தஸ்மிந் ப்ருது ஸ்ரோனி சக்ஷு: மம நிபத்யதே || - வால்மீகி ராமாயணம்)

உன் அறியாமையை விட்டு விட்டு, எனக்கு மனைவியாக ஆகி விடு.

உன்னையே இந்த அனைத்து பெண்களுக்கும் மேல் அமர்த்தி பட்டத்து மகிஷி ஆக்குகிறேன்.

உனக்கே முதன்மை கிடைக்க செய்கிறேன்.

இந்த உலகங்களில் போர் செய்து, என்னென்ன செல்வங்கள் நான் கைப்பற்றினோ அனைத்தும் உனக்குத் தான்.

இந்த ராஜ்யமே உனக்கு தான்.

அது மட்டுமல்ல, நானே உனக்கு உரியவன் தான்.


வேண்டுமென்றால் சொல்.. 

உனக்காக இந்த உலகத்தை அடிமை படுத்தி, அனைத்தையும் உன் தந்தை ஜனகருக்கு உனக்காக தருகிறேன்.


குழந்தை போல விளையாடி பிடிவாதம் செய்பவளே! 

எந்த உலகத்திலும் என்னை எதிர்க்க ஆள் இல்லை.

என் வலிமை போர்க்களத்தில் அளவிடமுடியாதது.




சொர்க்கத்தில் உள்ள தேவர்களும், அசுரர்களும் கூட என்னால் விழ்த்தப்பட்டு, அவர்கள் வெற்றி கொடிகள் ஒழிக்கப்பட்டு விட்டது. அவர்களாலும் என் எதிரில் நிற்க முடியாது.

இந்த உயர்ந்த ஆபரணஙகள் உன்னை அலங்கரிக்கட்டும்.

உன் அனுமதியோடு, இந்த வேலையாட்கள் உனக்கு புது ஆடைகளும், ஆபரணங்களும் அணிவிப்பார்கள்.


அழகிய முகம் கொண்டவளே! நான் உன்னை சர்வ ஆபரணங்களோடு, புது ஆடைகள் அணிந்து பார்க்க ஆசைப்படுகிறேன்.

சந்தோஷத்தை அனுபவி. 

என்ன வேண்டுமோ பருகி கொள். நீ விருப்பப்பட்ட படி விளையாடு.

உன் உறவினர்கள் அனைவருக்கும் என்ன கொடுக்க ஆசைப்பட்டாலும் கொடு.

எனக்கு நீ ஆணை இடு.

என்னிடம் கூச்சமில்லாமல் விளையாடு.


என்னால் உன் உறவினர்கள் அனைவருமே இனி ஆனந்தமாக வாழ போகிறார்கள்.

என்னுடைய புகழையும், செல்வத்தையும் பார்.

மரத்தின் பட்டையை ஆடையாக அணிந்து கொண்டு அலையும் அந்த ராமனை வைத்து கொண்டு என்ன செய்ய போகிறாய்?

அவன் வெற்றியையும் தொலைத்தவன். செல்வத்தையும் தொலைத்தவன்.

அவன் கேவலம் ஒரு வனவாசி.

தரையில் படுத்து உறங்குபவன்.

செல்வமில்லாத ஏழை. 

அவன் உயிரோடு இன்னும் இருக்கிறானோ என்பதே எனக்கு சந்தேகம் தான்.

ராமன் இனி உன்னை பார்க்கவே இயலாது 

மின்னல் போன்ற நீ, மழை மேகங்கள் போன்ற என்னால் சூழப்பட்டு இருக்கிறாய்.

ராமன் உன்னை திருப்பி கொண்டு செல்லவே முடியாது.

உன் சிரிப்பு எத்தனை அழகானது.

உன் பல் வரிசையும் அழகு. 

உன் கண்கள் அழகு.

உன் விளையாட்டு குணமும் அழகு. 

எப்படி கருடனுக்கு நாகங்களை கண்டால் ஒரு ஈர்ப்பு வருமோ, அது போல, நீ என் இதயத்தை ஈர்க்கிறாய்.

(மனோ ஹரசி மே பீரு சுபர்ண: பன்னகம் யதா || - வால்மீகி ராமாயணம்)

நீ புழுதி படிந்து இருந்தாலும், உன்னை பார்த்தாலேயே, என் மனைவிகளின் மீது உள்ள ஆசை கூட மறைந்து போய் விடுகிறது.

(க்லிஷ்ட கௌசேய வசனாம் தன்வீமப்யன் அலங்கருதாம் | தாம் த்ருஷ்ட்வா ஸ்வேஷு தாரேஷு ரதிம் நோபலபாம்யஹம் || - வால்மீகி ராமாயணம்

என்னுடைய அந்தப்புரத்தில் இருக்கும் அனைத்து பெண்களுக்கும் நீயே தலைவியாக இரு. அனைத்து செல்வங்களையும் நீயே பெற்றுக்கொள், ஜானகீ !

(அந்தபுர நிவாசின்ய: ஸ்திரிய: சர்வ குணான்விதா: | யாவந்த்யோ மம சர்வாஸாம் ஐஸ்வர்யம் குரு ஜானகி || - வால்மீகி ராமாயணம்

மூவுலகிலும் உள்ள அழகிய பெண்கள் அனைவரும், என் அரண்மனையில் உள்ளனர்.

இவர்கள் அனைவரும், லஷ்மிக்கு பணிவிடை செய்வது போல, உனக்கு பணிவிடை செய்வார்கள்.


குபேரனின் செல்வமும், தேவர்களின் செல்வமும் உனக்கு தான். எடுத்துக்கொள்.

அனைத்தையும் என்னோடு அனுபவி.


தவத்திலும், அழகிலும், வலிமையிலும், செல்வத்திலும், பொலிவிலும், புகழிலும், ராமன் எனக்கு நிகரில்லை.

(ந ராம தபஸா தேவி ந பலேன ந விக்ரமை: | ந தனேன மயா துல்ய தேஜஸா யக்ஷஸ்சாபி வா || - வால்மீகி ராமாயணம்)

விருப்பப்பட்டபடி எது வேண்டுமோ அருந்து, விளையாடு, ஆனந்தமாக இரு.


உனக்கு என் செல்வம் அனைத்தையும், ராஜ்யத்தையும் தருகிறேன்.

என்னை விரும்பு. என்னை குதூகலப்படுத்து.

ஏ அழகானவளே! உன் உறவினர்கள் அனைத்து ஆனந்தமும் அடையட்டும்.

உன்னை இந்த ஆபரணங்களால் அலங்கரித்து கொள்.

என்னோடு ஆனந்தமாக மரங்கள் நிறைந்த இந்த தோட்டத்தில் விளையாடு."

இப்படி வாய்க்கு வந்தபடி, பேசிய ராவணனை பார்த்து, துன்பம் நிறைந்த குரலோடு சீதா தேவி பேச தொடங்கினாள்..

மனதில் ராமபிரானையே நினைத்து கொண்டு, கற்புக்கரசியான சீதா தேவி, ஒரு புல்லை பிடுங்கி ராவணன் முன்பாக வைத்து விட்டு, சிரித்து கொண்டே பேசத் தொடங்கினாள்.


சீதா தேவி ராவணன் முன் வைத்த புல் பல அர்த்தங்களை தோற்றுவித்தது...


* ஒரு பெண் அமர்ந்து இருக்க, ஒரு ஆண் நின்று கொண்டு பேச வேண்டாமே! என்று நினைத்து, ராவணனுக்கு புல் ஆசனம் போட்டது போல இருந்ததாம்..


* மற்ற ஆண்களிடம் பேசும் போது கோஷா நியமத்துடன் பேசும் சீதாதேவி, ராவணனிடம் பேச வேண்டும் என்பதற்காக, இந்த புல்லையே தனக்கு திரையாக போட்டு கொண்டது போல இருந்ததாம்


* ராவணா! 'நீ என்னிடம் இப்போது பேசியது இந்த புல்லுக்கு சமமாக இருந்தது' என்பது போல இருந்ததாம்.


* ராவணா! 'விலங்குக்கு தான், தன் மனைவி, பிறர் மனைவி என்ற தர்மமே கிடையாது. நீயும் ஒரு விலங்காக இருப்பதால், இத்தனை நேரம் கத்தியதற்கு இதோ புல் போடுகிறேன்... சாப்பிடு' என்பது போல இருந்ததாம்.


* ராவணா! நீ உன்னை பராக்கிரமசாலி என்று சொல்லி கொள்கிறாயே! ராமரையும் லக்ஷ்மணனையும் அப்புறப்படுத்தி விட்டு என்னை கடத்திய போதே உன் பராக்கிரம் என்ன என்று தெரிந்து விட்டது.. உன் பராக்கிரம் இந்த புல்லுக்கு சமமாக இருந்தது' என்பது போல இருந்ததாம்.


* ராவணா! நீ வைத்திருக்கும் ஐஸ்வர்யம் அனைத்தும், என்னை பொறுத்தியவரை இந்த புல்லுக்கு சமம்' என்பது போல இருந்ததாம்.


* ராவணா! ராஜரிஷியாக இருக்கும் என் தகப்பனார் ஜனகருக்கும், நீ வைத்திருக்கும் ஐஸ்வர்யம் அனைத்தும், இந்த புல்லுக்கு சமம்' என்பது போல இருந்ததாம்.


* ராவணா! 'எனக்கு துணை யாருமில்லை என்று நினைக்காதே! என்னை தீண்ட நினைத்த காகாசுரனை தண்டிக்க, அருகில் இருந்த ஒரு புல்லை எடுத்து தான், ப்ரம்மாஸ்திரமாக ப்ரயோகம் செய்தார் ஸ்ரீ ராமர். அன்று ராமர் புல்லையே ஆயுதமாக தொடுத்தார். அந்த புல்லை உனக்கு ஞாபகபடுத்தி எச்சரிக்கிறேன்' என்பது போல இருந்ததாம்.


* ராவணா! 'ராமபிரான் மட்டும் தான் புல்லை அஸ்திரமாக விட முடியும் என்று நினைத்து விடாதே! என் கற்பு என்ற அக்னியால், இன்று நான் உன் முன் வைக்கும் புல்லே உன்னை பொசுக்கிவிடும்..ஜாக்கிரதை' என்பது போல இருந்ததாம்.


* ராவணா! 'எனக்கு இங்கு துணை யாருமில்லை என்று நினைக்காதே! அன்று தூணில் இருந்து வெளிப்பட்டு ஹிரண்யகசிபுவை கொன்றார். இன்று இந்த புல்லிலிருந்தே வெளிப்பட்டு உன்னை கிழித்து எறிந்து விடுவார்..ஜாக்கிரதை' என்பது போல இருந்ததாம்.


இப்படி பல அர்த்தங்கள் ராவணன் மனதில் தோற்றுவிப்பது போல ஒரு புல்லை எடுத்து வைத்து விட்டு, சிரித்து கொண்டே பேச தொடங்கினாள் சீதாதேவி...


"என் பற்றிய நினைவை நிறுத்து. உன் சொந்தங்கள் நன்றாக இருக்க அவர்களின் மீது உன் கவனத்தை திருப்பு.

பாவ காரியங்கள் செய்பவனுக்கு ஒரு போதும் தெய்வீக அனுபவங்கள் கிடைக்காது. அது போல நீ என்னை ஒருபோதும் நெருங்க முடியாது.

நல் ஒழுக்கமுள்ள நான், உயர்ந்த குடும்பத்தில் பிறந்து, உயர்ந்த குடும்பத்தில் உள்ளவரை மணம் செய்து கொண்டு, எந்த கீழ்த்தரமான காரியமும் செய்வேன் என்று எதிர்பார்க்காதே!" 

என்று சொல்லிக்கொண்டே சீதாதேவி, ராவணனை பார்க்க விருப்பமில்லா சீதை அவனுக்கு எதிர் திசையில் திரும்பி கொண்டு, மேலும் பேச ஆரம்பித்தாள்.

"நான் வேறொருவரின் ஒழுக்கம் மீறாத மனைவி. உன்னுடையவள் அல்ல. 

நீ தர்மத்தில் ஒழுக்கமாக வாழ்பவர்களை கொஞ்சம் பார்.

அவர்களை போல நாமும் வாழ்வோமே! என்று முயற்சி செய்.


உன் மனைவிகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று நீ  நினைப்பது போல தானே மற்றவர்கள் மனைவி பாதுகாக்கப்பட வேண்டும்?

மற்றவர்கள் எண்ணத்தை புரிந்து கொள்ள கற்று கொண்டு, நீ உன் மனைவிகளுடன் திருப்தி கொள்.


எவன் ஒருவன் தன் மனைவி போதாது என்று திருப்தி கொள்ளாமல், புலன்கள் அடங்காமல், காம புத்தியுடன் இருக்கிறானோ, அவன் மற்றவர்களின் மனைவிகளால் பெரும் அவமானத்திற்கு உள்ளாவான்.

இங்கு ஒரு நல்லவன் கிடையாதா?

அல்லது, நீ அப்படிப்பட்ட நல்லவர்கள் சொல்வதை கேட்கும் பழக்கமே கிடையாதா?

அல்லது, நல்லவர்கள் இருந்தும்,  உன்னுடைய புத்தி இப்படி கீழ்த்தரமானதாகவே உள்ளதா?

(இஹ சந்தோ ந வா சந்தி சதோ வா ந அனுவர்தசே | வசோ மித்யா ப்ரநீத ஆத்மா பத்யமுக்தம் விசேக்ஷனை: || - வால்மீகி ராமாயணம்

நீ நல்லவர்கள் சொல்வதை கேட்காமல், முட்டாள்கள் பேச்சை கேட்டு கொண்டு, உன் ராக்ஷஸ இனத்தையே அழிக்க போகிறாய்.

ஒழுக்கமில்லாத அரசனால், செல்வ செழிப்பு உள்ள நகரமும், நாடும் கூட அழிந்து போகும்.

அது போல, 

உன்னை போன்ற ஒரே ஒருவன் செய்யும் தவறால், இந்த செல்வ செழிப்பு மிக்க இலங்கை வேகமாக அழியப்போகிறது.

குறுகிய புத்தி கொண்ட நீ, இதுவரை செய்த கீழ்த்தரமான செயலால் அழிய போவதை கண்டு, நல்லவர்கள் ஆனந்தம் அடையப் போகிறார்கள்.


'பாவி' என்ற உன்னை உலகம் சொல்லப்போகிறது.

நீ கஷ்ட காலத்தை சந்திக்கும் போது 'நல்லவேளையாக ராவணன் ஒழியப்போகிறான்' என்று பேச போகிறார்கள்.

உன்னுடைய சக்தியாலோ, செல்வத்தாலோ என்னை மயக்க முடியாது.

சூரியனையும் அதன் கிரணங்களையும் பிரிக்க முடியாதது போல, நான் என் ராகவனை விட்டு பிரியாதவள்.

ஒரு ஒழுக்கமுள்ள பெண் தன் கணவனை விட்டு, வேறொருவன் கைகளை தலையணையாக வைத்து உறங்குவாளோ?

(உபதாய புஜம் தஸ்ய லோகநாதஸ்ய ஸத்க்ருதம் | கதம் நாமோ பதாஸ்யாமி புஜ மன்யஸ்ய கஸ்ய சித் || - வால்மீகி ராமாயணம்)

ஒழுக்கம் உள்ளவன் ஞானத்தை கொண்டு இருப்பது போல, நான் ராகவனுக்கு சொந்தமானவள்.

ஒரு பெண் யானையை, அதனுடைய ஆண் யானையிடம் சேர்ப்பது போல, என்னை ராமபிரானிடம் அனுப்பி விடு.


நீ வெகு நாள் அழிக்கப்படாமல் வாழ நினைத்தால், ராமபிரானோடு நட்பு கொள்.

ராமபிரான் தன்னை அண்டியவர்களை, ஒரு தந்தை போல பார்த்து கொள்வார் 

உயிர் வாழ ஆசை இருந்தால், அவரோடு நட்பு கொள்.

அவருக்கு முன்னால் என்னை அனுப்பி, அவரை மகிழ்ச்சி படுத்து.

இதுவே உனக்கு நலன். இல்லையேல் நீ மரணித்து போவாய்.

இந்திரன் கூட தன் வஜ்ராயுதத்தை கீழே போடலாம். 

எமன் கூட நீ நீண்ட நாள் வாழ வழி விடலாம்.

ஆனால், 

உலகத்திற்கே தலைவனான ராகவனின் கோபத்தில் இருந்து நீ தப்பிக்க முடியாது.

(த்வத்விதம் ந து சங்க்ருத்தோ லோகநாத: ச ராகவா | - வால்மீகி ராமாயணம்)

சீக்கிரத்தில், நீ ராகவனின் வில்லிலிருந்து புறப்படும் இடி போன்ற சத்தத்தை கேட்க போகிறாய்.

அந்த கோதண்டத்தில் இருந்து அம்பு மழை பொழிய போகிறது.


ராம, லக்ஷ்மணர்களின் அம்பு மழையில் இந்த நகரத்தில் உள்ள ராக்ஷஸர்கள் வீழப்போகிறார்கள்.

உன்னுடைய கோட்டையை ஒரு அங்குலம் கூட விடாமல் அம்புகளால் நிரப்பி விடுவார்கள்.

ராகவன் என்ற கருடன் வந்து, இங்கு இருக்கும் பாம்பு போன்ற ராக்ஷஸர்களை கொத்தி பறக்கப் போகிறது.


விஷ்ணு ஒரே நொடியில் மூன்றடியில் ப்ரம்ம லோகம் வரை அளந்து அசுரர்களிடமிருந்து கைப்பற்றியது போல, ராகவன் என்னை உடனே எடுத்து சென்று விடுவார்.


14000 ராக்ஷஸர்களை ஜநஸ்த்தானத்தில் ஒரே ஆளாக ஒழித்த ராகவனிடம் நேரிடையாக போர் புரிய இயலாதவன் நீ. அதனால் தானே இந்த பெரிய குற்றத்தை செய்தாய்.




அற்பனே!  சிங்கம் போன்ற சகோதரர்கள் ஆசிரமத்தில் இல்லாத சமயத்தில் தானே என்னை கடத்தினாய்.

ராம, லக்ஷ்மண சகோதரர்களை தீண்டிய காற்று உன் மீது பட்டால் கூட உன்னால் ஸ்திரமாக நிற்க முடியாது.

ராமபிரானோடு நீ பகை கொள்வது உனக்கு நல்லதல்ல.

(ந ஹி கந்தம் உபாக்ராய ராம லக்ஷ்மண யோஸ் த்வயா | சக்யம் சந்தர்சன ஸ்தாதும் சுனா சார்தூலயோ: இவ || - வால்மீகி ராமாயணம்)

இந்திரன் கையிலிருந்து புறப்பட்ட ஆயுதம், வ்ருத்ராசுரன் கையை அறுத்தது போல, ராமபிரானால் ஒழிக்கப்பட போகிறாய்.


சூரியன் தன் அக்னி கிரணங்களால் தண்ணீரை உறுஞ்சி விடுவது போல, ராம லக்ஷ்மணர்களிடமிருந்து புறப்படும் அம்புகள் உன் உயிரை உறிஞ்சி விடும்.


நீ குபேரனிடம் தஞ்சம் புகுந்தாலும் சரி, வருணனிடம் தஞ்சம் அடைந்தாலும் சரி, ராம பானத்திலிருந்து நீ எங்கு ஓடினாலும் தப்பிக்க முடியாது.

பெரிய இடியால் பெரிய மரம் கருகி சாய்வது போல, நீ அழிக்கப்பட்டு விடுவாய்." என்று கர்ஜித்தாள் சீதை.

(கிரிம் குபேரஸ்ய கதோ தவாலயம் சபாம் கதோ வா வருணஸ்ய ராஞ: | அஸம்சயம் தாசரதேர்ந மோக்ஷ்யசே மஹாத்ரும: கால ஹதோ சனேரிவ || - வால்மீகி ராமாயணம்)

சீதாதேவியின் கடுமையான சொற்களை கேட்டு, ஆண்மகனான ராவணன் கடும் கோபத்துடன் பேசலானான்…

"எத்தனைக்கு எத்தனை சாந்தமாக ஒரு ஆண்மகன் ஒரு பெண்ணிடம் பேசுகிறானோ! அத்தனைக்கு அத்தனை அவன் அவளுக்கு அடி பணிந்து போவான்.

எத்தனைக்கு எத்தனை கனிந்த வார்த்தை பேசுவானோ! அத்தனைக்கு அத்தனை அவளால் அவமானப்படுத்தப்படுவான்.

(யதா யதா சாந்த்வயிதா வஸ்ய" ஸ்த்ரீனாம் ததா ததா |

யதா யதா ப்ரியம் வக்தா பரிபூத: ததா ததா || - வால்மீகி ராமாயணம்)

அடங்காத குதிரையை தேரோட்டி அடக்குவது போல, எனக்குள் ஏற்படும் அடங்காத கோபத்தை, உன் மீது உள்ள ஆசையின் காரணத்தால் அடக்கி கொண்டு இருக்கிறேன்.

நாம் விரும்புபவர்கள் மீது பொதுவாக இரக்கம் ஏற்படும்.

அதன் காரணத்தாலேயே, காட்டில் வனவாசியாக வாழும் ஒருவனை நினைத்து கொண்டு, என்னை அவமதித்த உனக்கு, மரண தண்டனை கொடுக்காமல் இருக்கிறேன். 

நீ பேசிய ஒவ்வொரு வார்த்தைக்கும் உனக்கு மரண தண்டனை கொடுத்து இருக்க வேண்டும்."

இப்படி பேசிய ராவணன், மேலும் சீதாதேவியை பார்த்து பேசலானான்..

"இன்னும் 2 மாதங்கள் தான் உனக்கு அவகாசம்.

அதற்கு பிறகும் நீ என் படுக்கைக்கு வர மறுத்தால், என் சமயலறையில், உன்னை துண்டு போட்டு, காலை உணவாக சாப்பிட்டு விடுவேன்." என்று சொன்னான்.

(த்வெள மாசௌ ரக்ஷிதவ்யோ மே யோ வதிஸ்தே மயா க்ருத: |

தத: சயனம் ஆரோஹ மாமா த்வம் வர வர்ணினி || ஊர்த்வம் த்வாம்யாம் து மாசாப்யாம் பர்தாரம் மாம் அனிச்சதீம் |

மம த்வாம் ப்ராத ராசார்தம் ஆரபந்ததே மஹானஸே || - வால்மீகி ராமாயணம்

சீதையிடம் ராவணன் இப்படி பேச, ராவணனின் மனைவிகளாக இருந்த கந்தர்வ பெண்கள், சீதையின் நிலை கண்டு வருந்தினர்.

அவர்களின் முக பாவனையால், சீதைக்கு சமாதானம் செய்தனர்.

இதை கவனித்த சீதை, தன்னை நிதானப்படுத்தி கொண்டு, ராவணனை பார்த்து பேசலானாள்

"நீ நன்றாக வாழ வேண்டும் என்று இந்த நகரத்தில் நினைப்பவர்கள் யாரும் இல்லை என்று நிச்சயமாக தெரிகிறது. 

யாரும் உன்னுடைய கீழ்த்தரமான வேலையை தடுக்க மாட்டார்கள்.

சசி தேவி இந்திரனுக்கு எப்படியோ, அது போல, நான் தர்மமே உருவானவரின் மனைவி. 

கீழ் தரமான உன்னை தவிர, யார் என்னை மனதால் ஆசைப்படபோகிறார்கள்?.

கீழ்த்தர புத்தி கொண்ட ராக்ஷஸனே! 

எல்லையில்லா பெருமை கொண்ட ராமபிரானின் பத்னியான என்னிடம் கடும் சொற்களை பேசி விட்டு, எப்படி உன் பாவத்தை கழிக்க போகிறாய்?


ராமபிரான் மதம் கொண்ட யானை போன்றவர். அவருக்கு முன்னால் நீ ஒரு முயல்.

மதம் கொண்ட யானைக்கு முன் போர் செய்ய முயல் ஆசைப்படுமா?

(யதா த்ருப்தஸ்ச மாதங்க: சசஸ் ச சஹிதொள வனே |

ததா த்விரதவத்ராம் ஹஸ்த்வம் நீச சசவத்ஸ்ம்ருத: || - வால்மீகி ராமாயணம்

ஒரு முறை கூட நேரில் ராமபிரானை சந்திக்காமல், அவரை பற்றி கீழ் தரமாக பேசுகிறாயே! உனக்கு வெட்கமாக இல்லை?

(ச த்வம் இக்ஷ்வாகு நாதம் வை க்ஷிபன் இஹ ந லஜ்ஜசே |

சக்ஷுஷோ விஷயம் தஸ்ய ந தாவத் உப கச்சசி || - வால்மீகி ராமாயணம்

என்னை பார்க்கும் உன்னுடைய இந்த குரூரமான அசிங்கமான கண்கள் ஏன் இன்னும் கீழே விழவில்லை?

தசரதரின் மருமகளான என்னை பற்றி தரம் தாழ்த்தி பேசிய உன்னுடைய நாக்கு இன்னும் துண்டு துண்டாகவில்லையே !


நான் பதிவ்ரதை என்ற தபசில் இருப்பதால், ராமபிரானின் அனுமதி இல்லாததால், உன்னை என்னுடைய பாதிவ்ரதத்தால் பொசுக்காமல் இருக்கிறேன்.

என்னை ராமபிரானை விட்டு கடத்தவே முடியாது. 

இது நடந்து இருக்கிறது என்பதாலேயே, விதி உன் மரணத்தை தீர்மானித்து விட்டது என்று உணர்கிறேன்.




நீ உன்னையே பலவான் என்றும், சூரன் என்றும் சொல்லிக்கொள்கிறாய்.

அடுத்தவன் வீட்டில் புகுந்து, அந்த வீட்டில் உள்ள புருஷன் வெளியே இருக்கும் போது, அவனுடைய மனைவியை கடத்துவது தான் வலிமையா? உனக்கு வெட்கமாக இல்லை?"

என்று மீண்டும் கர்ஜித்தாள்.


சீதா தேவியின் பேச்சை கேட்ட ராவணனுக்கு, கோபம் பீறிட்டு கண்களில் தெரிந்தது.


கருமையான மேகம் போல, நீண்ட கைகளுடைய, உறுதியான கழுத்து கொண்ட ராவணன், சிங்கம் போல அங்கும் இங்கும் நடந்தான்.

அவன் கண்களும், நாக்கும் ஜொலிக்க, அவன் கிரீடம் அசைந்தது.

உயரமானவனாக இருந்தான். 

மிகவும் அழகான ஆபரணங்கள், கைக்கு காப்பு அணிந்து இருந்தான்.

அவனது இடுப்பில் அலங்காரமாக  சுற்றிக்கொண்டு இருக்கும் ஆபரணத்தை பார்த்தால், மந்திர மலையை கட்டி இருக்கும் வாசுகியை போல இருந்தது.

இவன் இரு கைகள் தான் மந்திர மலையோ? என்று தோன்றியது.

இவன் காதுகளில் அணிந்து இருந்த குண்டலங்கள் உதய சூரியனோ? என்பது போல இருந்தது.

ராவணனை பார்த்தால், எதை கேட்டாலும் கொடுக்கும் கற்பக வ்ருக்ஷமோ? என்று தோன்றியது.

இத்தனை ஆபரணங்கள் அணிந்து அலங்கரித்து கொண்டு இருந்தாலும், ராவணன் 'சுடுகாட்டு நிலம் போல' பயங்கரமாக காணப்பட்டான்.


சீதையை பார்க்க பார்க்க அவன் கண்கள் சிவந்தது.

அவளை தன் வசம் திருப்ப முடியாததால் பெருமூச்சு விட்ட ராவணன், மேலும் பேசலானான்…

"நீ இன்னும் அந்த ப்ரயோஜனமில்லாத, செல்வத்தை தொலைத்து நிற்கும் ராமனையா நினைத்து கொண்டு இருக்கிறாய்?

எப்படி சூரியன் இருளை விரட்டுமோ, அது போல, இப்பொழுதே உன்னை கொன்று விடுகிறேன்"

என்று சொன்ன ராவணன், ஒரு கண், ஒரு காது, யானை கால், நீண்ட மூக்கு என்று இருக்கும் பலவிதமான பயங்கரமான ராக்ஷஸிகளை பார்த்து கட்டளை இட்டான்.

"இந்த சீதையை எந்த முயற்சி செய்தாவது வெகு சீக்கிரத்தில் என் ஆளுமைக்கு கொண்டு வர வேண்டும்.

பயமுறுத்தி பார். சமாதானம் செய்து பார். 

என்ன கேட்கிறாளோ கொடுத்துப் பார். 

கடும் சொற்களால் இவளை வேதனைப்படுத்து"

என்று ராக்ஷஸிகளுக்கு கட்டளை இட்டு கொண்டு இருக்க, தன்யமாலினி ராவணனின் அருகில் வந்து பேச தொடங்கினாள்..

"பேரரசே! என்னுடன் விளையாடுங்கள். சீதையை ஏன் கொடுமைப்படுத்துகிறீர்கள்?

அவளே சோகத்தினால் வெளுத்து போய் இருக்கிறாள்.

அவளை பார்க்கவும் பரிதாபமாக இருக்கிறது.


இவள் ஒரு சாதாரண மனித பிறவி. நீங்களோ ராக்ஷஸர்களின் அரசன். மனிதர்களை விட உயர்ந்தவர்கள் ராக்ஷஸர்கள்.

உங்கள் கைகளில் படுத்து உலக செல்வத்தை அடையும் பாக்கியம் அவளுக்கு இல்லை என்றே நினைக்கிறேன்.


விருப்பமில்லாத பெண்ணிடம், காமத்தோடு ஒரு ஆண்மகன்  உறவாடினால், அவன் உடல் பாரமே அவளுக்கு வேதனை தரும்.

இருவரும் விருப்பப்பட்டு உறவாடினால், இருவருமே திருப்தி கொள்வார்கள்" என்று பேசினாள்.

(அ-காமம் காமயானஸ்ய சரீரம் உபதப்யதே |

இச்சந்தீம் காமயானஸ்ய ப்ரீதி: பவதி சோபனா || - வால்மீகி ராமாயணம்)

இதை கேட்ட ராவணன், இடி இடிப்பது போல சிரித்து விட்டு, தன் அரண்மனைக்கு திரும்பினான்.

கூடவே வந்த கந்தர்வ பெண்களும், நாக கன்னிகைகளும், ராவணனோடு அரண்மனைக்கு திரும்பினர்.