Followers

Search Here...

Sunday 23 January 2022

பரகால நாயகி, வயலாலி மணவாளனோடு தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை சொல்கிறாள்... பாசுரம் அர்த்தம் தெரிந்து கொள்வோம்.. நைவளமொன் றாராயா

பரகால நாயகி, வயலாலி மணவாளனோடு தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை சொல்கிறாள். 

நைவளம் ஓன்று ஆராயா நம்மை நோக்கா

நாணினார் போல் இறையே 

நயங்கள் பின்னும் செய்வளவில் 

என் மனமும் கண்ணும் ஓடி

எம்பெருமான் திருவடிக் கீழ் அணைய 

இப்பால் கைவளையும் மேகலையும் காணேன்

கண்டேன் கனம் மகர குழை இரண்டும் 

நான்கு தோளும்

எவ்வளவு உண்டு எம்பெருமான் கோயில்? என்றேற்கு

இது வன்றோ எழில் ஆலி, என்றார் தாமே

- திருநெடுந்தாண்டாகம் (திருமங்கையாழ்வார்)

தன்னுடைய 'நாயகன்' தான் இவர்! என்று தெரிந்தும், வயலாலி மணவாளன் கோதண்ட ராமராக வந்திருப்பதால், அவரை கண்டு அஞ்சி, பரகாலநாயகி அவரை பார்க்காமல் நின்றாள்.

"பரகால நாயகி தன்னை பார்ப்பாள்" என்று தான் வயலாலி மணவாளன் வீதி உலாவே வந்திருந்தார். 

தன்னை பார்க்காமல் முகத்தை திரும்பி கொண்டு இவள் இருப்பதை பார்த்து விட்டு, 'இந்த கோதண்டம் தான் இவளை தடுக்கிறது போலும். இவள் ஒரு கோபிகையாயிற்றே! கண்ணனாக வந்தால் தானே இவள் நம்மை பார்ப்பாள்" என்று தீர்மானித்து 'இந்த வேஷம் வேண்டாம்!' என்று கோதண்டத்தை வைத்து விட்டு, கண்ணனாக அலங்காரம் செய்து  கொண்டார்.

ராகத்தை, தமிழில் "பண்" என்று அழைக்கிறோம்.

காலையில் மனதில் இன்பம் உண்டாக, "நைவளம்" (கம்பீர நாட்டை) என்ற பண் இசைப்பார்கள்.

நண்பகலில் மனதில் இன்பம் உண்டாக "பாலை" என்ற பண் இசைப்பார்கள்.

மாலையில் மனதில் இன்பம் உண்டாக "ஆம்பல்"  என்ற பண் இசைப்பார்கள்.

இரவில் அச்சம் ஏற்படாமல் இருக்க, "குறிஞ்சி" (ஹரிகாம்போதி) என்ற பண் இசைப்பார்கள்.

அது போல, 

படுமலைப்பாலை (கரகரப்ரியா), காந்தார பஞ்சமம் (கேதார கௌளம்), இந்தளம் (ஆனந்தபைரவி), அரும்பாலை (கல்யாணி), இளிப்பண் (சுத்த தன்யாசி), கொல்லி (சுத்த சாவேரி) போன்று பல ராகங்கள் (பண்) உள்ளன.

ஒவ்வொரு ராகத்துக்கும் அதற்குரிய தேவதைகள் இருக்கிறார்கள்.

கண்ணன் 'வேணுகானம் செய்யலாம்' என்று குழல் எடுத்து விட்டால், உடனேயே அனைத்து தேவதைகளும் 'இன்று நம்மை கூப்பிடுவாரா? நம்மை கூப்பிடுவாரா?' என்று காத்து கொண்டிருப்பார்கள்.  


கண்ணன் பொழுது போவதற்காக பாட மாட்டானாம்.

ஒரு ராகத்தை எடுத்து பாடினால், ஒரு அர்த்ததோடு தான் பாடுவானாம்.

'கல்யாணி' என்று ஒரு கோபிகை. அவளை பார்க்க அன்று கண்ணன் ஆசைப்பட்டால், உடனே "கல்யாணி" என்ற ராகத்தை பாடுவான். 

'வசந்தா' என்று ஒரு கோபிகை. அவளை பார்க்க அன்று கண்ணன் ஆசைப்பட்டால், உடனே "வசந்தா" என்ற ராகத்தை பாடுவான். 


கண்ணன் வேணுகானம் செய்யும் போதே, 'இன்று தன்னை தான் அழைக்கிறான்' என்று அந்தந்த கோபிகைக்கு தெரியுமாம்.

இப்படி வேணுகானம் செய்தே அந்தந்த கோபிகையை அழைக்கும் கண்ணன், "இந்த பரகால நாயகி தன்னை பார்க்காமல் இருக்கிறாளே! இவள் பார்க்கத்தானே நான் வந்துள்ளேன்

என்று நினைத்தார்.

இந்த கோபிகை "நைவளம்" என்ற ராகத்தை மிகவும் விரும்பி கேட்பாள்.

அவளை கடைகண்ணால் பார்த்து கொண்டே, அவளுக்கு மிகவும் பிடித்தமான 'நைவளம்" என்ற ராகத்தை தானே கண்ணனாக இருந்து வேணுகானம் செய்தார். 

வேணுகானம் செய்வதை கேட்ட பரகாலநாயகி (கோபிகை) வந்திருப்பது 'கண்ணன்' என்று அறிந்தும் "பார்க்க கூடாது" என்று கொஞ்சம் ராங்கி செய்தாள்.

'வந்திருப்பது கண்ணன் தானே! பிறகு ஏன் இவளுக்கு இத்தனை ராங்கி?' என்று கேட்டால், 

"முதலிலேயே கண்ணனாக வந்திருக்கலாமே இவர். கோதண்ட ராமனாக வந்து அச்சத்தை கொடுத்தாரே! முதலில் ராங்கி செய்தது இவர் தானே" என்று பரகாலநாயகி திருப்பி கேட்டாள்.


வேணுகானம் இவளை மயக்கினாலும், தலையை கூட ஆட்டக்கூடாது! என்று அழுத்தமாக பெருமாளை பார்க்காமல் நின்று கொண்டிருந்தாள் பரகாலநாயகி


"இவளுக்கு பிடித்தமான ராகத்தை இசைக்கிறேன். கொஞ்சம் சிரிக்கலாம்! யார் குழல் ஊதினார்? என்று தலை நிமிர்ந்தாவது பார்க்கலாம்! குறைந்தபட்சம், ராகத்தை கேட்டு கொஞ்சம் தலையையாவது அசைத்து ரசிக்கலாம்! 

இப்படி எதுவுமே செய்யாமல் அழுத்தமாக இருக்கிறாளே! 

நான் ஒரு ஆண் பிள்ளை. வலிய வந்து நாயகியான இவளை சமாதானம் செய்து பேச வந்தால், விருப்பம் இருந்தும் என்னை பார்க்க மாட்டேன் என்று பிடிவாதமாக நிற்கிறாளே!

(நைவளம் ஓன்று ஆராயா நம்மை நோக்கா) என்று பெருமாள் தன் முயற்சியில் தோல்வியுற்று சிறிது வெட்கப்பட்டவர் போல நின்று, (நாணினார் போல் இறையே

பிறகு மீண்டும் (பின்னும்) இவளை எப்படியாவது சமாதானம் செய்தே தீர வேண்டும் என்று தீர்மானித்து மேலும் முயற்சிக்கிறார். 

"இப்போது நைவளத்தோடு, சேர்த்து கூடவே அழகான வார்த்தைகளையும் சேர்த்து பெருமாள் வேணுகானம் செய்ய (நயங்கள் செய்வளவில்), திருமங்கையாழ்வாராகிய பரகாலநாயகி தன் நிலையை தானே சொல்கிறாள்.

"இதுவரை இவரை பார்க்க கூடாது என்று பல்லை கடித்து கொண்டு இருந்த பரகாலநாயகியான நான், என்னை அறியாமலேயே என் மனது கண்ணனிடத்தில் ஓடி, என் கண்களும் அவரை நோக்கி ஓட (என் மனமும் கண்ணும் ஓடி), ஒரு காலை ஊன்றி, மற்றோரு காலை மாற்றி வைத்து இருக்கும் அந்த திருவடிக்கீழ் என் அங்கம் படும்படியாக சேவித்தேன். (எம்பெருமான் திருவடிக் கீழ் அணைய)

திருவடி ஸ்பரிசித்த ஆனந்தத்தால் தலை நிமிர்ந்தேன்..  

'முன்பு பெருமாள் கிடைக்கவில்லையே!' என்ற விரகத்தில் உடல் மெலிந்து என் கை வளையல் தானாக அவிழ்ந்தது, 

இப்பொழுது, இவரை ஸ்பரிசித்த ஆனந்தத்தால் உடல் பூரிப்பு அடைந்து புஷ்டியாகி விட, நான் அணிந்திருந்த வலையலும், இடுப்பில் அணிந்திருக்கும் ஒட்டியானமும் இப்பொழுது உடல் பூரிப்பினால் உடைந்து தானாக நழுவி விழுந்தது (இப்பால் கைவளையும் மேகலையும் காணேன்)


இப்படி பூரிப்போடு தலை நிமிர்ந்து பார்த்த போது, அவருடைய இரண்டு காதுகளில் மகர குண்டலங்கள் அசைவதை பார்த்ததும் மனம் மயங்கி விட்டது. 

உடனே பெருமாள் என்னிடமுள்ள பிரியத்தால், நான்கு கைகளாலும் என்னை தூக்கி  விட்டார். 

ஒரு கையால் என் நெற்றியில் இருந்த வியர்வையை துடைத்து விட்டு, மறு கையால் என் மார்பை தடவி கொடுத்து, மற்றொரு கையால்  அவிழ்ந்த கேசத்தை முடிந்து விட்டு, நான்காவது கையால் என்னை ஆசுவாசப்படுத்தி தூக்கி, அவர் எதிரே நிற்க வைத்து கொண்டார் (கண்டேன் கனம் மகர குழை இரண்டும் நான்கு தோளும்).

என்ன நடக்கிறது? என்று புரியாத மயக்கத்தில் இருந்து பரகால நாயகியாகிய நான், 

இது எந்த திவ்ய தேசம்? நாம் எங்கு இருக்கிறோம்? எந்த ஊர் பெருமாள் இவர்? என்று நினைத்து, அவரிடமே, 'என்னிடம் இத்தனை ப்ரியம் வைத்துள்ளீர்களே! உங்கள் கோவில் எவ்வளவு தூரம் இருக்கிறது?' (எவ்வளவு உண்டு எம்பெருமான் கோயில்? என்றேற்கு) என்று கேட்க, 

இந்த ஊர் நம் இருவருக்கும் சொந்த ஊர் ஆயிற்றே! இது தானே திருவாலி திருநகரி திவ்ய தேசம். (இது வன்றோ எழில் ஆலி, என்றார் தாமே) என்றார் பெருமாள். 

இப்படி வயலாலி மணவாளனுடன் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை சொல்கிறாள் பரகால நாயகி. 


Friday 21 January 2022

வருணன் என்றால் என்ன? "இமம் மே வருண..." என்று சந்தியாவந்தனத்தில் உள்ளது. வருண என்ற சொல்லுக்கு ஈடான தமிழ் சொல்லை திருமங்கையாழ்வார் பயன்படுத்துகிறார். அர்த்தம் தெரிந்து கொள்வோம்.

சந்தியாவந்தனத்தில், சூரியனுக்கும் ஆத்மாவாக (நமக்கும்) இருக்கும் பரமாத்மாவை பார்த்து, மாலையில் "இமம் மே வருண" என்று சொல்வோம். 

திருமங்கையாழ்வார், 

"அனலுருவாய் பெருமாள் இருக்கிறார்" என்று சொல்லி, பிறகு,

"வருண" என்ற வடசொல்லுக்கு ஈடாக "புனலுருவாய் பெருமாள் இருக்கிறார்" என்கிறார்.

அனல் உருவாய் - என்றால் "அக்னி போன்று பரமாத்மா இருக்கிறார்" என்று அர்த்தம்.

"தீ" எப்பொழுதுமே மேல் நோக்கியே செல்லும். மற்றவர்கள் தொட முடியாதபடி இருக்கும். தீக்கு அருகில் சென்றால் விழுங்கி விடும்.

அது போல, 

பெருமாளும் தேவர்களுக்கெல்லாம் தேவனாக, அவரை எவரும் தொட முடியாதபடி உயர இருக்கிறார். பெருமாள் பக்கத்தில் சென்றால், அப்படியே விழுங்கி விடுவார்.

இப்படி யாருக்கும் எட்டாதபடி அனலுருவாய் இருக்கும் பெருமாள், புனலுருவாயும் இருக்கிறார். 

புனல் உருவாய் - என்றால் "தண்ணீர் போன்று பரமாத்மா இருக்கிறார்" என்று அர்த்தம்.

தண்ணீர் எப்பொழுதுமே கீழ் நோக்கியே செல்லும். மற்றவர்களுக்கு கிடைக்கும்படி நிலத்திற்கு தானே வரும்.

அது போல,

பெருமாள் நிஜத்தில் அனலுருவாய் எங்கோ உயரத்தில் இருந்தாலும், "தானே இறங்கி ராமனாக, கண்ணனாக மனிதனை போன்று அவதாரம் செய்து, கோவிலில் அரச்ச அவதாரம் செய்து, நம்முடன் சமமாக பழகி, தானே வலிய வந்து கிடைக்கிறார்" என்கிறார்.

மாலையில் "இமம் மே வருண..." என்று சொல்லுமிடத்தில், "புனலுருவாய்" என்ற சொல்லின் அர்த்தத்தை நினைத்து சொல்லும் போது, பெருமாள் எத்தனை கருணையோடு நாம் காணும்படியாக கோவிலில், நம் வீட்டில் விக்ரக ரூபமாக அவதரித்து நிற்கிறார் என்பது புரியும்.


"அனலுருவாய்" என்று சொல்லும் போது, பெருமாளின் பர-தத்துவம், கம்பீரம் வெளிப்படுகிறது.

"புனலுருவாய்" என்று சொல்லும் போது, பெருமாளின் கருணை வெளிப்படுகிறது.


Thursday 20 January 2022

'என்னையெல்லாம் இப்படி பெருமாள் மதிக்கிறாரே' என்று நினைத்தேன். அந்த நினைவிலேயே பேரின்பம் பெற்றேன் என்று பரகால நாயகி நிம்மதி அடைகிறாள். பாசுரம் அர்த்தம் தெரிந்து கொள்வோம்... அன்றாயர் குலமகளுக்....

"பெருமாள் தன்னையும் அவருடைய நாயகிகளோடு சேர்த்து கொண்டாரே!" என்று பேரின்பத்தில் பாடுகிறார்.

அன்று ஆயர் குலமகளுக்கு அரையன் தன்னை

அலைகடலை கடைந்து 

அடைத்த அம்மான் தன்னை

குன்றாத வலி 

அரக்கர் கோனை மாள

கொடுஞ்சிலைவாய் 

சரம் துரந்து 

குலம் களைந்து வென்றானை, 

குன்றெடுத்த தோளினானை

விரி திரை நீர் விண்ணகரம் மருவி 

நாளும் நின்றானை, தண்குடந்தை கிடந்த மாலை

நெடியானை அடிநாயேன் நினைந்திட்டேனே

- திருநெடுந்தாண்டாகம் (திருமங்கையாழ்வார்)

அன்று, நீளா என்ற நப்பினைக்காக (கோபிகைக்கு) 7 காளையை அடக்கி, அவள் துயரத்தை போக்கிய தலைவனே!

(அன்று ஆயர் குலமகளுக்கு அரையன் தன்னை)

மஹாலக்ஷ்மியை அடைவதற்காக அலை எறிகின்ற பாற்கடலை கடைந்தவரே !

(அலைகடலை கடைந்து


சீதாதேவியை மீட்பதற்காக, இலங்கைக்கு பாலம் அமைத்து, செல்வத்தில், படை பலத்தில் குறைவில்லாத வலிமையான ராக்ஷஸ அதிபதி ராவணனை தன்னுடைய தீர்க்கமான கோதண்டத்தில்,  அம்புகளைத் தொடுத்துப் பிரயோகித்து அரக்கர் குலத்தையே நிர்மூலமாக்கி வெற்றி பெற்றவரே (அடைத்த அம்மான் தன்னை குன்றாத வலி அரக்கர் கோனை மாள கொடுஞ்சிலைவாய் சரம் துரந்து குலம் களைந்து வென்றானை)

கோபிகைகள் மேல் ஒரு தூரல் கூட விழ கூடாதென்று, கோவர்த்தன மலையையே தன் கையால் குடையாக எடுத்தவரே! (குன்றெடுத்த தோளினானை)


இப்படி நீங்கள் செய்த ஒவ்வொரு காரியத்தை கவனிக்கும் போது, நீங்கள் ஒவ்வொரு நாயகிக்கும் பரிந்து கொண்டு அவரகளுக்கு வேண்டிய ரக்ஷணத்தை செய்கிறீர்கள் என்று தெரிகிறதே!

'நானும் ஒரு நாயகி இருக்கிறேன்' என்று தெரிந்து கொண்டு, பரந்த அலைகளையுடைய பொய்கைகள் நிரம்பிய திருவிண்ணகரிலே, அந்த நாயகியில் என்னையும் ஒருவளாக சேர்த்து கொண்டு, ஸர்வோத்தமருமான ஒப்பிலியப்பனாக நிற்கிறாரே! குடந்தையில் ஆராவமுதனாக எனக்காக படுத்து இருக்கிறாரே

நான் அல்பமானவள். 'என்னையெல்லாம் இப்படி மதிக்கிறாரே பெருமாள்' என்று நினைத்தேன். அந்த நினைவிலேயே பேரின்பம் பெற்றேன். (விரி திரை நீர் விண்ணகரம் மருவி நாளும் நின்றானை, தண்குடந்தை கிடந்த மாலை நெடியானை அடிநாயேன் நினைந்திட்டேனே)

திருநெடுந்தாண்டாகம் என்பது ஆச்சர்யமான பிரபந்தம். மிகவும் ரசமானது.

இப்படி 9 பாசுரங்கள் திருமங்கையாழ்வார் பரகால நாயகியாக ஆகி, பெருமாளை தன் இதயத்தில் பூட்டி விட்டார்.

Wednesday 19 January 2022

"பெருமாள் கிடைத்தாலும் அழுது கொண்டே இருப்பேன்" என்று முடிவு செய்த பரகால நாயகி. பாசுரம் அர்த்தம் தெரிந்து கொள்வோம்.. தென்னிலங்கை யரண்சிதறி

திருமங்கையாழ்வாராகிய பரகாலநாயகி, தன் தோழியான பராங்குச நாயகியிடம், "தான் பெருமாளிடம் பிரணய கலகம் செய்யப்போவதாக சொல்கிறாள்".

தென் இலங்கை அரண் சிதறி

அவுணன் மாள சென்று 

உலக மூன்றினையும் திரிந்து 

ஓர் தேரால் ன் இலங்கு 

பாரதத்தை மாள ஊர்ந்த

வரை உருவின் மா களிற்றை தோழீ, 

என்றன் பொன் இலங்கு

முலை குவட்டில் பூட்டிக் கொண்டு

போகாமை வல்லேனாய் 

புலவி எய்தி,

என்னில் அங்கமெல்லாம் வந்து இன்பம் எய்த

எப்பொழுதும் நினைந்து உருகி இருப்பன் நானே

- திருநெடுந்தாண்டாகம் (திருமங்கையாழ்வார்)

பரகால நாயகி, தன் தோழியிடம், 

"முதலில் ராமபிரானாக கண்டேன்.

பிறகு கண்ணனாக வந்தார். 

பிறகு வயலாலி மணவாளனாக வந்தார்.

பிறகு, நம்பெருமாளாக வந்தார்.

பிறகு, ஆமருவியப்பனாக வந்தார்.

பிறகு, சவுரிராஜனாக வந்தார்.

இவர் எப்பொழுது வருவார்? என்று பல நாட்கள் விரகத்தில் இருக்கும் போது, ஒரு நாள் இப்படி என்னை பார்க்க வருவார். 

இவர் வந்ததுமே, விரகம் தீர்ந்து போய்விடும்., அவரிடம் சிரித்து பழகுவேன்.

உடனே மீண்டும் அழ விட்டு, எங்கோ போய் விடுகிறார். 

இன்று வரட்டும். 

ப்ரணய கலகம் செய்து, அழுது கொண்டே இருக்கலாம் என்று தீர்மானித்து இருக்கிறேன்" என்றாள்.


"இப்போது பெருமாள் கிடைக்காமல் அழுகிறேன். 

இவர் வந்தாலும், கூடவே இருக்காமல், மீண்டும் கிளம்பி சென்று விடுகிறார். எப்படி இருந்தாலும் நான் அழத்தானே போகிறேன். 

ஒரே ஒரு பெண்ணை மீட்பதற்காக, இலங்கைக்கு சென்று, ஊரையே அலற அடித்து, மதில் சுவற்றை சிதற அடித்து, அந்த ராவணனை கொன்று  போட்டாரே! அந்த சீதையிடம் தான் அவருக்கு எத்தனை ப்ரியம்!! (தென் இலங்கை அரண் சிதறி அவுணன் மாள சென்று)

அது போல, 

பூலோகத்தை பலி சக்கரவர்த்தி பிடித்து விட, பூமி பிராட்டியை மீட்பதற்காக, பூமியோடு சேர்த்து ப்ரம்ம லோகம் வரை அடியெடுத்து வைத்து மீட்டாரே! 

அந்த பூமி பிராட்டியிடம் எத்தனை ப்ரியம் இருந்தால், அப்படி த்ரிவிக்ரமனாய் அளந்திருப்பார். (உலக மூன்றினையும் திரிந்து)

பாரத யுத்தம் செய்ததே இவர் தான். 'சமாதானம் செய்கிறேன்' என்று தூது சென்று, யுத்தத்தை கிளப்பி விட்டதே இவர் தான் 

பார்த்தசாரதியாக இருந்து தேரோட்டி, பாரத யுத்தம் செய்ததே இவர் தான்  (திரிந்து ஓர் தேரால் மன் இலங்கு பாரதத்தை மாள ஊர்ந்த)




ஏன் இப்படி இருக்கிறார்? 

அவரால் ஒன்றுமே செய்யாமல், ஆதிசேஷன் மேல் படுத்து கொண்டு இருக்கவே முடியாது.

ராமாயண யுத்தம் அப்படி போட்டாரல்லவா! அதோடு நிறுத்தி கொள்ள மாட்டாரோ? 

யுகத்துக்கு யுகம் சண்டை போடுகிறார்.


இப்படி தானாகவே பல வேலைகளை தானே இழுத்து கொண்டு, என்னிடம் 'நேரம் ஒதுக்க முடியவில்லை' என்கிறார். 

இன்று வரட்டும். பார்த்து கொள்கிறேன்.

அவர் எப்பொழுது வருவார்?  எப்பொழுது வருவார்?  என்று எதிர்பார்த்து தாபத்தோடு காத்து இருந்தால், திடீரென்று வருவார். 

இவர் வந்துவிட்டார் என்றதுமே, இருந்த தாபம் தீர்ந்து போவதால், சிரித்து பேசுவேன்.

"சரி தான். இவள் நாம் இல்லாமல் போனாலும், சாதாரணமாக தான் இருக்கிறாள் போல" என்று நினைத்து கொண்டு, மீண்டும் ஏதோ ஒரு வேலையை தானே ஏற்படுத்திக்கொண்டு கிளம்பி விடுகிறார். 

மீண்டும் அழுகை தான் எனக்கு மிச்சமாகிறது.

ஒரு நாள் சிரிப்பு, பிறகு மீண்டும் ஆயிரம் நாளும் அழுது கொண்டே தானே இருக்கிறேன்! 

சரியான முரடன் இவர் !

இப்பொழுது இவர் வரும்போது, நான் சிரித்து கொண்டு பேச போவதில்லை. 

இவரிடம் முகம் கொடுக்காமல், நான் இவர் இல்லாமல் எப்படி அழுதேன் என்று காட்டத்தான் போகிறேன். (புலலி எய்தி)

தோழீ!! நான் அழும்போது, என்னிடம் பரிவு காட்டி பேச அருகில் வருவார். 

மலைபோன்ற, பெரிய யானை போன்ற பெருமானை, இனி தப்பிக்க முடியாதபடி, என் மார்போடு கட்டி பூட்டி கொண்டு விடுவேன். (வரை உருவின் மா களிற்றை தோழீ, என்றன் பொன் இலங்கு முலை குவட்டில் பூட்டிக் கொண்டு போகாமை வல்லேனாய்)


இப்படி  சுதந்திரமாக இருக்க விடாமல் இவரை செய்கிறேனே!' என்று அப்பொழுதும் அழுவேன்.

முன்பு விரகத்தில், 'பெருமாள் கிடைக்கவில்லையே' என்று அழுதேன். 

இப்பொழுது 'பெருமாள் என் நெஞ்சில் இருக்கிறார்' என்பதால் கிடைக்கும் பேரின்பத்தில் அழுவேன்" (என்னில் அங்கமெல்லாம் வந்து இன்பம் எய்த எப்பொழுதும் நினைந்து உருகி இருப்பன் நானே) என்று பரகாலநாயகி, பெருமாள் தன்னிடமே கிடைத்து விட்டதாக சொல்லி சமாதானம் அடைகிறாள்.

பெருமாள் தன் இதயத்தில் நிரந்தரமாக தங்கி விட்டார் என்று நிலையில், திருமங்கையாழ்வார், பாசுரத்தை முடிக்கிறார்.

Tuesday 18 January 2022

நாரையை திருக்கண்ணபுரத்துக்கு தூது அனுப்புகிறாள் பரகால நாயகி. பாசுரம் அர்த்தம் தெரிந்து கொள்வோம். செங்கால மடநாராய் இன்றே சென்று...

பரகால நாயகியாக இருந்து, திருமங்கையாழ்வார் பாடுகிறார்.

செங்கால மடநாராய்

இன்றே சென்று

திருக்கண்ணபுரம் புக்கு

என் செங்கண் மாலுக்கு

என் காதல் என் துணைவர்க்கு உரைத்தியாகில்

இது ஒப்பது எமக்கு இன்பமில்லை

நாளும் பைங்கான மீதெல்லாம் உனதேயாக

பழனமீன் கவர்ந்து உண்ண தருவன்

தந்தால் இங்கே வந்து இனிதிருந்து 

உன் பெடையும் நீயும் இரு நிலத்தில் 

இனிது இன்பம் எய்தலாமே

- திருநெடுந்தாண்டாகம் (திருமங்கையாழ்வார்)

கொக்கில் ஒரு இனம் 'நாரை'. வெண்மையாக இருக்கும் நாரைக்கு கால் சிவப்பாக இருக்கும்.

ஒருநாள், மோகமுள்ள பக்ஷி ஒன்று (மடநாராய்) திருக்கண்ணபுரம் நோக்கி பறந்து சென்று கொண்டிருப்பதை பார்க்கிறாள் பரகால நாயகி.

அது உணவுக்காக கடலை நோக்கி தான் செல்கிறது என்று அறிந்து கொண்டாள்.


"திருக்கண்ணபுரத்தில் ஒப்பிலியப்பன் நிற்கிறாரே! அவரிடம் தனக்காக தூது செல்ல, அந்த நாரையை அழைக்கலாமா?" என்று நினைத்தாள் பரகால நாயகி.

"சிவந்த கால்களையுடைய நாரையே! நீ கடலுக்கு சென்று மீன் தேட வேண்டாம். 

நீ அதற்கு பதில் இன்றே திருக்கண்ணபுரம் செல்லேன்!

அங்கு மீன் போன்ற கண்களை உடைய சவுரிராஜன் இருக்கிறார். என் சித்தத்தை மயக்கிய செங்கண் மாலுக்கு, என் காதலருக்கு, என் துணைவருக்கு, 'இப்படி ஒருவள் உங்களுக்காக தவித்து, காத்து இருக்கிறாள்' என்று சொல்வாயாகில், அதை விட ஒரு பேருதவி ஒன்றும் இருக்க முடியாது. அதை விட பேரின்பம் ஒன்று கிடையாது எனக்கு" (செங்கால மடநாராய் இன்றே சென்று திருக்கண்ணபுரம் புக்கு என் செங்கண் மாலுக்கு என் காதல் என் துணைவர்க்கு உரைத்தியாகில் இது ஒப்பது எமக்கு இன்பமில்லை) என்றாள் பரகாலநாயகி

"நான் எனக்கு உணவான மீனை சாப்பிடுவதற்காக கடலுக்கு செல்லும் போது, உனக்கு தூது செல்லுமாறு அழைக்கிறாயே! உனக்கு உதவி செய்தாலும், அங்கே எனக்கு யார் சாப்பிட கொடுப்பார்கள்?" என்று நாரை கேட்க,

"கவலையே படாதே! நீ அவரிடம் என்னை பற்றி சொல்லிவிட்டு, திரும்பி இங்கே வா. பெருமாளிடம் தூது சென்ற நீ, எனக்கு உறவினன் ஆகிறாய்! 

உனக்காக  சோலையாக இருக்கும் என்னுடைய தோட்டம் முழுக்க திறந்து விடுகிறேன். தோட்டம் முழுவதும் உனக்குத்தான். உனக்கு விருந்து வைக்கிறேன்.

அதில் உள்ள பெரிய குளத்தில் துள்ளி விளையாடும் மீன்களை நானே உனக்கு உண்ண தருவேன். உங்களை விரட்டவே மாட்டேன் (நாளும் பைங்கான மீதெல்லாம் உனதேயாக பழனமீன் கவர்ந்து உண்ண தருவன்)


நீ மட்டுமல்ல, உன்னோடு உன் காதலியான பெண் நாரையையும் அழைத்து கொண்டு வா. 

இந்த பெரிய தோட்டத்திலேயே நீங்கள் இருவரும் விளையாடி மகிழலாம்.

(தந்தால் இங்கே வந்து இனிதிருந்து உன் பெடையும் நீயும் இரு நிலத்தில் இனிது இன்பம் எய்தலாமே)

என்று நாரையிடம் தூது விடுகிறாள் பரகாலநாயகி.

திருமங்கையாழ்வாராகிய பரகாலநாயகி, நீயும் உன் பேடையும் என்று நாரையையும், முந்தைய பாசுரத்தில் இதே போல வண்டையும் சொல்கிறார். 

ஆசாரியனையும், அவருடைய தர்ம பத்னியையும் சொல்கிறார் என்பது தத்துவம்.

ஆசாரியன் தான், நமக்காக 'பெருமாளிடம் சென்று சிபாரிசு செய்கிறார்'. 

அப்படி பேருதவி செய்த குருவுக்கு, நாம் என்ன பதில் செய்து விட முடியும்?

தனக்காக தூது சென்று, பெருமாளிடம் நம்மை பற்றி சொன்ன நாரைக்கு தன் இடத்தையே கொடுத்து, அவருக்கு பிடித்த உணவை கொடுப்பது போல, குருவுக்கும், அவர் தர்ம பத்னிக்கும் சேவை செய்யவேண்டும் என்பதே தாத்பரியம்.