Followers

Search Here...

Saturday 28 March 2020

ஸ்கந்தம் 6: அத்யாயம் 8 - நாராயண கவசம் (தமிழ் அர்த்தத்துடன்) - ஸ்ரீமத் பாகவதம் (ஸ்ரீ சுக ப்ரம்மம் - பரீக்ஷித் மகாராஜனுக்கு சொன்ன நாராயண கவசம்)

நாராயண கவசம்
ஸ்கந்தம் 6: அத்யாயம் 8



ப்ருஹஸ்பதி தேவர்களுக்கு குரு. 
ஒரு சமயம் இந்திரதேவனை பார்க்க சென்ற போது, இந்திரன் தன் சபையில் நடனம் பார்த்து ரசித்து கொண்டிருந்தான்.

தன் குரு வருகிறார் என்று தெரிந்தும், "இவர் எதற்காக இந்த சமயத்தில் வருகிறார்?" என்று நினைத்தான்.
இவன் எண்ணத்தை அறிந்து கொண்ட ப்ருஹஸ்பதி அமைதியாக திரும்பி விட்டார்.

நடனம் முடிந்து, சபை கலைந்த பின்,  தேவகுரு ப்ருஹஸ்பதியை பார்க்க அவர் ஆசிரமத்துக்கு சென்று பார்த்தான். ஆனால், ப்ருஹஸ்பதி தரிசனம் கொடுக்காமல் மறைந்து விட்டார்.

"ப்ருஹஸ்பதி தேவர்களிடம் கோபத்தில் உள்ளார்" என்று தெரிந்து கொண்ட அசுரர்கள், "இது தான் சமயம்" என்று தேவர்களை தாக்கி, சொர்க்க லோகத்தில் இருந்து அடித்து துரத்த, பூலோகத்தில் வந்து மனிதர்களை போல சஞ்சாரம் செய்து கொண்டு, பிச்சை எடுத்து கொண்டு இருந்தார்கள்.


"இதற்கு விமோச்சனம் கிடையாதா?" என்று வருத்தப்பட்டு ப்ரம்ம தேவனிடம் முறையிட, 
"குரு இல்லாமல் இருக்க கூடாது.  ப்ருஹஸ்பதி மனமிறங்கி வரும்வரை, த்வஷ்டா மகன் விஸ்வரூபனை குருவாக வைத்து கொள். அவர் சொல்படி கேள். அசுரர்களை சமாளிக்க வழி சொல்வார்" என்று சொன்னார்.

மூன்று தலைகள் உடைய பிராம்மணரான விஸ்வரூபன், தேவர்களுக்கு குருவாக இருக்க சம்மதித்தார். 

 தீராத நோய்கள் குணமாக, எதிரிகளை ஜெயிக்க, தேவர்களுக்கு "நாராயண கவசம்" சொன்னார். 

இதை சிரத்தையுடன் ஜபித்த இந்திரன் அசுரர்களை தோற்கடித்து பெரும் வெற்றி பெற்றான். சொர்க்க லோகத்தை மீண்டும் கைப்பற்றினான். 

ராஜோவாச - श्रीराजोवाच
சுக ப்ரம்ம ரிஷியிடம், பரீக்ஷித் மன்னர் கேட்கிறார்

यया गुप्त: सहस्राक्ष: स-वाहान् रिपु-सैनिकान् ।
क्रीडन्न-इव विनिर्जित्य त्रि-लोक्या बुभुजे श्रियम् ॥
யயா குப்த: ஸஹஸ்ராக்ஷ:
ஸவாஹான் ரிபு ஸைநிகான் |
க்ரீடந்நிவ விநிர் ஜித்ய
த்ரிலோக்யா புபுஜே ஸ்ரியம் ||


ஆயிரம் கண்களுடைய (ஸஹஸ்ராக்ஷ) இந்திர தேவன், எந்த (யயா) வித்யையினால் பாதுகாக்கப்பட்டு (குப்த), எதிரிகளின் படைகளை (ரிபு ஸைநிகான்)  எல்லாம் (ஸவாஹான்) விளையாட்டாக (க்ரீடந்நிவ) வென்று (விநிர் ஜித்ய), மூன்று உலகங்களுக்கும் (த்ரிலோக்யா) தலைவனாகும் ஐஸ்வர்யத்தை (ஸ்ரியம்) அடைந்தாரோ !(புபுஜே)




भगवं तत्  मम आख्याहि वर्म नारायण-आत्मकम् ।
यथा आततायिन: शत्रून् एन गुप्त अजयन् मृधे ॥
பகவம் தன் மமாக்யாஹி
வர்ம நாராயணாத் மகம் |
யதா (ஆ)ததாயின: ஸத்ரூன்
யேன குப்தோ அஜயன் ம்ருதே ||

அப்படி பாதுகாக்கக்கூடிய (வர்ம)  நாராயண கவசம் (நாராயண ஆத்மகம்) என்னும் வித்யையை எனக்கு (மம) தாங்கள் (பகவம் தன்) உபதேசிக்க (ஆக்யாஹி) வேண்டும்.
எதிரிகள் (ஸத்ரூன்) எப்படியெல்லாம் (யதா) வீழ்த்த முயற்சித்தாலும் (ததாயின),
நாராயண கவச மந்திரத்தை ஜபித்ததன் மூலம் (யேன), இந்திர தேவன் போரில் (ம்ருதே) எதிரிகளால் ஜெயிக்கமுடியாதபடி (அஜயன்) காப்பாற்றப்பட்டாரே (குப்தோ).

ஸ்ரீ ஸுக உவாச 
ஸ்ரீசுகர் உபதேசிக்கிறார்

वृत: पुरोहित: त्वाष्ट्रो महेन्द्राय अनुपृच्छते ।
नारायण-आख्यं वर्म-आह तद् इह एक-मना: श‍ृणु ॥
வ்ருத: புரோஹிதஸ் த்வாஷ்ட்ரோ
மஹேந்த்ரா யாநு ப்ருச்சதே |
நாராயணாக்யம் வர்மாஹ
தத் இஹ ஏக மன: ஸ்ருணு ||

தேவர்களின் புரோஹிதனாய் வரிக்கப்பட்ட (வ்ருத: புரோஹிதஸ்) விஸ்வரூபனிடம் (த்வாஷ்ட்ராவின் பிள்ளை), சத்ருக்களை ஜெயிக்க உபாயம் என்ன? (யாநு ப்ருச்சதே) என்று கேட்ட இந்திர தேவனுக்கு (மஹேந்த்ரா) நாராயண கவசம் (நாராயணாக்யம் வர்மாஹ) என்ற மந்திரத்தை உபதேசித்தார்.
அதை இங்கு (தத் இஹ) உனக்கு உபதேசிக்கிறேன். பரீக்ஷித் மன்னா ! ஒரு மனத்துடன் கேள் (ஏக மன: ஸ்ருணு)

விஸ்வரூப உவாச - श्रीविश्‍वरूप उवाच
விஸ்வரூபன் இந்திர தேவனிடம் உபதேசிக்கிறார்

धौत अङ्‌घ्रि पाणि: आचम्य स-पवित्र उदङ्‍मुख: ।
कृत स्व अङ्ग कर न्यासो मन्त्राभ्यां वाग्यत: शुचि: ॥
தௌத அங்க்ரி பாணிர் ஆஸம்ய
ஸபவித்ர உதங்முக: |
க்ருத ஸ்வாங்க கர ந்யாஸோ மந்த்ராப்யாம் 
வாக்யத: ஸுசி: ||

கை (பாணிர்), கால்களை (அங்க்ரி), நன்றாக அலம்பிக்கொண்டு (தௌத),  தீர்த்தத்தை எடுத்து அச்சுதாய  நம:, அனந்தாய நம:, கோவிந்தாய நம: என்று சொல்லி, மூன்று முறை தீர்த்தம் எடுத்து ஆசமனம் செய்து (ஆசம்ய),
மோதிர விரலில் தூய்மையான  தர்ப்பை புல்லால் மோதிரம் (ஸபவித்ரம்) அணிந்து கொண்டு, வடக்கு/உத்திர திசையை பார்த்து (உதங்முக)
பகவானின் நாமத்தால் (மந்த்ராப்யாம்), உடம்பில் உள்ள 8 அங்கங்களை தொட்டு, ஸுத்தி (சுத்தி) செய்து கொள்ளவேண்டும் (க்ருத ஸ்வாங்க கர ந்யாஸோ).
அங்க சுத்தி செய்யும் போது, மனத்தூய்மையோடு (ஸுசி:), மனதோடு / வாக்கு இல்லாமல் (வாக்யத:) சொல்லவேண்டும்.

नारायण-परं वर्म सन्नह्येद् भय आगते ।
पादयो: जानुनो: ऊर्वो उदरे हृदि अथ उरसि ॥
मुखे शिरसि आनुपूर्व्याद् ओङ्कार आदीनि विन्यसेत् ।
ॐ नमो नारायणाय इति विपर्ययम् अथ अपि वा ॥ 
நாராயணபரம் வர்ம 
ஸந்நஹ்யேத் பய ஆகதே |
பாதயோர் ஜாநுநோ ஊர்வோ 
உதரே ஹ்ருத்யத் உரஸி ||
முகே ஸிரஸி ஆநுபூர்வ்யாத்
ஓங்கார ஆதீநி வின்ய ஸேத் |
ஓம் நமோ நாராயணா யேதி
விபர்யய மதாபி வா ||

உடலாலும், மனதாலும் நமக்கு வரும் (ஆகதே) ஆத்யாத்மிக பயத்தை (பய) போக்கிக்கொள்ள, 
காற்று, மழை, வெயில், இடி, மின்னல் முதலிய தெய்வ சங்கல்பத்தால் நமக்கு வரும் (ஆகதே) ஆதிதைவிக பயத்தை (பய) போக்கிக்கொள்ள,
பஞ்சபூதங்களாலும், பிராணிகளாலும் நமக்கு வரும் (ஆகதே) ஆதிபௌதீக பயத்தை (பய) போக்கிக்கொள்ள,
எங்கும் நிறைந்த நாராயண கவசத்தை (நாராயணபரம் வர்ம) தன்னோடு பிணைத்து (ஸந்நஹ்யேத்) கொள்ள வேண்டும்.
பூஜிப்பவரின் சரீரம் சுத்தமாக இருந்தால்தான் அவர் செய்யும் பூஜையும் மிகவும் சுத்தமாக அமையும். அதன் பயனும் விரும்பும் முறையில் கிடைக்கும். அந்தச் சரீரத்துக்கு ந்யாஸம் (ஸுத்தி) அவசியம்.

சர்வ உலகங்களை (தான் உட்பட) படைத்ததும் நாராயணனே!
தான் படைத்ததை மீண்டும் தன்னிடம் ஒடுக்கி கொள்பவரும் நாராயணனே!
என்ற தியானத்துடன்,
எட்டு அங்கங்களாக இருக்கும் நம் உடலில், 
1. பாதங்கள் (பாதயோ), 2. முழங்கால் (ஜாநுநோ), 3. தொடை (ஊர்வோ), 
4. வயிறு (உதரே), 5. இதயம் (ஹ்ருத்ய), 6. மார்பு (உரஸி), 7. முகம் (முகே), 8. தலை (ஸிரஸ்) 
என்று முறையே ஒன்றன் பின் ஒன்றாக (ஆநுபூர்வ்யாத்) தொட்டு (வின்ய ஸேத்), ஓம் என்ற ஓங்காரத்தித்தில் ஆரம்பிக்கும் (ஓங்கார ஆதீநி), திருவஷ்டாக்ஷரம் என்ற எட்டு எழுத்து மந்திரத்தை (ஓம் ந மோ நா ரா ய ணா ய) முறையே சொல்லி, நாராயணன் ஒருவனே (யேதி) கதி! என்று தியானித்து கொண்டு அங்க ந்யாஸம் செய்து கொள்ள வேண்டும்.
பிறகு இதையே தலைகீழாக (விபர்யய) சொல்லி (மதாபி வா) தலை முதல் பாதம் வரை தொட்டு முறையே (ஓம் ந மோ நா ரா ய ணா ய) சொல்ல வேண்டும்.




कर-न्यासं तत: कुर्याद् द्वादश अक्षर विद्यया ।
प्रणव आदि य-कार अन्तम् अङ्गुलि अङ्गुष्ठ पर्वसु ॥
கர ந்யாஸம் தத: குர்யாத்
த்வாத ஸாக்ஷர வித்யயா |
ப்ரணவாதி 'ய'கார அந்தம்
அங்குலி அங்குஷ்ட பர்வஸு ||

அதற்கு பிறகு (தத:) (ஓம் ந மோ ப க வ தே வா சு தே வா ய) என்ற 12 எழுத்து த்வாத ஸாக்ஷர மந்திரத்தை (த்வாத ஸாக்ஷர வித்யயா) ஜபம் செய்து கொண்டே, கரங்களை (கர) சுத்தி (ந்யாஸம்) செய்து கொள்ள வேண்டும் (குர்யாத்)
வலது ஆள் காட்டி விரல் தொட்டு, ஓம் என்ற ப்ரணவத்தில் ஆரம்பித்து,(ப்ரணவாதி),
வலது சுண்டு விரல் வரை, கட்டை விரலால் தொட்டு கொண்டே, தொடர்ந்து,
இடது சுண்டு விரல் ஆரம்பித்து, இடது ஆள் காட்டி வரை, கட்டை விரலால் தொட்டு கொண்டே, முதல் 8 எழுத்துக்கள் சொல்லி, மீதமுள்ள 4 எழுத்தை, கட்டை விரலின் அடி பகுதியை (அங்குஷ்ட பர்வஸு) ஆள் காட்டி விரலால் இரு கைகளில் தொட்டு, 'ய'காரத்தோடு முடிப்பது ('ய'கார அந்தம்) கர ந்யாஸம்.
न्यसेद्‌ हृदय ओंङ्कारं वि-कारम् अनु मूर्धनि ।
ष-कारं तु भ्रुवो: मध्ये ण-कारं शिखया न्यसेत् ॥
ந்யஸேத் ஹ்ருதய ஓங்காரம்
'வி'காரம் அனு மூர்தனி |
'ஷ'காரம் து ப்ருவோர் மத்யே
'ண'காரம் ஸிகயா ந்யஸேத் ||

அங்க ந்யாஸம், கர ந்யாஸம் செய்த பிறகு, 6 எழுத்து மந்திரமான, "விஷ்ணு ஷடக்ஷரியை" (விஷ்ணவே நம:) 
இதயத்தில் (ஹ்ருதய) - "ஓம்" என்ற ஓங்காரத்தை (ஓங்காரம்) நிறுத்தி (ந்யஸேத்), 
தலையில் (அனு மூர்தனி) - 'வி' என்ற அக்ஷரத்தை நிறுத்தி,
புருவ மத்தியில் (ப்ருவோர் மத்யே) - 'ஷ' என்ற அக்ஷரத்தை நிறுத்தி,
சிகையில் (ஸிகயா ந்யஸேத்) - 'ண' என்ற அக்ஷரத்தை நிறுத்தி,

वे-कारं नेत्रयो: युञ्‍ज्याद् न-कारं सर्व-सन्धिषु ।
म-कारम् अस्त्रम् उद्दिश्य मन्त्र-मूर्ति: भवेद् बुध: ॥
'வே'காரம் நேத்ரயோர் யுஞ்ஜ்யாந்
'ந'காரம் ஸர்வ ஸந்திஷு |
'ம'கார மஸ்த்ர முத்திஸ்ய
மந்தரமூர்திர் பவேத் புத: ||

கண்களில் (நேத்ரயோர்) - 'வே' என்ற அக்ஷரத்தை நிறுத்தி (யுஞ்ஜ்யாந்),
அனைத்து சந்திகளிலும் (ஸர்வ ஸந்திஷு) - 'ந'  என்ற அக்ஷரத்தை நிறுத்தி,
'ம' என்ற அக்ஷரத்தை ஆயுதங்களில் (அஸ்த்ர) நிறுத்தியும்,
இப்படி தன்னையே மந்திர மூர்த்தியாக (மந்தரமூர்திர்) ஆக்கிக்கொள்பவன் (பவேத்) புத்திமான் (புத:) ||

स-विसर्गं फड् अन्तं 
तत् सर्व-दिक्षु विनिर्दिशेत् ।
ॐ विष्णवे नम इति ॥ 
ஸ விஸர்கம் பட் அந்தம்
தத் ஸர்வ திக்ஷ விநிர்திஸேத் |
ஓம் விஷ்ணவே நம இதி ||

"ஓம் விஷ்ணவே நம" என்று தியானித்து கொண்டே வரும் போது, 
"ம"காரம் சொல்லும் போதே, அதனோடு "பட்" என்ற அக்ஷரத்தையும் விஸர்கமாக சேர்த்து (ஸ விஸர்கம் பட்), கிழக்கு திசையில் ஆரம்பித்து, நான்கு திசைகளிலும் "ம: அஸ்த்ராய பட்" (தத் ஸர்வ திக்ஷ) என்று சொல்லி (விநிர்திஸேத்) முடிக்க வேண்டும் (அந்தம்). 
இப்படி (இதி) ஓங்காரத்திற்கு காரணமான விஷ்ணுவே (ஓம் விஷ்ணவே) நம்மை சூழ்ந்து இருக்க, அவரை மமதை இல்லாமல் நமஸ்கரிக்க வேண்டும் (நம:). 

आत्मानं परमं ध्यायेद् ध्येयं षट्‍‌-शक्तिभि: युतम् ।
विद्या तेज: तप: मूर्तिम् इमं मन्त्रम् उदाहरेत् ॥
ஆத்மானம் பரமம் த்யாயேத்
த்யேயம் ஷட் ஸக்திபிர் யுதம் |
வித்யா தேஜஸ் தபோ மூர்திம்
இமம் மந்த்ரம் உதாஹரேத் ||

ஆறு ஐஸ்வர்யங்கள் (ஷட் ஸக்திபிர்) (பூர்ணமான ஐச்வர்யம், பூர்ணமான தர்மம், பூர்ணமான புகழ், பூர்ணமான ஸ்ரீ,பூர்ணமான வைராக்யம்,பூர்ணமான மோக்ஷம்) நிறைந்தவரான (யுதம்)  சர்வ சாஸ்திரமும் அறிந்த, தேஜோ மயமான, தவ மூர்த்தியான (வித்யா தேஜஸ் தபோ மூர்திம்) பரமாத்மா நாராயணனே நான் (ஆத்மானம்) தியானிக்க (த்யேயம்) தகுதியானவர் என்ற மனத்தெளிவுடன், நாராயண-கவசம் என்ற இந்த மந்திரத்தை ஜபிக்க ஆரம்பிக்க வேண்டும் (இமம் மந்த்ரம் உதாஹரேத்)




ॐ हरि: विदध्याद् मम सर्व-रक्षां
न्यस्त अङ्‌घ्रि पद्म: पतगेन्द्र पृष्ठे ।
दर अरि चर्म असि गदा इषु चाप
पाशान् दधान: अष्ट गुण: अष्ट बाहु: ॥
ஓம் ஹரிர் விதத்யான்
மம ஸர்வ ரக்ஷாம்
ந்யஸ் அங்க்ரி பத்ம:
பதகேந்த்ர ப்ருஷ்டே | 
தராரி சர்மாஸி
கத  இஷு சாப
பாஸான் ததாந 
அஷ்ட குண அஷ்ட பாஹு: ||

ஓங்காரத்திற்கு காரணமான பகவான் விஷ்ணு (ஓம் ஹரிர்) கருடனின் மீது அமர்ந்து இருக்க, தனது  தாமரை (பத்ம:) போன்ற திருவடிகள் (அங்க்ரி) கருடனின் முதுகில் (பதகேந்த்ர ப்ருஷ்டே) தொட்டு (ந்யஸ்த) கொண்டு இருக்க, சங்கு (தர), சக்கரம் (அரி), கேடயம் (சர்ம), நந்தகம் என்ற வாள் (அஸி), கதை (கத), அம்பு (இஷு), வில் (சாப), மற்றும் அங்குசம் (பாஸான்) என்ற எட்டு ஆயுதங்களை, கஜேந்திரன் என்ற யானையை காப்பதற்காக எட்டு கைகளில் (அஷ்ட பாஹு) தரித்து (ததாந) கொண்டு வந்த, எட்டு குணங்களுடைய (அஷ்ட குண) பரமாத்மா நாராயணன், எல்லா நேரங்களிலும் அவருடைய எட்டு கரங்களால் என்னைப் அனைத்து விதத்திலும் (மம ஸர்வ ரக்ஷாம்) பாதுகாத்து அருள வேண்டும் (விதத்யான்).
जलेषु मां रक्षतु मत्स्य मूर्ति: 
याद:-गणेभ्यो वरुणस्य पाशात् ।
ஜலேஷு மாம் ரக்ஷது
மத்ஸ்ய மூர்தி:
யாதோ கணேப்யோ
வருணஸ்ய பாஸாத் |

மத்ஸ்ய மூர்த்தியாக அவதாரம் செய்த பரமாத்மா, நீரில் (ஜலேஷு) ஏற்படும் அபாயத்திலிருந்து என்னை காக்கட்டும் (மாம் ரக்ஷது). நீரில் வாழும் உயிர்களின் (யாதோ கணேப்யோ) வருண பாசத்திலிருந்து (வருணஸ்ய பாஸாத்) என்னை காக்கட்டும்.
स्थलेषु माया-वटु वामन: अव्यात्
त्रिविक्रम: खे अवतु विश्वरूप: ॥
ஸ்தலேஷு மாயா
வடு வாமன அவ்யாத் |
த்ரிவிக்ரம: கே(அ)வது
விஸ்வரூப: ||

7 வயது பிராம்மண சிறுவனாக (வடு) அவதரித்து, வஞ்சகனை வஞ்சனையால் அடிப்பது போல, கபடம் செய்து (மாயா) மூன்று அடி மண் கேட்டு, விஸ்வரூபம் (விஸ்வரூப:) எடுத்து மூவுலகங்களை அளந்த, 
வாமன பகவான், என்னை நிலத்தில் (ஸ்தலேஷு) காக்கட்டும் (அவ்யாத்).
உலகளந்த பெருமாள் (த்ரிவிக்ரம) என்னை ஆகாயத்தில் (கே) காக்கட்டும் (அவது).
दुर्गेषु अटवि आजि-मुख-आदिषु प्रभु:
पायाद् नृसिंह: असुर यूथप अरि: ।
துர்கேஷு அடவி
ஆஜி முக ஆதிஷு ப்ரபு:
பாயாந் ந்ருஸிம்ஹ
அஸுர யூதப அரி: |

ஆபத்தான இடங்களாலும் (துர்கேஷு), அடர்ந்த வனங்களாலும் (அடவி), யுத்த களம் போன்றவற்றாலும்  (ஆஜி முக ஆதிஷு) மனதில் ஏற்படுகின்ற அச்சத்தை போக்க, அசுரர்களின் தலைவன் (அஸுர யூதப) ஹிரண்யகசிபுவை ஒழிக்க (அரி) நரசிம்மாக (ந்ருஸிம்ஹ) வந்தது போல வந்து, பரமாத்மா (ப்ரபு:) என்னை காக்கட்டும் (பாயாந்).

विमुञ्चतो यस्य महा-अट्टहासं
दिशो विनेदु: न्यपतं च गर्भा: ॥
விமுஞ்சதோ யஸ்ய
மஹா அட்டஹாஸம்
திஸோ விநேதுர்
ந்யபதம்ஸ் ச கர்பா: ||

அசுரர்கள் நடுங்கும் நரசிம்மஹ ரூபத்துடன் அவர் கொடுத்த (விமுஞ்சதோ யஸ்ய) மஹா அட்டகாசமான சிம்ம கர்ஜனை எல்லா திசைகளிலும் அதிர (திஸோ விநேதுர்) செய்தது. மேலும், அது கர்ப்பத்தில் வளரும் அசுர சிசுவையும் சிதைக்குமளவிற்கு (ந்யபதம்ஸ் ச கர்பா:) அசுரர்களிடம் ஒரு பயத்தை கொடுத்தது.
அசுரர்களை நடுங்க செய்யும் பகவான், ஆபத்தான இடங்களில், பகவான் நரசிம்மராக வந்து எனக்கு கருணை காட்டட்டும்.




रक्षतु असौ मा अध्वनि यज्ञ-कल्प:
स्व-दंष्ट्रया उन्नीत धरो वराह: ।
ரக்ஷது அஸௌ மா அத்வநி
யஜ்ஞ கல்ப: ஸ்வ தம்ஷ்ட்ரயா 
உந்நீத தரோ வராஹ: |

போகும் பாதைகள் (அத்வநி) அனைத்திலும் வரும் ஆபத்துகளில் இருந்து, உலகத்தை (தரோ) தன் கொம்பினால் (ஸ்வ தம்ஷ்ட்ரயா) பிரளய ஜலத்திலிருந்து மீட்டு உயர்த்தி (உந்நீத) காப்பாற்றிய அந்த (அஸௌ) யஞ்ய மூர்த்தியான (யஜ்ஞ கல்ப:) வராஹ பகவான் என்னை (மா) காக்கட்டும் (ரக்ஷது).


राम: अद्रि-कूटेषु अथ विप्रवासे
स-लक्ष्मण: अव्याद् भरत-अग्रज: अस्मान् ॥
ராம: அத்ரி கூடேஷ 
அத விப்ர வாஸே
ஸ-லக்ஷ்மண அவ்யாத்
பரத அக்ரஜ  அஸ்மான் ||

மலை சிகரங்களில் (அத்ரி கூடேஷ), மேலும் வெளி தேசங்களில் (அத விப்ர வாஸே) என்னை (அஸ்மான்) பரதனின் மூத்த சகோதரனான (பரத அக்ரஜ) ஸ்ரீ ராமர் (ராம), லக்ஷ்மணருடன் சேர்ந்து (ஸ-லக்ஷ்மண), காத்து ரக்ஷிக்கட்டும் (அவ்யாத்).
माम् उग्र-धर्माद् अखिलात् प्रमादात्
नारायण: पातु नरश्च हासात् ।
மாமுக்ர தர்மா
தகிலாத் ப்ரமாதாந்
நாராயண: பாது
நரஸ்ச ஹாஸாத்

ஒரு வேளை நான் (மாம்) வேத தர்மத்துக்கு விரோதமாக  திமிர் தனத்தால் முட்டாள் தனத்தால் (ப்ரமாதாந்), அனைத்து விதமான (அகிலாத்) போலி மத தர்மங்களை ஏற்று உக்கிரமான காரியங்கள் (உக்ர தர்மாத்) செய்ய துணிந்தால், நரர்களுக்கு (நரஸ்ச) ஈஸ்வரனான அந்த நாராயணன் (நாராயண:) என் கர்வத்தை அடக்கி (ஹாஸாத்) மீண்டும் சனாதன வேத தர்மத்தில் வாழும்படியாக  ரக்ஷிக்கட்டும் (பாது).
दत्तस्तु अयोगाद् अथ योग-नाथ:
पायाद् गुण-ईश: कपिल: कर्म-बन्धात् ॥
தத்தஸ் த்வ அ-'யோகா'த்
அத யோகநாத:
பாயாத் குணேஸ:
கபில: கர்ம பந்தாத் ||

யோகத்திற்கு தலைவனாக (யோகநாத:) இருக்கும் அந்த (அத) தத்ராத்ரேயர் (தத்தஸ்),  உண்மையான யோகத்திற்கு விரோதமாக (த்வ அ-'யோகா'த்) செயல்படுபவர்களிடமிருந்து என்னை காக்கட்டும் (பாயாத்). குணபூர்ணனான (குணேஸ:) கபிலர், என்னை கர்மா பந்தத்தில் (கர்ம பந்தாத்) இருந்து காக்கட்டும் (பாயாத்).
सनत्कुमार: अवतु कामदेवाद्
हय-शीर्षा मां पथि देव-हेलनात् ।
ஸநத் குமார:
அவத் காம தேவாத்
ஹய ஸீர்ஷா மாம்
பதி தேவ ஹேலநாத் |

ஞான மார்க்கத்தை விரும்பும் சனத் குமாரர்கள் (ஸநத் குமார:), என்னை காம தேவதையிடம் (காம தேவாத்) இருந்து காக்கட்டும் (அவத்).
பூதேவர்களான (தேவ) வேதப்ராம்மணர்களையும், பஞ்ச பூதங்களை இயக்கும் தேவர்களையும் (தேவ) கேலி செய்த (ஹேலநாத்) அபராதத்தில் இருந்து வேதத்திற்கு பதியாக (பதி) இருந்து ரக்ஷிக்கும் ஹயக்ரீவர் (ஹய ஸீர்ஷா) என்னை (மாம்) காக்க வேண்டும்.
देवर्षि-वर्य: पुरुष अर्चन अन्तरात्
कूर्मो हरिर्मां निरयाद् अशेषात् ॥
தேவர்ஷி வர்ய:
புருஷ அர்சன அந்தராத்
கூர்மோ ஹரிர் மாம்
நிரயாத் அஷேஷாத் ||

புருஷோத்தமனை (புருஷ) ஆராதனை (அர்சன) செய்யாத பாவங்களில் (அந்தராத்) இருந்து தேவ ரிஷிகளிலேயே சிறந்தவரான (தேவர்ஷி வர்ய) நாரதர் என்னை காக்கட்டும்.
கூர்ம அவதாரம் (கூர்மோ) செய்து மந்திர மலையை தாங்கி தேவர்களுக்கு அம்ருதம் கொடுத்த பகவான் (ஹரிர்), என்னை (மாம்) மீளமுடியாத (அஷேஷாத்) நரகங்களில் (நிரயாத்) விழுந்து விடாமல் காக்கட்டும்.




धन्वन्तरि: भगवान् पातु अपथ्याद्
द्वन्द्वाद् भयाद् ऋषभो निर्जित आत्मा ।
தந்வந்தரிர் பகவான்
பாது அபத்யாத்
த்வந்த் வாத் பயாத்
ருஷபோ நிர்ஜிதாத்மா |

உடலில் வரும் சர்வ நோய்களிலிருந்தும் (அபத்யாத்), வைத்திய நாராயணனாக இருக்கும் தன்வந்தரி பகவான் என்னை ரக்ஷிக்கட்டும் (பாது)
இந்திரியங்களை வென்ற (நிர்ஜிதாத்மா) ரிஷப ரிஷி,  வெப்பம்-குளிர், சுகம்-துக்கம், மானம்-அவமானம் போன்ற இரட்டைகளினால் (த்வந்த் வாத்) ஏற்படும் துக்கத்தில் இருந்து, பயத்திலிருந்து (பயாத்) என்னை காக்கட்டும்.
यज्ञ: च लोकाद् अवताद् जन-अन्ताद्
बलो गणात् क्रोध वशाद् अहीन्द्र: ॥
யஜ்ஞஸ்ச லோகாத்
அவதாஜ் ஜநா அந்தாத்
பலோ கணாத் க்ரோத
வஸாத் அஹீந்தர: ||

யஜ்ஞ (யஜ்ஞஸ்ச) ஸ்வரூபியான நாராயணன் உலக (லோகாத்) ஜனங்களால் (ஜநா) எனக்கு ஏற்படுத்து நினைக்கும் அபவாதங்களில் (அவதாஜ்) இருந்து என்னை காக்கட்டும் (அந்தாத்).
பாம்பு போன்ற கோப குணமுள்ள விஷ ஜந்துக்களிடமிருந்து (கணாத் க்ரோத வஸாத்), ஆதிசேஷ அவதாரமான (அஹீந்தர:) பலராமர் (பலோ) என்னை காக்கட்டும்.
द्वैपायनो भगवान् अप्रबोधाद्
बुद्ध: तु पाषण्ड गण प्रमादात् ।
த்வைபாயநோ பகவாந்
அப்ர போதாத்
புத்தஸ்து பாஷண்ட கணாத்
ப்ரமா தாத் |

வேத சாஸ்திரங்களை அறியாத அஞானத்திலிருந்து (அப்ர போதாத்), வேத மூர்த்தியான வ்யாஸ பகவான் (த்வைபாயநோ பகவாந்) ரக்ஷிக்கட்டும்.
புத்தி மழுங்கி (ப்ரமா தாத்) வேத மார்க்கத்தை விட்டு, பாஷாண்ட கூட்டங்களில் (போலி மதங்கள்) (பாஷண்ட கணாத்) சேர்ந்து விடாமல் இருக்க, புத்திமானான (புத்தஸ்து) பரமாத்மா நாராயணன் என்னை ரக்ஷிக்கட்டும்.

कल्कि: कले: काल-मलात् प्रपातु
धर्म अवनाय: उरु कृत-अवतार: ॥
கல்கி: கலே: கால
மலாத் ப்ரபாது
தர்ம அவநாய 
உரு க்ருத அவதார: ||

தர்மத்தை காக்கும் பொருட்டு (தர்ம அவநாய உரு) அவதரிக்க போகும் (க்ருத அவதார) கல்கி ரூபத்தை தரிக்கும் அந்த உயர்ந்த (உரு) பகவான், தர்மத்தை விட்டு விலகி, மலம் போல நாற்றமடிக்கும் (மலாத்) கலி கால துன்பத்திலிருந்து (கலே: கால) என்னை காக்கட்டும் (ப்ரபாது).

பகல் -  
ப்ராத (6 AM - 8 AM) கேசவன்
ஸங்கவ (8 AM - 10 AM) கோவிந்தன்
ப்ராஹ்வ (10 AM -12 Noon) நாராயணன்
மத்யந் (12 Noon - 2 PM) விஷ்ணு,
அபரான்ன (2 PM - 4 PM) மதுசூதனன்,
ஸாயம் (4 PM - 6 PM) மாதவன்,

இரவு - 
ப்ரதோஷ (6 PM - 8 PM) ஹ்ருஷீகேஸன்,
அர்த்தராத்திரி (8 PM - 10 PM) பத்மநாபன்,
நிஸீத (10 PM - 12 Mid Night) பத்மநாபன்,
அபரராத்திரி (12 Mid Night - 2 AM) ஸ்ரீதரன்,
ப்ரத்யூஷ (2 AM - 4 AM) ஜனார்த்தன,
ப்ரபாதே (4 AM - 6 AM) விஸ்வேஸ்வரன் .

ஸுர்ய அஸ்தமனத்திற்கும் (6PM), ஸுர்ய உதயத்துக்கும் இடையே 30 நாழிகைகள் உண்டு 
(720 Minutes or 12 hrs). (ஒரு நாழிகை என்பது 24 நிமிடம்.)
ஸுர்ய உதயத்துக்கு முந்தைய 5 நாழிகைக்கு (4AM - 6AM) 
உஷத்காலம் (ப்ரம்ம முகூர்த்தம்) என்று பெயர்.





मां केशवो गदया प्रात: अव्याद्
गोविन्द आसङ्गवम् आत्त-वेणु: ।
மாம் கேஸவோ கதயா
ப்ராத: அவ்யாத்
கோவிந்த ஆஸங்கவம்
ஆத்தவேணு: |

கதை ஏந்தியிருக்கும் (கதயா) கேசவன் (கேஸவோ) என்னை (மாம்) காலையில் (ப்ராத:) (6AM-8AM) காக்கட்டும் (அவ்யாத்).
கைகளில் புல்லாங்குழல் (ஆத்தவேணு) வைத்து இருக்கும் கோவிந்தன், என்னை இரண்டாம் முற்பகலில் (ஸங்கவம்) (8AM - 10AM) காக்கட்டும்.
नारायण: प्राह्ण उदात्त शक्ति:
मध्यम् दिने विष्णु: अरीन्द्रपाणि: ॥
நாராயண: ப்ராஹ்வ
உதாத்த ஸக்தி:
மத்யந் தினே விஷ்ணு:
அரீந்தர பாணி: ||

கம்பீரமான சக்தி ஆயுதத்தை தரித்த (உதாத்த ஸக்தி:) நாராயணன், என்னை பூர்வாஹ்னவத்தில் (ப்ராஹ்வ) (10AM - 12 Noon) காக்கட்டும்.
கையில் கால சக்கரத்தை வைத்து இருக்கும் (அரீந்தர பாணி:) விஷ்ணு பகவான் என்னை மத்யான (12 Noon - 2 PM) (மத்யந்) வேளையில் காக்கட்டும்.

देवो अपराह्णे मधु-हा उग्र-धन्वा
सायं त्रि-धामा अवतु माधवो माम्
தேவா: அபராஹ்ணே
மது ஹோக்ர தன்வா
ஸாயம் த்ரிதாமா அவது
மாதவோ மாம் |

கொடிய (உக்ர) தனுஷை தரித்து தேஜோமயமான மதுசூதனன் (மதுஹா) அபரான்னத்தில் (அபராஹ்ணே) (2PM - 4PM) காக்கட்டும் (தன்வா). 
மூன்று இடங்களிலும் (த்ரிதாமா) (படைத்தல், காத்தல், அழித்தல்) வீற்று இருக்கின்ற மாதவன் என்னை ஸாயங்கால வேளையில் (ஸாயம்) (4PM - 6PM) காக்கட்டும் (அவது).
दोषे हृषीकेश उत अर्ध-रात्रे
निशीथ एक: अवतु पद्मनाभ:
தோஷே ஹ்ருஷீகேஸ |
உத அர்த-ராத்ரே 
நிஸீத ஏக: 
அவது பத்மநாப: ||

இந்திரியங்களை ஜெயித்த ஹ்ருஷீகேஸன் ப்ரதோஷ (தோஷே) (6PM - 8PM) காலத்தில் என்னை காக்கட்டும் (அவது).
மேலும் (உத), 
அசகாய சூரனான பத்மநாபன் ஒருவரே (ஏக:), அர்த்த ராத்திரி முதல் நிஸீத காலம் வரை (அர்த-ராத்ரே நிஸீத) (8PM - 12 Mid Night) காக்கட்டும் (அவது).
श्रीवत्स-धामा अपर-रात्र ईश:
प्रत्यूष ईश असि-धरो जनार्दन:
ஸ்ரீவத்ஸ தாம:
அபர ராத்ர ஈஸ:
ப்ரத்யூஷ ஈஸ:
அஸி தர: ஜநார்தன: |

ஸ்ரீவத்சம் உடைய (ஸ்ரீவத்ஸ தாமா) பகவான் (ஈஸோ) ஸ்ரீதரன்,  அபர ராத்திரியில் (அபர ராத்ர) (12 Mid Night - 2 AM) காக்கட்டும் (அவது).
இரவின் முடிவு சமயத்தில் (ப்ரத்யூஷ) (2 AM - 4 AM) வாள் ஏந்தி (அஸி தர:) நிற்கும் ஜனார்த்தன பகவான் (ஈஸ) காக்கட்டும். 
दामोदर: अव्याद् अनुसन्ध्यं प्रभाते
विश्व ईश्वरो भगवान् कालमूर्ति:
தாமோதர அவ்யாத் அநு ஸந்தயம் | 
ப்ரபாதே விஸ்வேஸ்வரோ பகவான் 
கால மூர்த்தி || 

ஒவ்வொரு சந்திகளிலும் (அநு ஸந்தயம்) (@6AM, @12 Noon, @6PM) தாமோதரன் என்னை காக்கட்டும் (அவ்யாத்).
காலமூர்த்தியும், உலகை நிர்வாகம் செய்பவனுமாகிய பகவான் (விஸ்வேஸ்வரோ பகவான்) விடிகாலை உஷத்காலத்தில் (ப்ரபாதே) (4 AM - 6 AM) என்னை காக்கட்டும் (அவ்யாத்).

चक्रं युग-अन्त अनल तिग्म-नेमि
भ्रमत् समन्ताद् भगवत्-प्रयुक्तम्
दन्दग्धि दन्दग्धि अरि-सैन्यम् आशु
कक्षं यथा वात-सखो हुताश:
சக்ரம் யுகாந்த அனல
திக்ம நேமி
ப்ரமத் ஸமந்தாத்
பகவத் ப்ர-யுக்தம்  |
தந்தக்தி தந்தக்தி 
அரி ஸைன்யம் ஆஸு 
கக்ஷம் யதா வாத
ஸக: ஹுதாஸ: || 


நாராயணன் கையில் இருக்கும் வஜ்ராயுதம் போல கூறிய நுனி உடைய (திக்ம நேமி) காலத்தை அழிக்கும் (யுகாந்த) காலசக்கரம் (சக்ரம்) நாற்புறங்களிலும் (ஸமந்தாத்) அக்னி பிழம்பாக (அனல) சுற்றிக்கொண்டே (ப்ரமத்) இருக்கிறது.
எப்படி (யதா) உலர்ந்த புற்களை (கக்ஷம்) காற்றை துணை கொண்டு (வாத ஸக:), ஒரு நொடியில் (ஆஸு) அக்னியால்  பஸ்பமாகிறதோ (ஹுதாஸ:)
அது போல, பகவான் (பகவத்) கையிலிருந்து புறப்பட்ட (ப்ர-யுக்தம்) சக்கரம், எதிரிகளை, அவர்கள் சேனைகளை (அரி ஸைன்யம்)  ஒரு நொடியில் (ஆஸு) அடியோடு தண்டிக்கப்படுவார்கள் (தந்தக்தி) தண்டிக்கப்படுவார்கள் (தந்தக்தி).



गदे अशनि स्पर्शन विस्फुलिङ्गे
निष्पिण्ढि निष्पिण्ढि अजित प्रिया असि ।
कुष्माण्ड वैनायक यक्ष रक्षो:
भूत ग्रहां चूर्णय चूर्णय अरीन् ।।
கதே அஸநி ஸ்பர்ஸன 
விஸ்புலிங்கே 
நிஷ்பிண்தி நிஷ்பிண்தி
அஜித ப்ரியாஸி |
குஸ்மாண்ட வைநாயக
யக்ஷ ராஷோ 
பூத க்ராஹன் 
ஸீர்ணய ஸீர்ணய அரீன் ||

ஏ கதயே (கதே)! நீ பெருமாளின் நெருங்கிய பிரியத்துக்கு பாத்திரமாக (அஜித ப்ரியாஸி) இருக்கிறாய். எதிரிகளை ஒடுக்குவதற்காக, பெருமாள் உன்னை தொடும்போது (ஸ்பர்ஸன), கோடி மின்னல்கள் (அஸநி) உருவாவது போல, நெருப்பு துணுக்கைகள் கிளம்பி கிளம்பி (நிஷ்பிண்தி நிஷ்பிண்தி) ஜொலிக்கின்றனறாய் (விஸ்புலிங்கே)
குஸ்மாண்டர்கள்,  வைநாயகர்கள், யக்ஷர்கள்,  ராஷஸர்கள்,  பூதங்கள், கிரஹங்கள் (க்ராஹன்), போன்ற எதிரிகளை (அரீன்) என்னை நெருங்க விடாமல், அவர்களை துளைத்து (Drill) (ஸீர்ணய ஸீர்ணய) விடுங்கள்.
त्वं यातुधान प्रमथ प्रेत मातृ:
पिशाच विप्र-ग्रह घोर-द‍ृष्टीन् ।
दरेन्द्र विद्रावय कृष्ण-पूरितो
भीम स्वन: अरे: हृदयानि कम्पयन् ॥
த்வம் யாதுதான ப்ரமத
ப்ரேத மாத்ரு பிஸாச
விப்ர க்ரஹ கோர த்ருஷ்டீன் |
தரேந்த்ர வித்ராவய
க்ருஷ்ண பூரிதோ
பீம ஸ்வநா அரேர்
ஹ்ருதயானி கம்பயன் ||

கிருஷ்ண பரமாத்மா வைத்திருக்கும் (தரித்து இருக்கும்) சங்கங்களில் உயர்ந்த பாஞ்சசன்யமே (தரேந்த்ர) ! கிருஷ்ண பரமாத்மா தன் திருவாயால் சங்கத்தை ஊதும்போது (க்ருஷ்ண பூரிதோ), நீ (த்வம்) கொடுக்கும் (வித்ராவய) பேரொலி (பீம ஸ்வநா), பயங்கரமான ரூபமுடைய (கோர த்ருஷ்டீன்) யாதுதானர், ப்ரமதர், ப்ரேதங்கள்,  மாத்ரு கணங்கள்,  பிஸாசர்கள்,  ப்ரம்ம ராக்ஷஸர்கள் (விப்ர க்ரஹ) போன்ற தீயவர்களின் (அரேர்) இதயங்களை (ஹ்ருதயானி) நடுங்கச்செய்து (கம்பயன்) செய்து விடுகிறது.

त्वं तिग्म-धार-असि-वर अरि-सैन्यम्
ईश-प्रयुक्तो मम छिन्धि छिन्धि ।
चक्षूंषि चर्मन् छत चन्द्र छादय
द्विषाम् अघोनां हर पाप चक्षुषाम् ॥
த்வம் திக்ம தார அஸி வர 
அரி ஸைன்யம்
ஈச ப்ரயுக்தோ மம சிந்தி சிந்தி |
சக்ஷம்ஷி சர்மன்
ஸத சந்த்ர சாதய 
த்விஷாம் அகோநாம் 
ஹர பாப சக்ஷுஷாம் ||

உயர்ந்த நந்தகம் என்ற மிக கூர்மையான வாளே (திக்ம தார அஸி வர)! நீங்கள் உலகை படைத்த பரமாத்மாவின் ஆளுமையில் (ஈச ப்ரயுக்தோ) உள்ளீர்கள்.
பரமாத்மாவால் பிரயோகிக்கப்படும் நீங்கள் (த்வம்), என்னுடைய (மம) சத்ருக்களின் கூட்டத்தை (அரி ஸைன்யம்) தூள் தூளாக்க வேண்டும் (சிந்தி சிந்தி).
நூற்றுக்கணக்கான சந்திரனை போல (ஸத சந்த்ர) பல கண்களை (சக்ஷம்ஷி) உடைய கேடயமே (சர்மன்)! என்னை கண்டு பொறாமைப்படுபவர்களின் (த்விஷாம்) கண்ணை மறைத்து விடுங்கள் (சாதய).
கொடிய (அகோநாம்) பாபங்களை (பாப) செய்யும் சத்ருக்களின் கண்ணை (சக்ஷுஷாம்) பறித்து (ஹர) விடுங்கள்.
यन्नो भयं ग्रहेभ्य अभूत् केतुभ्यो नृभ्य एव च ।
सरीसृपेभ्यो दंष्ट्रिभ्यो भूतेभ्यो अंहोभ्य एव च ॥
सर्वाणि एतानि भगवन्नाम रूप अनुकीर्तनात् ।
प्रयान्तु सङ्‌क्षयं सद्यो ये न: श्रेय:प्रतीपका: ॥
யந்நோ பயம் 
க்ரஹேப்யோ பூத் கேதுப்யோ 
ந்ருப்ய ஏவ ச |
ஸரீஸ்ருபேப்யோ தம்ஷ்ட்ரிப்யோ 
பூதேப்யோ அம்ஹோப்ய ஏவ ச ||
ஸர்வாண் யேதாநி 
பகவந் நாம ரூப அனு கீர்தநாத் |
ப்ரயாந்து ஸங்க்ஷயம் 
ஸத்யோ யே ந: 
ஸ்ரேய: ப்ரதீபகா: ||


கிரஹங்கள் (க்ரஹே ப்யோ பூத்), தூமகேது போன்ற வால்நக்ஷத்ரங்கள்  (பூத்கேது ப்யோ) பொறாமை கொண்ட மநுஷ்யர்கள் (ந்ருப்ய),
மேலும் (ஏவ ச)
விஷ ஜந்துக்களான தேள், சர்ப்பங்கள் (ஸரீஸ்ருபேப்யோ), கோரைப்பல் கொண்ட புலி, நாய் போன்ற மிருகங்கள் (தம்ஷ்ட்ரிப்யோ), பாபத்தால் அலையும் பூதங்கள் (பூதேப்யோ), பாப காரியங்கள் (அம்ஹோப்ய) போன்றவற்றால் (ஏவ ச) என்னென்ன பயங்கள் உண்டாகுமோ (யந்நோ பயம்), அவை அனைத்தும் (ஸர்வாண் யேதாநி), பகவானின் நாமத்தை கீர்த்தனை செய்வதாலும், பகவானின் ரூபத்தை கீர்த்தனை செய்வதாலும், பகவானின் அஸ்திரங்களை பற்றி கீர்த்தனை செய்வதாலும் (பகவந் நாம ரூப அனு கீர்தநாத்) விரட்டி ஒழிக்கப்பட்டு (ப்ரயாந்து ஸங்க்ஷயம்), விக்னங்கள் (ப்ரதீபகா) ஒழிந்து நல்லது (ஸ்ரேய:) மட்டுமே நடக்கும்.. இது சத்யமாயிற்றே (ஸத்யோ யே ந:)!
गरुडो भगवान् स्तोत्र स्तोभ: छन्दोमय: प्रभु: ।
रक्षतु अशेष कृच्छ्रेभ्यो विष्वक्सेन: स्व-नामभि: ॥
கருடோ பகவான் 
ஸ்தோத்ர ஸ்தோபஸ் சந்தோ 
மய: ப்ரபு: |
ரக்ஷது அஸேஷ-க்ருசரேப்யோ 
விஷ்வக் ஸேன: 
ஸ்வ-நாமபி: ||

வேதமே வழிபடுபவராகவும் (ஸ்தோத்ர ஸ்தோபஸ்) வேத ஸ்வரூபியாகாகவும் (சந்தோ மய:) போற்றப்படுகிறார் (ப்ரபு:) கருட பகவான்.
விஷ்வக்சேனர் என்றும் பெயர் கொண்ட (ஸ்வ-நாமபி) கருடபகவான், எனக்கு வரும் எல்லையற்ற துன்பங்களில் (அஸேஷ-க்ருசரேப்யோ) இருந்து காக்கட்டும் (ரக்ஷது).

सर्व-आपद्‌भ्यो हरे: नाम रूप यान आयुधानि न: ।
बुद्धि इन्द्रिय मन: प्राणान् पान्तु पार्षद भूषणा: ॥
ஸர்வ ஆபத்ப்யோ 
ஹரேர் நாம ரூப யாந ஆயுதாநி ந: | 
புத்தி இந்த்ரிய மன: ப்ராணான் 
பாந்து பார்ஷத பூஷணா: ||

ஹரியின் நாமும், ஹரியின் ரூபமும், ஹரியின் வாகனமும் (யாந), ஹரியின் ஆயுதங்களும் (ஆயுதாநி) என்னை (ந:) சர்வ ஆபத்துக்களில் (ஸர்வ ஆபத்ப்யோ) இருந்தும் காக்கட்டும்.
மோக்ஷம் அடைந்த பார்ஷதர்களில் பூஷணமாக (பார்ஷத பூஷணா:) இருக்கும் கருட பகவான், என் புத்தி, புலன்கள் (இந்த்ரிய), மனம், பிராணன் அனைத்தையும் காக்கட்டும் (பாந்து).




यथा हि भगवान् एव वस्तुत: सद् असद् च यत् ।
सत्येन अनेन न: सर्वे यान्तु नाशम् उपद्रवा: ॥
யதா ஹி பகவான்  
ஏவ வஸ்துத: 
ஸத் அஸச்ச யத் |
ஸத்யே நாநேந 
ந: ஸர்வே யாந்து 
நாசம் உபத்ரவா: ||

அழியாத ஆத்மாக்களாகவும் (ஸத்), அழியக்கூடிய இயற்கையாகவும்  (அஸச்ச) உலகில் காணப்படும் அனைத்தும் (யத்) உண்மையில் ஒரே பரமாத்மா ஸ்வரூபமே (யதா ஹி பகவான் ஏவ வஸ்துத:)!
இதுவே சத்யம் என்பதில் எனக்கு (ஸத்யே நாநேந) சந்தேகமில்லை.
இது சத்தியமாக இருப்பதாலேயே இயற்கையால் எங்கள் அனைவருக்கும் (ந: ஸர்வே) ஏற்படும் சங்கடங்கள் நாசமாகி (நாசம் உபத்ரவா:) விரட்டப்பட்டு (யாந்து) எங்களுக்கு நல்லதே நடக்கட்டும்.

यथा ऐकात्म्य अनुभावानां विकल्प रहित: स्वयम् ।
யதா ஐகாத்ம்ய அநுபாவாநாம்
விகல்ப ரஹித ஸ்வயம் |


ஆத்மா (Soul), இயற்கை (Nature) என்று தனியாக தெரிந்தாலும், பிரளய காலத்தில் இவை அனைத்தும் தன்னிடம் ஒடுங்கும் போது, இவை (யதா) அனைத்தும் உண்மையில் ஒன்றுதான் (ஐகாத்ம்ய) என்ற ஞான அனுபவம் (அநுபாவாநாம்) பகவானுக்கு சுயமாகவே (ஸ்வயம்) இருப்பதால், பேத பாவனை இல்லாமல் (விகல்ப ரஹித) இருக்கிறார்.
भूषण आयुध लिङ्ग-आख्या 
धत्ते शक्ती: स्वमायया ॥
பூஷண ஆயுத லிங்காக்யா
தத்தே ஸக்தீ: ஸ்வ மாயயா ||

தன் மாயையை கொண்டே (ஸ்வ மாயயா), தன் சக்தியை கொண்டே (தத்தே ஸக்தீ:), சங்கு சக்கரம் போன்ற பூஷணங்களாகவும், ஆயுதங்களாகவும், விபவ, அர்ச்சா அவதார ரூபங்களாகவும் (லிங்க), ராம கிருஷ்ண நரசிம்ம பரசுராம போன்ற நாமங்களாவும் (ஆக்யா), தன்னை காட்டி கொள்கிறார்.

तेन-एव सत्य मानेन सर्वज्ञो भगवान् हरि: ।
पातु सर्वै: स्वरूपैर्न: सदा सर्वत्र सर्वग: ॥
தேநைவ ஸத்ய மானேன
ஸர்வஜ்ஞோ பகவான் ஹரி: |
பாது ஸர்வை: ஸ்வரூபைர்
ந: ஸதா ஸர்வத்ர ஸர்வக: ||

இப்படி(தேநைவ) சத்திய ஸ்வரூபியான (ஸத்ய மானேன) அனைத்தையும் அறிந்துள்ள (ஸர்வஜ்ஞோ) பகவான் ஹரி,
அவருடைய அனைத்து ரூபங்களாலும் (ஸர்வை: ஸ்வரூபைர்) என்னை எங்கும் எப்பொழுதும் பரவி (ந ஸதா ஸர்வத்ர ஸர்வக:) இருந்து காக்கட்டும்.

विदिक्षु दिक्षु ऊर्ध्वम् अध: समन्ताद्
अन्त: बहि: भगवान् नारसिंह: ।
விதிக்ஷு திக்ஷுர் த்வமத: 
ஸமந்தாத் அந்தர்பஹிர் 
பகவான் நாரஸிம்ஹ: |

அனைத்து மூலைகளிலும் (விதிக்ஷு), அனைத்து திசைகளிலும், மேலும் கீழும் (ஊர்த்வமத), அனைத்து பக்கங்களிலும் (ஸமந்தாத்), உள்ளும் புறமும் (அந்தர்பஹிர்) நரசிம்ம பகவான் காக்கிறார்.
प्रहापयँ लोकभयं स्वनेन
स्वतेजसा ग्रस्त समस्त तेजा: ॥
ப்ரஹா-பயன் லோக-பயம் 
ஸ்வனேன ஸ்வ-தேஜஸா 
க்ரஸ்த ஸமஸ்த தேஜா: ||


திவ்யமான தேஜஸ் உடைய (ஸ்வ-தேஜஸா) நரசிம்ம பகவான் தனது அட்டகாசமான கர்ஜனையால் (ஸ்வனேன), நம்மை அழிக்க வரும் பயத்தையும், லோகத்தால் வரும் பயத்தையும் (ப்ரஹா-பயன் லோக-பயம்), போக்கி (க்ரஸ்த) அனைவருக்கும் ஆரோக்கியத்தை தருகிறார் (ஸமஸ்த தேஜா:).

मघवन् इदम् आख्यातं वर्म नारायण आत्मकम् ।
विजेष्यसे अञ्जसा येन दंशित असुर यूथपान् ॥
மகவந் இதம் ஆக்யாதம் 
வர்ம நாராயணாத் மகம் |
விஜேஷ்-யஸே அஞ்ஜஸா யேன 
தம்ஸிதோ அஸுர யூதபான் ||

இந்திர தேவா (மகவந்)! என்னால் (மகம்), இப்போது சொல்லப்பட்ட (இதம் ஆக்யாதம்) நாராயண கவசத்தை (வர்ம நாராயணாத்) கொண்டு (யேன) நீ பாதுகாக்கப்பட்டு (தம்ஸிதோ), அசுர படைகளை (அஸுர யூதபான்) எளிதாக வென்று (விஜேஷ்) புகழ் (யஸே) அடைவாய்.
एतद् धारयमाण: तु यं यं पश्यति चक्षुषा ।
पदा वा संस्पृशेत् सद्य: साध्वसात् स विमुच्यते ॥
ஏதத் தாரய மாணஸ்து 
யம் யம் பஸ்யதி சக்ஷுஷா | 
பதா வா ஸம் ஸ்ப்ருஸேத் ஸத்ய: 
ஸாத்வஸாத் ஸ விமுச்யதே ||

இந்த நாராயண கவசத்தை எப்பொழுதும் மனதில் தியானிக்கும் பாகவத உத்தமன் (ஏதத் தாரய மாணஸ்து), யார் யாரையெல்லாம் (யம் யம்) கண்ணால் பார்க்கிறானோ (பஸ்யதி சக்ஷுஷா), காலால் (பதா வா) தொடுகிறானோ (ஸம் ஸ்ப்ருஸேத்), அப்படி தொடப்பட்டவன், பார்க்கப்பட்டவன் கூட, அனைத்து பாவங்களில் (ஸாத்வஸாத்) இருந்தும், சத்தியமாக உடனே (ஸத்ய:) விடுபட்டு (ஸ விமுச்யதே) விடுகிறான்.

न कुतश्चिद् भयं तस्य विद्यां धारयतो भवेत् ।
राज दस्यु ग्रह-आदिभ्यो व्याधि-आदिभ्य: च कर्हिचित् ॥
ந கதஸ்சித் பயம் தஸ்ய 
வித்யாம் தாரயதோ பவேத் | 
ராஜதஸ்யு க்ரஹாதிப்யோ 
வ்யாதி ஆதிப்யஸ்ச கர்ஹிசித் ||

அரசர்கள் (ராஜ), திருடர்கள் (தஸ்யு), க்ரஹங்கள் (க்ரஹாதிப்யோ),  நோய்கள் (வ்யாதி ஆதிப்யஸ்ச) போன்றவற்றால் ஏற்படும் துன்பங்களால், துளியும் பயப்படாமல் (ந கதஸ்சித் பயம் தஸ்ய), நாராயண கவசம் என்ற இந்த வித்தையை (வித்யாம்) எப்பொழுதும் மனதில் தியானிப்பவன் (தாரயதோ பவேத்) அனைத்து சமயத்திலும் (கர்ஹிசித்) மஹாவிஷ்ணுவால் பாதுகாக்கப்பட்டு கொண்டே இருக்கிறான்.

इमां विद्यां पुरा कश्चित् कौशिको धारयन् द्विज: ।
இமாம் வித்யாம் புரா கஸ்சித் 
கௌஸிகோ தாரயன் த்விஜ: | 


முன்பு ஒரு காலத்தில் (புரா) கௌசீக (விஸ்வாமித்ர) கோத்திரத்தில் பிறந்த ஒரு பிரம்மச்சாரி பிராம்மணன் (த்விஜ), இந்த நாராயண கவசம் என்ற வித்யை (இமாம் வித்யாம்) உபதேசம் பெற்று (கஸ்சித்),  தினமும் அனுசந்தானம் (தாரயன்) செய்து கொண்டு இருந்தான்.




योग-धारणया स्व-अङ्गं जहौ स मरु-धन्वनि ॥
யோக தாரணயா ஸ்வ அங்கம் 
ஜஹௌ ஸ மருதன்வனி || 

தீரனான இந்த பிராம்மணன், தன் யோக பலத்தால் (யோக தாரணயா), தன் சரீரத்தை (ஸ்வ அங்கம்) ஒரு மரு பூமியில் (Thar Desert, Rajasthan) (ஸ மருதன்வனி) துறந்து (ஜஹௌ) புண்ணிய லோகங்களுக்கு சென்று விட்டான்.

तस्य उपरि विमानेन गन्धर्व पति: एकदा ।
தஸ்யோபரி விமானேன 
கந்தர்வ பதிரே கதா | 

தேவர்களில் கந்தர்வர்கள் என்று பிரிவு உண்டு. கந்தர்வர்களின் தலைவன் சித்ரரதன் (கந்தர்வ பதிரே). அவன் (தஸ்ய) ஒரு சமயம் (எகதா), ஆகாய விமானத்தில் உயரே பறந்து (உபரி) சென்று கொண்டிருந்தான்.

ययौ चित्ररथ: स्त्रीभि: वृतो यत्र द्विज-क्षय: ॥
யயௌ சித்ர ரத: ஸ்த்ரீபிர் 
வ்ருதோ யத்ர த்விஜ க்ஷய: || 

எந்த இடத்தில் (யத்ர) இந்த பிராம்மணனின் சரீரம் கிடந்ததோ (த்விஜ க்ஷய) இந்த மரு பூமி வழியாக தேவ ஸ்த்ரீகள் சூழ (ஸ்த்ரீபிர்
வ்ருதோ) ஆகாய விமானத்தில் சித்ரரதன் சென்று கொண்டிருந்தான் (யயௌ).

गगनाद् न्यपतत् सद्य: स-विमानो हि अवाक्-शिरा: ।
ககநாந் ந்யபதத் ஸத்ய: 
ஸவிமாநோ ஹ்யவாக் ஷிரா: |


உடனே (ஸத்ய) தலைகீழாக விமானத்தோடு (ஸவிமாநோஹ்) ஆகாயத்திலிருந்து தலைகுப்புற (யவாக் ஷிரா:) விழுந்தான் (ககநாந் ந்யபதத்).

स वालिखिल्य वचनाद् अस्थीनि आदाय विस्मित: ।
ஸ வாலிகில்ய  வசநாத்
அஸ்தீன்யாதாய விஸ்மித: | 

கந்தர்வன், வாலகில்ய ரிஷியின் மூலம் (ஸ வாலிகில்ய  வசநாத்) இந்த எலும்பு யாருடையது, என்ன ஜபம் செய்து கொண்டிருந்தான் என்று அறிந்து, அந்த கௌசீக ப்ராம்மணனுடைய எலும்பை எடுத்து (அஸ்தீன் ஆதாய) வியந்தான் (விஸ்மித:)


प्रास्य प्राची-सरस्वत्यां स्‍नात्वा धाम स्वम्-अन्वगात् ॥
ப்ராஸ்ய ப்ராசீ ஸரஸ்வத்யாம் 
ஸ்நாத்வா தாம ஸ்வம் அன்வகாத் || 

வாலகில்ய ரிஷி சொன்ன அறிவுரைப்படி, அந்த ப்ராம்மணனின் எலும்பை கிழக்கு நோக்கி பாயும் சரஸ்வதி நதியில் (ப்ராசீ ஸரஸ்வத்யாம்) போட்டு விட்டு (ப்ராஸ்ய), சரஸ்வதி நதியில் ஸ்நானம் (ஸ்நாத்வா) செய்து விட்டு, தன் இருப்பிடமான தேவலோகம் சென்றான் (தாம ஸ்வமன்வகாத்)

ஸ்ரீ ஸுக உவாச - श्रीशुक उवाच
ஸ்ரீசுகப்ரம்ம ரிஷி, பரீக்ஷித் மன்னரிடம் பேசுகிறார்

य इदं श‍ृणुयात् काले यो धारयति च आद‍ृत: ।
तं नमस्यन्ति भूतानि मुच्यते सर्वतो भयात् ॥
ய இதம்  ஸ்ருணுயாத் காலே 
யோ தாரயதி சாத்ருத: |
தம் நமஸ்யந்தி பூதாநி 
முச்யதே ஸர்வதோ பயாத் ||

பயம் ஏற்படும் காலங்களில் (காலே), யார் (யோ) இந்த நாராயண கவசத்தை கேட்டு (ய இதம்  ஸ்ருணுயாத்) நம்பிக்கையுடன் (ச அத்ருத) மனதில் அனுசந்தானம் செய்கிறார்களோ (தாரயதி), அந்த நமஸ்கரிக்க தக்க மகாத்மாக்கள் (தம் நமஸ்யந்தி பூதாநி)அனைத்து வித பயத்திலிருந்தும் (ஸர்வதோ பயாத்) விடுபடுவார்கள் (முச்யதே).


एतां विद्याम् अधिगतो विश्वरूपाद्  छतक्रतु: ।
ஏதாம் வித்யாம் அதிகத: 
விஸ்வரூபா சதக்ரது: |

இந்த (ஏதாம்) நாராயண கவசம் என்ற வித்யையை (வித்யாம்), ஆயிரம் கண்களுடைய (சதக்ரது:) இந்திரன்,
தேவர்களின் புரோஹிதனாய் இருக்கும் விஸ்வரூபனிடமிருந்து பெற்றார் (அதிகத:).

त्रैलोक्य-लक्ष्मीं बुभुजे विनिर्जित्य मृधे असुरान् ॥
த்ரைலோக்ய லக்ஷ்மீம் புபுஜே 
விநிர்ஜித்ய ம்ருதே அஸுரான் ||

இந்திர தேவன்!  அசுரர்களை போரில் (ம்ருதே) வென்று (விநிர்ஜித்ய),
மூன்று உலக ஐஸ்வர்யங்களையும் (த்ரைலோக்ய லக்ஷ்மீம்) அனுபவித்தான் (புபுஜே).




Friday 27 March 2020

மதுரை திருமாலிருஞ்சோலை (அழகர்மலை) - கள்ளலழகர் சரித்திரம் தெரிந்து கொள்ள வேண்டாமா?

உத்தர மதுரையில் (வடமதுரை) இருக்கும், "திருமாலிருஞ்சோலை" (அழகர்மலைசரித்திரம்.

"திருமாலிருஞ்சோலை" என்றும் அழைக்கப்படும் அழகர் மலை, புராணத்தில் "வ்ருஷபாசலம்" என்று அழைக்கப்பட்டது.
"பலராமர் 'தீர்த்த யாத்திரையாக' வரும் போது, 'வ்ருஷபாசலம்' வந்து பெருமாளை சேவித்து விட்டு, மேலும் தீர்த்த யாத்திரை தொடர்ந்தார்"
என்று பாகவதமும் சொல்கிறது.




பெருமாளுக்கு "கள்ளலழகர்" என்று பெயர்.
கள்ளர்களுக்கு இஷ்ட தெய்வமாக இங்கு பெருமாள் இருக்கிறார்.

இங்கு வாழ்ந்த கள்ளர்கள், பெருமாளை பார்த்து, "ஒரு பாதி உனக்கு தருகிறேன்.. மறு பாதியை நான் எடுத்துக்கொள்கிறேன்" என்று சொன்னால், திருட்டு தொழிலும் பலிக்குமாம்.
"அனுகூல தெய்வமாக" பெருமாள் இங்கு கள்ளர்களுக்கு குலதெய்வமாக இருக்கிறார்.

கள்ளர்கள் வழிபட்ட தெய்வம். 
கள்ளர்களுக்காகவே நிற்கின்ற தெய்வம் இவர்.
பெருமாளுக்கு "ஜெகதீஸ்வரன்" என்றும் பெயர் உண்டு.

ஜகத்தில் (உலகத்தில்) நல்லவர்கள் மட்டும் தான் உண்டா?

உலகத்தில் உள்ள அனைவருக்கும் 'தானே தெய்வம்' என்றும்  காட்டும் பெருமாள், இங்கு "கள்ளர்களுக்கும் நானே தெய்வம்" என்று காட்டுகிறார்.

ஒரு சமயம் மண்டூகர் என்ற ரிஷி "க்ருதமாலா" என்று அழைக்கப்பட்ட வைகை நதியில்  கடுமையான தவம் செய்துகொண்டிருந்தார்.
"விஷ்ணுவை சாஷாத்கரிக்கவேண்டும்"
என்ற சங்கல்பத்துடன் தவம் செய்து கொண்டிருந்தார்.

மண்டூக ரிஷி கொடுத்த உபநிஷத்தின் பெயர் தான் "மாண்டூக்ய உபநிஷத்.

உபநிஷத்துக்களிலேயே மிகவும் உயர்ந்தது  "மாண்டூக்ய உபநிஷத்" என்று போற்றப்படுகிறது..

ஒருவன் "'மாண்டூக உபநிஷத்' அர்த்த ஆழத்துடன் தெரிந்து கொண்டு விட்டால், மோக்ஷத்துக்கு  (முமுக்ஷு) தேவையான விஷயங்கள் எல்லாம் தெரிந்தாயிற்று"
என்று சொல்வார்கள்.

த்ரேதா யுகத்தில் பெருமாள் 'ராமபிரானாக அவதாரம்' செய்தார்.
த்ரேதா யுகம் 12 லட்சம் வருடம் முன்பு நடந்தது.
ராமபிரான் மண்டூக ரிஷியின் உபநிஷத்தை பற்றி அனுமனிடம் பேசுகிறார்.
"உபநிஷத்துகளில் சிறந்தது மாண்டோக்ய உபநிஷத்"
என்று ஹனுமனை பார்த்து சொல்கிறார்.
மண்டூக ரிஷியின் பெருமை என்ன? என்று ஒரு புறம் நமக்கு இதிலேயே புரிகிறது.

அதே சமயத்தில், 12 லட்சம் வருடம் முன்பே நம் கள்ளழகர் இருந்தார் என்று கவனிக்கும் போது தான் கள்ளழகர் பெருமை நமக்கு புரியும்.




ராமபிரானால் உயர்த்தி பேசப்பட்ட மண்டூகர் கள்ளழகரை தரிசிக்க ஆசைப்பட்டார் என்றால், கள்ளழகர் பெருமை அளவிடமுடியாதது என்று தெரிகிறது.

வெகு காலம் ஆகி விட்டது. ஆகாரம் உட்கொள்ளவில்லை.
தவம் செய்து கொண்டிருந்தார் மண்டூகர்.
அந்த சமயங்களில் வடமதுரை காட்டு பிரதேசமாகவே இருந்தது.


ஒரு சமயம், அந்த காட்டின் வழியாக, அவர் எதிரே மிகவும் அழகு பொருந்திய ஒரு வேடுவ சிறுவன் குதிரை மேல் ஏறி வந்து இறங்கினான்.

பார்ப்பதற்கு 20-22 வயது வாலிபன் போலவும் இருந்தான்.
தங்க ஆபரணங்கள் அணிந்து இருந்தான். தலையில் தொப்பி வைத்து இருந்தான். பார்ப்பதற்கு அதிசுந்தரமாக இருந்தான்.
குதிரையில் இருந்து இறங்கி, வைகை என்ற க்ருதமாலா ஆற்றில் தண்ணீர் குடிக்க வந்தான்.

அதி சுந்தரமாக இருந்த இந்த சிறுவனை பார்த்து, மண்டூக மகரிஷி, "நீ யாரப்பா?" என்று விஜாரித்தார்.

அந்த சிறுவன்,
"நான் வ்ருஷபாசலம் என்ற சோலைமலையில் இருக்கிறேன். கள்ளர்களுக்கெல்லாம் தலைவன்"
என்று சொல்ல,
"சரி.. உன் பெயர் என்ன?" என்று இவர் கேட்க,
"என் பெயர் சுந்தர தோளினான் (சுந்தரபாகு)."
என்று பதில் சொன்னான்.

"அது சரி, தவளை தான் தண்ணீரிலும் நிலத்திலும் இருக்கும்.  நீங்கள் ஏன் தவளை போல தண்ணீரில் நின்று கொண்டு இருக்கிறீர்கள்?"
என்று ரிஷியை பார்த்து கேட்டான்.
"உண்மை தான். எனக்கும் மண்டூகன் (தவளை) என்று தான் பெயர்.
உங்களை பார்த்ததிலேயே, நீங்கள் யார் என்பதை நான் புரிந்து கொண்டு விட்டேன்.
குதிரையில் நீங்கள் வந்த அழகும், அதிலிருந்து நீங்கள் இறங்கிய  விதத்தையும் பார்த்ததுமே நீங்கள் யார் என்று புரிந்து கொண்டு விட்டேன் !"
என்று மண்டூகரிஷி சொன்னார்.

மண்டூகர் அழகரை பார்த்து சொக்கிப்போனதில் ஆச்சர்யமா?
இன்று சித்திரை மாதம் மதுரைக்கு சென்று பார்த்தால், அழகர் ஆற்றில் இறங்கும் போது 5 லட்சம் மக்கள் கூடுவதை நம் கண்ணால் காணலாம்..

அழகர் குதிரையில் வரும் வீதியெல்லாம் மக்கள் கூடி விடும் ஆச்சர்யத்தை இன்றும் காணலாம்.
சித்ரா பௌர்ணமி அன்று, வைகையில் ஒரு க்ஷணம் இறங்கி விட்டு, மண்டூக ரிஷிக்கு தரிசனம் தந்த வைபவம் இன்றும் நடக்கிறது.

"விஷ்ணுவை சாஷாத்கரிக்க வேண்டும்"
என்ற சங்கல்பத்துடன் தவம் செய்து கொண்டிருந்த மண்டூகரிஷி, 
மேலும் சொன்னார்,
"நீங்கள் ஒரு ராஜகுமாரனை போல குதிரையில் வந்து இறங்கினீர்கள்.
நீங்கள் யார் என்று அறிந்து கொண்டேன். 
நீங்கள் எனக்கு திவ்யமான ரூபத்துடன் காட்சி தரவேண்டும்.
நீங்கள் கோவிலில் எப்படி தரிசனம் தருகிறீர்களோ, அது போல தரிசனம் கொடுங்கள்."
என்று சொல்ல,

சங்கு சக்கர கதையுடன், நீல மேக ஸ்யாமள ரூபத்துடன், பீதாம்பரம் அணிந்தவராக, ஸ்ரீவத்சம் உடைய மார்புடன், எம்பெருமான் காட்சி கொடுக்க,
உடனே,
மண்டூக ரிஷி கைகளை குவித்துக்கொண்டு, ஸ்தோத்திரம் செய்கிறார்...
"'ஓம்' என்ற பிரணவம், வேத மந்திரங்கள் அனைத்துக்கும் ஆதாரமாக இருக்கிறது.

'ஓம்' என்ற பிரணவத்துக்குள், "அ", "உ", "ம" என்ற மூன்று ஒலிகள் (அக்ஷரங்கள்) அடக்கம்.

மூன்றும் சேர்ந்த நிலையே 'ஓம்' என்ற பிரணவம் 
'ஓம்' என்ற ப்ரணவத்துக்குள், "அ", "உ", "ம" என்ற மூன்றும் அடக்கம்.

"அ", "உ", "ம" என்று பிரித்து உபாசனை செய்பவர்களும் உண்டு.
"ஓம்" என்று சேர்த்து உபாசனை செய்பவர்களும் உண்டு.




பரமாத்மாவுக்கு 'மூன்று நிலைகள்' உண்டு.
அதுபோல
ஜீவனுக்கும் 'மூன்று நிலைகள்' உண்டு.

இதை நமக்கு ஓம் என்ற பிரணவம் "அ", "உ", "ம" என்ற மூன்று நிலைகளை காட்டி விளக்குகிறது.

அனைத்து ஜீவனுக்கும் மூன்று நிலைகள் இருக்கிறது.

  1. 'விழித்து (ஜாக்ரத்) இருக்கிறான்' என்பது முதல் நிலை.
  2. 'கனவு (ஸ்வப்னம்) காணுகிறான்' என்பது இரண்டாவது நிலை.
  3. 'தூங்குகிறான் (சுஷுப்தி)' என்பது மூன்றாவது நிலை.
இந்த மூன்று நிலையிலும் 'ஜீவன் ஒருவன் தான்' இருக்கிறான். ஆனால் மூன்றும் வேறு வேறு நிலை.

  1. விழித்து (ஜாக்ரத்) இருக்கும் நிலையில் ஜீவனுக்கு, 'விஸ்வன்' என்று பெயர்.
  2. கனவு (ஸ்வப்னம்) காணும் நிலையில் ஜீவனுக்கு, 'தைஜஸன்' என்று பெயர்.
  3. தூங்கும் (சுஷுப்தி) நிலையில் ஜீவனுக்கு, 'பிராக்ஞன்' என்று பெயர்.

ஜீவனாகிய நமக்கே மூன்று நிலைகளில், மூன்று பெயர் உண்டு.

ஜீவன் மூன்று நிலையில் இருப்பது போல,
பரமாத்மா வாசுதேவனும், "மூன்று நிலையில் இருக்கிறார்".


  1. படைத்தல் (ஸ்ருஷ்டி) என்ற காரியத்தை பரமாத்மா செய்யும் போது, ஒரு நிலை.
  2. காத்தல் (ஸ்திதி) என்ற காரியத்தை பரமாத்மா செய்யும் போது,  இரண்டாவது நிலை.
  3. அழித்தல் (சம்ஹாரம்) என்ற காரியத்தை பரமாத்மா செய்யும் போது,  மூன்றாவது நிலை.
இப்படி ஜீவனை போலவே, பரமாத்மாவும் மூன்று நிலைகளில் இருக்கிறார்.

  1. படைத்தல் (ஸ்ருஷ்டி) என்ற காரியத்தை செய்யும் போது, பரமாத்மாவுக்கு "ப்ரத்யும்னன்" என்று பெயர். ப்ரத்யும்னன் அம்சமாக 'ப்ரம்ம தேவன்' இருக்கிறார்.
  2. காத்தல் (ஸ்திதி) என்ற காரியத்தை செய்யும் போது, , பரமாத்மாவுக்கு "அனிருத்தன்" என்று பெயர். அனிருத்தன் அம்சமாக 'மஹா விஷ்ணு' இருக்கிறார்.
  3. அழித்தல் (சம்ஹாரம்) என்ற காரியத்தை செய்யும் போது, பரமாத்மாவுக்கு "சங்கர்ஷணன்" என்று பெயர். சங்கர்ஷணன் அம்சமாக 'ருத்ரன்' இருக்கிறார்.


  • படைத்தல் என்ற நிலையில் நிர்குண ப்ரம்மமான பரவாசுதேவனே, ரஜோ குணத்துடன் ப்ரம்மாவாக இருக்கிறார்.
  • காத்தல் என்ற நிலையில் நிர்குண ப்ரம்மமான பரவாசுதேவனே, ஸத்வ குணத்துடன் விஷ்ணுவாக இருக்கிறார்.
  • அழித்தல் என்ற நிலையில் நிர்குண ப்ரம்மமான பரவாசுதேவனே, தமோ குணத்துடன் ருத்ரனாக இருக்கிறார்.
பரவாசுதேவனே, மும்மூர்த்திகளாக, மூன்று நிலைகளில் இருக்கிறார். 




விழித்து இருப்பதும், தூங்குவதும், கனவு காண்பதும் 'ஒருவனே' என்பது புரிந்து கொள்ளும் போது, 
பரவாசுதேவனே மூன்று நிலைகளில் ப்ரம்ம தேவனாகவும்,  ருத்ரனாகவும், மஹாவிஷ்ணுவாகவும் இருக்கிறார் என்ற சத்தியம் புரியும். 

இந்த ரகசியத்தை 'ஓம்' என்ற பிரணவம் தாங்கி பிடித்து இருக்கிறது. 
'அ உ ம' என்ற மூன்றும் பிரித்து பார்க்கும் போது, 
என்ற சப்தம்  "படைத்தல்" என்ற நிலையையும், 
என்ற சப்தம்  "காத்தல்" என்ற நிலையையும், 
என்ற சப்தம் "அழித்தல்" என்ற நிலையையும்,  
காட்டுகிறது.

இந்த மூன்றும் சேர்ந்த நிலையில் பரவாசுதேவன் மட்டுமே இருக்கிறார்.
ஓம் என்ற பிரணவம், "பரவாசுதேவனை குறித்து தியானிக்க செய்கிறது".

அ என்ற படைத்தல் நிலையிலும், 
உ என்ற காத்தல் நிலையிலும், 
ம என்ற அழித்தல் நிலையிலும் தன்னை காட்டிக்கொண்டு,
மூன்றுமாகவும் இருக்கும் பரமாத்மா தன்னை மறைத்து கொண்டு இருப்பதால், "வாசுதேவன்" என்று பெயர். 

ராஜஸ, ஸத்வ, தாமஸ போன்ற குணங்களை தாண்டி,  நிர்குணமான, சித்ஸ்வரூபமான நிலையை குறிக்கிறது பரவாசுதேவனின் ஸ்வரூபம்

நிர்குண ப்ரம்மமான பரவாசுதேவன் "சர்வஞன்" என்ற நிலையில் இருக்கிறார்.

குணங்களால் பேதங்கள் காட்டும் பரமாத்மா, குணங்களை தனக்குள் அடக்கி, தான் மட்டுமே மிச்சப்பட்டு இருக்கும் நிலையிலேயே பரமாத்மா வாசுதேவன் இருக்கிறார்.

தன் ப்ரம்ம ஸ்வரூபத்தை மறைத்து கொண்டு இருப்பவர் பரமாத்மா.

வைகுண்டத்தில் இருக்கும் இந்த பரவாசுதேவனையே "ஓம்" என்ற பிரணவம் குறிக்கிறது. 

"அ", "உ", "ம" என்று பிரித்து "ப்ரம்ம தேவனை" மட்டும்,  "விஷ்ணுவை" மட்டும், "ருத்ரனை" மட்டும் உபாசனை செய்பவர்களும் உண்டு.

"ஓம்" என்று சேர்த்து உபாசனை செய்பவர்களும் உண்டு. 

'ப்ரம்மா, விஷ்ணு, ருத்ரன்' என்ற மூன்று நிலைகளையும் தன்னில் அடக்கி, நிர்குணமாக இருப்பவர் 'பரவாசுதேவனே' என்ற ஞானத்துடன்  உபாசனை செய்பவர்களும் உண்டு.

இந்த இரண்டு உபாஸனையையும் நம் உபநிஷத் அனுமதிக்கிறது.

விழிப்பு, சொப்பனம், தூக்கம் என்ற மூன்று நிலையை அனைத்து ஜீவனும் அனுபவிக்கிறார்கள். 
நான்காவது நிலையையும் சில உத்தம ஜீவன்கள் அனுபவிக்கிறார்கள். 
அந்த நிலைக்கு "சமாதி" என்று பெயர்.
அந்த நிலையில் இருப்பவனை "துரீயன்" என்று சொல்கிறோம்.

விழிப்பு நிலையில், ரஜோ குணமும்,
ஸ்வப்ன நிலையில், சத்வ குணமும்,
தூக்க நிலையில், தமோ குணமும் வெளிப்படுகிறது.

எப்படி ஓம் என்ற நிலையில், இந்த மூன்று குணங்களும் அடங்கி, நிர்குண ப்ரம்மமான பரவாசுதேவன் "சர்வஞன்" என்ற நிலையில் மட்டுமே இருக்கிறாரோ,
அதுபோல,
சமாதி என்ற நிலை ஒரு ஜீவனுக்கு ஏற்படும் போது, குணங்களை கடந்த நிலையை ஜீவன் பெறுகிறான்.




ஓம் என்ற பிரணவத்தின் மூல பொருளான பரவாசுதேவனை, சமாதி நிலையில் ஜீவன் சேருகிறான்.
இந்த நிலையில், ஜீவனும் குணங்களை கடந்து, நிர்குண நிலையை அடைந்து ப்ரம்மத்தோடு லயிக்கிறான்.
இப்படி சமாதி நிலையில், ஓம் என்ற பிரணவத்தின் அர்த்தமான நிர்குண ப்ரம்மமான பரவாசுதேவனை புரிந்து கொள்ள வேண்டும்
என்று சாஸ்திரம் சொல்லி இருக்க,
அதே நிர்குண பரவாசுதேவன் இந்த திருமாலிருஞ்சோலையில் அர்ச்சா விக்ரக ரூபத்துடன் நமக்கு காட்சி கொடுக்கிறாரே !!"
என்று ஸ்தோத்திரம் செய்தார்.

"சமாதி நிலையில் அறியக்கூடிய நிர்குண ப்ரம்மமான பரவாசுதேவனே, யாரும் பார்க்கும்படியாக தன்னை சுலபமாக்கிக்கொண்டு, கள்ளலழகராக இருக்கிறார்" 
என்று மண்டூக ரிஷி, பெருமாளை பார்த்து ஸ்தோத்திரம் செய்தார்.

இந்த மண்டூக ரிஷிக்கு மோக்ஷம் கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் கள்ளழகர் சோலைமலையை விட்டு, 20 கிலோமீட்டர் குதிரையில் வந்தார்.
அந்த காட்சியை இன்று சித்திரை மாதம் போனாலும், கள்ளழகர் 20 கிலோமீட்டர் குதிரையில் வந்து, வைகையில் ஒரு நொடி இறங்கிவிட்டு, நேராக மண்டூக ரிஷிக்கு மோக்ஷம் கொடுக்கும் உற்சவத்தை நம் கண்ணால் ரசிக்கலாம்.

நம்மாழ்வார் (திருவாய்மொழி) நம் கள்ளழகரை மங்களாசாசனம் செய்து பாடுகிறார்.

முடிச்சோதியாய் உனது முகச்சோதி மலர்ந்ததுவோ?
அடிச்சோதி நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ?
படிச்சோதி யாடையொடும் பல்கலனாய் நின்பைம்பொன்
கடிச்சோதி கலந்ததுவோ? 
திருமாலே கட்டுரையே
நம்மாழ்வார் (திருவாய்மொழி)
அர்ச்சா திருமேனியுடன் தான் கள்ளழகர் இருக்கிறார்.
இருந்தாலும்,
பரமபதத்தில் அப்ராக்ருத (Beyond Nature) திவ்ய மங்கள வடிவை கொண்ட பரவாசுதேவன் எப்படி இருப்பாரோ, அது போலவே இருக்கிறார் கள்ளழகர்.

கள்ளழகரை பார்க்கும் போது, இவர் அர்ச்சா திருமேனி  என்று தோன்றவே தோன்றாது.

இவர் எந்த உலோகத்தால் செய்யப்பட்டு இருக்கிறார்?
என்றே சொல்ல முடியாத படி, தனித்து இருக்கிறார்.
இன்றைக்கு சென்று, நம் ஊன கண்ணால் பார்த்தாலும் இந்த அதிசயத்தை நாம் உணரலாம்.

எந்த கோவிலுக்கு சென்று போய் பார்த்தாலும், கள்ளழகருக்கு உள்ள அந்த அழகு, பொலிவு வேறு எங்கும் பார்க்க முடியாது.

திருமஞ்சனம் செய்யட்டும், செய்யாமாலே இருக்கட்டும், இவர் திருமேனி மட்டும் தக தக வென்று அப்படி ஒரு பொலிவுடன் இருக்கும்.
நம்மாழ்வார் ஹ்ருதயத்தில் அத்தகைய பொலிவுடன் கள்ளழகர் காட்சி தர, அந்த பொலிவை வர்ணிக்கிறார்.

தக தக வென ஜொலிக்கும் பெருமாளின் "கன்னத்தில் (முக) வெளிப்பட்ட பொலிவு (ஜோதி) தான் கிரீடமாக (முடிச்சோதி) இருக்கிறதோ?"
என்று பார்த்து பிரமிக்கிறார் நம்மாழ்வார்.
கள்ளழகரை தான் பார்த்த காட்சியையே,
"முடிச்சோதியாய் உனது முகச்சோதி மலர்ந்ததுவோ?"
என்கிறார்.

தங்க ஆபரணங்களை தனியாக பார்க்கும் போது ஜொலி ஜொலிக்குமாம்.
அதே தங்க ஆபரணங்களை கள்ளழகர் அணிந்துகொண்டு விட்டால், இவருடைய மேனி பொலிவுக்கு முன், தங்க நகைகள் பொலிவு இல்லாதது போல தெரியுமாம். 
இந்த அனுபவத்தை இன்று கள்ளழகரை சென்று பார்த்தால் கூட நாமும் அனுபவிக்க முடியும். 




கள்ளழகர் கன்னத்தை பார்த்தால், எதிரே நிற்பவர்களின் பிம்பம் தெரியுமாம். 
அத்தனை பொலிவு உடைய கள்ளழகரின் பொலிவை கண்டு மயங்கி, 
"முடிச்சோதியாய் உனது முகச்சோதி மலர்ந்ததுவோ?"
என்று நம்மாழ்வார் ஆச்சர்யப்பட்டு கேட்கிறார்.

பெருமாளின் முகப்பொலிவை கண்ட பிரமித்த நம்மாழ்வார், "சரி திருவடியை பார்ப்போம்" என்று கவனிக்க,
கள்ளழகரின் திருவடியின் அடிப்பகுதி சிவந்து பெரும் பொலிவை தர,
அந்த "திருவடி பொலிவுதான் சிவந்த தாமரையாக மலர்ந்து இருக்கிறதோ?" என்று கேட்கிறார்.
கள்ளழகரை தான் பார்த்த காட்சியையே,  
அடிச்சோதி நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ?
என்கிறார்.

பெருமாள் இடுப்பில் பீதாம்பரம் அணிந்து இருந்தாலும், அந்த வஸ்திரத்தையும் மீறிக்கொண்டு, அவர் திருதொடையின் பொலிவு, பீதாம்பரத்துக்கும் மேல் பிரகாசிக்குமாம்.

இப்படி அடி முதல் முடி வரை தங்கம் போல (பைம்பொன்) தக தகவென ஜொலிக்கும் அழகரை கண்டு பிரம்பிக்கிறார் நம்மாழ்வார்.

இதையே
படிச்சோதி யாடையொடும் பல்கலனாய் 
நின் பைம்பொன்
கடிச்சோதி கலந்ததுவோ
என்கிறார்.

எப்பொழுதுமே தங்கம் போல ஜொலிக்கும் கள்ளழகர் .
ஒரே ஒரு சமயம் மட்டும், பச்சை திருமேனியாக ஆகி விடுகிறார்.

கள்ளழகர் ஒரு சமயம் மலை மீது ஏறி, நூபுர கங்கைக்கு செல்வார்.
இந்த மலையோ பச்சை பசேல் என்று சோலையாக இருக்கும். 

போகும் வழியில், இரண்டு பக்கமும் பச்சை பசேல் என்று இருப்பதால், அந்த சாயம் இவர் கன்னத்தில் பிரதிபலித்து, பெருமாளே பச்சை வர்ணமாக காட்சி தருவார்.
அங்கு மட்டும் கள்ளழகர் பச்சை வண்ண பெருமாளாக இருப்பார்.
மற்ற சமயங்களில் எல்லாம், பெருமாள் மணிவண்ணனாகவே இருப்பார்.

இப்படி பெருமாளின் பொலிவை கண்டு ஆனந்தப்படுகிறார் நம்மாழ்வார்.

நம்மாழ்வார் பெருமாளை கொஞ்ச, 
கள்ளழகர் வீற்று இருக்கும் சோலைமலையையே கொஞ்ச வேண்டும் என்று ஆவல் வந்து விட்டது, பெரியாழ்வாருக்கு.
"சோலைமலை" தான்  பெரியாழ்வாருக்கு முக்தி ஸ்தலம்.
பெரியாழ்வார் சோலைமலையையே கொஞ்சி பாடுகிறார்.




பல பல நாழம் சொல்லி 
பழித்த சிசுபாலன் தன்னை
அலவலைமை தவிர்த்த அழகன்
அலங்காரன் மலை 
குலமலை
கோலமலை 
குளிர்மாமலை
கொற்றமலை
நிலமலை
நீண்டமலை 
திருமாலிருஞ்சோலையதே  
- பெரியாழ்வார் (திருமொழி)

"அலங்காரன் மலை (அழகர் மலை), குலமலை, கோலமலை, குளிர்மாமலை, கொற்றமலை, நிலமலை, நீண்டமலை
என்று திருமாலிருஞ்சோலையின் அழகை கொஞ்சி கொஞ்சி ரசிக்கிறார் பெரியாழ்வார்.
திருப்பதியில் உள்ள திருமலையை கூட ஆழ்வார்கள் இப்படி கொஞ்சியதாக தெரியவில்லை. 
ஆண்டாளை பெற்ற பெரியாழ்வார் வாத்சல்ய பாவம் கொண்டவர்.

இந்த வாத்சல்யம் சோலைமலையை பார்த்ததும் பெரியாழ்வாருக்கு ஏற்பட்டு, இப்படி ஆசை தீர கொஞ்சுகிறார்.

சிசுபாலனுக்கு நல்ல வார்த்தையே வாயில் வராதாம். 

சிலர் பேசும்போது, ஸ்தோத்திரம் செய்வது போல வெளியில் இருக்கும், ஆனால் கவனித்து பார்த்தால் உண்மையில் கிண்டல், கேலி இருக்கும்.

சிலர் பேசும்போது, வெளியில் திட்டுவது போல இருக்கும், ஆனால் உண்மையில் ஸ்தோத்திரம் செய்து இருப்பார்கள்.
ஸ்ரீ கிருஷ்ணன் சிறு பாலகனாக இருக்கும் போது வெண்ணை திருடி லீலை செய்தார். 
பக்தர்கள், "சோரன்" (திருடன்) என்று கிருஷ்ணனை சொல்வார்கள். வெளியில் திட்டுவது போல தெரியும்..
ஆனால், உண்மையில் அதீத கிருஷ்ண பிரேமையால், இப்படி ஸ்தோத்திரம் செய்வது புரியும்.

"நேரடியாக திட்டுவதோ, நேரடியாக கொஞ்சுவதோ நாகரீகம் இல்லை" என்று பண்புள்ளவர்கள் நினைப்பார்கள்.
"பிடிக்காதவர்கள் வந்தாலும், நேரடியாக திட்டுவது நாகரீகம் இல்லை"
என்று நினைப்பார்கள்.

இந்த சிசுபாலனோ, நாகரீகம் கொஞ்சமும் இல்லாதவன். 
உள்ளொன்று வெளியொன்று என்று இல்லாமல், பச்சையாக கிருஷ்ண பரமாத்மாவை திட்டுவானாம்.
 "கேட்பார் செவி சுடும்" என்பது போல, சிசுபாலன் பேசுவானாம்.

நம்மாழ்வார் "கேட்பார் செவி சுடும்" என்பது போல, சிசுபாலன் பேசுவான் என்கிறார்..

பீஷ்மர், விதுரர் போன்றோர் கண்ணன் "பரமாத்மா" என்று தெரிந்தவர்கள்
கண்ண பரமாத்மாவை யாராவது கேலி பேசினால் இவர்களுக்கு தாங்காது. 
பெருமாளிடம் பக்தி உள்ளவர்களுக்கு, பெருமாளை பற்றி அவதூறு பேசினால் தாங்காது.  இதுவும் இயற்க்கையான ஸ்வபாவம்.தான்.




ராஜசூய யாகத்தில், சிசுபாலன் கிருஷ்ணரை கண்டபடி சபையில் பேச ஆரம்பிக்க, விதுரர் கோபப்பட்டு சிசுபாலனை அதட்டினார். இது எதிர்பார்த்த ஒன்று தான்.  

நம்மாழ்வார், "அடியார் செவி சுடும் படி சிசுபாலன் பேசுவான்" என்று சொல்லி இருக்கலாம்.
மாறாக, "கேட்பார் செவி சுடும்" படி சிசுபாலன் பேசினான்" என்று சொல்கிறார்.

சிசுபாலன் கிருஷ்ணரை பச்சையாக திட்டுவதை கேட்டால், அடியார்களுக்கு மட்டும் செவி சுடும் படியாக இருக்காதாம்,
கிருஷ்ணரை கிண்டல் செய்ய சொல்லி கேட்டு ரசிக்கும் குணம் கொண்ட, கிருஷ்ணரை பிடிக்காத துரியோதனன், சகுனி போன்றவர்களுக்கே இவன் பேச்சை கேட்டால் "செவி சுடுமாம்".
சிசுபாலன் பேசுவதை கேட்பவன் அனைவருக்குமே செவி சுடும்படி கீழ்த்தரமான வசவுகளே பேசி அவமதிப்பானாம் சிசுபாலன்.

இவன் பேச்சை கேட்டு, ராஜசூய யாகத்தில் கிருஷ்ணரை தானே நிந்திக்கும் குணமுடைய துரியோதனனே எழுந்து "சிசுபாலா, இப்படி பேசாதே!!" என்று சொல்லும் அளவுக்கு கீழ்த்தரமாக பேசுவானாம் சிசுபாலன்.

அதன் காரணத்தாலேயே நம்மாழ்வார் 
"கேட்பார் செவி சுடும் கீழ்மை வசவுகளே வெய்யும் ..சிசு பாலன்" 
என்கிறார்.
இப்படி பகவானை தான் பிறந்ததிலிருந்து பல முறை நிந்திப்பதே (பல பல நாழம்) தொழிலாக வைத்து இருந்த சிசுபாலனின் அற்பத்தனத்தையும் (அலவலைமை) தவிர்த்து விட்டு,
அவனுக்கு தன் அழகான ரூபத்தை காட்டி, அவன் பேசிய பேச்சுக்கு சக்கரத்தை விட்டு அவன் உயிரை பறிக்க, உயிர் பிரிந்த போது, சிசுபாலனின் ஆத்மஜோதி, சபையில் இருந்த அனைவருக்கும் தெரிய, கண்ணனின் பாதத்தில் சேர்ந்து விட்டது.

பிறகு ஒரு சமயம், தர்மபுத்திரர், நாரதரிடம் இது பற்றி கேட்கிறார்.
தர்மபுத்திரர், 
"என்ன அநியாயம் இது!! 
பகவத் பக்தி செய்பவனுக்கு மோக்ஷம் கிடைக்கலாம். 
இந்த சிசுபாலன் பிறந்ததில் இருந்து கீழ்த்தரமான வார்த்தைகளை கொண்டே கிருஷ்ணரை இகழ்ந்து பேசுவான். அவனுக்கு போய், தன் திவ்ய தரிசனமும் கொடுத்து, நாங்கள் பார்க்க, அவன் ஜோதி கண்ணனின் பாதத்தில் சேர்ந்ததே!! 
மனிதர்கள் அநியாயம் செய்தாலே தவறு. 
இங்கு பகவான் அநியாயம் செய்கிறாரே! 
தன்னை நிந்தனை செய்தவனுக்கு போய் மோக்ஷம் கொடுத்துவிட்டாரே?"
என்று கேட்டார்.

"தன் அழகு பொருந்திய திவ்ய தரிசனம் சிசுபாலனுக்கு கிடைத்ததால், அந்த திவ்ய தரிசனத்தின் பலனாக மோக்ஷம் கொடுத்தார்"
என்று நாரதர் பதில் சொன்னார்.

கிருஷ்ண பரமாத்மா யாரிடமிருந்து இந்த அழகை எடுத்து சிசுபாலனுக்கு காண்பித்தார்? என்று பெரியாழ்வார் மேலும் சொல்கிறார்.
சிசுபாலன் பேசிய பேச்சுக்கும் சக்கரத்துக்கு சரியாகி விட்டதாம்.
ஆனால், தன் அழகான தரிசனத்தை சிசுபாலனுக்கு காட்டி, அவன் மனத்திலும் உள்ளுக்குள்
"இத்தனை அழகான கிருஷ்ணனையா திட்டினோம்? அனாவசியமாக எதற்காக கிருஷ்ணனை திட்ட வேண்டும்?" 
என்று மனதுக்குள் நினைத்தானாம்.




தன் அழகால் சிசுபாபலன் போன்ற கீழ்த்தரமாக பேசுபவர்கள் நெஞ்சிலும், இடம் பிடித்து, அவன் தன்னை தரிசித்த பலனாக, சிசுபாலனுக்கும் மோக்ஷம் கொடுத்துவிட்டாராம். 

கிருஷ்ண பரமாத்மா யாரிடமிருந்து இந்த அழகை எடுத்து சிசுபாலனுக்கு காண்பித்தார்? 
"அழகுக்கு உரிமையாளனான திருமாலிருஞ்சோலையில் இருக்கும் கள்ளழகரிடமிருந்து, இந்த அழகை எடுத்து சிசுபாலனுக்கு காண்பித்தார்" 
என்று பெரியாழ்வார் கொஞ்சுகிறார்.!!

அதையே,
பல பல நாழம் சொல்லி 
பழித்த சிசுபாலன் தன்னை
அலவலைமை தவிர்த்த அழகன்
என்று ரசிக்கிறார்.

இப்படி,
அழகே உருவான நம் கள்ளழகர், தன் அழகை மேலும் பிரகாசிக்க செய்வது போல, 'கிரீடம், வைஜயந்தி மாலை, பீதாம்பரம், கௌஸ்துபம்' என்று அலங்காரமும் செய்து கொண்டு (அலங்காரன்) சோலைமலையில் வீற்று இருக்க,
இந்த சோலைமலை எப்படி இருக்கிறது? என்று பார்த்த பெரியாழ்வார், மலையை வர்ணிக்கிறார்.

"அனைவருக்கும் குல தெய்வமாக (குலமலை), 
அழகு மலையாக (கோலமலை), 
குளிர்மாமலை, 
தனக்கு அபிமானத்துக்கு பாத்திரமான பக்தனுக்கு  ஸம்ஸாரம் துக்கம், வாசனைகள் புகாதபடி செய்து, வெற்றியை கொடுக்கும்  மலையாக (கொற்றமலை), 
நல்ல மரங்கள் முளைக்கும் நிலத்தையுடைய மலையாக (நிலமலை), 
நீண்டமலையாக இருக்கும் திருமாலிருஞ்சோலையில் நம் கள்ளழகர் வீற்று இருக்கிறார்" 
என்று மலையை கொஞ்சி வர்ணிக்கிறார்.

தெய்வத்தை தவேஷிக்கும் சிசுபாலன் போன்ற கீழ்தரமானவர்கள் கூட அர்ச்ச ரூபத்தில் இருக்கும் கள்ளழகரை தன் ஊன கண்களால் பார்த்தால் கூட, மனம் மாறி விடுவான். 
"அழகர் என் குலதெய்வம்" என்று சொல்ல ஆரம்பித்து விடுவான்.

சிசுபாலன் போன்றவர்களுக்கு கூட மோக்ஷத்தை தன்னை தரிசனத்தின் பலனாக கொடுத்து விடும் பெருமாள், மதுரையில் அழகர்கோவில் இருக்கிறார்.

"அழகரை தரிசித்தாலே மோக்ஷம்" என்பதால்,
பேரழகு உடையவர் என்பதால்,
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி, பிறகு மண்டூக ரிஷிக்கு மோக்ஷம் கொடுக்கும் காட்சியை பார்ப்பதற்காகவே, 5 லட்சம் மக்கள் சித்ரா பௌர்ணமி அன்று கூடி விடுகிறார்கள்.

அனைவரும் அழகரை கண்களால் தரிசிப்போம்.
நாம் அனைவரையும் கள்ளழகரை, அவர் வீற்றுஇருக்கும் அழகர்மலையை காண அழைக்கிறார்.