Followers

Search Here...

Saturday 21 May 2022

அன்று, பெண்களை அடிமையாக வைத்து இருந்தார்களா? இன்று பெண்கள் பெரிய பதவியில் இருக்கிறார்கள். அன்று, பாரத ஹிந்து (சனாதன) பெண்களுக்கு அரச பதவி கொடுத்தார்களா? அறிவோம் மஹாபாரதம்

அன்றைய காலத்தில் பெண்கள் அரசாள அனுமதி தரப்பட்டதா? 

5000 வருடம் முன், சுமார் 3064BCE அன்று பாரத போர் முடிந்த பிறகு, "இப்படி ஒரு க்ஷத்ரிய குல உலகநாசம் நடந்து விட்டதே! பூமியை ஆள வேண்டும் என்ற என்னுடைய ஆசையால் இப்படி ஆகி விட்டதே!" என்று புலம்பி, யுதிஷ்டிர மஹாராஜா துவண்டு விட்டார்.


அவரை அர்ஜுனன், நகுலன், பீமன், சகாதேவன், திரௌபதி என்று பலரும் சமாதானம் செய்து பார்த்தனர். 


வியாசர் 'ராஜ தர்மம்' உபதேசித்தார். இருந்தும் யுதிஷ்டிரருக்கு சமாதானம் கிடைக்கவில்லை.

பிறகு, 

ஸ்ரீ கிருஷ்ணர், ஞான உபதேசம் செய்தார்.


யுதிஷ்டிரன் ஒருவாறு சமாதானம் அடைந்தாலும், மஹாவீரர்களை இழந்து இருக்கும் அவர்களுடைய பத்னிகள் கதறி அழும் சத்தம் அவரை உலுக்கியது. 'இந்த பாவத்துக்கு பதில் இல்லையே' என்று அழுதார்.


அப்போது, வியாசர், 'ப்ராயச்சித்தமாக அஸ்வமேத யாகம் செய்' என்று உபதேசிக்கலானார்.

त्वं तु शुक्लाभिजातीयः परदॊषेण कारितः

अनिच्छमानः कर्मेदं कृत्वा च परितप्यसे

- வியாசர் மஹாபாரதம்

நீ நல்ல குலத்தில் பரிசுத்தமான பிறப்புடையவன். துரியோதனுடைய குணத்தால், உனக்கு இஷ்டம் இல்லாமலே இந்த காரியம் செய்யும் படியாக நேர்ந்தது. இருந்தும் நீ பரிதவிக்கிறாய்.

अश्वमेधॊ महायज्ञः प्रायश्चित्तम् उदाहृतम्

तम् आहर महाराज वि पाप्मैवं भविष्यसि

வியாசர் மஹாபாரதம்

அஸ்வமேத மஹா யாகம் அனைத்து பாவத்துக்கும் பிராயச்சித்தமாக சொல்லப்படுகிறது.

मरुद्भिः सह जित्वारीन् मघवान् पाकशासनः

एकैकं क्रतुम् आहृत्य शतकृत्वः शतक्रतुः

வியாசர் மஹாபாரதம்

மருத்துக்களுடன் இருக்கும் தேவேந்திரன், பகைவர்களை கொன்ற பிறகு, நூறு அஸ்வமேத யாகங்கள் செய்தான். 

पूतपाप्मा जितस्वर्गॊ लॊकान् प्राप्य सुखॊदयान्

मरुद्गणवृतः शक्रः शुशुभे भासयन् दिशः

வியாசர் மஹாபாரதம்

பிறகு, மீண்டும் தன்னுடைய சுவர்க்க லோகத்தை அடைந்தான்.  மருத்துக்களுடன் சொர்க்கத்தை அலங்கரித்தான்.

स्वर्गलॊके महीयन्तम् अप्सरॊभिः शचीपतिम्

ऋषयः पर्युपासन्ते देवा: च विबुधेश्वरम्

வியாசர் மஹாபாரதம்

அப்சரஸ்கள் நிறைந்த சுவர்க்கத்தில் தேவர்களுக்கு அதிபதியான இந்திரனை, அனைத்து தேவர்களும், ரிஷிகளும் ஆராதிக்கிறார்கள்.

सॊ ऽयं त्वम् इह संक्रान्तॊ विक्रमेण वसुंधराम्

निर्जिता: च महीपाला विक्रमेण त्वयानघ

வியாசர் மஹாபாரதம்

மஹாவீரனே! அந்த தேவேந்திரன் போல, நீயும் பராக்ரமத்தால் அரசர்களை வென்று இந்த பூமியை அடைந்து இருக்கிறாய்.

तेषां पुराणि राष्ट्राणि गत्वा राजन् सुहृद्वृतः

भ्रातॄन् पुत्रांश च पौत्रांश् च स्वे स्वे राज्ये ऽभिषेचय

வியாசர் மஹாபாரதம்

ராஜன்! உன்னால் ஜெயிக்கப்பட்ட அரசர்களுடைய தேசத்திற்கு சென்று, அங்கு இருக்கும் அரசர்களின் மகனையே, பேரனையோ, அல்லது அவருடைய சகோதரர்களை, அந்தந்த நாட்டிற்கு அரசராக பட்டம் சூட்டி, அபிஷேகம் செய்.

बालान् अपि च गर्भस्थान् सान्त्वानि समुदाचरन्

रञ्जयन् प्रकृतीः सर्वाः परिपाहि वसुंधराम्

வியாசர் மஹாபாரதம்

ஒருவேளை எந்த தேசத்திலாவது, அந்த அரசனின் வாரிசு குழந்தையாகவோ, அல்லது அந்த அரசி கர்ப்பவதியாக இருந்தாலோ, நல்ல வார்த்தை சொல்லி, ஆதரவு அளித்து, பூமியை பாதுகாத்து கொண்டிரு.

कुमारॊ नास्ति येषां च कन्या: तत्राभिषेचय

कामाशयॊ हि स्त्री वर्गः शॊकम् एवं प्रहास्यति

வியாசர் மஹாபாரதம்

எந்த அரசருக்கு மகன் இல்லையோ, அவர்களுடைய பெண்களை அந்தந்த ராஜ்யத்தில் முடி சூட்டி அரசாள செய். போகங்களில் இயற்கையாகவே விருப்பமுள்ள பெண்கள், இதனால் சோகத்தை விடுவார்கள்.

एवम् आश्वासनं कृत्वा सर्वराष्ट्रेषु भारत

यजस्व वाजिमेधेन यथेन्द्रॊ विजयी पुरा

வியாசர் மஹாபாரதம்

பாரதா! இவ்வாறு, உலகிலுள்ள அனைத்து ராஜ்யத்துக்கும் சென்று அனைவரையும் சமாதானம் செய்த பிறகு, இந்திரனை போல நீயும் அஸ்வமேத யாகம் செய்.

अशॊच्या: ते महात्मानः क्षत्रियाः क्षत्रियर्षभ

स्वकर्मभि: नाशं कृतान्त बल मॊहिताः

வியாசர் மஹாபாரதம்

க்ஷத்ரியர்களில் உத்தமனே! க்ஷத்ரியர்களான இந்த வீரம் கொண்ட அரசர்கள் யாவரும், போர் செய்வது தங்களுக்கு விதிக்கப்பட்ட தொழில் என்று அறிந்து விருப்பப்பட்டு இந்த போரில் கலந்து கொண்டு, வீர ஸ்வர்க்கம் அடைந்து விட்டார்கள். அவர்களை குறித்து நீ கவலைப்பட வேண்டாம்.

अवाप्तः क्षत्र धर्म: ते राज्यं प्राप्तम् अकल्मषम्

चरस्व धर्मं कौन्तेय श्रेयान् यः प्रेत्य भाविकः

வியாசர் மஹாபாரதம்

க்ஷத்ரிய தர்மப்படி போர் செய்து, நீ எதிரிகளே இல்லாத ராஜயத்தை அடைந்து இருக்கிறாய். 

கௌந்தேயா! பரலோகத்திலும் போற்றப்படும் உன் க்ஷத்ரிய தர்மத்தை காத்து, இந்த உலகை ஆண்டு கொண்டிரு


இவ்வாறு, வியாசர் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று யுதிஷ்டிர மகாராஜனுக்கு சொல்லி, சமாதானம் செய்தார்.

Thursday 19 May 2022

"ஊர்வசி", "ராஜா", "க்ஷத்ரியன்" என்ற பெயர்களுக்கு அர்த்தம் என்ன? பகீரதன், கன்னி பெண்களுக்கு எப்படி திருமணம் செய்து வைத்தான்? அறிவோம் மஹாபாரதம்

"ஊர்வசி", "ராஜா", "க்ஷத்ரியன்" என்ற பெயர்களுக்கு அர்த்தம் என்ன? 

பாரத யுத்தம் முடிந்த பிறகு, யுதிஷ்டிரர், 'இப்படி பூமியை ஆளவேண்டும் என்ற ஆசையில் பீஷ்மர் தாத்தா என்னால் ரத்த வெள்ளத்தில் பூமியில் விழுந்தாரே! துரோணர் கேட்டும் உண்மையை சொல்லாமல் இருந்தேனே! அபிமன்யுவை துரோணர் காக்கும் சக்ர வ்யுகத்தில் அனுப்பி கொன்றேனே! கர்ணன் என் சகோதரனை இழந்தேனே! நான் இனி எதையும் உண்ணாமல் பிராண தியாகம் செய்ய போகிறேன்' என்று சொல்லி துவண்டு கிடந்தார்.


அர்ஜுனன், பீமன், சகதேவன், நகுலன், திரௌபதி, வியாசர் என்று பலர் சமாதானம் செய்தனர். 

இருந்தும் சமாதானம் அடையாத நிலையில், அர்ஜுனன், ஸ்ரீ கிருஷ்ணரிடம் யுதிஷ்டிர மகாராஜனுக்கு சமாதானம் சொல்ல சொன்னான்.


ஸ்ரீ கிருஷ்ணர், இக்ஷ்வாகு குலத்தில் தோன்றிய ப்ருது, பகீரதன் என்று பல அரசர்களை பற்றி சுருக்கமாக சொல்லி, 'அனைவரும் உத்தமர்களாக வாழ்ந்தார்கள். ஆனாலும் காலத்துக்கு கட்டுப்பட்டு அனைவரும் மறைந்து விட்டார்கள். அனைவருக்கும் மறைவு நிச்சயம். நீ சொன்ன அனைவரும் போரில் தைரியமாக மரணத்தை விரும்பி ஏற்றுக்கொண்டார்கள். ஆதலால் மறைந்து போனவர்கள் பற்றி கவலை கொள்ளாதே.' 

என்று சமாதானம் செய்து பேசினார்.

இப்படி பல அரசர்களை பற்றி சொன்ன போது, பகீரதனை பற்றி சொல்லும் போது 'ஊர்வசி' என்றால் என்ன அர்த்தம்? என்று ஸ்ரீ கிருஷ்ணர் சொல்கிறார்.


பகீரதன் செய்த ஒரு பெரிய யாகத்தில், அவர் கொடுத்த ஸோம ரசத்தை இந்திரன் குடித்துவிட்டு, தன் கை வன்மையால் பல ஆயிரம் அசுரர்களை ஜெயித்தான். இந்திரனுக்கு ஜெயம் கிடைக்கும் அளவுக்கு பகீரதன் யாகம் செய்தார்..


மேலும், பல யாகங்கள் செய்து, 10 லட்சம் கன்னிகைகளுக்கு தங்க ஆபரணங்கள் சீதனமாக கொடுத்து கன்னிகாதானம் (திருமணம்) செய்து வைத்தார்.

सर्वा रथगताः कन्या रथाः सर्वे चतुर्युजः

रथे रथे शतं नागाः पद्मिनॊ हेममालिनः

सहस्रम् अश्वा एकैकं हस्तिनं पृष्ठतॊ ऽन्वयुः

गवां सहस्रम अश्वे ऽश्वे सहस्रं गव्य अजाविकम्

- வியாசர் மஹாபாரதம்

மணம் செய்து கொடுத்த ஒவ்வொரு கன்னிகைக்கும், 4 குதிரைகள் பூட்டிய தேரையும், அதை தொடர்ந்து தங்க ஆபரணங்கள் அணிவிக்கபட்ட 100 யானைகளும், ஒவ்வொரு யானைக்கு பின் 1000 குதிரைகளும், ஒவ்வொரு குதிரைக்கு பின் 1000 பசுக்களும், ஒவ்வொரு பசுவுக்கு பின் 1000 ஆடுகளும் தானம் செய்தார்.


இப்படிப்பட்ட கொடையாளியான பகீரதனின் மடியில், ஒரு குழந்தை போல, கங்கை வந்து அமர்ந்தாள்.


उपह्वरे निवसतॊ यस्याङ्के निषसाद ह |

गङ्गा भागीरथी तस्माद् उर्वशी हि अभवत् पुरा ||

- வியாசர் மஹாபாரதம்

பகீரதன் தொடை (ஊரு) மீது கங்கை அமர்ந்த காரணத்தால், அவளுக்கு "ஊர்வசி' என்று பெயர் கிடைத்தது.

பல யாகங்கள் செய்து, அதிகமான தானங்கள் செய்த பகீரதனுக்கு, மூன்று உலகையும் பரிசுத்தமாக்கும் கங்கையே மகளானாள்.

வேனன் என்ற இக்ஷ்வாகு குலத்தில் வந்த அரசனுக்கு ப்ருது பிறந்தார்.

प्रथयिष्यति वै लॊकान् पृथु: इत्य एव शब्दितः |

क्षता: च न: त्रायतीति स तस्मात् क्षत्रियः स्मृतः ||

पृथुं वैन्यं प्रजा दृष्ट्वा रक्ताः स्मेति यद् अब्रुवन् |

ततॊ राजेति नामास्य अनुरागाद् अजायत ||

- வியாசர் மஹாபாரதம்

உலகத்தை அழிவிலிருந்து (க்ஷத) காப்பதால், இவர்களுக்கு "க்ஷத்ரியன்" என்று பெயர்.

மக்கள் இவர்களை பார்ப்பதற்கு ராகம் (விருப்பம்) கொள்வதால், இவர்களுக்கு "ராஜா" என்றும் பெயர்.


இவ்வாறு ஸ்ரீ கிருஷ்ணர் யுதிஷ்டிரனுக்கு பல அரசர்களின் சரித்திரத்தை சொல்லி, அனைவருக்கும் மறைவு என்பது நிச்சயம் என்ற சொல்லி, சமாதானமும் செய்தார்  

Tuesday 17 May 2022

நானும் பிராம்மணத்துவம் பெற முடியுமா? 'முடியும்' என்று சொல்கிறார் யுதிஷ்டிரர். சொர்க்கத்தை விட சுகமானது எது? அறிவோம் வியாசரின் மஹாபாரதம்

நானும் பிராம்மணத்துவம் பெற முடியுமா

'முடியும்' என்று சொல்கிறார் யுதிஷ்டிரர்.  அறிவோம் வியாசரின் மஹாபாரதம்.

ऋषीणां समयं शश्वद्ये रक्षन्ति धनञ्जय | 

आश्रिताः सर्वधर्मज्ञा देवास्तान् ब्राह्मणान्विदुः ||

स्वाध्याय निष्ठान्हि ऋषीञ्ज्ञान निष्ठांस्तथाऽपरान्

- வியாசர் மஹாபாரதம்

தனஞ்சயா!, மெய் ஞானத்தில் ஈடுபாடும், மெய் ஞானத்தை அடைவதில் பிடிவாதமும் உடையவர்கள் ரிஷிகள். எவன் ஒருவன் ரிஷிகளை போல தவ வாழ்க்கை கடைபிடிக்கிறானோ! பிரம்மச்சரியத்தில் இருந்து கொண்டு அனைத்து தர்மத்தையும் அறிந்து, தானும் தர்மத்தில் இருக்கிறானோ! அவனை தேவர்களும்  பிராம்மணர்களாக கருதுகின்றனர்.


யுதிஷ்டிரர் சொன்னது போல, க்ருத யுகத்திலேயே விஸ்வாமித்திரர் வாழ்ந்து காட்டினார் என்று பார்க்கிறோம்.

விஸ்வாமித்திரர் க்ஷத்திரியனாக (போர் வீரன்) இருந்தும், ப்ராம்மணன் என்ற தகுதியை பெறுவதற்கு கடும்தவம் செய்ய சென்றார்.


க்ஷத்ரியனாக இருந்ததால், காமத்தை அடக்க முடியாமல், கோபத்தை அடக்க முடியாமல் கஷ்டப்பட்டாலும், இறுதியில் கோபம், காமம், லோபம் அனைத்தையும் விலக்கினார்.


தேவர்களையும் படைத்த ப்ரம்ம தேவன் தரிசனம் கொடுத்தது, "நீ பிராம்மணன். நீ ப்ரம்ம ரிஷி" என்று அங்கீகரித்தார்.


பிறகு ப்ராம்மணரான வசிஷ்டரிடம் வந்த போது, அவரும்  அங்கீகரித்தார்.


விசுவாமித்திரர்  ஆகாசத்தில் என்றுமே இருக்கும் வேத ஒலியை ஆழ்ந்த தியானத்தால் கவனித்து,வேத மாதாவான "காயத்ரி" மந்திரத்தை உலகுக்கு கொடுத்தார்.


மேலும் யுதிஷ்டிரர், யயாதி சொன்னதை சொல்கிறார்.


संतोषो वै स्वर्गतमः 

संतोषः परमं सुखम् |

- வியாசர் மஹாபாரதம்

பார்த்தா! சந்தோஷம் சொர்க்கத்தை விட சுகமானது. சந்தோஷத்தை காட்டிலும் பெரிய சுகம் ஒன்றுமில்லை.


तुष्टेर्न किंचित्परमं सा सम्यक् प्रतितिष्ठति |

विनीत क्रोध हर्षस्य, सततं सिद्धि: उत्तमा ||

- வியாசர் மஹாபாரதம்

கோபத்தையும், ஆசையையும் விட்டவனுக்கு, சந்தோஷம் நிலைத்து இருக்கும்.


अत्रापि उदाहरन्ति इमां 

गाथां गीतां ययातिना |

योऽभिप्रेत्याहरेत् कामान् 

कूर्मो अङ्गानीव सर्वशः||

यदा चायं न बिभेति 

यदा चास्मान्न बिभ्यति |

नेच्छति न द्वेष्टि 

ब्रह्म संपद्यते तदा ||

भावं कुरुते सर्वभूतेषु पापकम् |

कर्मणा मनसा वाचा ब्रह्म संपद्यते तदा ||

- வியாசர் மஹாபாரதம்

மன்னர் யயாதி ஒரு சமயம், இது சம்பந்தமாக சொன்ன விஷயத்தை சொல்கிறேன் கேள்.


ஆமையானது (கூர்ம) தன் அங்கங்களை அடக்கி கொள்வது போல, எந்த மனிதன் தனது நீண்ட வெளி ஆசைகள் அனைத்தையும் உள் அடக்குகிறானோ, பயமில்லாமல் இருக்கிறானோ, பிறர் பயப்படுவதற்கு காரணமாகவும் இல்லாமல் இருக்கிறானோ, தனிப்பட்ட பகையோ, நட்போ இல்லாமல் இருக்கிறானோ, மனதாலும், சொல்லாலும், செயலாலும் யாருக்கும் தீங்கு செய்யாமல் இருக்கிறானோ, அவன் ப்ராம்மணத்துவம் அடைகிறான் என்று யயாதி சொன்னார்.


இவ்வாறு யுதிஷ்டிர மஹாராஜன், அர்ஜுனனை பார்த்து சொன்னார்.

Sunday 15 May 2022

துக்கப்பட கூடாது.... 'மூடனே துக்கப்படுவான்' - வியாசர் சொல்கிறார். மஹாபாரதம் அறிவோம்

துக்கப்பட கூடாது.... 'மூடனே துக்கப்படுவான்' - வியாசர் சொல்கிறார். மஹாபாரதம் அறிவோம்.

பாரத போர் முடிந்த பிறகு, 'இப்படி ஒரு க்ஷத்ரிய குல உலகநாசம் என்னை காரணமா கொண்டு நடந்து விட்டதே! பூமியை ஆள வேண்டும் என்ற தன்னுடைய ஆசையால் இப்படி ஆகி விட்டதே! பல பெண்கள் விதவையாகி விட்டனரே!' என்று புலம்பி, யுதிஷ்டிர மஹாராஜா துவண்டு விட்டார்.

அவரை அர்ஜுனன், நகுலன், பீமன், சகாதேவன், திரௌபதி என்று பலரும் சமாதானம் செய்து பார்த்தனர். 

வியாசர் ராஜ தர்மம் உபதேசித்தார். இருந்தும் யுதிஷ்டிரருக்கு சமாதானம் கிடைக்கவில்லை.

அப்போது, வியாசர், ஞான உபதேசம் செய்ய தொடங்கினார்.

न कर्मणा लभ्यते चिन्तया वा; नाप्य अस्य दाता पुरुषस्य कश् चित्

पर्याय यॊगाद् विहितं विधात्रा; कालेन सर्वं लभते मनुष्यः

வியாசர் மஹாபாரதம்

எந்த ஒரு மனிதனும் உண்மையில் தன் செயலாலோ, தன் தியாகத்தாலோ, தன் வழிபாட்டாலோ எதையும் பெற முடியாது. எந்த மனிதனும், சக மனிதனுக்கு எதையும் கொடுக்கவும் முடியாது. காலமே அனைத்தையும் செய்கிறது. மனிதன் காலத்தின் தூண்டுதலால் தான் அனைத்தையும் செய்கிறான்.

न बुद्धिशास्त्राध्ययनेन शक्यं; प्राप्तुं विशेषै: मनुजै: अकाले

मूर्खॊ ऽपि प्राप्नॊति कदा चिद् अर्थान्; कालॊ हि कार्यं प्रति निर्विशेषः

வியாசர் மஹாபாரதம்

காலம் சரியில்லை என்றால், எத்தனை புத்தி இருந்தாலும், கல்வி இருந்தாலும் மனிதன் விரும்பினாலும் அடைய முடியாது. 

நல்ல காலம் இருந்தால், மூடன் கூட பல பொருளை அடைகிறான்.

மனிதனுக்கு அனைத்தையும் கொடுப்பது காலம் தான்.

नाभूति काले च फलं ददाति; शिल्पं न मन्त्रा: च तथौषधानि

तान्य एव कालेन समाहितानि; सिध्यन्ति चेध्यन्ति च भूतकाले

வியாசர் மஹாபாரதம்

பூமியும் மருந்தும் மந்திரமும்  மற்ற தொழில்களும் அகாலத்தில் பயன் கொடுப்பதில்லை. அவைகளே நல்ல காலத்தில் பயன் தருகிறது.

कालेन शीघ्राः प्रविवान्ति वाताः; कालेन वृष्टि: जलदान् उपैति

कालेन पद्मॊत्पलवज जलं च; कालेन पुष्यन्ति नगा वनेषु

வியாசர் மஹாபாரதம்

காற்று வேகமாக வீசுவதும் காலத்தினால் தான்.

மேகங்கள் மழை கொடுப்பதும் காலத்தினால் தான்.

குளத்தில் தாமரை பூப்பதும் காலத்தினால் தான்.

காடுகளில் மரங்கள் செழிப்பதும் காலத்தினால் தான்.

कालेन कृष्णा: च सिता: च रात्र्यः; कालेन चन्द्रः परिपूर्णबिम्बः

नाकालतः पुष्पफलं नगानां; नाकालवेगाः सरितॊ वहन्ति

வியாசர் மஹாபாரதம்

காலம் தான் இருட்டையும், வெளிச்சத்தையும், இரவையும் கொடுக்கிறது. 

சந்திரன் ஒரு சமயம் முழுமையாக தெரிவதும் காலத்தினால் தான்.

அகாலத்தில், மரத்தில் பூக்கள் உண்டாவதில்லை

அகாலத்தில் ஆறுகள் வேகமாக பெருகுவதில்லை

नाकालमत्ताः खग पन्नगा: च; मृगद्विपाः शैलमहाग्रहा: च

नाकालतः स्त्रीषु भवन्ति गर्भा: नायान्त्य अकाले शिशिरॊष्ण वर्षाः

வியாசர் மஹாபாரதம்

மலைகளில், கிராமங்களில் உள்ள பறவைகளும், பாம்புகளும், மிருகங்களும் யானைகளும் அகாலத்தில் மதமடைவது இல்லை.

அகாலத்தில், பெண்கள் கர்ப்பம் அடைவதில்லை.

குளிரும், வெயிலும் மழையும் அகாலத்தில் வருவதில்லை.

नाकालतॊ म्रियते जायते वा नाकालतॊ व्याहरते च बालः

नाकालतॊ यौवनम् अभ्युपैति: नाकालतॊ रॊहति बीजम् उप्तम्

வியாசர் மஹாபாரதம்

அகாலத்தில் மனிதன் பிறப்பதும் இல்லை. (குறித்த 10 மாதத்தில் பிறக்கிறான்)

அகாலத்தில் குழந்தை பேசுவதும் இல்லை

அகாலத்தில் இளமை பருவம் அடைவதும் இல்லை.

அகாலத்தில் விதைக்கப்பட்ட விதை, முளைப்பதும் இல்லை

नाकालतॊ भानु: उपैति यॊगं नाकालतॊ ऽस्तं गिरिम् अभ्युपैति

नाकालतॊ वर्धते हीयते च; चन्द्रः समुद्र: च महॊर्मिमाली

வியாசர் மஹாபாரதம்

அகாலத்தில் சூரியன் உதிப்பதும் இல்லை, மறைவதும் இல்லை.

அகாலத்தில் சந்திரனும் பெரிய அலைகளை சமுத்திரத்தில் உண்டாக்குவது இல்லை. குறைப்பதும் இல்லை.

अत्राप्य उदाहरन्तीमम् इतिहासं पुरातनम्

गीतं राज्ञा सेनजिता दुःखार्तेन युधिष्ठिर

வியாசர் மஹாபாரதம்

யுதிஷ்டிரா! முன்பு ஒரு சமயம் வாழ்ந்த, துக்கத்தால் கஷ்டப்பட்ட ஸேனஜித் என்ற அரசர் சொன்னதை சொல்கிறேன் கேள்!

सर्वान एवैष पर्यायॊ मर्त्यान् स्पृशति दुस्तरः

कालेन परिपक्वा हि म्रियन्ते सर्वमानवाः

வியாசர் மஹாபாரதம்

மரணம் என்ற காலகதியானது,  ஒருவரையும் விடாமல் அனைவரையும் பிடிக்கிறது. காலத்தின் பிடியில் சிக்கி, அனைத்து அரசர்களும் மரணிக்கிறார்கள்.

घ्नन्ति चान्यान नरा राजंस तान् अप्य अन्ये नरा: तथा

संज्ञैषा लौकिकी राजन् न हिनस्ति न हन्यते

வியாசர் மஹாபாரதம்

அரசனே! சிலர், 'என்னை இவர் அடிக்கிறார்' என்றும், சிலர் 'நான் இவரை அடித்தேன்' என்றும் காரியங்களுக்கு பெயர் கொடுக்கிறார்கள்.

हन्तीति मन्यते क: चिन् न हन्तीत्य अपि चापरे

स्वभावत: तु नियतौ भूतानां प्रभवाप्ययौ

வியாசர் மஹாபாரதம்

உண்மையில், அடிப்பவனும் இல்லை. அடிக்கப்படுபவனும் இல்லை. 'நான் அடித்தேன்' என்று ஒருவன் நினைக்கிறான். 'நான் அடிக்கப்படுகிறோம்' என்று மற்றொருவன் நினைக்கிறான். உண்மையில், அனைத்தையும் காலமே செய்கிறது.

नष्टे धने वा दारे वा पुत्रे पितरि वा मृते

अहॊ कष्टम् इति ध्यायञ शॊकस्यापचितिं चरेत्

வியாசர் மஹாபாரதம்

சேர்த்த சொத்துக்கள் தொலைந்தாலும், பிள்ளைகள், மனைவி, தந்தை மரணித்தாலும், அப்பொழுது ஏற்படுகின்ற துக்கத்தை நன்றாக ஆலோசனை செய்து, விலக்கிக்கொள்ள வேண்டும்.

स किं शॊचसि मूढः सन् शॊच्यः किम् अनुशॊचसि

पश्य दुःखेषु दुःखानि भयेषु च भयान्य अपि

வியாசர் மஹாபாரதம்

காலம் தான் அனைத்தையும் செய்கிறது என்ற உண்மையை உணராமல், மூடன் போல விவேகமற்று ஏன் சோகப்படுகிறாய்?

ஒரு துக்கத்தையே நினைத்துக்கொண்டிருந்தால், அதிலிருந்து மற்றொரு துக்கம் உண்டாகும்.

ஒரு பயத்தையே நினைத்துக்கொண்டிருந்தால், அதிலிருந்து மற்றொரு பயம் உண்டாகும். யுதிஷ்டிரா! கவனமாக இரு.

आत्मापि चायं न मम सर्वापि पृथिवी मम

यथा मम तथान्येषाम् इति पश्यन् न मुह्यति

வியாசர் மஹாபாரதம்

உனக்கு சுகமும், துக்கமும் எப்படியோ, அது போல மற்றவருக்கும் உண்டு.

ஆகையால், "நான் தான் துக்கப்படுகிறேன். நான் தான் சுகப்படுகிறேன், என்ற மமதையை விடு". நான் என்ற அபிமானத்தை விடு. 

'நான் என்ற அபிமானம் இருப்பதால் தான் உலகமே என்னுடையது என்று நினைத்து கொண்டு' அவிவேகத்துடன் ஒவ்வொரு மனிதனும் தவிக்கிறான்.

शॊकस्थान सहस्राणि हर्षस्थान शतानि च

दिवसे दिवसे मूढम् आविशन्ति न पण्डितम्

வியாசர் மஹாபாரதம்

'நான் துக்கப்படுகிறேன். நான் சுகப்படுகிறேன்' என்ற மமதையுடைய மூடன், தினம் தினம், ஆயிரம் (அதிக) சோகத்துடனும், நூறு (கொஞ்சம்) சந்தோஷத்துடன் வாழ்கிறான். "காலமே செய்கிறது' என்ற விவேகம் உள்ள பண்டிதனோ, அப்படி வாழ்வதில்லை.

एवम् एतानि कालेन प्रिय द्वेष्याणि भागशः

जीवेषु परिवर्तन्ते दुःखानि च सुखानि च

வியாசர் மஹாபாரதம்

காலத்தின் வலிமையால் ஆசைப்பட்டது நடக்காமல் போகலாம், ஆசைப்படாதவைகள் நடக்கலாம், துக்கமே சிலசமயம் சுகமாகலாம், சுகமே சிலசமயம் துக்கமாகலாம். 

दुःखम् एवास्ति न सुखं तस्मात् तद् उपलभ्यते

तृष्णार्ति प्रभवं दुःखं दुःखार्ति प्रभवं सुखम् 

வியாசர் மஹாபாரதம்

உண்மையில் சுகத்தை விட இந்த உலகில் துக்கமே அதிகம். ஆகையால், பெரும்பாலும் துக்கமே அனுபவிக்கப்படுகிறது. ஆசையால் தான் துக்கம் உண்டாகிறது. துக்கம் முடியும் போது சுகம் தோன்றுகிறது.

सुखस्यानन्तरं दुःखं दुःखस्यानन्तरं सुखम्

न नित्यं लभते दुःखं न नित्यं लभते सुखम्

வியாசர் மஹாபாரதம்

சுகத்திற்கு பின் துக்கமும், துக்கத்திற்கு பின் சுகமும் உண்டாகிறது. நிலையான சுகத்தையும் யாரும் அனுபவித்ததில்லை. நிலையான துக்கத்தையும் யாரும் அனுபவித்ததில்லை. 

सुखम् अन्ते हि दुःखानां दुःखम् अन्ते सुखस्य च

तस्माद् एतद् द्वयं जह्याद् य इच्छेच् छाश्वतं सुखम्

  - வியாசர் மஹாபாரதம்

சுகத்தின் முடிவில் துக்கமும், துக்கத்தின் முடிவில் சுகமும் என்றுமே உள்ளது. நிலையான ஆத்ம சுகத்தை (ஆனந்தம்) விரும்புபவன், சரீர சம்பந்தமான இந்த இரண்டையையும் (சுகம், துக்கம்) விட வேண்டும்.

यन्निमित्तं भवे: छॊक: तापॊ वा दुःखमूर्छितः

आयसॊ वापि यन् मूल: तद् एकाङ्गम् अपि त्यजेत्

வியாசர் மஹாபாரதம்

சோகமும், தாபமும், அதிக துன்பத்தை தரும் சோம்பேறித்தனமும், எந்த காரணத்தால் உண்டானாலும், அதை சரீரத்தில் தேவையில்லாத ஒரு அங்கம் (நகம் போல) அதை தள்ள வேண்டும்.

सुखं वा यदि वा दुःखं प्रियं वा यदि वा अप्रियम्

प्राप्तं प्राप्तम् उपासीत हृदयेन अपराजितः

வியாசர் மஹாபாரதம்

சுகமோ, துக்கமோ, விருப்போ, வெறுப்போ எது வந்தாலும் மனம் மாறுபாடு அடையாமல், வருவதை அனுபவிக்க வேண்டும்.

ईषद् अप्य अङ्ग दाराणां पुत्राणां वा चराप्रियम्

ततॊ ज्ञास्यसि कः कस्य केन वा कथम् एव वा

வியாசர் மஹாபாரதம்

மனைவிக்கும், பிள்ளைக்கும் பிடித்த விஷயத்தை செய்யாமல், கொஞ்சம் நீ விலகி நின்றாலேயே, உண்மையில் யார் யாருடையவர்கள், ஏன், எதற்காக என்று தெரிந்து கொள்வாய்.

ये च मूढतमा लॊके ये च बुद्धेः परं गताः

त एव सुखम् एधन्ते मध्यः क्लेशेन युज्यते

வியாசர் மஹாபாரதம்

உலகத்தில் மஹா மூடனும் சுகமாக இருக்கிறான், காலமே அனைத்தும் செய்கிறது என்ற ஞானம் உள்ள புத்திமானும் சுகமாக இருக்கிறான். 'நான் துக்கப்படுகிறேன், நான் சுகமாக இருக்கிறேன்' என்று நடுவில் இருப்பவன் தான் கஷ்டப்படுகிறான்

इत्य अब्रवीन् महाप्राज्ञॊ युधिष्ठिर स सेनजित्

परावरज्ञॊ लॊकस्य धर्मवित् सुखदुःखवित्

வியாசர் மஹாபாரதம்

யுதிஷ்டிரா! தர்மம் அறிந்தவனும், சுகம் என்ன? துக்கம் என்ன? என்று தெரிந்தவனும், உலகத்தில் முன் பின் அறிந்தவனும், அறிவுள்ளவனுமான ஸேனஜித் இவ்வாறு சொன்னார்.

सुखी परस्य यॊ दुःखे न जातु स सुखी भवेत्

दुःखानां हि क्षयॊ नास्ति जायते हय अपरात् परम्

வியாசர் மஹாபாரதம்

பிறருடைய துக்கத்தை சரி செய்யாமல், பார்த்து கொண்டு தானும் துக்கப்படுபவன், ஒரு காலத்திலும் சுகமடையமாட்டான். துக்கத்திற்கு முடிவே இல்லை. ஒரு துக்கத்திலிருந்து மற்றொரு துக்கம் உண்டாகும்.

सुखं च दुःखं च भवाभवौ च; लाभालाभौ मरणं जीवितं च

पर्यायशः सर्वम् इह स्पृशन्ति; तस्माद् धीरॊ नैव हृष्येन् न कुप्येत्

வியாசர் மஹாபாரதம்

உலகத்தில் சுகமும்-துக்கமும், நல்லதும்-கெட்டதும், லாபமும்-நஷ்டமும், மரணமும்-ஜனனமும் காலத்தால் வருகின்றன. 

ஆகையால் மோகமும் அடைய கூடாது, சந்தோஷத்தையும் அடைய கூடாது.

பகவான் கிருஷ்ணர், அர்ஜுனனுக்கு முன்பு போர் களத்தில் கீதை உபதேசித்தார்.

இங்கு, கிருஷ்ண த்வைபாயனர் என்ற வியாச பகவான், துவண்டு கிடக்கும் யுதிஷ்டிர மகாராஜனுக்கு வியாச கீதை உபதேசித்தார்.

Saturday 14 May 2022

ராஜநீதி... அரசாட்சி எப்படி செய்ய வேண்டும்? வியாசர் 'ராஜ நீதியை' யுதிஷ்டிர மகாராஜனுக்கு உபதேஸிக்கிறார். அறிவோம் மஹாபாரதம்

ஆட்சி எப்படி செய்ய வேண்டும்? வியாசர் 'ராஜ நீதியை' யுதிஷ்டினுக்கு உபதேஸிக்கிறார். 

வ்யாசர் சொல்கிறார்.. 

आदाय बलिषड् भागं यॊ राष्ट्रं नाभिरक्षति

प्रतिगृह्णाति तत् पापं चतुर्थांशेन पार्थिवः

- வியாசர் மஹாபாரதம்

6ல் ஒரு பங்கு வரியாக (15% to Army/Police) பெற்றுக்கொண்டும் ராஜ்யத்தை காப்பாற்ற முடியாமல் போனால், அந்த ராஜ்யத்தின் மக்கள் செய்த பாவத்தில் 4ல் ஒரு பங்கு பாகத்தை ஆட்சி செய்பவன் பெறுகிறான்.

निग्रहाद् धर्मशास्त्राणाम् अनुरुध्यन्न अपेतभीः

कामक्रॊधाव् अनादृत्य पितेव समदर्शनः

- வியாசர் மஹாபாரதம்

எந்த பயமும் இல்லாமல் தர்ம சாஸ்திரப்படி தண்டனை கொடுத்து, தனிப்பட்ட ஆசையும் இல்லாமல், தனிப்பட்ட கோபமும் இல்லாமல், பாகுபாடு இல்லாமல் மக்கள் அனைவருக்கும் ஒரு தகப்பன் போல சமமாக பார்த்து கொண்டு, ஆட்சி செய்பவன் இருக்க வேண்டும். 

दैवेनॊपहते राजा कर्मकाले महाद्युते

प्रमादयति तत् कर्म न तत्राहु: अति करमम्

- வியாசர் மஹாபாரதம்

ஒரு நியாயமான ஒரு காரியத்தை ஆரம்பித்து, விதி வசத்தால் அந்த காரியம் தடைபட்டு நின்றால், ஆட்சி செய்பவன் குற்றவாளி ஆகமாட்டான்.

तरसा बुद्धिपूर्वं वा निग्राह्या एव शत्रवः

पापैः सह न संदध्याद् राष्ट्रं पण्यं न कारयेत्

- வியாசர் மஹாபாரதம்

ஆட்சி செய்பவன், தன் புத்தியாலும், தண்டனையாலும் எதிரிகளை அடக்க வேண்டும். குற்றம் செய்தவர்களுடன், பாவத் தொழில் செய்பவர்களுடன் ஆட்சி செய்பவன் சேர கூடாது. அரசாட்சியை தர்மப்படி நடத்த வேண்டும்.

शूरा: चार्या: च सत्कार्या विद्वांसश च युधिष्ठिर

गॊमतॊ धनिन: चैव परिपाल्या विशेषतः

- வியாசர் மஹாபாரதம்

மஹாவீரர்களையும், பண்புள்ளவர்களையும், அறிவுள்ளவர்களையும் ஆட்சி செய்பவன் கௌரவிக்க வேண்டும்.

யுதிஷ்டிரா! 

செல்வந்தர்களையும், பசுக்களை ரக்ஷிப்பவர்களையும் ப்ரத்யேகமாக ஆட்சி செய்பவன் கௌரவிக்க வேண்டும்.

व्यवहारेषु धर्म्येषु नियॊज्या: च बहुश्रुताः

गुणयुक्ते ऽपि नैकस्मिन् विश्वस्याच् च विचक्षणः

- வியாசர் மஹாபாரதம்

ப்ரத்யேகமாக சாஸ்திரம் (specialist) கற்றவர்களை தேர்ந்தெடுத்து, அவர்கள் கற்ற துறையில் அதிகாரியாக அமர்த்தி தர்மப்படி காரியங்களை செய்ய நியமிக்க வேண்டும். எவ்வளவு நல்ல குணம் கொண்டவனாலும், ஒரே ஒரு மனிதனை மட்டும் ஆட்சி செய்பவன் நம்புவது நியாய தர்மம் அன்று.

अरक्षिता दुर्विनीतॊ मानी स्तब्धॊ ऽभ्यसूयकः

एनसा युज्यते राजा दुर्दान्त इति चॊच्यते

- வியாசர் மஹாபாரதம்

மக்களை காப்பாற்றாமல், மதிக்கத்தக்கவர்களை மதிக்காமல், அடக்கமில்லாமல், திமிரோடும், பொறாமையோடும் ஆட்சி செய்பவன் பாவத்தை அடைவதோடு, கெட்டவன் என்று பேசப்படுவான்.

ये ऽरक्ष्यमाणा हीयन्ते दैवेनॊपहते नृपे

तस्करै: चापि हन्यन्ते सर्वं तद् राजकिल्बिषम्

- வியாசர் மஹாபாரதம்

தெய்வ குற்றத்தாலும், திருடர்களாலும் ரக்ஷிக்கப்படாமல் எவர்கள் கஷ்டப்படுகிறார்களோ அவர்களுடைய கஷ்டமெல்லாம் அரசனை சேர்ந்த பாவமாகும்.

सुमन्त्रिते सुनीते च विधिवच् चॊपपादिते

पौरुषे कर्मणि कृते नास्त्य अधर्मॊ युधिष्ठिर

- வியாசர் மஹாபாரதம்

ஓ யுதிஷ்டிரா! நன்றாக ஆலோசித்து நீதி தவறாமல் மனித முயற்சியோடு (ஜன ஆந்தோலன்) ஒரு காரியம் செய்தால், ஆட்சி செய்பவனுக்கு பாவம் நேராது.

शत्रून् हत्वा हतस्याजौ शूरस्याक्लिष्ट कर्मणः

असहायस्य धीरस्य निर्जितस्य युधिष्ठिर

- வியாசர் மஹாபாரதம்

நன்றாக ஆலோசித்து, நீதி தவறாமல், ஆட்சி செய்பவன் செய்யும் முயற்சிகள் தெய்வீகமாய் முடிவதுமுண்டு. பயனற்று போவதும் உண்டு. 

विपद्यन्ते समारम्भाः सिध्यन्त्य अपि च दैवतः

कृते पुरुषकारे तु नैनॊ सपृशति पार्थिवम्

- வியாசர் மஹாபாரதம்

சிலசமயம் தர்மபடியான முயற்சிகள் பயனற்று போகலாம் என்பதால் முயற்சிகள் செய்யாமல் ஆட்சி செய்பவன் இருந்தால் பாவத்தை அடைகிறான். முயற்சி செய்தால், ஆட்சி செய்பவனுக்கு பாவம் சேராது.

இவ்வாறு வியாசர், யுதிஷ்டிர மஹாராஜனிடம் "ராஜ நீதியை" கூறி, சந்யாசியாக போக கூடாது, மக்களுக்காக 'தர்ம ஆட்சி செய்பவனாக இருக்க வேண்டும்' என்று உபதேசித்தார்.