Followers

Search Here...

Tuesday 13 December 2022

"ஆசாரம்" (ஒழுக்கம்) என்றால் என்ன? இந்த கேள்விக்கு, பீஷ்மர் பதில் சொல்கிறார். அறிவோம் மஹாபாரதம்.

யுதிஷ்டிரர் "ஆசாரம் பற்றி அறிய விரும்புகிறேன்" என்று கேட்க, பீஷ்மர் ஆசாரத்தை பற்றி விளக்குகிறார்.

दुराचारा दुर्विचेष्टा दुष्प्रज्ञाः प्रिय-साहसाः।

असन्तस्त्वभिविख्याताः सन्तश्च आचार-लक्षणाः।।

- வியாசர் (மஹாபாரதம்)

அயோக்கியர்கள் 'கெட்ட ஆசாரத்தோடும், கெட்ட நடத்தையோடும், கெட்ட புத்தியோடும், சாகசம் புரிய விருப்பத்தோடும் இருப்பார்கள்' என்பது போல,

சாதுக்கள் 'ஆசாரத்தில் விருப்பத்தோடு இருப்பார்கள்' என்பது ப்ரஸித்தம்.


पुरीषं यदि वा मूत्रं ये न कुवन्ति मानवाः।

राजमार्गे गवां-मध्ये धान्य-मध्ये शिवालये।

अग्न्यगारे तथा तीरे ये न कुर्वन्ति ते शुभाः।। 

- வியாசர் (மஹாபாரதம்)

பெரிய சாலையிலும் (ராஜ மார்க்கம்), பசுக்களின் நடுவிலும், தானியத்தின் நடுவிலும், சிவாலயத்திலும், அக்னி சாலையிலும், நதி கரையிலும், மலம்-மூத்திரம் செய்யாத மனிதன் 'நல்லவன்' என்று அறியலாம்.

शौचम् आवश्यकं कृत्वा देवतानां च तर्पणम्।

धर्ममाहु: मनुष्याणामुपस्पृश्य नदीं तरेत्।

- வியாசர் (மஹாபாரதம்)

அவசியமாக செய்ய வேண்டிய சுத்தியை செய்து கொண்டு, ஆசமனம் செய்த பிறகு, நதியில் இறங்கி ஸ்நானம் செய்ய வேண்டும். பிறகு, தேவர்களை குறித்து தர்ப்பணம் செய்வது மனிதர்களுக்கு தர்மமென்று பெரியோர்கள் கூறுகிறார்கள்.

सूर्यं सदोपतिष्ठेन न स्वपेद् भास्कर-उदये।

सायंप्रात: जपेत्-सन्ध्यां तिष्ठन्पूर्वां तथेतराम्।।

- வியாசர் (மஹாபாரதம்)

எப்பொழுதும் சூரியனை உபாஸிக்க வேண்டும். உதயகாலத்தில் உறங்க கூடாது. காலையிலும், மாலையிலும் காயத்ரீ மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். முதல் சந்தியில் நின்று கொண்டும், மாலை சந்தியில் உட்கார்ந்து ஜபிக்க வேண்டும்.


पञ्चार्द्रो भोजनं भुञ्ज्यात्प्राद्भुखो मौनम् आस्थितः।

न निन्द्याद् अन्नभक्ष्यांश्च स्वादुस्वादु च भक्षयेत्।।

- வியாசர் (மஹாபாரதம்)

5 அங்கமும் அலம்பிக்கொண்டு, கிழக்கு முகமாக அமைதியாக போஜனம் செய்ய வேண்டும். அன்னத்தை, சாப்பிடும் போது நிந்திக்க கூடாது. மிகவும் ருசியாக உள்ளது என்று பூஜிக்க வேண்டும்.


न आर्द्र-पाणिः समुत्तिष्ठेन्न आर्द्र-पादः स्वपेन्निशि।

देवर्षि-र्नारदः प्राह एतदाचारलक्षणम्।।

- வியாசர் (மஹாபாரதம்)

கை ஈரமாக இருக்கும் போதே எழுந்திருக்க வேண்டும் (கை காய உட்கார்ந்து இருக்க கூடாது). இரவில் கால் அலம்பாமல் படுக்க கூடாது.  தேவ-ரிஷியான நாரதர் இவ்விதம் ஆசாரத்தின் லக்ஷணத்தை சொல்கிறார்.

शोचिष्केशमनड्वाहं देव गोष्ठं चतुष्-पथम्।

ब्राह्मणं धार्मिकं च एव नित्यं कुर्यात् प्रदक्षिणम्।।

- வியாசர் (மஹாபாரதம்)

அக்னியையும், காளையையும், தேவதையையும், பசுமடத்தையும், நாற்-சந்தியையும், தர்மத்தில் இருக்கும் ப்ராம்மணனையும் பார்த்தால், ப்ரதக்ஷிணம் செய்ய வேண்டும். அதாவது, அவர்களை சுற்றி வலம் வர வேண்டும்


अतिथीनां च सर्वेषां प्रेष्याणां स्वजनस्य च।

सामात्यं भोजनं भृत्यैः पुरुषस्य प्रशस्यते।।

- வியாசர் (மஹாபாரதம்)

நேரம் சொல்லாமல் நம் வீட்டுக்கு வந்த அதிதியை, தான் சொல்லும் காரியத்தை செய்யும் ஏவலாளியை, உறவினர்களை வேற்றுமை பாராமல் உணவு கொடுப்பது மனிதனுக்கு சிறந்த தர்மமாகும்.

सायंप्रातर्मनुष्याणामशनं वेदनिर्मितम्।

नान्तरा भोजनं दृष्टम् उपवासी तथा भवेत्।।

- வியாசர் (மஹாபாரதம்)

மனிதர்களுக்கு காலையிலும், மாலையிலும் போஜனம் வேதத்தால் விதிக்கப்பட்டுள்ளது. இரண்டுக்கும் மத்தியில் உணவு உண்ண வேண்டும் என்று விதி இல்லை. அந்த விதிப்படி உபவாசம் இருப்பவன், பயனடைவான்.


होमकाले तथ्ना जुह्वन् ऋतुकाले तथा व्रजन्।

अनन्यस्त्रीजनः प्राज्ञो ब्रह्मचारी तथा भवेत्।।

- வியாசர் (மஹாபாரதம்)

ஹோமம் செய்ய வேண்டிய காலங்களில் ஹோமம் செய்து கொண்டும், ருது காலத்தில் மட்டும் தன் மனைவியோடு சேருபவனும், வேறு  பெண்களை நெருங்காதவனும், நல்ல அறிவுள்ளவனும், “பிரம்மச்சாரி”என்று கருத வேண்டும். மணமானாலும் ‘ப்ரம்மச்சர்யத்தில் இருக்கிறான்’ என்று பொருள்


अमृतं ब्राह्मण: उच्छिष्टं जनन्या हृदयं कृतम्।

तज्जनाः पर्युपासन्ते सत्यं सन्तः समासते।।

- வியாசர் (மஹாபாரதம்)

தர்மம்-அதர்மம் தெரிந்து வாழ்க்கையை நடத்தும் பிராம்மணன் சாப்பிட்ட பிறகு, சாப்பிடுவதால், அந்த உணவு அம்ருதமாகவும் (ஆயுள் கூட்டுவதாகவும்), இதயத்தில் நல்ல எண்ணத்தையும் உண்டு பண்ணுவதாகவும் அமையும். அந்த உணவை எந்த ஜனங்கள் அன்புடன் ஏற்கிறார்களோ, அந்த ஸாதுக்கள், ஸத்தியமான பிரம்மத்தை அடைகிறார்கள்.


लोष्टमदीं तृणच्छेदी नखखादी तु यो नरः।

नित्य:-उच्छिष्टः संकसुको नेह-आयु: विन्दते महत्।।

- வியாசர் (மஹாபாரதம்)

எவன் மண்ணை உதைக்கிறானோ (வீட்டை உடைப்பவன்), புற்களை கிள்ளுகிறானோ, நகத்தை கடிக்கிறானோ, எப்பொழுதும் பிறர் சாப்பிட்டதையே உண்கிறானோ, பேராசை கொண்டவனோ, அவன் நீண்ட ஆயுளை அடைய மாட்டான்.


यजुषा संस्कृतं मांसं निवृत्तो मांस-भक्षणात्।

भक्षयेन्न वृथामांसं पृष्ठमांसं च वर्जयेत्।।

- வியாசர் (மஹாபாரதம்)

மாமிசம் உண்ணாமல் இருக்க வேண்டும். அவசியம் ஏற்பட்டால், சாஸ்திர விதிப்படி பூஜித்து மாமிசம் உண்ணலாம். அனாவசியமாக விருப்பத்துக்காக சாப்பிட கூடாது. மிச்சப்பட்ட மாமிசத்தை, மாமிசத்தின் பின்-பாகத்தை சாப்பிட கூடாது.


स्वदेशे परदेशे वा अतिर्थि नोपवासयेत्।

काम्यकर्मफलं लब्ध्वा गुरूणाम् उपपादयेत्।।

- வியாசர் (மஹாபாரதம்)

தன் தேசத்தில் இருந்தாலும், வெளி தேசத்தில் இருந்தாலும் நாம் இருக்கும் இடத்திற்கு அதிதியாக வந்தவனை சாப்பிடாமல் வைக்க கூடாது. ஆசையினால் சேர்க்கப்பட்ட பொருளை குருவிடம் கொடுத்து விட வேண்டும்.

गुरूणाम् आसनं देयं कर्तव्यं च अभिवादनम्।

गुरूनभ्यर्च्य युज्येत आयुषा यशसा श्रिया।।

- வியாசர் (மஹாபாரதம்)

குருவுக்கு ஆஸனம் கொடுத்து, அவருக்கு தன் ரிஷி பரம்பரையை பற்றி சொல்லி நமஸ்கரிக்க வேண்டும். குருவின் ஆசிர்வாதத்தை பெற வேண்டும். பெரியோர்களை பூஜித்ததால், ஆயுளும், புகழும், செல்வமும் கூடும்.

नेक्षेतादित्यमुद्यन्तं न च नग्नां परस्त्रियम्।

मैथुनं सततं धर्म्यं गुह्ये चैव समाचरेत्।।

- வியாசர் (மஹாபாரதம்)

உதிக்கும் காலத்தில் சூரியனை கண்ணால் பார்க்க கூடாது. வேறு பெண்களையோ, ஆடையில்லாத பெண்ணையோ நோக்க கூடாது. தர்மத்தை மீறாத உடலுறவை ரகசியமாக வைத்து கொள்ள வேண்டும்.

तीर्थानां हृदयं तीर्थं शुचीनां हृदयं शुचिः।

सर्वम् आर्यकृतं धर्म्यं वालसंस्पर्शनानि च।।

- வியாசர் (மஹாபாரதம்)

மனமே தீர்த்தங்களில் சிறந்த தீர்த்தம்! சுத்தம் என்றால், மனசுத்தமே சிறந்த சுத்தம். பண்புள்ளவர்கள் செய்யும் அனைத்து காரியமும் தர்மமே. பசுவின் வாலை தொடுவதும் புண்யமே.

दर्शने-दर्शने नित्यं सुख-प्रश्नम् उदाहरेत्।

सायं प्रातश्च विप्राणां प्रदिष्टम् अभिवादनम्।।

- வியாசர் (மஹாபாரதம்)

வேத ப்ராம்மணனை காணும் போதெல்லாம், எப்பொழுதும் நலம் விசாரிக்க வேண்டும். காலையும் மாலையும் வேத ப்ராம்மணனை கண்டு நமஸ்கரிக்க வேண்டும்.


देवगोष्ठे गवां-मध्ये ब्राह्मणानां क्रियापथे।

स्वाध्याये भोजने चैव दक्षिणं पाणिम् उद्धरेत्।।

- வியாசர் (மஹாபாரதம்)

தேவாலயத்திலும், பசுக்களின் நடுவிலும், ப்ராம்மணர்களின் நடுவிலும், கர்மானுஷ்டம் செய்யும் போதும்,  படிக்கும் போதும், சாப்பிடும் போதும் வலது கை வெளியே இருக்கும் படி (அதாவது பூணூலை இடது தோளில் இருப்பதாக வைத்து கொள்ள வேண்டும்) வைத்து கொள்ள வேண்டும்.

सायं प्रातश्च विप्राणां पूजनं च यथाविधि।

पण्यानां शोभते पण्यं कृषीणामृद्ध्यतां कृषिः।

बहुकारं च सस्यानां वाह्ये वाहो गवां तथा।।

- வியாசர் (மஹாபாரதம்)

காலையிலும், மாலையிலும் வேதத்தை ரக்ஷிக்கும் ப்ராம்மணர்களை முடிந்த வரை பூஜிப்பது, மதிப்புமிக்கதில் மதிப்புள்ளதை போற்றியதற்கு சமமாகும். விவசாயத்தில் சிறந்த கிருஷியை போற்றியதற்கு சமமாகும். அதிகமான தானியங்கள் சேர்ப்பதற்கு சமமாகும். 


संपन्नं भोजने नित्यं पानीये तर्पणं तथा।

सुशृतं पायसे ब्रूयाद्यवाग्वां कृसरे तथा।।

- வியாசர் (மஹாபாரதம்)

எப்பொழுதும், உணவு கொடுப்பவன், கொடுக்கும் போது "ஸம்பன்னம்" என்று சொல்ல வேண்டும். உணவை பெற்று கொள்பவன் "ஸுஸம்பன்னம்" என்று சொல்ல வேண்டும். குடிக்க ஜலம் கொடுப்பவன், கொடுக்கும் போது "தர்ப்பணம்" என்று சொல்லி கொடுக்க வேண்டும். தண்ணீரை பெற்று கொண்டவன் "ஸுதர்ப்பணம்" என்று சொல்ல வேண்டும். பாயசம் (கஞ்சி/அன்னம்) கொடுக்கும் போது, கொடுப்பவன் "ஸ்ருதம்" என்று சொல்ல வேண்டும். அதை பெறுபவன் "ஸுஸ்ருதம்" என்று சொல்லி பெற்று கொள்ள வேண்டும். சாப்பிடுபவனையோ / குளிப்பவனையோ தும்முகிறவனையோ சவரம் செய்பவனையோ பார்த்தால் "ஆயுஷ்யம்" என்று சொல்ல வேண்டும்.


प्रति आदित्यं न मेहेत न पश्येदात्मनः शकृत्।

सुतैः स्त्रिया च शयनं सह भोज्यं च वर्जयेत्।।

- வியாசர் (மஹாபாரதம்)

சூரியனை பார்த்து மல-மூத்திரம் செய்ய கூடாது. மேலும் அப்போது மல (இட) கையை பார்க்க கூடாது. புத்ரியோடும், பெண்களோடும் சேர்ந்து படுக்கவோ, சாப்பிடவோ கூடாது.


त्वंकारं नामधेयं च ज्येष्ठानां परिवर्जयेत्।

अवराणां समानानाम् उभयं नैव दुष्यति।।

- வியாசர் (மஹாபாரதம்)

நீ என்ற ஒருமையிலோ, பெயரை சொல்லியோ வயதில் பெரியவர்களை கூப்பிட கூடாது.  தன்னை விட வயதில் குறைந்தவர்களை, வயதில் சமமானவர்களே கூப்பிடுவது தவறில்லை.


हृदयं पापवृत्तानां पापम् आख्याति वैकृतम्।

ज्ञानपूर्वं विनश्यन्ति गूहमाना महाजने।।

- வியாசர் (மஹாபாரதம்)

பாபங்களை செய்யும் இதயம் கொண்டவனின் முகமே அவனுடைய பாப எண்ணத்தை வெளி காட்டி விடும். செயல்படுத்த முடியாது என்று தெரிந்தும் வாக்குறுதிகளை ஜனங்களுக்கு கொடுத்து, பாபங்களை மறைத்து செய்பவன் நாசமடைவான்


ज्ञानपूर्वकृतं पापं छादयन्त्यबहुश्रुताः।

नैनं मनुष्याः पश्यन्ति पश्यन्त्येव दिवौकसः।।

- வியாசர் (மஹாபாரதம்)

விஷய அறிவு இல்லாமல், தெரிந்தே பாபங்களை (தவறுகளையும்) செய்து விட்டு,  அதை மறைத்தும் விடுவார்கள். இப்படி இவர்கள் சக மனிதர்களை ஏமாற்றினாலும், செய்த பாபத்தை தேவர்கள் அறிகிறார்கள்.


पापेनापिहितं पापं पापम् एव अनुवर्तते।

धर्मेणापिहितो धर्मो धर्मम् एव अनुवर्तते।

धार्मिकेण कृतो धर्मो धर्मम् एव अनुवर्तते।।

- வியாசர் (மஹாபாரதம்)

பாபத்தை செய்த  இந்த பாபிகளை அவர்கள் பாபமே  துரத்தி கொண்டு வரும். தர்மத்தை செய்த தர்மாத்மாவை, அவர்கள் செய்த தர்மமே துரத்தி கொண்டு வரும்.

पापं कृतं न स्मरतीह मूढो

विवर्तमानस्य तदेति कर्तुः।

राहुर्यथा चन्द्रमुपैति चापि

तथाऽबुधं पापमुपैति कर्म।।

- வியாசர் (மஹாபாரதம்)

பாபம் செய்வதிலேயே நாட்டம் கொண்ட மூடன் (அசடுகள்), நான் சொன்ன இந்த ஆசாரத்தை, நினைத்து கூட பார்க்காமல் இருக்கிறான். பாபமே செய்பவர்கள், சாஸ்திரத்துக்கு விரோதமாகவே இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள், எப்படி பொலிவு மிகுந்த சந்திரனை ராகு விழுங்குகிறதோ, அது போல புகழ் மங்கி, பொலிவை இழப்பார்கள்.


आशया संचितं द्रव्यं दुःखेनैवोपभुज्यते।

तद्बुधा न प्रशंसन्ति मरणं न प्रतीक्षते।।

- வியாசர் (மஹாபாரதம்)

பேராசையால் பெறப்பட்ட எந்த பொருளும், துக்கத்தையே தரும். அறிவாளி அப்படிப்பட்ட பொருளை கொண்டாடுவதில்லை, அதனால் ஏற்படும் மரணத்தை அவர்கள் ஏற்பதும் இல்லை.

मानसं सर्वभूतानां धर्ममाहु: मनीषिणः।

तस्मात्सर्वेषु भूतेषु मनसा शिवम् आचरेत्।।

- வியாசர் (மஹாபாரதம்)

பாராபட்சம் இல்லாமல் அனைவருக்கும் மனப்பூர்வமாக செய்வதே மனிதனுக்குரிய தர்மம். ஆகையால், எல்லா உயிர்களுக்கும் மனப்பூர்வமாக நல்லதை (மங்களத்தை) செய்ய வேண்டும்.


एक एव चरेद्धर्मं नास्ति धर्मे सहायता।

केवलं विधिमासाद्य सहायः किं करिष्यति।।

- வியாசர் (மஹாபாரதம்)

தர்மத்தை ஒருவனாகவே செய்யலாம். தர்மம் செய்ய துணை அவசியமில்லை. மனதில் தர்ம சிந்தனை இல்லாமல், துணைக்கு ஆள் கிடைத்தும் என்ன பயன் கிடைக்கப்போகிறது?


धर्मो योनि: मनुष्याणां देवानाम् अमृतं दिवि।

प्रेत्यभावे सुखं धर्माच्न्छश्वत्तैरुपभुज्यते।।

- வியாசர் (மஹாபாரதம்)

தர்மத்தில் இருப்பதற்காக தான் மனித-யோனியில் மனிதபிறவி கிடைத்துள்ளது.. அதன் மூலம் தேவர்களை போல அம்ருத நிலையை (அழியா புகழ்) அடையலாம். தர்மத்திலேயே இருப்பதால், மறு பிறவி எடுத்தாலும் அந்த தர்மத்தின் பலன் தொடர்ந்து வந்து க்ஷேமத்தை கொடுத்து கொண்டே இருக்கிறது. 


இவ்வாறு பீஷ்மர், யுதிஷ்டிரரிடம் "ஆசாரம்" என்றால் என்ன? என்பது பற்றி விளக்கினார்.

No comments: